Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 21

mana-penn

மறுநாள் சாயங்காலம், அவன் ஒரு நடை நடந்து வரலாம் என்று வெளியே கிளம்பினான். அதே நேரத்தில் மாலை நேர தேநீர் நிகழ்ச்சி குருச்சரணின் வெளி அறையில் அமர்க்களமாக நடந்து கொண்டிருந்தது. ஏராளமான சிரிப்பு, உரையாடல் ஆகியவற்றுடன் அது தொடர்ந்து கொண்டிருந்தது. குதூகலம் நிறைந்த சத்தம் தன் காதுகளில் கேட்க, ஒரு நிமிடம் தயங்கிய சேகர், பிறகு வீட்டிற்குள் நுழைந்து, சத்தத்தைக் கிழித்துக் கொண்டு குருச்சரணின் அறைக்குள் நுழைந்தான். உடனடியாக அந்த ஆரவாரம் நின்றது. அவனுடைய முகத்தைப் பார்த்ததும், அங்கு இருந்த எல்லாரின் முக வெளிப்பாடுகளும் மாற ஆரம்பித்தன.

சேகர் திரும்ப வந்துவிட்டான் என்ற விஷயம் அங்கிருந்தவர்களில் லலிதாவைத் தவிர வேறு யாருக்கும் தெரியாது. அன்று கிரினும் வேறொரு இளைஞனும் அங்கு இருந்தார்கள். புதிதாக தென்பட்ட அந்த மனிதன் சேகரையே ஆச்சரியத்துடன் பார்த்தான். அப்போது கிரின் உயிர்ப்பே இல்லாமல் எதிரில் இருந்த சுவரையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். குருச்சரண்தான் சத்தம் போட்டு பேசிக் கொண்டிந்தார். ஆனால், இப்போது அவருடைய முகம் முற்றிலும் வெளிறிப்போய் காணப்பட்டது. அவருக்கு அருகில் அமர்ந்திருந்த

லலிதா தேநீரைத் தயாரித்துக் கொண்டிருந்தாள். அவள் ஒருமுறை மேலே பார்த்துவிட்டு, பிறகு தன் தலையைக் குனிந்து கொண்டாள்.

சேகர் அருகில் வந்து குருச்சரணை மரியாதையுடன் வணங்கியவாறு புன்னகையுடன் சொன்னான்: “ஏன் எல்லா விளக்குகளும் மங்கலாக இருக்கின்றன?''

குருச்சரண் மென்மையான குரலில் அவனை ஆசீர்வதித்தார். ஆனால், அவருடைய குரல் சரியாகவே கேட்கவில்லை. சேகர் மற்றவர்களின் இக்கட்டான நிலையை அந்த நேரத்தில் மனதிற்குள் ரசித்துக் கொண்டே, அவருக்கு சிறிது நேரம் தரவேண்டும் என்பதற்காக அவன் தன்னைப் பற்றி பேச ஆரம்பித்தான். முந்தைய நாள் காலை நேர புகைவண்டியில் தாங்கள் திரும்பி வந்ததையும், தன் தாய் நோயிலிருந்து எப்படி தப்பித்தாள் என்பதையும் அவன் கூறினான். தாங்கள் சென்று பார்த்த எல்லா இடங்களைப் பற்றியும் அவன் விளக்கிச் சொன்னான். மூச்சு விடாமல் எல்லாவற்றையும் சொல்லி முடித்துவிட்டு, இதற்குமேல் கூறுவதற்கு வேறு எதுவுமில்லை என்று தோன்றியவுடன், இறுதியாக சேகர் யாரென்று தெரியாத அந்த இளைஞனின் முகத்தையே பார்த்தான்.

அதற்குள் குருச்சரண் தன் இயல்பு நிலையை அடைந்திருந்தார். அவர் அந்த இளைஞனை அறிமுகப்படுத்திக் கொண்டு சொன்னார் : “இவர் நம் கிரினின் நண்பர். இவர்கள் ஒரே இடத்திலிருந்து வந்திருக்கிறார்கள். இவர்கள் ஒன்றாகச் சேர்ந்து படித்திருக்கிறார்கள். இவர் ஒரு நல்ல பையன். நாங்கள் ஒருவருக்கொருவர் அறிமுகமான சமயத்திலிருந்தே இவர் ஷ்யாம் பஜாரில் வாழ்ந்தாலும், என்னைப் பார்ப்பதற்காக அடிக்கடி வருகிறார்.''

தலையை ஆட்டிக் கொண்டே சேகர் தனக்குத்தானே கூறிக் கொண்டான் : "ஒரு நல்ல பையன்!' சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அவன் கேட்டான் : “சித்தப்பா... எல்லாம் நல்ல முறையில் நடக்கின்றனவா?''

குருச்சரண் பதில் எதுவும் கூறவில்லை. அவர் தன் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தார். சேகர் அங்கிருந்து புறப்படுவதற்காக எழுந்திருப்பதைப் பார்த்தவுடன், அவர் கண்ணீர் மல்க வேகமாகக் கூறினார் : “தயவு செய்து தோணுறப்போ வா. எங்களை முழுமையாக மறந்துவிட வேண்டாம். நீ எல்லா செய்திகளையும் கேள்விப்பட்டாயா?''

“நிச்சயமா நான் வருவேன்'' - இதைச் சொல்லியவாறு சேகர் வீட்டின் உள்ளறையை நோக்கி நடந்தான்.

சிறிது நேரத்தில் குருச்சரணின் மனைவியின் விசும்பல் சத்தம் கேட்டது. வெளியே உட்கார்ந்தவாறு குருச்சரண் தன்னுடைய கண்ணீரை தன் வேட்டி நுனியால் துடைத்துக் கொண்டார். கிரின் ஒரு குற்றவாளியைப் போன்ற உணர்வுடன் ஜன்னலுக்கு வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருந்தான். லலிதா ஏற்கெனவே அங்கிருந்து போய்விட்டிருந்தாள்.

சிறிது நேரத்திற்குப் பிறகு, சமையலறையைவிட்டு வெளியே வந்து வராந்தாவைத் தாண்டி வெளி வாசலில் கால் வைத்தபோது, இருட்டில் மூழ்கியிருந்த கதவுகளுக்குப் பின்னால் லலிதா காத்துக் கொண்டிருப்பதை சேகர் பார்த்தான்.

மரியாதையுடன் அவனுடைய பாதங்களைத் தொட்ட அவள் அவனுக்கு மிகவும் அருகில் இருந்தாள். அமைதியாக தன் தலையை உயர்த்திய அவள் சிறிது நேரம் காத்திருந்தாள். பிறகு, சற்று பின்னால் நகர்ந்தவாறு அமைதியாகக் கேட்டாள் : “நீங்க ஏன் என் கடிதத்திற்கு பதில் போடவில்லை?''

“என்ன கடிதம்? நான் கடிதம் எதுவும் பெறவில்லையே! நீ என்ன எழுதினாய்?''

லலிதா சொன்னாள் : “ எவ்வளவோ... அதனால் பிரச்சினையில்லை. நீங்க எல்லாவற்றையும் கேள்விப்பட்டிருப்பீர்கள். இப்போ என்னிடம் சொல்லுங்க. என்னை நீங்க என்ன செய்யச் சொல்றீங்க?''

வியப்பு கலந்த குரலில் சேகர் கேட்டான் : “நான் கூறுவதால் என்ன மாறுதல் உண்டாகிவிடப் போகிறது?''

அவனையே அதிர்ச்சியுடன் பார்த்த லலிதா கேட்டாள் : “நீங்க ஏன் அப்படி சொல்றீங்க?''

“சரி லலிதா... நான் யாருக்கு கட்டளை இடுவது?''

“ஏன்... எனக்குத்தான். வேறு யாருக்கு?''

“ஏன் குறிப்பா உனக்கு? அப்படியே நான் சொன்னாலும், நீ ஏன் அதைக் கேட்கப் போகிறாய்?'' - சேகரின் குரல் உயிரற்றதாகவும் சற்று கவலை நிறைந்ததாகவும் இருந்தது.

இப்போது லலிதா மிகவும் குழப்பத்திற்குள்ளானவளாக ஆகிவிட்டாள். அவள் மேலும் சற்று அருகில் வந்து, கண்ணீருடன் கூறினாள்: “நீங்க பேசுங்க. என்னைக் குத்தி காட்டுறதுக்கு இது நேரம் இல்லை. நான் உங்களைக் கெஞ்சிக் கேட்டுக் கொள்கிறேன்... என்ன நடக்கும் என்று எனக்குச் சொல்லுங்க. இரவு நேரங்களில் உண்டாகும் கவலைகளாலும் பயத்தாலும் என்னால் தூங்கவே முடியவில்லை.''

“எதற்கு பயம்?''

“உண்மையாகத்தான் கூறுகிறேன். பயம் இருக்காதா? நீங்களும் இங்கே இல்லை. அம்மாவும் இல்லை. சில நேரங்களில் மாமா செய்யும் முட்டாள்தனமான காரியங்களைப் பார்க்க வேண்டுமே! இப்போ அம்மா என்னை ஏற்றுக் கொள்ளவில்லை என்றால் எப்படி இருக்கும்?''

சிறிது நேரத்திற்கு சேகர் மிகவும் அமைதியாக இருந்தான். பிறகு அவன் சொன்னான்: “ஆமாம்... உண்மைதான். அம்மா உன்னை ஏற்றுக்கொள்வதில் விருப்பம் இல்லாமல்தான் இருப்பாங்க. உன் மாமா வேறொரு ஆளிடமிருந்து நிறைய பணத்தை வாங்கியிருக்கிறார் என்ற விஷயத்தை அவங்க கேள்விப்பட்டிருக்காங்க. போதாக்குறைக்கு, நீங்க எல்லாரும் இப்போ பிரம்மோக்களாக வேறு இருக்கிறீர்கள். நாங்கள் இந்துக்கள்.''

அந்த நேரத்தில் அன்னக்காளி சமையலறைக்குள் இருந்தவாறு அழைத்தாள் : “லலிதா அக்கா... அம்மா கூப்பிடுறாங்க.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel