Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 8

mana-penn

லலிதா தன்னுடைய வேலைகளை முடித்துவிட்டு, சேகர் வருவதற்கு முன்பே அங்கிருந்து போய்விட வேண்டும் என்று முடிவு செய்திருந்தாள். ஆனால், அவள் அவனுடைய அறையை மிகவும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்பதில் தீவிர கவனம் செலுத்தியதால், நேரம் போனதை கவனிக்காமல் இருந்துவிட்டாள். திடீரென்று ஒலித்த காலடிச் சத்தம் அவளின் கவனத்தை ஈர்த்தது. தொடர்ந்து அவள் அப்படியே நின்றுவிட்டாள்.

அவளைப் பார்த்ததும் சேகர் சொன்னான்: “நீயா? நேற்று இரவு எவ்வளவு நேரம் கழித்து வந்தாய்?''

லலிதா பதில் கூறவில்லை.

கை வைத்த நாற்காலியில் வசதியாக சாய்ந்து உட்கார்ந்து கொண்டு சேகர் தொடர்ந்து சொன்னான்: “ நீ எத்தனை மணிக்கு திரும்பி வந்தாய்? இரண்டு? மூன்று? நீ ஏன் பதில் கூறாமல் இருக்கிறாய்?''

லலிதா அமைதியாய் இருந்தாள்.

எரிச்சலடைந்த சேகர் அவளை விரட்டினான்: “கீழே போ. அம்மா உன்னை வரச் சொன்னாங்க.''

புவனேஸ்வரி ஒரு சிற்றுண்டியைத் தயார் பண்ணிக் கொண்டிருந்தாள். லலிதா அவளிடம் சென்று கேட்டாள்: “அம்மா என்னை நீங்க வரச் சொன்னீர்களா?''

“இல்லை. ஏன்?'' - லலிதாவைப் பார்த்துக் கொண்டே அவள் கேட்டாள்: “நீ ஏன் இப்படி வெளிறி, சோர்வடைந்து இருக்கிறாய்? நீ இன்னும் சாப்பிடலையா?''

லலிதா தன் தலையை ஆட்டினாள்.

புவனேஸ்வரி சொன்னாள்: “சரி... நீ இதைக் கொண்டுபோய் உன் அண்ணனிடம் கொடுத்துவிட்டு, கீழே இறங்கி என்னிடம் வா.''

சிறிது நேரத்திற்குப் பிறகு, லலிதா மாடிக்கு சேகருக்கான உணவை எடுத்துச் சென்றாள். அப்போதும் அவன் கைப்பிடிகள் கொண்ட நாற்காலியில் கண்களை மூடிக்கொண்டு உட்கார்ந்திருப்பதை அவள் பார்த்தாள். அவள் தன்னுடைய அலுவலகத்திலிருந்து வரும்போது அணிந்திருந்த ஆடைகளையே மாற்றியிருக்கவில்லை. சொல்லப் போனால், முகத்தைக்கூட கழுவாமல் இருந்தான். அருகில் வந்து, அவள் மெதுவான குரலில் சொன்னாள்: “நான் உங்களுக்கு உணவு கொண்டு வந்திருக்கிறேன்.''

சேகர் அவளை தலையை உயர்த்திக்கூட பார்க்கவில்லை. அவன் சர்வசாதாரணமாக சொன்னான்: “அதை எங்காவது ஒரு இடத்தில் வைத்துவிட்டு, நீ போ.''

அப்படிச் செய்வதற்கு பதிலாக, லலிதா அங்கேயே கையில் ட்ரேயை வைத்துக் கொண்டு அமைதியாக நின்றிருந்தாள்.

கண்களைச் சிறிதும் திறக்காமலே, லலிதா அங்கிருந்து போகவில்லை என்பதையும் அவள் இன்னும் அங்குதான் நின்று கொண்டிருக்கிறாள் என்பதையும் சேகர் தெரிந்து கொண்டான். இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு, அவன் சொன்னான்: “நீ எவ்வளவு நேரம் நின்று கொண்டே இருப்பாய்? எனக்கு கொஞ்சம் நேரம் ஆகும். அதைக் கீழே வைத்துவிட்டு, நீ போ.''

அமைதியாக நின்று கொண்டிருந்த லலிதா தான் தொடர்ந்து குத்திக் காட்டப்படுவதைப் போல உணர்ந்தாள். மெதுவான குரலில் அவள் சொன்னாள்: “தாமதமாக ஆனாலும், பரவாயில்லை. எனக்கு கீழே எந்த வேலையும் இல்லை.''

அவளை தலையை உயர்த்திப் பார்த்த சேகர் சிரித்துக் கொண்டே சொன்னான்: “ இறுதியாக சில வார்த்தைகள்! கீழே வேண்டுமானால் வேலை எதுவும் இல்லாமல் இருக்கலாம். ஆனால், பக்கத்து வீட்டில் கட்டாயம் இருக்குமே! உன் வீட்டில் எதுவுமே இல்லையென்றாலும், பக்கத்து வீடுகளில் உனக்கு கட்டாயம் ஏதாவது வேலை இருக்கும்ல? உனக்கு மனதில் நினைப்பதற்கு ஒரே ஒரு வீடுதான் இருக்கிறதா என்ன, லலிதா?''

“நிச்சயமா இல்லை!'' - அவள் பதில் கூறிவிட்டு கோபத்துடன் ட்ரேயை கீழே வைத்துவிட்டு வேகமாக அறையைவிட்டு வெளியேறினாள்.

சேகர் அவளுக்குப் பின்னால் குரல் கொடுத்தான்: “சாயங்காலம் என்னை வந்து பார்.''

“நான் மேலுக்கும் கீழுக்கும் நடந்து கொண்டு திரியமுடியாது'' - அவள் முணுமுணுத்துக் கொண்டே அங்கிருந்து வெளியேறினாள்.

அவள் புவனேஸ்வரியின் அறைக்குப் போனபோது, அவளிடம் சொல்லப்பட்டது : “நீ உன் அண்ணாவுக்கு சாப்பாடு கொண்டு போனால், பீடாவை யார் கொண்டு போவது?''

“நான் மிகவும் பசியாக இருக்கிறேன் அம்மா. நான் எதுவுமே பண்ண முடியாது. தயவு செய்து யாராவது அதை மேலே கொண்டு போகட்டுமே?'' - சொல்லிவிட்டு லலிதா கீழே உடனடியாக உட்கார்ந்துவிட்டாள்.

அவளுடைய பதைபதைப்படைந்த முகத்தைப் பார்த்த புவனேஸ்வரி சற்று புன்னகைத்துக் கொண்டே சொன்னாள்: “அப்படின்னா நீ கீழே உட்கார்ந்து சாப்பிடு. நான் வேலைக்காரியை மேலே அனுப்புறேன்.''

மறுவார்த்தை கூறாமல், லலிதா அதை ஏற்றுக் கொண்டாள்.

அதற்கு முந்தைய நாள் அவள் திரை அரங்கத்திற்குச் செல்லவில்லை. எனினும், சேகர் அவளைக் கடுமையாகத் திட்டிவிட்டான். மனதில் காயம்பட்ட அவள் தன்னுடைய முகத்தை சேகரிடம் ஐந்து நாட்களாகக் காட்டவே இல்லை. ஆனால், பிற்பகல் வேலைகளில் அவனுடைய அறைக்குச் செல்வாள். அப்போது அவன் அலுவலகத்திற்குச் சென்றிருப்பான். அங்குள்ள எல்லா வேலைகளையும் அவள் பார்ப்பாள். சேகர் தன்னுடைய தவறை உணர்ந்து, இரண்டுமுறை அவளை வரும்படி கூறி அனுப்பினான். ஆனால், அதற்குப் பிறகும் அவள் வரவில்லை.

4

சில நாட்களுக்குப் பிறகு, ஒரு காலை வேளையில், லலிதா மிகுந்த குழப்பத்துடன் இருந்தாள். அந்தப் பகுதிக்கு அடிக்கடி தொடர்ந்து வந்து கொண்டிருக்கக்கூடிய பிச்சைக்காரன் ஒருவன் எப்போது வந்தாலும், லலிதாவைப் பார்த்தவுடன் "அம்மா' என்று கூறி அழைப்பான். அவனைப் பொறுத்தவரையில் முந்தைய ஒரு பிறவியில் லலிதா அவனுடைய தாயாக இருந்திருக்கிறாள். அவளைப் பார்த்தவுடன் அவன் அடையாளம் தெரிந்து கொண்டான். லலிதா அவன்மீது நிறைய அன்பு வைத்திருந்தாள். அவன் அவனுக்கு எப்போதும் ஒரு ரூபாய் கொடுப்பாள். நடக்க முடியாத ஆசீர்வாதங்களை அவன் அவள் மீது சொறிவான். கணக்கிலடங்காத நல்ல அதிர்ஷ்டங்களை அவன் அவளுக்கு வரும் என்று கூறுவான். இவை அனைத்தும் அவளை எல்லையில்லாத இன்ப அதிர்ச்சிக்குக் கொண்டு செல்லும். அன்று காலையில் அங்கு தோன்றிய பிச்சைக்காரன் உரத்த குரலில் அழைத்தான்: “அம்மா, நீ எங்கே?''

அவனுடைய அழைப்பைக் கேட்டு பதைபதைப்பு அடைந்து விட்டாள் லலிதா. அப்போது சேகர் அவளுடைய மாமாவுடன் உரையாடிக் கொண்டிருந்தான். பிறகு எப்படி அவள் பணத்தை எடுப்பதற்காக அறைக்குச் செல்ல முடியும்?

இங்குமங்குமாகப் பார்த்துவிட்டு, இறுதியாக அவள் தன்னுடைய அத்தையை அணுகினாள். அப்போதுதான் வேலைக்காரியுடன் வார்த்தைகளால் சண்டை போட்டு முடித்திருந்த லலிதாவின் அத்தை முனகிக்கொண்டே சமையல் செய்ய ஆரம்பித்திருந்தாள். அந்த நேரத்தில் அவளை அணுகுவது என்பது பொருத்தமாக இருக்காது என்று லலிதா தீர்மானித்தாள். அவள் வெளியே எட்டிப் பார்த்தபோது, அந்த பிச்சைக்காரன் கதவுக்கு அருகில் அதே இடத்தில் நின்று கொண்டிருந்தான்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பசி

பசி

May 7, 2014

டைகர்

டைகர்

March 9, 2012

விரக்தி

விரக்தி

October 18, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel