Lekha Books

A+ A A-

மணப்பெண் - Page 2

mana-penn

டி மேலே விழுந்து அவரைக் கீழே சாய்த்திருந்தால், சந்தேகமே இல்லாமல் அவர் பலமான வேதனையை அனுபவித்திருப்பார். ஆனால், குருச்சரணின் இதயத்தில் காலையிலேயே உண்டான வேதனை அதைவிட அதிகமானதாக இருந்தது. அவருடைய மனைவி அவர்களுடைய ஐந்தாவது பெண் குழந்தையை பத்திரமாகப் பெற்றெடுத்திருக்கிறாள் என்ற செய்திதான் அதற்குக் காரணம்.

குருச்சரண் ஒரு சாதாரண வங்கி க்ளார்க். அவருடைய சம்பளம் அறுபது ரூபாய். எல்லாமே தளர்ந்துபோன ஒரு மனிதரைப் போல தோற்றமளிக்கும் அவருடைய மனம் வாடி வதங்கிவிட்டிருந்தது. எந்த விஷயத்திலும் அவருடைய மனதில் ஒரு ஆர்வமோ, ஒரு ஈடுபாடோ இல்லாமலிருந்தது. அதற்குப் பிறகும், அந்த நல்ல செய்தி அவரின் கையில் இருந்த ஹூக்காவைப் புகைக்கவிடாமல் செய்தது. அவர் அந்த பழமையடைந்து போயிருந்த தலையணையின்மீது மிகவும் பலவீனமாக சாய்ந்துபடுத்தார். உள்ளே நுழைந்த மூச்சுக்காற்றை வெளியே விடுவதற்குக்கூட அவருக்கு பலம் இல்லாமலிருந்தது.

அந்த சந்தோஷம் தரக்கூடிய செய்தியைத் தலையில் வைத்துக் கொண்டு அவருடைய பத்து வயது மகள் அன்னக்காளி ஆடிக் கொண்டிருந்தாள். அவள் கேட்டாள்: “அப்பா, நீங்க வந்து ஒரு முறை பார்க்கக் கூடாதா?''

தன் மகளைப் பார்த்துக்கொண்டே குருச்சரண் சொன்னார்: “எனக்குக் கொஞ்சம் தண்ணீர் கொண்டு வந்து தா, மகளே!''

தண்ணீர் கொண்டு வருவதற்காக அன்னக்காளி சென்றாள். அவள் அங்கிருந்து போனவுடன், குருச்சரணின் மனம் பிரசவத்தைத் தொடர்ந்து வரப்போகும் செலவினங்களைப் பற்றி சுழன்று கொண்டிருந்தது. புகை வண்டியில் பயணம் செய்யும் மூன்றாவது வகுப்பைச் சேர்ந்த பயணிகள், பல வடிவங்களிலும் அளவுகளிலும் இருக்கும் தங்களின் பொருட்களை கதவிற்குள் நுழைத்துக் கொண்டு போவதற்கு சிரமப்பட்டுக் கொண்டிருப்பதைப் போல, எண்ணற்ற கவலைகளும் பிரச்சினைகளும் அவருடைய மனதை முழுமையாக ஆக்கிரமித்து விட்டிருந்தன. கடந்த வருடம் அவருடைய இரண்டாவது மகளின் திருமணம் மிகவும் சிறப்பாக நடைபெற்றபோது, பவ்பஜாரில் இருக்கும் இந்த இரண்டு மாடிகளைக் கொண்ட வீடு அடமானமாக வைக்கப்பட்டதையும், கடந்த ஆறு மாதங்களாக அதற்கு வட்டிகூட கட்டப்படாமல் இருப்பதையும் அவர் நினைத்துப் பார்த்தார். இன்னொரு மகளின் மாமனாருக்கும் மாமியாருக்கும் திருவிழா காலம் தொடங்குவதற்கு முன்னால் பரிசுப் பொருட்களை அனுப்பி வைப்பதற்கு இன்னும் ஒரு மாதமே மீதமிருக்கிறது. நேற்று அலுவலகத்தில் இரவு எட்டு மணிவரை வேலை செய்தும், அவரால் பற்று, வரவு கணக்குகளை நோட்டுப் புத்தகத்தில் முழுமையாக முடிக்க முடியவில்லை. மதியத்திற்குள் இங்கிலாந்திற்கு அந்தக் கணக்குகள் அனுப்பி வைக்கப் படவேண்டும் என்ற கட்டாயம் வேறு இருக்கிறது. இது ஒரு புறம் இருக்க, அலுவலகத்திற்கு வரும்போது அழுக்கடைந்த, கசங்கிப்போன ஆடைகளை அணிந்து கொண்டு வந்தால், இனிமேல் அபராதம் போடுவேன் என்று வேறு அவருடைய மேலதிகாரி வேறு உத்தரவு போட்டுவிட்டார். ஆனால், போன வாரத்திலிருந்தே ஆடைகளைச் சலவை செய்பவன் வீட்டில் இருந்த பாதி ஆடைகளுடன் காணாமல் போய்விட்டான்.

தலையணை மீது சாய்ந்து படுப்பதற்குக் கூட தன்னிடம் பலம் இல்லாமல் இருப்பதைப் போல இப்போது குருச்சரண் உணர்ந்தார். கையிலிருந்த ஹூக்காவைச் சற்று தள்ளி உயர்த்தியவாறு, அவர் படுக்கையில் சாய்ந்தார். அவர் மனதிற்குள் கூறிக் கொண்டார்: "அன்பான கடவுளே! தினந்தோறும் கல்கத்தாவின் போக்குவரத்து நெரிசலில் சிக்கி எத்தனையோ மனிதர்கள் இறந்து கொண்டிருக்கிறார்கள். உன்னுடைய கண்களில் என்னைவிட அவர்கள் அதிக பாவம் செய்தவர்களாகத் தெரிகிறார்களா? கடவுளே, என்னிடம் சிறிது கருணையைக் காட்டு. என்மீதும் ஏதாவது வாகனத்தை ஓடும்படிச் செய்யக் கூடாதா?”

புறக்கணிக்கப்பட்ட, பாதிக்கப்பட்ட, சுமைகள் சுமத்தப்பட்ட, தன்னுடைய வயதுகளையும் தாண்டி வயதான மனிதராகத் தோற்றம் தந்த அந்த மனிதரின் ஆழத்தில் வேரோடி விட்டிருந்த மன வேதனைகளை குடும்பத்தில் இருந்த வேறு யாரும் உணரவில்லை.

நீரைக் கொண்டு வந்த அன்னக்காளி சொன்னாள்: “அப்பா, எழுந்திருங்க. இந்தாங்க தண்ணி...''

எழுந்து உட்கார்ந்தவாறு, குருச்சரண் ஒரே மூச்சில் நீரைக் குடித்துக்கொண்டே சொன்னார்: “ஆ... டம்ளரை எடுத்துக்கொண்டு போ மகளே!''

அவள் போனவுடன், குருச்சரண் தலையணைமீது மீண்டும் சாய்ந்து கொண்டார்.

அறைக்குள் நுழைந்த லலிதா சொன்னாள்: “மாமா, உங்களுக்காக தேநீர் கொண்டு வந்திருக்கேன். எழுந்திருங்க.''

தேநீர் கொண்டு வந்திருக்கும் தகவலைக் கேட்டவுடன், குருச்சரண் மீண்டும் எழுந்து உட்கார்ந்தார். லலிதாவைப் பார்த்ததும், அவருக்கு ஆறுதலாக இருந்தது. அத்துடன் தன்னுடைய பாதி பிரச்சினைகள் தன்னை விட்டுப் போய் விட்டதைப் போல அவர் உணர்ந்தார். பாசம் பொங்க அவர் சொன்னார்: “இரவு முழுக்க நீ கவனத்துடன் இருந்து பார்த்திருக்கிறாய். வா... வந்து என் அருகில் உட்காரு.''

லலிதா மெல்லிய ஒரு புன்னகையுடன் சொன்னாள்: “நான் இரவு முழுவதும் கண் விழித்துக்கொண்டு இருக்கவில்லை, மாமா.''

அதற்கு குருச்சரண் சொன்னார்: “அது ஒரு பிரச்சினை இல்லை. வா... எனக்கு அருகில் வா.''

லலிதா அவளுக்கு அருகில் வந்து உட்கார்ந்தாள். குருச்சரண் தன்னுடைய கையை அவருடைய தலையில் வைத்த அடுத்த நிமிடம் உரத்த குரலில் சொன்னார்: “இந்த ஆசீர்வதிக்கப்பட்ட என் குழந்தையை, நல்ல வசதியான குடும்பத்தைச் சேர்ந்த யாருக்காவது நான் திருமணம் செய்து கொடுத்தால்தான், அது உண்மையான சாதனையாக இருக்கும்.''

தலையைக் குனிந்து கொண்டே லலிதா தேநீரை ஊற்றிக்கொண்டிருந்தபோது, குருச்சரண் தொடர்ந்து கூறிக்கொண்டிருந்தார்: “என் கண்ணு... நீ இந்த ஏழை மாமாவின் வீட்டில் எல்லா நேரங்களிலும் மிகவும் கஷ்டப்பட்டு வேலை செய்ய வேண்டியதிருக்கிறது. அப்படித்தானே?''

லலிதா தலையை ஆட்டியவாறு சொன்னாள்: “நான் ஒருத்திதான் எல்லா நேரங்களிலும் கஷ்டப்பட்டு வேலை செய்றேன்னு ஏன் சொல்றீங்க மாமா? எல்லாரும்தான் வேலை செய்றாங்க. அவங்க மாதிரிதான் நானும்.''

இப்போது குருச்சரண் புன்னகைத்தவாறு சொன்னார்: “சரி, லலிதா... இன்னைக்கு சமையல் பொறுப்பு யாரைச் சேர்ந்தது? சொல்லு...''

மேலே பார்த்துக்கொண்டே லலிதா சொன்னாள்: “ஏன் மாமா? நான் பார்த்துக் கொள்வேன்.''

ஆச்சரியப்பட்ட குரலில் அடுத்த நிமிடம் குருச்சரண் சொன்னார்: “எப்படி பார்த்துக் கொள்வாய், என் கண்ணே? எப்படி சமையல் பண்றதுன்னு உனக்குத் தெரியுமா?''

“எனக்குத் தெரியும் மாமா. அத்தையிடமிருந்து நான் பல விஷயங்களையும் தெரிந்து கொண்டிருக்கிறேன்.''

தேநீர்க் கோப்பையைக் கீழே வைத்த குருச்சரண் கேட்டார்: “உண்மையாகவா?''

“உண்மையாகத்தான். எதையெதைச் செய்ய வேண்டுமென்று அத்தை பல நேரங்களிலும் எனக்கு சொல்லித் தந்திருக்காங்க. அவங்ககிட்ட இருந்து நான் எவ்வளவோ விஷயங்களைத் தெரிந்து கொண்டிருக்கிறேன்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel