Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 6

mana-penn

லலிதா சொன்னாள்: “அவர் பெயர் கிரின்பாபு. அவர் ஐந்து நாட்களுக்கு முன்னால் இங்கே வந்தார். இங்கே இருந்து கொண்டே தன்னுடைய பட்டப்படிப்பை படிப்பதற்காக அவர் முங்கரில் இருந்து வந்திருக்கிறார். நல்ல மனிதர்!''

“அப்படியா? அந்த மனிதனை நீ ஏற்கெனவே நன்கு தெரிந்து வைத்திருக்கிறாய். அவனுடைய பெயர், வந்திருக்கும் நோக்கம் எல்லாவற்றையும் பற்றித் தெளிவாகக் கூறுகிறாயே! கடந்த நான்கைந்து நாட்களாக நீ ஏன் கண்ணில் படவில்லை, உன் குரலே கேட்கவில்லை என்பதற்கான காரணம் இப்போதுதான் தெரிகிறது. சீட்டு விளையாடுவதில் மிகவும் தீவிரமாக இருந்திருப்பாய் என்று நினைக்கிறேன்.''

லலிதா அதைக்கேட்டு சற்று அதிர்ச்சியடைந்தாள். சேகர் பேசும் முறையைக் கேட்டு அவளுக்கு பயம் உண்டானது. தன்னிடம் அவன் இந்தமாதிரி ஒரு கேள்வியைக் கேட்பான் என்று அவள் மனதில் சிறிதுகூட நினைத்திருக்கவில்லை. அவளுக்கு என்ன பதில் கூறுவது என்றே தெரியவில்லை.

சேகர் தொடர்ந்து கேட்டான்: “நீ சமீப காலமாக நிறைய சீட்டு விளையாடுகிறாய். உண்மைதானே?''

எச்சிலை நடுங்கிக் கொண்டே விழுங்கியவாறு லலிதா மெதுவான குரலில் சொன்னாள்: “ஆனால், சாரு சொன்னாள்...''

“சாரு சொன்னாளா? அவள் என்ன சொன்னாள்?'' - அவள் நல்ல ஆடைகள் அணிந்து தன்னை அழகுபடுத்திக் கொண்டு நிற்பதை அப்போதுதான் கவனித்த சேகர் சொன்னான்: “நீ எல்லாவற்றையும் தயார் பண்ணிக் கொண்டு வந்திருக்கிறாயா? ம்... சரி... போ.''

ஆனால், அங்கிருந்து கிளம்புவதற்கு சிரமமாக இருப்பதைப் போல உணர்ந்த லலிதா அங்கேயே அமைதியாக நின்றிருந்தாள்.

அவளுடைய பக்கத்து வீட்டைச் சேர்ந்த பெண்தான் சாருபாலா. அவள் அவளுடைய நெருங்கிய தோழியும்கூட. அவர்களுடைய குடும்பம் பிரம்மோ வகுப்பைச் சேர்ந்தது. கிரினைத் தவிர, சேகருக்கு அவர்கள் எல்லாரையும் நன்கு தெரியும். கடைசி முறையாக பக்கத்து வீட்டிற்கு கிரின் வந்து ஏழு வருடங்கள் ஆகிவிட்டன. பாங்கிப்பூரின் உட்பகுதியில் அவன் படித்துக் கொண்டிருந்தான். கல்கத்தாவிற்கு வரவேண்டிய அவசியம் அவனுக்கு இருக்கவில்லை. அதனால், அவனைத் தெரிந்து வைத்திருக்க வேண்டிய சூழ்நிலை சேகருக்கு வரவில்லை.

லலிதா இன்னும் அங்கேயே நின்று கொண்டிருப்பதைக் கவனித்த அவன் சொன்னான்: “ காரணமே இல்லாமல் நீ ஏன் இங்கேயே நின்று கொண்டிருக்கிறாய்? நீ போகலாம்.'' இதைக் கூறிவிட்டு உடனடியாக அவன் புத்தகத்தால் தன் முகத்தை மறைத்துக் கொண்டான்.

மேலும் ஐந்து நிமிடங்கள் அங்கேயே அமைதியாக நின்றிருந்த லலிதா மீண்டும் மெதுவான குரலில் கேட்டாள்: “நான் போகட்டுமா?''

“நான்தான் போகச் சொல்லிவிட்டேனே லலிதா!''

சேகரின் நடந்து கொள்ளும் முறையை பார்த்த லலிதாவுக்கு அதற்கு மேலும் திரை அரங்கத்திற்குச் செல்லவேண்டும் என்ற எண்ணமே உண்டாகவில்லை. அதே நேரத்தில், போட்டிருந்த திட்டங்களை மாற்றுவது என்பதும் சிரமமான ஒரு விஷயமாக இருந்தது. செலவாகும் பணத்தில் பாதியை அவள் ஏற்றுக் கொள்வது என்றும், மீதியை சாருவின் மாமா ஏற்றுக் கொள்வது என்றும் முடிவு செய்யப்பட்டிருந்தது.

அவர்கள் எல்லாரும் பொறுமையை இழந்து அவளை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள் என்ற விஷயம் அவளுக்கு நன்கு தெரியும். அவர்கள் எதிர்பார்ப்பில் தள்ளப்பட்டிருக்கும் நேரம் கடக்க கடக்க, அவர்களுடைய பொறுமையின்மை நிச்சயமாக அதிகரிக்கும் என்பதையும் அவள் அறிவாள். அவள் இதைக் கண்களுக்கு முன்னால் கற்பனை பண்ணி பார்க்க முடிந்தது. எனினும் என்ன செய்வது என்பதை அவளால் நினைத்துப் பார்க்கவே முடியவில்லை. அவனுடைய அனுமதி இல்லாமல் போவது என்பதை அவளால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இரண்டு நிமிடங்கள் அமைதியாக இருந்துவிட்டு அவள் சொன்னாள்: “இந்த ஒரே ஒருமுறை மட்டும் நான் போய்விட்டு வரட்டுமா சேகர் அண்ணா?''

புத்தகத்தை அருகில் வைத்துவிட்டு, சேகர் கடுமையான குரலில் சொன்னான்: “லலிதா, நீ போகணும்னு ஆசைப்பட்டால், தயவுசெய்து போ. என்ன செய்ய வேண்டும் என்பதைத் தீர்மானிக்கிற அளவுக்கு உனக்கு வயசு வந்திடுச்சு. இதையெல்லாம் என்னிடம் ஏன் கேட்கிறாய்?''

லலிதா தடுமாறிப் போய்விட்டாள். சேகரிடம் திட்டு வாங்குவது என்பது அப்படியொன்றும் புதிய விஷயமல்ல. சொல்லப் போனால், அவள் அதற்குப் பழகிப் போய்விட்டாள். ஆனால், கடந்த இரண்டு மூன்று வருடங்களில் அவள் இந்த அளவிற்கு அவன் திட்டி கேட்டதில்லை. வெளிப்படையாகக் கூறுவதாக இருந்தால், இப்படி வெளியே செல்வதை அவள் விரும்பவில்லை. ஆனால், அவளுடைய நண்பர்கள் இப்போதும் அவளுக்காக எதிர்பார்த்துக் கொண்டு உட்கார்ந்திருப்பார்கள். அவளும் தன்னை நன்கு அழகுப்படுத்திக் கொண்டு வந்துவிட்டாள். பணத்தை வாங்குவதற்காக வந்த இந்த வேளையில்தான், பிரச்சினை உண்டாகியிருக்கிறது. ஆனால், அவள் அவர்களிடம் என்ன கூறுவாள்?

இதுவரை லலிதாவை எங்கும் போகக்கூடாது என்று சேகர் எந்தச் சமயத்திலும் தடுத்ததே இல்லை. திரை அரங்கத்திற்குச் செல்வதற்காக இன்று நன்கு ஆடைகள் அணிந்து அழகுப்படுத்திக் கொண்டு அவனுடைய சம்மதத்தைப் பெறுவதற்காக அவள் வந்தாள். ஆனால் இப்போது அவளுடைய சுதந்திரம் முழுமையாக தடை செய்யப்பட்டது மட்டுமல்ல; அதற்குப் பின்னால் இருக்கும் காரணம் வெட்கப் படக்கூடியதாகவும் தன்னுடைய பதின்மூன்று வயதில், லலிதா எந்தச் சமயத்திலும் அனுபவித்திராத ஒரு விஷயமாகவும் அது இருந்தது. அவள் அதை முழு பரிமாணத்துடன் உணர்ந்தாள். அங்கேயே மேலும் சில நிமிடங்கள் வேதனை நிறைந்த அமைதியுடன் நின்றிருந்த அவள், கண்ணீர் திரண்டு நின்றிருந்த கண்களைத் துடைத்தபடியே வெளியேறினாள். வீட்டை அடைந்தவுடன், ஒரு வேலைக்காரப் பெண்ணை அனுப்பி அன்னக்காளியை அழைத்து வரச் சொன்ன அவள், அவளிடம் தன்னுடைய பணத்தைக் கொடுத்துவிட்டு சொன்னாள்: “காளி, எனக்கு உடல் நலம் சரியில்லை. உன்னுடன் என்னால் வரமுடியவில்லை என்பதை தோழியிடம் கூறிவிடு.''

அன்னக்காளி கேட்டாள்: “என்ன விஷயம், லலிதா அக்கா?''

“எனக்கு தலை வலிக்குது. களைப்பா இருக்கு. நிலைமை மிகவும் மோசமா இருக்கு!'' இதைக் கூறிவிட்டு, லலிதா தன் முகத்தை சுவரின் பக்கம் திருப்பிக் கொண்டாள். அதற்குப் பிறகு அங்கு வந்த சாரு அவளை என்னவெல்லாமோ கூறி கிளம்பும்படி சொல்லியும், அதனால் எந்த பலனும் உண்டாகவில்லை. இன்னும் சொல்லப்போனால் அவள் அவளுடைய அத்தையிடம் கூறிக்கூட ஒரு வார்த்தை சொல்ல வைத்தாள். ஆனால், எந்தவொரு பலனும் அதனால் உண்டாகவில்லை. தன் கையில் இருந்த பத்து ரூபாய் அன்னக்காளியை நிலையாக ஒரு இடத்தில் இருக்கவிடாமல், அவளை அங்கிருந்து போகச் சொல்லி கட்டாயப்படுத்தியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் எங்கே திட்டமே நிறைவேறாமல் போய்விடுமோ என்று பயந்த சாருவை அழைத்து கையில் இருந்த பணத்தைக் காட்டிக் கொண்டே சொன்னாள்:

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

பூனை

பூனை

November 1, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel