Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 24

mana-penn

சொல்லப்போனால் அவள் தன் மனதில் இருப்பதை வெளியே கூறுவதற்கான ஒரு வாய்ப்பைக்கூட அவளுக்கு அவன் தரவில்லை. அதற்கு மாறாக, அவள் எதிர்பாராத உரிமைகள் எதையாவது கேட்டுவிடப் போகிறாளோ அல்லது ஏதாவது உண்மைகளை வெளியே கூறிவிடப் போகிறாளோ என்றெல்லாம் நினைத்து ஆயிரக்கணக்கான முறை தனக்குத்தானே செத்துக் கொண்டிருந்தான் அவன். லலிதாவை எல்லா குற்றங்களுக்கும் மூல காரணமாக இருப்பவள் என்று அவன் மனதில் கணக்குப் போட்டான். அவளைப் பற்றி மிகவும் கடுமையான கருத்தை அவன் கொண்டிருந்தான். அதே நேரத்தில் பொறாமை, கோபம், வேதனை, வெறுப்பு எல்லாம் சேர்ந்து அவனை எரித்து சாம்பலாக்கிக் கொண்டிருந்தன. சொல்லப் போனால் எல்லா ஆண்களுமே இதே மாதிரிதான் தீர்மானம் எடுக்கிறார்கள். இப்படித்தான் அவர்கள் தங்களுக்குள் எரியும் நெருப்பு ஜுவாலைகளால் விழுங்கப்படுகிறார்கள்.

தனக்கென்று உள்ளே உண்டாக்கிக் கொண்ட நரகத்தில் எரிய ஆரம்பித்து ஏழு நாட்களை சேகர் கடத்திவிட்டான். கதவில் கேட்ட ஒரு தட்டும் ஓசை அவனுடைய இதயத்தை பலமாக துடிக்கச் செய்தது. லலிதா, அன்னக்காளியின் கையை இறுகப் பிடித்துக் கொண்டே அவனுடைய அறைக்குள் நுழைந்து கீழே விரிப்பின் மீது உட்கார்ந்தாள். அன்னக்காளி சொன்னாள்: “சேகர் அண்ணா... உங்களிடம் விடை கூறிக் கொள்வதற்காக நாங்கள் இருவரும் வந்திருக்கிறோம். நாளைக்கு நாங்க கிளம்பிப் போகிறோம்.''

சேகர் எதை என்று குறிப்பிட்டுக் கூற முடியாத மாதிரி வெறித்துப் பார்த்தான். அந்த திடீர் செய்தியால் அவன் பேசும் ஆற்றலை இழந்துவிட்டான்.

அன்னக்காளி தொடர்ந்து சொன்னாள்: “நாங்க உங்களுக்கு எவ்வளவோ தவறுகளை இழைத்திருக்கிறோம். எவ்வளவோ பாவங்களைச் செய்திருக்கிறோம். அவற்றை தயவு செய்து மன்னித்துவிடுங்கள்.''

அவை அவளுடைய வார்த்தைகள் அல்ல என்பதை சேகர் நன்கு அறிவான். அவளுக்கு என்ன கூறப்பட்டதோ அதை அவள் திரும்பக் கூறுகிறாள். அவ்வளவுதான். அவன் கேட்டான்: “நாளைக்கு நீங்க எங்கே போகிறீர்கள்?''

“மேற்குப் பக்கம் போகிறோம். நாங்கள் எல்லாரும் முங்கருக்கு அப்பாவுடன் போகிறோம். கிரின் பாபுவிற்கு அங்கே ஒரு வீடு இருக்கிறது. அப்பா குணமான பிறகுகூட நாங்க திரும்பி வர்றதா திட்டம் இல்லை. இங்கே இருக்குற பருவ நிலைகள் அப்பாவின் உடல் நிலைக்கு ஏற்றதாக இல்லை என்று டாக்டரே சொல்லிவிட்டார்.''

சேகர் கேட்டான்: “அவர் இப்போ எப்படி இருக்கிறார்?''

“கொஞ்சம் பரவாயில்லை'' -அன்னக்காளி சில புடவைகளை வெளியே எடுத்து அவற்றை சேகரிடம் காட்டினாள். அவற்றை புவனேஸ்வரி தங்களுக்காக வாங்கியிருப்பதாகக் கூறினாள்.

இவ்வளவு நேரமும் லலிதா அமைதியாகவே இருந்தாள். உட்கார்ந்திருந்த இடத்தை விட்டு எழுந்து, மேஜையில் ஒரு சாவியை வைத்துவிட்டு, அவள் சொன்னாள்: “இவ்வளவு நாட்களாக அலமாரியின் சாவி என்னிடம்தான் இருந்தது.'' சற்று புன்னகைத்து விட்டு, அவள் தொடர்ந்து சொன்னாள்: “ஆனால், உள்ளே பணம் எதுவும் இல்லை. எல்லா பணமும் செலவிடப்பட்டு விட்டன.''

சேகர் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை.

அன்னக்காளி சொன்னாள்: “வாங்க லலிதா அக்கா. கிட்டத்தட்ட இரவு ஆயிடுச்சு.

லலிதா எதையும் செய்வதற்கு முன்னால், சேகர் வேகமாக சொன்னான்: “காளி, கீழே வேகமா ஓடிப்போய் எனக்கு கொஞ்சம் பீடாவை வாங்கிக் கொண்டு வா. சரியா?''

லலிதா அன்னக்காளியின் கையைப் பற்றியவாறு கூறினாள்: “நீ இங்கேயே இரு, காளி. நான் வாங்கிட்டு வர்றேன்.'' அவள் கீழே போய் பீடாவுடன் திரும்பி வந்தாள். அதை அன்னக்காளியிடம் தர, அவள் அதை சேகரிடம் தந்தாள்.

சேகர் முழுமையான அமைதியில் பேசாமல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய கையில் பீடா இருந்தது.

“நாங்க இப்போ புறப்படணும், சேகர் அண்ணா'' -அன்னக்காளி அவனின் பாதத்தை நோக்கி மரியாதையுடன் குனிந்தவாறு சொன்னாள். லலிதா தான் உட்கார்ந்திருந்த இடத்தில் இருந்தவாறு அமைதியாக தரையை நோக்கி குனிந்தாள். தொடர்ந்து இருவரும் மெதுவாக அறையை விட்டு வெளியேறினார்கள்.

சேகர் தனக்குச் சொந்தம் என்ற உணர்வுடனும் பெருமையுடனும் அங்கு உட்கார்ந்திருந்தான். அவன் ஏதோ கல்லாக மாறிவிட்டதைப் போல, புரிந்து கொள்ள முடியாத அமைதியில் உட்கார்ந்திருந்தான். அவள் வந்தாள். எதைக் கூற வேண்டுமோ அதைக் கூறினாள். பிறகு நிரந்தரமாக வெளியேறி விட்டாள். ஆனால், சேகரால் ஒரு வார்த்தைக் கூட பேச முடியவில்லை. அவன் பேசுவதற்கு ஒரு வரிகூட இல்லை என்பதைப் போல அந்தத் தருணம் கடந்து சென்றுவிட்டது. அவனுடன் நேரடியான எந்த உரையாடலும் இருப்பதைத் தவிர்ப்பதற்காக வேண்டும் என்றே லலிதா தன்னுடன் அன்னக்காளியை அழைத்து வந்திருக்கிறாள். சேகரால் அதை நன்றாகப் புரிந்துகொள்ள முடிந்தது. அவனுடைய முழு உடலும் உணர்வும் வேதனையுடன் இயல்பு வாழ்வை நோக்கி இப்போது வந்தன. தலை சுற்றியது. சேகர் கண்களை இறுக மூடியவாறு படுக்கையில் விழுந்தான்.

11

குருச்சரணின் வீழ்ச்சியடைந்து கொண்டிருந்த உடல் நலம் முங்கருக்குப் போன பிறகுகூட சரியாகவில்லை. ஒரு வருடத்திற்குள் பூமியில் இருக்கும் அனைத்து பற்றுக்களையும் உதறி எறிந்துவிட்டு, தன்னுடைய சொர்க்க இருப்பிடத்தைத் தேடி அவர் சென்றுவிட்டார். கிரின் அவர் மீது உண்மையான பாசத்தை வைத்திருந்தான். இறுதி நிமிடம் வரை, தன்னால் முடிந்த அளவிற்கு அவரை அவன் நன்கு கவனித்துக் கொண்டான்.

தன்னுடைய இறுதி மூச்சை விடுவதற்கு முன்னால், குருச்சரண் கிரினின் இரு கைகளையும் தன் கையில் வைத்துக்கொண்டு, தன் குடும்பத்துடன் கொண்டிருக்கும் உறவைச் சற்றும் உதறியெறியக் கூடாது என்று கேட்டுக் கொண்டார். தங்களுக்கிடையே இருந்த ஆழமான நட்பு மேலும் முன்னேறி, ஒரு நெருக்கமான குடும்பப் பிணைப்பாக வளர வேண்டும் என்று அவனிடம் கெஞ்சி கேட்டுக் கொண்டார். உடல் நலம் பாதிக்கப்பட்டதும், வேகமாக காலம் ஓடிக்கொண்டிருந்ததும் அந்த இனிய சம்பவத்தை அவரைப் பார்க்கும்படி செய்யவில்லை. ஆனால், மேலே இருந்து கொண்டுகூட, அவர் நடந்து கொண்டிருக்கும் சம்பவங்களைப் பார்ப்பதற்கே விரும்புவார். கிரின், முழுமையான மகிழ்ச்சியுடனும் தன்னுடைய முழு மனதுடனும் குருச்சரணுக்கு தன் வாக்குறுதியை அளித்தான்.

குருச்சரணின் இல்லத்தைக் குத்தகைக்கு எடுத்திருந்தவர்கள், அவ்வப்போது அவர்களுக்குத் தெரிந்திருந்த விஷயங்கள் ஒவ்வொன்றையும் புவனேஸ்வரியிடம் கூறிக்கொண்டிருந்தார்கள். அவர்கள் குருச்சரணின் மரணம் பற்றிய செய்தியையும் அவளிடம் தெரியப்படுத்தினார்கள்.

மிகவும் குறுகிய காலத்திற்குள், அவளுடைய வீட்டிலேயே கண் இமைக்கும் நேரத்தில் ஒரு பேரழிவு உண்டானது. திடீரென்று நபின் ராய் மரணத்தைத் தழுவிவிட்டார். வருத்தம், கவலை ஆகியவற்றால் கிட்டத்தட்ட கையற்ற நிலையில் விடப்பட்டதைப் போல உணர்ந்த புவனேஸ்வரி, வீட்டிற்கான முழு பொறுப்பையும் தன் மருமகளிடம் ஒப்படைத்துவிட்டு, பனாரஸுக்குக் கிளம்பிவிட்டாள். அடுத்த வருடம் நடைபெற இருக்கும் சேகரின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக தான் திரும்பி வருவதாக அவள் வாக்குறுதி அளித்தாள்.

இந்த திருமண ஏற்பாடு ரபின் ராயே முடிவு செய்தது. இது முன் கூட்டியே நடந்து முடிந்திருக்க வேண்டும். ஆனால், அவருடைய மரணம் எல்லா விஷயங்களையும் ஒரு வருடத்திற்கு ஒத்திப்போடச் செய்துவிட்டது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel