Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 23

mana-penn

அவளுக்கு என்னென்ன தேவைப்படுகின்றன என்பதைத் தெரிந்து கொண்டு, அவளை ஏன் கவனமாகப் பார்த்துக் கொள்ளக்கூடாது?''

“இப்போ என்னிடமிருந்து அவள் எதையும் ஏற்றுக் கொள்வாளா? உன் அப்பா பொது பாதையைக்கூட அடைத்துவிட்டார். எந்த முகத்தை வைத்துக் கொண்டு நான் அவளுக்கு எதையாவது தருவது? குருச்சரண் பாபு கவலைகளால் பாதிக்கப்பட்டு மோசமாக நடந்துகொண்டார். அவருக்கு மிகவும் நெருக்கமாக இருந்தவர்கள் என்ற முறையில் அவரை மன்னித்து, அவருக்கு உதவி செய்திருக்க வேண்டும். மாறாக, நாம் அவரைத் தனியாகப் பிரித்து, முழுமையாக ஓரம்கட்டி விட்டோம். இன்னும்கூட நான் சொல்வேன் - உன் அப்பாவால்தான் லலிதாவின் மாமா தன் மதத்தையே தூக்கியெறியும் நிலைக்குத் தள்ளப்பட்டார். உன் அப்பா பணத்திற்காக அவரை விடாமல் துரத்திக் கொண்டிருந்தார். வெறுப்பின் காரணமாக எந்த மனிதனாக இருந்தாலும் அந்த அளவிற்கு நடக்கத்தான் செய்வான். குருச்சரண் பாபு சரியான முடிவைத்தான் எடுத்திருக்கிறார் என்று நான் கூறுகிறேன். அந்தப் பையன் கிரின் நம்மைவிட அவருக்கு மிகவும் நெருக்கமானவன் என்பதைச் செயல் வடிவில் காட்டிவிட்டான். நான் உன்னிடம் கூறுகிறேன் - லலிதா அவனைத் திருமணம் செய்து கொண்டால், அவள் சந்தோஷத்துடன் இருப்பாள். அடுத்த மாதம் திருமணம் என்று நான் நினைக்கிறேன்.''

அடுத்த நிமிடம் சேகர் திரும்பிக் கொண்டு கேட்டான்: “அடுத்த மாதம் திருமணம் நடக்கப் போகிறதா?''

“நான் கேள்விப்பட்டது அதுதான்!''

சேகரிடம் அதற்குப் பிறகு கேட்பதற்கு எந்தக் கேள்விகளும் இல்லை.

சிறிது நேரம் அமைதியாக இருந்துவிட்டு, அவனுடைய அன்னை சொன்னாள்: “லலிதாவிடமிருந்து அவளுடைய மாமாவின் இப்போதைய நிலைமை அவ்வளவு நன்றாக இல்லை என்பதை நான் தெரிந்து கொண்டேன். அவர் எப்படி இருக்க முடியும்? அவருடைய மனதில் அமைதி இல்லை. எல்லாவற்றுக்கும் மேலாக, வீட்டில் தொடர்ந்து கண்ணீர்த் துளிகள். ஒரு நிமிடம்கூட அங்கு அமைதி இல்லையாம்.''

சேகர் அமைதியாக அதைக் கேட்டுக் கொண்டிருந்தான்.

அவர்கள் வாழ்ந்து கொண்டிருந்த அந்தச் சந்து மிகவும் குறுகியதாக இருந்தது. இரண்டு கார்கள் ஒரே நேரத்தில் போக முடியாத அளவிற்கு அது சிறியது. சுமார் பத்து நாட்களுக்குப் பிறகு, தன் வேலையிலிருந்து சேகர் திரும்பி வந்து கொண்டிருந்தான். குருச்சரணின் வீட்டிற்கு முன்னால் நின்று கொண்டிருந்த காரால், அவனுடைய அலுவலக கார் நிற்க வேண்டியதாகிவிட்டது. சேகர் கீழே இறங்கினான். கேட்டதற்கு, அந்த கார் ஒரு டாக்டருக்கு சொந்தமானது என்ற பதில் கிடைத்தது. ஒரு டாக்டர் அழைக்கப்பட்டிருந்தார்.

அவனுடைய தாய் ஏற்கெனவே குருச்சரணின் மோசமான உடல்நிலையைப் பற்றி கூறியிருந்ததால், சேகர் வீட்டிற்குத் திரும்புவதற்கு பதிலாக நேராக குருச்சரணின் படுக்கையறையை நோக்கி சென்றான். அவன் என்ன சந்தேகப்பட்டானோ, அதுதான் உண்மையாக இருந்தது. குருச்சரண் உயிரற்ற மனிதரைப் போல படுக்கையில் படுத்திருந்தார். படுக்கையின் ஒரு பக்கத்தில் கிரினும் லலிதாவும் அமர்ந்திருந்தார்கள். அவர்கள் மிகவும் கவலையுடன் காணப்பட்டனர். படுக்கையின் இன்னொரு பக்கத்தில், டாக்டர் தன்னுடைய சோதனைகளைச் செய்து கொண்டிருந்தார்.

குருச்சரண் சேகரை வரவேற்கும் விதத்தில் சில வார்த்தைகளை தெளிவில்லாமல் முணுமுணுத்தார். லலிதா புடவையின் ஒரு நுனியை மேலும் அருகில் இழுத்துக் கொண்டு வேறு பக்கம் பார்த்தாள்.

டாக்டர் அதே பகுதியைச் சேர்ந்தவர்தான். அவருக்கு சேகரை நன்றாகத் தெரியும். அவர் தன்னுடைய சோதனைகளை முடித்துவிட்டு, மருந்துகளுக்கான ஏற்பாடுகளை செய்துவிட்டு அங்கிருந்து கிளம்பினார். அவரை சேகர் பின் தொடர்ந்தான். கிரின் அவர்களைத் தொடர்ந்து வெளியே வந்து, கொடுக்க வேண்டிய பணத்தை தந்தான். நோய் அந்த அளவிற்கு கடுமையாக ஆகவில்லை என்று கூறிவிட்டு, காற்றில் உண்டாகக்கூடிய ஒரு சிறிய மாற்றம்கூட ஆச்சரியப்படும் விதத்தில் நல்ல விளைவை உண்டாக்கலாம் என்றார் அவர். டாக்டர் அங்கிருந்து கிளம்பியவுடன், இருவரும் குருச்சரணின் அறைக்குத் திரும்பினார்கள்.

லலிதா கிரினை சைகை காட்டி அழைத்து, அவனுடன் மிகவும் மெதுவான குரலில் அறையின் ஒரு மூலையில் நின்று கொண்டு உரையாடினாள். சேகர் குருச்சரணுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு, அவரையே அமைதியாகப் பார்த்துக்கொண்டிருந்தான். குருச்சரண் இப்போது கதவுப் பக்கம் தன்னுடைய முதுகை காட்டிக்கொண்டு படுத்திருந்தார். சேகர் தனக்கு அருகில் அமர்ந்திருக்கும் விஷயம் அவருக்குத் தெரியாது.

சிறிது நேரம் கழித்து சேகர் எழுந்து அங்கிருந்து கிளம்பினான். அதற்குப் பிறகும், கிரினும் லலிதாவும் மிகவும் நெருக்கமான உரையாடலில் இருந்தார்கள். யாரும் அவனை உட்காரும்படி கூறவும் இல்லை. யாரும் அவன் வெளியே செல்வதைப் பார்க்கவும் இல்லை. மரியாதைக்குக்கூட அவனிடம் யாரும் பேசவில்லை. அவனிடம் ஒரு கேள்வியைக்கூட கேட்கவில்லை.

அதற்குப் பிறகுதான் லலிதா தன்னுடைய மிகப்பெரிய பொறுப்பிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டாள் என்பதை சேகர் உண்மையாகவே உணர்ந்தான். இனிமேல் அவன் நிம்மதிப் பெருமூச்சு விடலாம்! இனிமேல் எதை நினைத்தும் பயப்பட வேண்டியதில்லை. லலிதா அவனை எந்த இக்கட்டிலும் மாட்டிவிட மாட்டாள். தன்னுடைய இயல்பு உடைகளை தன் அறையில் அணியும்போது, சேகர் எண்ணற்ற தடவை தனக்குத்தானே கூறிக்கொண்டான்- இப்போது அந்தக் குடும்பத்திற்கு கிரின்தான் உண்மையான நண்பனாக இருக்கிறான்! எல்லாரின் நம்பிக்கைக்கும் உரியவனாகவும், லலிதாவின் எதிர்கால பாதுகாப்பைத் தருபவனாகவும் அவன்தான் இருக்கிறான்! இந்த சிரமமான சூழ்நிலையில் சேகர் ஒன்றுமேயில்லை. வெறும் வார்த்தைகளால் ஆன உறுதிகளைக்கூட அவனிடமிருந்து இப்போது தேவை என்று லலிதா நினைக்கவில்லை!

ஆச்சரியத்துடன் உரத்த குரலில் "ஓ” என்று கத்தியவாறு சேகர் நிலை குலைந்து கட்டிலில் சாய்ந்தான். லலிதா மனதில் திட்டமிட்டே அவனிடமிருந்து தன்னை விலக்கிக் கொண்டிருக்கிறாள். அவன் முற்றிலும் ஒரு வேற்று மனிதன், வெறும் அறிமுக மனிதன் என்பதை அவளின் செயல் மிகவும் தெளிவாக காட்டிவிட்டது. மேலும், அவன் இருக்கும் போதே, லலிதா கிரினை வற்புறுத்தி ஒரு மூலைக்கு அழைத்துச் சென்று, அவனுடன் மிகவும் தாழ்ந்த- நெருக்கமான குரலில் விவாதித்தாள். மிகவும் தூரத்தில் அல்லாத ஒரு நாளன்று, இதே மனிதனுடன் திரை அரங்கத்திற்குச் செல்லக் கூடாது என்று சேகர் லலிதாவைத் தடுத்தான்.

ஒரு நேரம், லலிதா சமீப காலமாக சேகருடன் உண்டான விரிசல் காரணமாக உண்டான பதைபதைப்பால் கிரினுடன் இப்படி நடந்திருக்கிறாள் என்றுகூட சேகர் தன்னைத்தானே தேற்றிக் கொள்ள முற்பட்டான். ஆனால், எப்படி அப்படி நடக்க முடியும்? உண்மை அதுவாக இருக்கும் பட்சம், ஏதாவதொரு வகையில் இப்போது வந்து சேர்ந்திருக்கும் குழப்பமான விஷயங்களைப் பற்றி அவனுடன் பேசுவதற்கு அவள் முயற்சி செய்திருக்க மாட்டாளா?

அப்போது அவனுடைய அன்னையின் குரல் வெளியிலிருந்து கேட்டது: “என்ன விஷயம்? இன்னும் நீ குளிக்கலையா? சாயங்காலம் ஆயிடுச்சு.''

சேகர் குழப்பமான மன நிலையுடன் தன் முகத்தைத் தன்னுடைய தாயின் பார்வையில் படாதபடி ஒரு கோணத்தில் வைத்தவாறு உட்கார்ந்திருந்தான். பிறகு வேகமாகத் தன்னுடைய மாலை நேர காரியங்களில் ஈடுபட்டான்.

கடந்த சில நாட்களாகவே அவனுடைய மனம் தொடர்ந்து பல விஷயங்களைப் பற்றியும் ஆழமாக சிந்தித்துக் கொண்டிருந்தது. ஆனால், ஒரே ஒரு விஷயத்தைப் பற்றி சேகரால் தெளிவான முடிவுக்கு வரவே முடியவில்லை. அது உண்மையாகவே யாருடைய தவறு? லலிதாவிற்கு நடைபெறும் திருமணம் சம்பந்தப்பட்ட அனைத்து திட்டங்களையும் நன்கு தெரிந்திருந்த பிறகும், அவன் அவளுக்கு உறுதியளிக்கும் வண்ணம் ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel