Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 12

mana-penn

என்னுடைய ஒரு மகளின் திருமணத்திற்காக இந்த வீடு அடமானமாக வைக்கப்பட்டது. இன்னும் சில நாட்கள் கழித்து என்னுடைய குடும்பத்துடன் நான் தெருக்களில் போய் நிற்க வேண்டிய சூழ்நிலை உண்டாகும். அப்போது சமூகம், "வாங்க... என் வீட்டில் வந்து தங்கிக் கொள்ளுங்கள்' என்று கூறாது. நீ என்ன சொல்கிறாய்?''

கிரின் இந்தக் கேள்விக்கு பதில் கூறுவதாக இருந்தால், அந்த வாய்ப்பு அவனுக்கு கிடைக்காது. குருச்சரணே எல்லா பதில்களையும் கூறிவிடுவார். “மிகவும் உண்மை!'' - அவர் கூறுவார்: “ஜாதி என்ற ஒன்று சமூகத்திலிருந்து ஒழிந்தால் நன்றாக இருக்கும். அதற்குப் பிறகு நாம் சாப்பிடுகிறோமோ இல்லையோ - குறைந்த பட்சம் நாம் அமைதியாக வாழலாம். ஏழையைப் பார்த்து பரிதாபப்படாத சமூகம், பிரச்சினைகள் இருக்கக்கூடிய தருணங்களில் சிறிதும் உதவியாக இருக்காது. அது பயமுறுத்தவும் தண்டிக்கவும் மட்டுமே செய்யும். அப்படிப்பட்ட சமூகம் எனக்காக இருப்பது அல்ல - அல்லது என்னைப் போன்ற ஏழைகளுக்காக இருப்பதும் அல்ல. சரி... பணக்காரர்கள் இருந்து விட்டுப் போகட்டும். அப்படிப்பட்ட சமூகத்தில் எங்களுக்கென்று எதுவும் இல்லை''- தன் மனதில் இருந்ததை மிகவும் தைரியமாக வெளியே சொன்ன குருச்சரண் அடுத்து அமைதியாக இருந்தார்.

லலிதா அந்த உரையாடல்கள் முழுவதையும் மிகுந்த கவனத்துடன் கேட்டுக் கொண்டு மட்டும் இருக்கவில்லை. இரவு நேரத்தில் அவள் பேசப்பட்ட அத்தனை விஷயங்களையும் அறிவுப்பூர்வமாக புரிந்துகொள்ள முயற்சி செய்தாள். தனக்கு தூக்கம் வரும் வரை அவள் அவற்றைப் பற்றி சிந்தித்துக் கொண்டேயிருந்தாள். லலிதாவிற்கு தன்னுடைய மாமாவை மிகவும் பிடித்திருந்தது. தன் மாமாவின் பார்வையை ஒட்டி அதை ஆதரித்து கிரின் சொன்ன விஷயங்கள் மறுக்கமுடியாத உண்மையாக அவளுக்குத் தோன்றியது. அவளுடைய மாமா மிகவும் கலங்கிப் போய் காணப்பட்டார் - குறிப்பாக அவள் விஷயத்தில். அவர் கிட்டத்தட்ட சாப்பிடுவதையும் நீர் பருகுவதையும் கூட மறந்துவிட்டார். அந்த அளவிற்கு அவரின் மனதில் சுமையை ஏற்றி வைத்திருந்தார். அவளுடைய அன்பிற்குரிய மாமா அந்த அளவிற்கு மன வேதனையுடன் இருந்ததற்குக் காரணம் - அவர் அவளை தன்னுடைய சிறகுக்குள் கொண்டு வந்து வைத்திருக்கிறார் என்ற ஒன்றே ஒன்றுதான். அவளுக்கு அவர் சீக்கிரம் திருமணம் செய்து வைக்காமல் போனால் குறிப்பிட்ட வயதைத் தாண்டியும் திருமணமாகாத பெண்ணை வைத்திருப்பதற்காக சமூகம் அவரை ஒதுக்கிவிடும். "அதே நேரத்தில் நான் திருமணம் செய்து கொண்டு, ஒரு விதவையாக வீட்டிற்குத் திரும்பி வந்தால், அதனால் எந்த அவமானமும் இல்லை' - லலிதா நினைத்தாள். ஆனால், ஒரு விதவைக்கும் ஒரு கன்னிப் பெண்ணுக்குமிடையே எங்கே வேறுபாடு இருக்கிறது? ஒருத்திக்கு அடைக்கலம் தருவது அவமானம் என்று நினைக்கப்படும்போது, இன்னொருத்திக்கு அடைக்கலம் தருவது மட்டும் ஏன் முழுமனதுடன் ஏற்றுக் கொள்ளப்படுகிறது?

தினந்தோறும் அவள் கேட்ட உரையாடல்கள் லலிதாவின் மனதில் ஒரு ஆழமான பதிவை தெளிவாக உண்டாக்கிக் கொண்டிருந்தன. அவள் தனியாக இருக்கும் வேளைகளில், கிரின் பாபுவின் கருத்துகள் அவளுடைய மனதில் எதிரொலித்துக் கொண்டிருக்கும். அவற்றைத் திரும்பவும் மனதில் சிந்தித்துப் பார்த்த லலிதா தனக்குள் கூறிக் கொள்வாள்: "உண்மையாகவே கிரின்பாபு கூறிய எல்லா விஷயங்களும் அறிவுப்பூர்வமாக சிந்திக்கக்கூடியவையே' - இப்படி நினைத்துக் கொண்டே அவள் தூக்கத்தில் மூழ்கிவிடுவாள்.

தன் மாமாவின் பிரச்சினைகளைப் புரிந்து கொண்டு அவரை நெருங்கக் கூடியவர்கள் யாராக இருந்தாலும், அவர்களைப் பற்றி உயர்வாக நினைத்து, அவள் மிகுந்த மரியாதையை வைத்திருப்பாள் என்பது மட்டும் உண்மை. தற்போது அப்படிப்பட்ட மனிதனாக இருப்பவன் கிரின். அவனை அவள் மிகவும் உயர்வான இடத்தில் வைத்து வழிபட ஆரம்பித்தாள்.

படிப்படியாக குருச்சரணைப் போலவே, அவளும் தேநீர் பருகும் மாலை நேரங்களை ஆர்வத்துடன் எதிர்பார்க்க ஆரம்பித்தாள்.

ஆரம்பத்தில் கிரின் லலிதாவை மிகவும் மரியாதையுடன் அழைத்துக் கொண்டிருந்தான். ஆனால், குருச்சரண் அவளை அப்படி நடத்தக்கூடாது என்று கூறிவிட்டார். அவளை சாதாரணமாக நடத்தினால் போதும் என்று அவர் வேண்டிக் கேட்டுக் கொண்டார். அதற்குப் பிறகு கிரின் சர்வ சாதாரணமாக அவளுடன் நெருங்கிப் பழகினான்.

ஒருநாள் கிரின் கேட்டான் : “நீ தேநீர் பருகவில்லையா, லலிதா?''

கண்களை கீழ்நோக்கி வைத்துக் கொண்டு, லலிதா தலையை ஆட்டினாள். குருச்சரண் பதில் சொன்னார்: “அவளுடைய சேகர் அண்ணா அவளை அதிலிருந்து விலக்கி வைத்திருக்கிறார். பெண்கள் தேநீர் பருகுவது அவருக்குப் பிடிக்காது.''

அந்த பதில் கிரினுக்கு பிடிக்காது என்பதை லலிதா நன்கு அறிவாள்.

சனிக்கிழமைகளில், தேநீர் பருகும் நேரம் வழக்கத்தைவிட அதிக நேரம் நீடித்துக் கொண்டிருக்கும். அன்று சொல்லப்போனால் சனிக்கிழமை. அவர்கள் பருகிக் கொண்டிருந்த தேநீரைப் பருகி முடித்துவிட்டார்கள். கிரின் ஆரம்பித்து வைத்த விவாதங்களில் முழு மனதுடன் அன்று குருச்சரணால் பங்கு கொள்ள முடியவில்லை. எப்போதாவது ஒருமுறை அவர் தன்னுடைய கவனத்தை இழந்து ஞாபக மறதி கொண்ட மனிதராக மாறிக் கொண்டிருந்தார்.

கிரின் அதை கவனித்துக் கேட்டான்: “அனேகமாக இன்னைக்கு உங்கள் உடல் நலம் சரியில்லை என்று நினைக்கிறேன்!''

வாயில் இருந்த ஹூக்காவை வெளியே எடுத்த குருச்சரண் சொன்னார் :“நான் நன்றாகவே இருக்கிறேன்.''

தயங்கியவாறு அதே நேரத்தில் நாகரீகமே இல்லாமல் கிரின் மெதுவான குரலில் சொன்னான்: “அப்படியென்றால் அலுவலகத்தில் ஏதாவது...''

“இல்லை... அப்படி எதுவும் இல்லை... '' - குருச்சரண் கிரினை சற்று ஆச்சரியம் கலக்க பார்த்தார். அவருடைய மனதிற்குள் இருக்கும் குழப்பங்கள் வெளியே அவருடைய நடவடிக்கைகளில் ஒரு பதிவை உண்டாக்குகின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியாத அளவிற்கு அவர் மிகவும் நல்ல மனம் கொண்டவராக இருந்தார்.

ஆரம்பத்தில் லலிதா எந்த விஷயங்களிலும் தலையிடுவதில்லை. ஆனால், சமீப காலமாக எப்போதாவது ஒரு முறை அவள் விவாதங்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளத் தொடங்கியிருந்தாள். அவள் சொன்னாள் : “சரி... மாமா, நீங்க இன்றைக்கு நல்ல உடல் நலத்துடன் இல்லை என்று நினைக்கிறேன்.''

குருச்சரண் உரத்த குரலில் சிரித்தார் : “ஆமாம். அப்படித்தான் இருக்கு. இல்லையா? ம்... நீ சொன்னா சரிதான். என் மனநிலை இன்றைக்கு சரியாக இல்லை!''

கிரின், லலிதா இருவரும் அவரையே பார்த்தார்கள். குருச்சரண் தொடர்ந்து சொன்னார்: “என்னுடைய நிலைமைகளை நன்கு தெரிந்து கொண்ட நபீன் அய்யா இன்றைக்கு என்னை மிகவும் அவமானப்படுத்தி விட்டார்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel