Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 15

mana-penn

சேகர் சொல்லப்பட்ட எல்லாவற்றையும் அமைதியாகக் கேட்டான். இந்த காரணத்தால்தான் கடந்த சில நாட்களாகவே லலிதா தனக்கு முன்னால் வந்து நிற்பதற்குத் தயக்கம் காட்டியிருக்கிறாள் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

அன்னக்காளி தொடர்ந்து சொன்னாள்: “கிரின் பாபு மிகவும் நல்ல மனிதர்தானே, சேகர் அண்ணா? மேஜ் அக்காவின் திருமணத்தின் போது, எங்க வீடு மாமாவிடம் அடமானம் வைக்கப்பட்டிருந்தது. இரண்டு அல்லது மூன்று மாதங்களில் தெருக்களில் பிச்சை எடுப்பதைத் தவிர, எங்களுக்கு வேறு வழியே இல்லை என்று அப்பா உறுதியாக நினைத்திருந்தார். அதனால், கிரின் பாபு பணம் தந்தார். நேற்று அப்பா எல்லா பணத்தையும் மாமாவிடம் திரும்பத் தந்து விட்டார். இனிமேல் நாம பயப்படுவதற்கு எதுவும் இல்லை என்று லலிதா அக்கா சொன்னாங்க. அதுதான் உண்மை. இல்லையா சேகர் அண்ணா?''

அவளுக்கு பதிலாக சேகர் ஒரு வார்த்தைகூட கூறவில்லை. ஆனால், வெட்டவெளியையே அவன் தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான்.

அன்னக்காளி கேட்டாள்: “நீங்க எதைப் பற்றி நினைத்துக் கொண்டிருக்கீங்க, சேகர் அண்ணா?''

சுய நினைவிற்கு வந்த சேகர் உடனடியாக பதில் சொன்னான்: “இல்லை... எதைப் பற்றியும் இல்லை. காளி, வேகமாகப் போய் உன்னுடைய லலிதா அக்காவை வரச் சொல்லு. நான் அவளைப் பார்க்கணும்னு சொல்லு. ஓடிப்போய் அவளை அழைச்சிட்டு வா!''

அன்னக்காளி செய்தியைக் கூறுவதற்காக வேகமாக ஓடினாள்.

சேகர் அங்கு உட்கார்ந்து கொண்டு திறந்து கிடந்த சூட்கேஸையே தொடர்ந்து பார்த்துக் கொண்டிருந்தான். அவனுக்கு எவையெல்லாம் தேவையோ, எவையெல்லாம் வேண்டும் என்று நினைக்கிறானோ- அவை அனைத்தும் அவனுக்கு மறுக்கப்பட்டு விட்டதைப் போல தோன்றியது.

தான் அழைக்கப்பட்டிருக்கும் தகவல் தெரிந்தவுடன் லலிதா மாடிக்கு வந்தாள். ஆனால், உள்ளே வருவதற்கு முன்னால், அவள் சாளரத்தின் வழியாகப் பார்த்தாள். சேகர் அமைதியாக உட்கார்ந்து கொண்டு கதவின் ஒரு புள்ளியையே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தான். இதற்கு முன்னால் அவன் இப்படி இருந்து அவள் பார்த்ததில்லை. லலிதா சற்று அதிர்ச்சி அடைந்ததுடன், பயப்படவும் செய்தாள். அவள் அறைக்குள் நுழைந்ததுதான் தாமதம், அவளை எதிர் பார்த்துக் கொண்டிருந்த சேகர் மிகவும் வேகமாக எழுந்து நின்றான்.

மெதுவான குரலில் லலிதா கேட்டாள் : “நீங்க என்னை வரச் சொன்னீங்களா?''

“ஆமாம்...'' - சேகர் அதே இடத்தில் சிறிது நேரம் நின்று கொண்டிருந்துவிட்டுச் சொன்னான்: “ நாளைக்கு காலையில் புறப்படும் புகைவண்டியில் நான் அம்மாவுடன் புறப்படுகிறேன். நாங்க திரும்பி வருவதற்கு சில நாட்கள் ஆகும். சாவிகளை எடுத்துக்கொள். உன் செலவுகளுக்கு தேவையான பணம் அலமாரி டிராயரில் இருக்கு.''

திறந்து கிடந்த சூட்கேஸைப் பார்த்த லலிதா, சென்ற வருடம் தான் அதில் பொருட்களை அடுக்கிய சம்பவத்தை சந்தோஷம் கலந்த எதிர்பார்ப்புடன் நினைத்துப் பார்த்தாள். ஆனால், இப்போது அவளுடைய சேகர் அண்ணா எல்லா பொருட்களையும் தானே அடுக்கிக் கொண்டான்.

இருவரும் அமைதியாக இருந்தார்கள். தங்களுடன் இந்தமுறை

லலிதா வரவில்லை என்ற விஷயத்தை சேகர் தெரிந்து கொண்டுவிட்டான் என்பதை லலிதா புரிந்து கொண்டாள். சொல்லப் போனால் - அதற்கான காரணத்தைக்கூட அவன் தெரிந்து கொண்டிருப்பான். அதை நினைத்தபோது, தனக்குள் பதைபதைப்புடன் சுருங்கிக் கொண்டு விட்டதைப் போல லலிதா உணர்ந்தாள். அவளிடமிருந்து திரும்பிய சேகர் ஒருமுறை இருமிவிட்டு, தொண்டையைச் சரி பண்ணிக் கொண்டு சொன்னான் : “ கவனமாக இரு. குறிப்பாக ஏதாவது தேவைப்பட்டால், என்னுடைய முகவரியை அப்பாவிடம் வாங்கி எனக்கு ஒரு கடிதம் எழுது!'' பிறகு உடனடியாக அவன் சொன்னான்: “சரி... நீ போகலாம். நான் இவற்றையெல்லாம் சரி பண்ணி வைக்கணும். இப்பவே நேரம் அதிகமாயிடுச்சு. என் அலுவலகத்தில் வேறு கொஞ்சம் நிறுத்தணும்.''

லலிதா சூட்கேஸுக்கு முன்னால் உட்கார்ந்து கொண்டு சொன்னாள்: “போய் குளிங்க சேகர் அண்ணா. நான் பொருட்களை உள்ளே வைக்கிறேன்.''

“அதுதான் சரியாக இருக்கும்'' என்று கூறிவிட்டு சாவிகளை

லலிதாவிடம் தந்த சேகர் அறையை விட்டு கிளம்புவதற்கு முன்னால், திடீரென்று நின்றான். அவன் கேட்டான்: “எனக்கு எவையெல்லாம் வைக்கப்படணும்னு நீ மறந்திருக்க மாட்டாய்... இல்லையா?''

சூட்கேஸிற்குள் இருந்த பொருட்களை மிகவும் கூர்ந்து ஆராய ஆரம்பித்த லலிதா ஒரு வார்த்தைகூட பேசவில்லை.

சேகர் கீழே சென்று தன் அன்னையிடமிருந்து அன்னக்காளி கூறியவை அனைத்தும் உண்மைதான் என்பதைத் தெரிந்து கொண்டான். குருச்சரண் தான் கடனாக வாங்கிய பணத்தை திரும்ப செலுத்தி விட்டார் என்பது உண்மைதான். எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் ஒரு மணமகனை லலிதாவிற்காக தேடிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குமேல் எந்த கேள்விகளையும் கேட்க சேகர் விரும்பவில்லை. அவன் குளிப்பதற்காக அங்கிருந்து நகர்ந்தான்.

ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்குப் பிறகு குளியல், சாப்பாடு எல்லாம் முடிந்து சேகர் திரும்பவும் தன்னுடைய அறைக்குள் நுழைந்தபோது அவன் திகைத்துப் போய்விட்டான்.

இந்த இரண்டு மணி நேரங்களில் லலிதா எதுவும் செய்யவில்லை. திறந்திருந்த சூட்கேஸின் மூடியின் மீது சாய்ந்து அவள் அமைதியாக உட்கார்ந்திருந்தாள். சேகரின் காலடிச் சத்தங்களைக் கேட்டு பரபரப்படைந்து, அவள் மேலே பார்த்து அடுத்த நிமிடமே தன் கண்களை மீண்டும் கீழே தாழ்த்திக் கொண்டாள். அவளுடைய கண்கள் இரத்தச் சிவப்பில் இருந்தன.

ஆனால், சேகர் எதையும் பார்த்தது மாதிரி காட்டிக் கொள்ளவில்லை. எப்போதும் அணியக்கூடிய ஆடைகளை அணிந்து கொண்டு அவன் சாதாரணமாக சொன்னான்: “ நீ இப்போ இதை செய்ய முடியாது. பிற்பகலில் வந்து பொருட்களை வைத்து முடி.'' அவன் அலுவலகத்திற்குப் புறப்பட்டான். லலிதாவின் மனக் குழப்பத்திற்கான காரணம் என்ன என்பதை அவன் தெளிவாகத் தெரிந்து கொண்டான். ஆனால், எல்லா விஷயங்களிலும் கூர்மையான கவனத்தைச் செலுத்தாமல், அந்த விஷயத்தைப் பற்றி அவளுடனோ அல்லது வேறு யாருடனோ பேசுவதற்கு அவன் விரும்பவில்லை.

அன்று சாயங்காலம் அவளுடைய வீட்டில், அவள் தேநீரைக் கொண்டு வந்தபோது லலிதா பரபரப்பு நிறைந்த அலைகளில் மாட்டிக் கொண்டிருந்தாள். அங்கு சேகர் கிரினுடன் உட்கார்ந்திருந்தான். அவன் குருச்சரணிடம் விடைபெறுவதற்காக வந்திருந்தான்.

தலையைக் குனிந்து கொண்டு, லலிதா இரண்டு கோப்பைகளில் தேநீரை ஊற்றி அவற்றை கிரினுக்கும் அவளுடைய மாமாவிற்கும் முன்னால் வைத்தாள். உடனடியாக கிரின் கேட்டான்: “சேகர் பாபுவிற்கு தேநீர் எங்கே லலிதா?''

மேலே பார்க்காமல் லலிதா மெதுவான குரலில் சொன்னாள்: “சேகர் அண்ணா தேநீர் அருந்த மாட்டார்!''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel