Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 19

mana-penn

வெகு சீக்கிரமே அந்தத் திருமணம் நடக்கவும் செய்யும். இந்தத் திருமணத்தின் மூலம் நபின் ராய் எவ்வளவு பணத்தை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார் என்பதையும் சேகரின் தாய் மூலம் லலிதா தெரிந்து கொண்டிருந்தாள்.

நிலைமை அப்படி இருக்கும்போது, சேகர் திடீரென்று இந்த மாதிரி அவளை அவமானப்படுத்தினால்? வெறுமனே வெட்ட வெளியை வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தபோது லலிதா இந்த சிந்தனைகளில் மூழ்கிப் போய்விட்டாள். திரும்பியபோது, திடீரென்று சேகர் அங்கு நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அவன் அமைதியாக நின்று சிரித்துக் கொண்டிருந்தான். சேகருக்கு அவள் போட்ட சாமந்திப்பூ மாலை ஆச்சரியப்படும் வகையில் இப்போது அவளுடைய கழுத்தை அலங்கரித்துக் கொண்டிருந்தது. அவளுடைய குரல் கண்ணீரால் கம்மி, தடுமாறியது. அவள் சொன்னாள்: “நீங்க ஏன் இதைச் செய்தீங்க?''

“நீ ஏன் அதைச் செய்தாய்?''

“நான் எதுவும் செய்யல'' - இதைச் சொன்ன லலிதா தன் கழுத்தில் இருந்த மாலையை சேகரை தலையை உயர்த்தி பார்த்துக் கொண்டே கழற்றுவதற்கு முயற்சித்தாள். அதற்குமேல் எதையும் கூறுவதற்கு அவளுக்கு தைரியமே இல்லை. ஆனால், கண்ணீருடன் முணுமுணுத்தாள் : “ எனக்கு சொந்தம் என்று கூறுவதற்கு யாருமில்லை என்ற ஒரே காரணத்திற்காக நீங்க என்னை இப்படி அவமானப் படுத்துகிறீர்களா?''

இதுவரை சேகர் புன்னகைத்துக் கொண்டே இருந்தான். ஆனால், லலிதாவின் வார்த்தைகள் அவனை அதிர்ச்சியடையச் செய்தன. இவை குழந்தைத்தனமான வார்த்தைகள் இல்லை! அவன் சொன்னான் : “நீ என்னை அவமானப்படுத்தவில்லையா?''

தன் கண்ணீரைத் துடைத்துக் கொண்டே, சற்று மென்மையான குரலில் லலிதா கேட்டாள் : “நான் எப்ப அதைச் செய்தேன்?''

சிறிது நேரம் அங்கேயே நின்றிருந்த சேகர் சாதாரணமாக சொன்னான்: “இப்போ... நீ கொஞ்சம் சிந்தித்துப் பார்த்தால், உன்னிடம் பதில் இருக்கும். சமீப நாட்களாகவே நீ மிகவும் உயரத்தில் பறந்து கொண்டிருக்கிறாய், லலிதா. நான் என் பயணத்தைத் தொடங்குவதற்கு முன்னால், அதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டுமென்று விரும்புகிறேன்.'' இதைக் கூறிவிட்டு அவன் அமைதியாக இருந்தான்.

அதற்கு மேல் கூறுவதற்கு லலிதாவிடம் வேறு எதுவும் இல்லை. அவள் தலையைக் குனிந்து கொண்டு அங்கேயே நின்றிருந்தாள். பிரகாசித்துக் கொண்டிருக்கும் நிலவு வெளிச்சத்தில், அவர்கள் இருவருமே எந்த வார்த்தைகளும் கிடைக்காமல் நின்றிருந்தார்கள். அன்னக்காளியின் மகளுடைய திருமணத்தில் மாலையில் இருந்த சிப்பிகளின் ஓசை மட்டுமே சுற்றிலும் திரும்பத் திரும்ப ஒலித்துக் கொண்டிருந்தன.

சிறிது நேரம் அமைதியாக நின்று கொண்டிருந்த சேகர் சொன்னான்: “இனிமேலும் குளிரில் நின்று கொண்டிருக்காதே. உள்ளே போ.''

“நான் போகிறேன்'' - லலிதா தான் அங்கிருந்து கிளம்புவதற்கு முன்பு தன்னுடைய இறுதி மரியாதைகளைச் செலுத்துகிற விதத்தில் சேகரின் பாதங்களில் விழுந்தாள்.

அதைப் பார்த்து சேகர் புன்னகைத்தான். அவன் சிறிது நேரம் தயங்கியவாறு இரண்டு கைகளையும் நீட்டி, அவளை அருகில் கொண்டு வந்து, சற்று குனிந்து, தன் உதடுகளால் மெதுவாக அவளுடைய உதடுகளைத் தொட்டான். “இன்று இரவிற்குப் பிறகு நீ யாருக்கும் பதில் கூற தேவையில்லை. உனக்கு என்ன பண்ண வேண்டும் என்று தெரியும் லலிதா.''

ஏதோ இனம்புரியாத உணர்ச்சி உண்டாக்கிய நடுக்கம் லலிதாவின் உடல் முழுக்க ஓடியது. நகர்ந்து கொண்டே அவள் கேட்டாள்: “நான் மாலை போட்டேன் என்பதற்காக நீங்க இப்படி நடந்தீங்களா?''

புன்னகைத்துக் கொண்டே, சேகர் அதை மறுத்தான்: “இல்லை. நான் இதைப்பற்றி எத்தனையோ நாட்களாக நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால், எந்த விதமான முடிவுக்கும் வர முடியவில்லை. இன்று நான் துணிச்சலான முடிவை எடுத்திருந்தேன் என்றால் அதற்குக் காரணம் - நீ இல்லாமல் என்னால் வாழ முடியாது என்பதை நான் உணர்ந்ததுதான்.''

லலிதா சொன்னாள்: “ஆனால் உங்க அப்பா கேள்விப்பட்டால், மிகவும் கோபப்படுவார். அம்மா மிகவும் வேதனைப்படுவாங்க. இல்லை, இது நடக்காத விஷயம், சேகர்....''

“உண்மைதான். அப்பா கோபப்படுவார். ஆனால், அம்மா சந்தோஷப்படுவாங்க. பரவாயில்லை... எதைத் தவிர்க்க முடியாதோ, அது நடந்திருக்கிறது. நீயும் அதை ஒதுக்க முடியாது. நானும்தான். இப்போ கீழே போய், அம்மாவின் ஆசீர்வாதங்களை வாங்கிக்கோ.''

8

ருநாள், சுமார் மூன்று மாதங்களுக்குப் பிறகு வாடிப்போன முகத்துடன் குருச்சரண் நபின்ராயின் அறைக்குள் நுழைந்து அவருக்கு அருகில் இருந்த மெத்தையில் உட்கார இருந்தார். அப்போது நபின் ராய் உரத்த குரலில் அதில் உட்காரக்கூடாது என்று கத்தினார். “இல்லை... இல்லை... அங்கே இல்லை... அந்த ஸ்டூலை எடுங்க. நான் இந்த நேரத்தில் இன்னொரு முறை குளிக்க முடியாது. நீங்க உங்களின் மதத்தை விட்டு விலகிட்டீங்க. அப்படித்தானே?''

சற்று தூரத்தில் இருந்த ஸ்டூலில் தன் தலையை மிகவும் குனிந்து கொண்டு குருச்சரண் உட்கார்ந்திருந்தார். நான்கு நாட்களுக்கு முன்னால், எல்லா வகையான சடங்குகளையும் செய்து, அவர் பிராமோ இனத்திற்கு மாறிவிட்டார். இன்று அதிகாலையில், அந்தச் செய்தி வர்ணமயமான வதந்திகளுடன் கலந்து ஒரு தீவிரமான இந்து மத வெறியரான நபின் ராயின் காதுகளை அடைந்தது. நபின் ராயின் கண்களில் இருந்து தீப்பொறிகள் பறந்து கொண்டிருந்தன. ஆனால், குருச்சரண் எப்போதும்போல மிகவும் மென்மையானவராக இருந்தவாறு அங்கு அமைதியாக உட்கார்ந்திருந்தார். யாரிடமும் கலந்தாலோசிக்காமல் அவர் அந்த தீர்மானத்தை எடுத்ததிலிருந்து வீட்டில் உண்டான கண்ணீருக்கும் சந்தோஷமற்ற தன்மைக்கும் ஒரு முடிவே இல்லாமல் போய்விட்டது.

நபின்ராய் வெடித்தார் : “சொல்லுங்க... இது உண்மையா இல்லையா?''

குருச்சரண் கண்ணீர் நிறைந்திருந்த கண்களை உயர்த்தியவாறு சொன்னார்: “ஆமாம்... உண்மைதான்.''

“நீங்கள் ஏன் இந்த முடிவுக்கு வந்தீர்கள்? உங்களுடைய சம்பளமே அறுபது ரூபாய்தான். நீங்க...''

ஒரு வெறுப்பு கலந்த எரிச்சல் நபின்ராயின் குரலை பேசவிடாமல் தடுத்தது.

கண்களைத் துடைத்தவாறு தொண்டையைச் சரிபண்ணிக் கொண்டு குருச்சரண் சொன்னார்: “நான் என் சுய உணர்வில் இல்லை... என்னுடைய பிரச்சினைகள் என் கழுத்தில் ஒரு கயிறை மாட்டிக் கொள்ளச் செய்வதில் கொண்டுபோய் விட்டு விடுமா, இல்லாவிட்டால் கடவுளிடம் கொண்டு போய் சேர்க்குமா என்று எனக்கே தெரியாது. எந்த வழியில் போவது என்று எனக்கே புரியவில்லை. இறுதியாக, தற்கொலை செய்து கொள்வதற்கு பதிலாக, கடவுளிடம் அடைக்கல மாகிவிடத் தீர்மானித்தேன்... அதனால் மாறினேன்.

குருச்சரண் தன் கண்களைத் துடைத்துக் கொண்டே அங்கிருந்து கிளம்பினார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel