Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 26

mana-penn

“ஆமாம்... அவங்களுக்கு எல்லாரும் இருக்கோம். இருந்தும், துயரத்தால் அனாதையாக ஆகிவிட்டதைப் போல உணருகிறார்கள்.''

“உங்க உடல் நிலை எப்படி இருக்கு?''

“நான் நல்லா இருக்கேன்'' -கூறிவிட்டு அவன் வேகமாக வெளியேறினான். வெளியே கால் வைத்தவுடன், அவமானத்தாலும் வெறுப்பாலும் தான் எரிந்து கொண்டிருப்பதைப் போல சேகர் உணர்ந்தான். லலிதாவுடன் நிற்க வைத்துப் பார்க்கும்போது, தானே மிகவும் சிறிய மனிதனாக இருப்பதைப் போல அவனுக்குத் தோன்றியது. வீட்டிற்குத் திரும்பி வந்தவுடன், அவன் சூட்கேஸை இழுத்து மூடினான். புகைவண்டி புறப்படுவதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது என்பது அவனுக்குத் தெரியுமாதலால், அவன் படுக்கையில் கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டான். லலிதாவைப் பற்றிய ஆபத்தான நினைவுகளைச் சுட்டெரித்து சாம்பலாக ஆக்க வேண்டும் என்பதுதான் அதன் ஒரே நோக்கமாக இருந்தது. தன் இதயத்தில் இருந்த வெறுப்பு ஜுவாலைகளை அதன்மீது செலுத்தினான். தொடர்ந்து தான் அவமானப்பட்டு வருவதால் உண்டான கோபத்தில் அவன் அவளை கடுமையான வார்த்தைகளால் திட்டினான். உண்மையாகக் கூறுவதாக இருந்தால், அவளை தரம் தாழ்ந்த பெண் என்று கூறுவதற்குக்கூட அவன் தயங்கவில்லை. பிறகு அவன் குருச்சரணின் மனைவி கூறியதை ஞாபகப்படுத்திப் பார்த்தான். “வசதிக்காக பண்ணிக் கொண்ட திருமணம் அது. சந்தோஷத்திற்காக அல்ல. அதனால், யாருக்கும் தகவல் தெரிவிக்கப்படவில்லை; அழைக்கப்படவும் இல்லை. இன்னொரு வகையில் சொல்வதாக இருந்தால், உங்க குடும்பத்திற்கு கட்டாயம் சொல்லப்பட வேண்டும்னு லலிதா சொன்னாள்.'' லலிதாவின் அந்த வெறும் வார்த்தைகளே சேகரின் கோப ஜுவாலைகளை மேலும் அதிகமாக எரிய வைத்தன.

12

சேகர் தன்னுடைய தாயுடன் திரும்பி வந்தபோது, அவனுடைய திருமணம் நடைபெறுவதற்கு இன்னும் பதினைந்து நாட்கள் இருந்தன.

இரண்டு நாட்களுக்குப் பிறகு, ஒரு காலை நேரத்தில், லலிதா புவனேஸ்வரியுடன் உட்கார்ந்து, சில பொருட்களைப் பிரித்து தனியாக வைத்துக் கொண்டிருந்தாள். இந்த விஷயம் சேகருக்குத் தெரியாது. தன் தாயின் அறைக்குள் நுழைந்த அவன் அங்கு லலிதாவைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டான். அவன் அதே இடத்தில் அப்படியே நின்றுவிட்டான். லலிதா தன் தலையைக் குனிந்து கொண்டே வேலையைத் தொடர்ந்து கொண்டிருந்தாள்.

அவனுடைய அன்னை கேட்டாள்: “என்ன விஷயம், கண்ணு?''

அவளை எதற்காக சந்திக்க விரும்பினோம் என்ற விஷயத்தையே மறந்துவிட்ட சேகர், “இல்லை சும்மாத்தான் வந்தேன்'' என்று தடுமாறிய குரலில் முணுமுணுத்துவிட்டு வேகமாக அறையை விட்டு வெளியேறினான். அவன் லலிதாவின் முகத்தைப் பார்க்கவில்லை. ஆனால் அவனுடைய கண்கள் அவளுடைய கைகள் மீது பதிந்திருந்தன. அவை அணிகலன்களே இல்லாமல் இல்லை என்றாலும், ஒரு ஜோடி கண்ணாடி வளையல்களுக்கு மேல் வேறு எதுவும் அந்த ஒவ்வொரு கையையும் அலங்கரிக்கவில்லை. பரிகாசமாக தனக்குள் சிரித்துக் கொண்ட சேகர் அந்த வஞ்சகச் செயலைப் பற்றி நினைத்துப் பார்த்தான். கிரின் நல்ல வசதி படைத்தவன் என்ற விஷயம் சேகருக்கு நன்றாகத் தெரியும். தன்னுடைய மனைவிக்கு அவன் ஏன் நகைகளே வாங்கிப் போடாமல் இருக்கிறான் என்பதற்கான உண்மையான காரணத்தை அவனால் கண்டு பிடிக்க முடியவில்லை.

அன்று மாலை நேரத்தில் சேகர் வெளியே போவதற்காக கீழ் நோக்கி வேகமாகப் போய்க் கொண்டிருந்தபோது, லலிதா மேல் நோக்கி படிகளில் வந்து கொண்டிருந்தாள். அவள் உடனடியாக ஒரு ஓரத்தில் நின்றாள். ஆனால், அவன் கடந்து செல்ல இருந்தபோது, அவள் உரத்த குரலில் சொன்னாள்: “நான் சில விஷயங்கள் பேசணும்.''

அந்த நிமிடமே நின்ற சேகர் ஆச்சரியமான குரலில் கேட்டான்: “யாருடன்? என்னுடனா?''

சற்று மென்மையான குரலில் லலிதா தொடர்ந்து சொன்னாள்: “ஆமாம்... உங்களுடன்தான்.''

“என்னிடம் சொல்றதுக்கு என்ன இருக்கு?'' -சேகர் மிகவும் வேகமாக வெளியேறினான்.

லலிதா சிறிது நேரம் மிகவும் அமைதியாக அதே இடத்தில் நின்றுவிட்டு, பிறகு ஒரு சிறு பெருமூச்சை விட்டவாறு தன் வழியைத் தொடர்ந்தாள்.

மறுநாள் காலையில் சேகர் வெளியில் இருந்த அறையில் உட்கார்ந்து கொண்டு செய்தித்தாளைப் படித்துக் கொண்டிருந்தான். அவன் மேலே தலையை உயர்த்திப் பார்த்தபோது, அவனே ஆச்சரியப்படுகிற விதத்தில், கிரின் வந்து கொண்டிருந்தான். வணக்கம் கூறிவிட்டு, கிரின் ஒரு நாற்காலியை இழுத்துப் போட்டு அதில் அவனே உட்கார்ந்தான். பதிலுக்கு வணக்கம் கூறிவிட்டு, சேகர் செய்தித்தாளை ஒரு பக்கம் வைத்துவிட்டு, அவனையே வெறித்துப் பார்த்தான். அவர்கள் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தாலும், அவர்கள் இருவருக்கும் உண்மையிலேயே ஒருவரைப் பற்றி இன்னொருவருக்கு எதுவும் தெரியாது. அப்படித் தெரிந்துகொள்ள வேண்டும் என்ற ஆவலும் அவர்களுக்கு இருந்ததில்லை.

கிரின் நேரடியாக விஷயத்திற்கு வந்தான். அவன் சொன்னான்: “சில அவசர விஷயங்களுக்காக உங்களுக்கு நான் தொந்தரவு கொடுக்க வந்திருக்கிறேன். என் மாமியார் என்ன விரும்புறாங்க என்று உங்களுக்குத் தெரியும்- தன்னுடைய வீட்டை உங்களுடைய குடும்பத்திற்கு விற்றுவிட அவங்க நினைக்கிறாங்க. வீட்டை வாங்குவதற்கான ஏற்பாடுகள் சீக்கிரம் நடந்தால், அவங்க இந்த மாதமே முங்கருக்கு திரும்பிப் போய்விடலாம் என்ற விஷயத்தை இன்றைக்கு உங்களிடம் கூறும்படி என்னிடம் சொல்லி விட்டிருக்காங்க.''

தன்னுடைய கண்களை கிரின் மீது பதிய வைத்த நிமிடத்திலிருந்தே சேகரின் மனம் மிகுந்த குழப்பத்திலேயே இருந்தது.

அவன் உரையாடிய விதத்தைப் பற்றி சேகர் சிறிதும் பொருட்படுத்தவேயில்லை. மிகுந்த கவனத்துடன் சொன்னான்: “அது எல்லாம் உண்மைதான். ஆனால், என் அப்பா இல்லாத இந்த நேரத்தில் நீங்க இந்த விஷயத்தை என் அண்ணனிடம்தான் பேச வேண்டும்.''

ஒரு அழகான புன்னகையுடன் அதை ஏற்றுக்கொண்ட கிரின் சொன்னான்: “ஆமாம்... அந்த விஷயமும் எங்களுக்குத் தெரியும். ஆனால், நீங்களே அவரிடம் பேசினால் இன்னும் நன்றாக இருக்கும்.''

சேகர் அதே விதத்தில் தொடர்ந்து சொன்னான்: “நீங்கள் அவருடன் பேசினால்கூட, அந்த விஷயம் நடக்கும். அவர்களுக்கு இப்போ நீங்கள் தான் காப்பாளர்.''

கிரின் சொன்னான்: “தேவைப்பட்டால், நான் அப்படியே செய்கிறேன். ஆனால், நீங்கள் சிறிய தொல்லைகளை ஏற்றுக் கொண்டால், காரியங்கள் மிகவும் எளிதில் நடந்து முடியும் என்று நேற்று லலிதா தங்கச்சி சொன்னாங்க.''

இவ்வளவு நேரமும், ஒரு பெரிய தலையணையைத் தாங்குதலாக வைத்துக்கொண்டு அதன் மீது சேகர் சாய்ந்திருந்தான். அவன் உடனடியாக எழுந்து நேராக உட்கார்ந்து கொண்டு கேட்டான்: “யார் சொன்னாங்க?''

“லலிதா தங்கச்சி சொன்னங்க.''

சேகர் முற்றிலும் பேச முடியாதவனாக ஆகி, ஆச்சரியத்தில் மூழ்கிப் போய்விட்டான். அதற்குப் பிறகு கிரின் சொன்ன ஒரு வார்த்தைகூட அவனுடைய செவிகளுக்குள் நுழையவில்லை. குழப்பத்துடன் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்த அவன் திடீரென்று உரத்த குரலில் பேசினான்: “தயவு செய்து என்னை மன்னித்து விடுங்கள், கிரின்பாபு. ஆனால்... நீங்க லலிதாவைத் திருமணம் செய்யலையா?''

மிகுந்த தர்மசங்கடத்துடன் கிரின் சொன்னான்: “இல்லை... அவங்க எல்லாருக்கும் தெரியும்... நீங்க... காளியும் நானும்...''

“ஆனால், எது நடக்க வேண்டுமோ அது அல்லவே அது.''

லலிதாவிடமிருந்து எல்லாவற்றையும் கிரின் தெரிந்துகொண்டான். அவன் சொன்னான்: “எது திட்டமிடப்பட்டதோ, அதுவல்ல அது என்பதென்னவோ உண்மைதான். நான் வேறு எங்கும் திருமணம் செய்யக்கூடாது என்று குருச்சரண்பாபு என்னிடம் உறுதி வாங்கிக் கொண்டார். நானும் என்னுடைய உறுதியை அவரிடம் கூறிவிட்டேன். அவருடைய மரணத்திற்குப் பிறகு, லலிதா தங்கச்சி என்னிடம் சொன்னாங்க... சொல்லப் போனால், இந்த விஷயங்கள் அனைத்தும் யாருக்கும் தெரியாது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel