Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 27

mana-penn

அதாவது- அவங்களுக்கு ஏற்கெனவே திருமணமாயிடுச்சுன்றதும் அவங்களோட கணவர் உயிருடன் இருக்கிறார் என்பதும். ஒருவேளை என்னுடைய இடத்தில் வேறு யாராவது இருந்திருந்தால், அவர்கள் லலிதா சொன்னதை நம்பியே இருக்க மாட்டங்க. ஆனால், நான் ஒரு வார்த்தையைக்கூட நம்பாமல் இல்லை. இன்னும் சொல்லப் போனால், ஒரு பெண் ஒரு தடவைக்கு மேல் திருமணம் செய்து கொள்ள முடியாது. விஷயம் எப்படி வேணும்னாலும் இருக்கட்டும்- அவங்களாலதான் முடியுமா?''

சேகரின் கண்கள் பனிப்படலம் போர்த்திவிட்டதைப் போல ஆகிவிட்டன. இப்போது கண்ணீர் அவனுடைய கன்னங்களில் வழிந்து கொண்டிருந்தது. ஆனால் அதைப் பற்றிய உணர்வே அவனுக்கு இல்லாமல் போயிருந்தது. இன்னொரு மனிதனுக்கு முன்னால் இப்படியொரு பலவீனத்தை வெளிப்படுத்துவது ஒரு மனிதனுக்கு சரியாக இருக்குமா என்பதைப் பற்றிக் கூட அவன் கவலைப்படவில்லை. சம்பவங்கள் ஒவ்வொன்றும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் அது ஏற்றுக்கொள்ள வேண்டிய ஒன்றுகூட அல்ல.

கிரின் அமைதியாக அவனையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு உள்ளுக்குள் சந்தேகங்கள் இருந்தன. இப்போது லலிதாவின் கணவன் என்பது நிரூபனமாகிவிட்டது! தன் கண்களைத் துடைத்துக்கொண்டு, சேகர் உரத்த குரலில் கேட்டான்: “ஆனால், நீங்க லலிதா மீது மிகுந்த அன்பு வைத்திருந்தீர்கள் அல்லவா?''

உள்ளுக்குள் புதைத்து வைக்கப்பட்ட துயரத்தின் நிழல் ஒரு நிமிட நேரத்திற்கு கிரினின் முகத்தில் தெரிந்தது. ஆனால் அடுத்த நிமிடமே அவன் சிரிக்க ஆரம்பித்துவிட்டான். மென்மையான குரலில் அவன் சொன்னான்: “இந்தக் கேள்விக்கு பதில் சொல்வது என்பதே தேவையில்லாதது. சொல்லப்போனால், எப்படிப்பட்ட உணர்வுகள் உண்டாகும் என்பது முக்கியமே அல்ல. தெரிந்து கொண்டே யாரும் இன்னொரு மனிதனின் மனைவியைத் திருமணம் செய்துகொள்ள மாட்டார்கள். தயவு செய்து அதைப் பற்றிக் கவலைப்படாதீர்கள். என்னை விட மூத்தவர்களிடம் இந்த மாதிரி விவாதிப்பதில் எனக்கு விருப்பமே இல்லை.'' மீண்டும் ஒரு முறை புன்னகைத்த கிரின் எழுந்தான். “இப்போதைக்கு நான் விடை பெற்றுக் கொள்கிறேன். நாம் மீண்டும் சந்திப்போம்.''

இதயத்தின் அடித்தளத்தில் கிரினைப் பற்றி ஒரு விருப்பமின்மை சேகரிடம் இருந்து கொண்டே இருந்தது. அது காலப்போக்கில் வளர்ந்து ஒரு பலமான வெறுப்பாகவே ஆகிவிட்டிருந்தது. ஆனால், அன்று அந்த இளம் பிரம்மோ இளைஞன் அங்கிருந்து கிளம்பியபோது, சேகர் தன்னுடைய இதயபூர்வமான மரியாதையை அவனுக்கு செலுத்தினான். ஒரு மனிதன் எப்படி தன்னுடைய தனிப்பட்ட விருப்பத்தின் எஞ்சிய மீதியையும் தியாகம் செய்வது, மிகவும் கடுமையான - இக்கட்டான சூழ்நிலையிலும்கூட ஒரு மனிதன் எப்படி தான் கொடுத்த வாக்குறுதியைக் காப்பாற்றுவது போன்ற விஷயங்களை முதல் தடவையாக சேகர் தெரிந்துகொண்டான்.

அன்று சாயங்காலம், புவனேஸ்வரி தரையில் உட்கார்ந்து கொண்டு, லலிதாவின் உதவியுடன் சுற்றிலும் குவியலாக இருந்த புதிய ஆடைகளைப் பிரித்து வைத்துக்கொண்டிருந்தாள். அறைக்குள் நுழைந்த சேகர் புவனேஸ்வரியின் படுக்கையில் போய் உட்கார்ந்தான். இன்று, லலிதாவைப் பார்த்தவுடன், அவன் வேகமாக அங்கிருந்து கிளம்பவில்லை. அவனைப் பார்த்த அவனுடைய தாய் கேட்டாள்: “என்ன விஷயம்?''

சேகர் பதிலெதுவும் கூறாமல், அவர்களையே அமைதியாகப் பார்ப்பதை தொடர்ந்து கொண்டிருந்தான். சிறிது நேரத்திற்குப் பிறகு அவன் கேட்டான்: “நீங்க என்ன செய்றீங்க, அம்மா?''

“புதிய ஆடைகளை யார் யாருக்குத் தரணும்னு எண்ணிப் பார்த்துக் கொண்டு இருக்கிறேன். சொல்லப்போனால், இன்னும் கொஞ்சம் துணிகள் வாங்கணும். அப்படித்தானே கண்ணு?''

லலிதா அதற்கு “ஆமாம்'' என்று தலையை ஆட்டினாள்.

புன்னகைத்துக் கொண்டே, சேகர் கேட்டான்: “நான் திருமணம் செய்து கொள்ளவில்லையென்றால், என்ன செய்வீங்க?''

புவனேஸ்வரி சிரித்தாள். “அதை உன்னால் செய்ய முடியும். நீ அதைவிட அதிகமாகவே செய்யக்கூடியவன்தான்.''

சேகரும் சிரித்தான்: “அதுதான் நடக்கப் போகிறது அம்மா''.

அவனுடைய தாயின் முகம் வெளிறியது. “இது என்ன பேச்சு? இப்படியெல்லாம் மோசமாக பேசாதே.''

“நான் இவ்வளவு நாட்களாக பேசாமல்தான் இருந்தேன், அம்மா. நான் தொடர்ந்து அமைதியாகவே இருந்தால், எல்லாம் சுடுகாடாகவே ஆகிவிடும்.''

அவனைப் புரிந்துகொள்ள முடியாமல், புவனேஸ்வரி அவனையே வெறித்துப் பார்த்தாள்.

சேகர் சொன்னான்: “நீங்கள் உங்க மகனை எவ்வளவோ தடவை மன்னிச்சிருக்கீங்க, அம்மா. இந்த தடவையும் என்னை மன்னிச்சிடுங்க. உண்மையாகவே, நான் அந்தப் பெண்ணைத் திருமணம் செய்ய முடியாது.''

அவளுடைய மகனின் வார்த்தைகள் புவனேஸ்வரியை உண்மையிலேயே கோபம் கொள்ளச் செய்தன. ஆனால், அதை மறைத்துக்கொண்டு அவள் சொன்னாள்: “சரி... நீ விருப்பப்படுவது மாதிரியே நடக்கட்டும். இப்போ நீ போ சேகர். என்னை கஷ்டப்படுத்தாதே. எனக்கு எவ்வளவோ வேலைகள் இருக்கு.''

மீண்டும் ஒரு முறை சிரிக்க முயன்று தோல்வியைத் தழுவிய சேகர் மெதுவான குரலில் சொன்னான்: “இல்லை, அம்மா, உண்மையாகவே இந்தத் திருமணம் நடக்கக்கூடாது.''

“திடீர்னு இது என்ன குழந்தைத்தனமான விளையாட்டு?''

“இது குழந்தையின் விளையாட்டு அல்ல. அதனால்தான் நான் இதையெல்லாம் கூறுகிறேன், அம்மா.''

இப்போது உண்மையாகவே பயந்துவிட்ட புவனேஸ்வரி கோபத்துடன் சொன்னாள்: “சேகர், இதெல்லாம் என்ன என்று எனக்கு விளக்கிச் சொல்லு. இப்படிப்பட்ட குழப்பங்கள் எனக்குப் பிடிக்காது.''

மெதுவாக சேகர் சொன்னான்: “நான் இன்னொரு நாள் கூறுகிறேன், அம்மா... இன்னொரு நேரம்...''

“இன்னொரு நாள் நீ சொல்வியா?'' -துணிகளின் குவியலை ஒரு பக்கமாகத் தள்ளிவிட்ட புவனேஸ்வரி சொன்னாள்: “அப்படின்னா, என்னை இன்னைக்கே பனாரஸுக்குத் திரும்ப அனுப்பி வச்சிடு. இப்படிப் பட்ட சூழ்நிலைகளில் ஒரு நிமிடம்கூட நான் இருக்க விரும்பவில்லை.''

சேகர் தலையைக் குனிந்து கொண்டு அமைதியாக உட்கார்ந்தி ருந்தான். “லலிதாவும் நாளைக்கு என்னுடன் வர விரும்புகிறாள்'' -புவனேஸ்வரி மேலும் அதிகமான பொறுமையை இழந்து சொன்னாள்: “அவள் வருவதற்கு சம்மதம் கிடைக்குமா என்று நான் பார்க்கிறேன்.''

இப்போது சேகர் புன்னகையுடன் தலையை உயர்த்தினான்: “நீங்க அவளை உங்களுடன் அழைச்சிட்டுப் போறீங்க. மற்றவர்களிடம் அதற்காக நீங்க ஏன் அனுமதி கேட்கணும்? உங்களைவிட அவள் மீது யாருக்கு அதிக அதிகாரம் இருக்கு?''

தன் மகனின் முகத்தில் புன்னகை தவழ்வதைப் பார்த்த புவனேஸ்வரிக்கு எப்படியோ மீண்டும் நம்பிக்கை வந்தது. லலிதாவைப் பார்த்துக்கொண்டே அவள் சொன்னாள்: “இவன் என்ன சொல்கிறான் என்று கேட்டாயா? நான் விரும்புகிற இடங்களுக்கெல்லாம் உன்னை அழைச்சிட்டுப் போகலாம் என்று இவன் நினைக்கிறான். நான் உன் அத்தையிடம் அனுமதி கேட்க வேண்டாமா? ''லலிதா பதிலெதுவும் கூறவில்லை. அந்த உரையாடல் நடைபெற்றுக் கொண்டிருந்த முறை அவளை முழுமையான பதைபதைப்பிலும், தர்மசங்கடமான சூழ்நிலையிலும் நிறுத்திவிட்டிருந்தது.

சேகர் வெடித்தான்: “நீங்க இவளோட அத்தையிடம் தகவலைத் தெரிவிக்க வேண்டும் என்று நினைத்தால், தாராளமா அதை செய்யிங்க. அது உங்களின் விருப்பம். ஆனால், நீங்க எது சொன்னாலும், அது நடக்கும் அம்மா. இப்படி நினைக்கிறது நான் மட்டும் அல்ல; யாரை அழைத்துக் கொண்டு போக வேண்டும் என்று நினைக்கிறீர்களோ... இவளும் இப்படித்தான் நினைக்கிறாள். ஏன்னா, இவள் உங்களுடைய மருமகள்!''

புவனேஸ்வரி அதிர்ச்சியடைந்து விட்டாள். தன் தாயிடம் ஒரு மகன் இப்படியா தமாஷாக விளையாடுவது! அவனையே வெறித்துப் பார்த்தவாறு அவள் சொன்னாள்:

“நீ என்ன சொன்னே? இவள் எனக்கு என்ன?''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

எலியாஸ்

எலியாஸ்

February 7, 2012

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel