Lekha Books

A+ A A-

அப்பாவின் காதலி

appaavin-kaadhali

ந்து வயதுள்ள பிரதாபன் பட்டாளக்காரனைப் போல நடந்து வந்து காரில் டிரைவரின் இருக்கையில் அமர்ந்துகொண்டு காலால் ‘ஹார்ன்’ அடித்தான். பிறகு தன் தாயை அழைத்தான்.

‘‘மம்மி... சீக்கிரம் வாங்க. ஸ்டார்ட்... ஒன்... டூ... த்ரீ...’’

அவனுக்குப் பின்னால் வந்த அவன் தாய் உமயம்மா சொன்னாள் :

‘‘மகனே... சும்மா இருடா !’’

பதினைந்து வயதான பிரதாபனின் அக்கா கீதம்மா, ‘‘இருக்குறதே ரெண்டடி...’’ என்றாள்.

‘‘நான் ரெண்டடி இல்லை... நீதான்...’’

‘‘அப்பப்பா... இவனும் இவனோட நாக்கும்...’’

உமயம்மாவும் கீதம்மாவும் பின்னிருக்கையில் அமர்ந்தார்கள். அப்போது டாடி ராகவன் நாயரும் அங்கு வந்தார். பிரதாபனைத் தூக்கித் தள்ளி உட்கார வைத்தார். காரை ஸ்டார்ட் செய்தவாறு ராகவன் நாயர் கேட்டார் : ‘‘எங்கே போகணும் ?’’

‘‘ரெட்டியார் கடையில துணி வாங்கணும். காய்கறி மார்க்கெட்டுக்கு வேற போகணும். பிறகு...’’

‘‘சொல்லு...’’

‘‘நாமளே நேரடியா மார்க்கெட்டுக்குப் போயி சாமான்கள் வாங்கினா குறைஞ்சது ஒரு ரூபாவாவது லாபம் கிடைக்கும் !’’

அதற்கு ராகவன் நாயர் சிரித்தார்.

‘‘மார்க்கெட்டுக்குப் போயிட்டு வர்றதுக்கு அஞ்சு ரூபாயோட பெட்ரோல் செலவாகும்ன்றதை யோசிச்சே பார்க்குறது இல்லியா ?’’

‘‘குழந்தைகளை ஜாலியா வெளியே கூட்டிட்டுப் போனது மாதிரியும் ஆகல்ல...’’

‘‘இந்த அப்பா எப்பவும் இப்படித்தான் ஒரே கஞ்சத்தனம்...’’ - கீதம்மா சொன்னாள்.

‘‘நீ சொல்றது உண்மைதான். சில்லறைக் காசைத்தான் கணக்கு பார்ப்பாரு ! ’’ - இது உமயம்மா.

‘‘லில்லிக்குட்டி எப்போ பார்த்தாலும் காரை எடுத்துக்கிட்டு பீச்சு, பார்க்குன்னு எப்படியெல்லாம் சுத்துறா...’’

‘‘ஓ... அதைப்போல நீயும் சுத்தணும்னு நினைக்கிறியா ? அதெல்லாம் நமக்கு நல்லது இல்ல...’’ - உமயம்மா சொன்னாள்.

‘‘ஒரு சந்தேகம்...’’ - ராகவன் நாயர் கேட்டார்.

‘‘என்ன ?’’

‘‘உலகத்துல கார் இருக்குறவங்க எவ்வளவு பேரு இருப்பாங்க -? கார் இல்லாதவங்க எவ்வளவு பேரு இருப்பாங்க ? கணக்கு பார்த்தா கார் இருக்குறவங்க எந்த அளவுக்கு கம்மி தெரியுமா ?’’

‘‘செத்துப்போன தத்துவம்...’’

‘‘நான் சின்னப்பையனா இருக்குறப்போ காரைத் தொட்டுப் பார்க்கணும்னு அப்படியொரு ஆசை. ஒரு நாள் பள்ளிக்கூடம் முடிஞ்சு வந்தவுடனே, மாமரத்து மேல ஏறினேன். பத்து மாங்காய்களைப் பறிச்சு கீழாற்றுக்கரை சந்தைக்குக் கொண்டு போனேன். ஒரு மாங்காய்க்கு நாலு காசு கிடைச்சது. கிடைச்ச காசில ஒரு சக்கரத்தை (திருவாங்கூர் நாணயம்) கொடுத்து மீன் வாங்கினேன்.’’

‘‘ம்...’’

‘‘நம்ம குட்டப்பன் மீன் மார்க்கெட்டுக்குப் போயிட்டு வர்றது மாதிரி இருக்குல்ல மம்மி ?’’

‘‘அப்படி மீன் வாங்கிட்டு நான் வர்ற வழியில சால்வேஷன் ஆர்மி மேடத்தோட ‘ப்ளஷர் கார்’ ஆலமரத்து நிழல்ல நின்னுக்கிட்டு இருக்கு. மேடம் காரைவிட்டு இறங்கி கீழே நின்னு சிகரெட் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க. காரைச் சுற்றி ஒன்பதாவது திருவிழாவுக்கு வந்த ஆளுங்க நின்னுக்கிட்டு இருக்காங்க. கூட்டத்துக்குள்ள நுழைஞ்சு நான் காரை தொட்டுப் பார்த்தேன் !’’

‘‘அய்யய்யோ... கேட்கவே கேவலமா இருக்கு ! டாடி... நீங்க பேசாம சும்மா இருங்க. ஆமா... மாங்கா வித்தா காசு கிடைக்குமா மம்மி ?’’

‘‘கிடைக்கும்னு நினைக்கிறேன். அதை வித்த ஆளே சொல்றாரே !’’

தாயும் மகளும் சிரித்தார்கள்.

‘‘அது போகட்டும். டாடி, மீன் வாங்குறதுக்காக மார்க்கெட்டுக்குப் போயிருக்கிறாரே ! அதை என்னால நினைச்சுப் பார்க்கக்கூட முடியல...’’

‘‘நான் மீன் மார்க்கெட்டுக்குப் போகல. கீழாற்றுக்கரை சந்தைக்குத்தான் நான் போனேன். நான் வாங்கினது மீன் இல்ல... கருவாடு !’’

ராகவன் நாயர் குலுங்கிச் குலுங்கி சிரித்தார். பிரதாபனும் தந்தையுடன் சேர்ந்து சிரித்தான். தாயும் மகளும் தங்களைத் தாங்களே பார்த்துக் கொண்டார்கள்.

சிறிது தூரம் சென்றதும் எதிரில் நடந்து வந்துகொண்டிருந்த தன்னுடைய சினேகிதிகளில் ஒருத்தியை கையை அசைத்துக் காட்டி கீதம்மா தன்னிடம் கார் இருக்கிறது என்ற விஷயத்தை பந்தாவாகக் காட்டிக் கொண்டாள்.

நகரத்தில் ராகவன் நாயரைப் பார்த்த பலரும் அவரைக் கண்டதும் வணங்கினார்கள். பலர் அவர் முன்னால் பவ்யமாக நின்று கொண்டிருந்தனர்.

ரெட்டியாரின் கடை முன்னால் ராகவன் நாயர் காரை நிறுத்தினார். அவரும் பிரதாபனும் காரிலேயே உட்கார்ந்திருந்தார்கள். தாயும் மகளும் துணிக்கடைக்குள் புகுந்து பல்வேறு துணிகளையும் பிரித்துப் போட்டு பார்த்துக் கொண்டிருந்தார்கள். பலமுறை ராகவன்நாயர் ஹார்ன் அடித்த பிறகும், அவர்கள் வெளியே வருவதாகவே தெரியவில்லை. அவர்கள் வெளியே வருவதற்குள் போதும் போதும் என்றாகிவிட்டது.

காய்கறி மார்க்கெட்டுக்கு பிரதாபனும் தன் தாயுடன் போனான். ராகவன் நாயர் ஒரு சிகரெட்டைப் புகைத்தவாறு கேட்டிற்கு அருகில் இங்குமங்குமாய் நடந்து கொண்டிருந்தார். வெளிச்சுவர்களும், நடைபாதைகளும், கட்டிடங்களும் கொண்டு கம்பீரமாக நின்று கொண்டிருக்கும் மார்க்கெட் இதற்கு முன்பு திறந்தவெளி மார்க்கெட்டாக இருந்தது. அந்தக் காலத்தில் ராகவன்நாயர் காய்கறி வாங்குவதற்காக மார்க்கெட்டிற்கு வரவில்லை. மாறாக, விற்பதற்காக வந்திருக்கிறார்.

கேட்டின் இரு பக்கங்களிலும் அரிசி விற்றுக் கொண்டிருக்கும் பெண்கள் வரிசையாக அமர்ந்திருந்தார்கள். அரிசி மூட்டைகள் திறந்து வைக்கப்பட்டிருந்தன. அதன்மேல் நாழிகளும், படிகளும் இருந்தன.

வயதான ஒரு பெண் தன்னையே கண் இமைக்காமல் பார்த்துக் கொண்டிருப்பதை ராகவன் நாயர் கவனித்தார். நல்ல பருமனான உடம்பு, உதிர்ந்து கொண்டிருக்கும் நரைத்த முடி, காலம் முகத்தில் உண்டாக்கிய சுருக்கங்கள், உதட்டுக்கு மேலே நரைத்த முடி அதற்குப் பக்கத்தில் கருத்த மரு... அந்த மருவைப் பார்த்தபோதுதான் ராகவன் நாயருக்கே ஞாபகம் வந்தது. அது... கவுரியம்மாவாயிற்றே !

கவுரியம்மா ராகவன் நாயரின் அருகில் வந்தாள். பாசம் பொங்க சிரித்தவாறு கேட்டாள் : ‘‘என்னைத் தெரியுதா -?’’

‘‘தெரியுது... என்று ராகவன் நாயர் கூறவில்லை.’’

‘‘தெரியல... அப்படித்தானே ?’’

‘‘கவுரியம்மாதானே ?’’ என்றார் ராகவன்நாயர்.

அதைக் கேட்டதும் அந்தப் பெண்ணின் முகத்தில் ஒரு பிரகாசம் பரவியது. கண்களில் நீர் துளிர்த்தது.

‘‘என்னை மறக்கல இல்ல...’’

ராகவன் நாயர் சிறிது நேரம் கவுரியம்மாவின் முகத்தையே பார்த்தவாறு நின்றிருந்தார். கவுரியம்மாவை மறப்பதா ?

‘‘இப்போ அரிசி வியாபாரமா பண்றீங்க ?’’

அவள் ‘ஆமாம்’ என்று தலையை ஆட்டினாள்.

‘‘பாச்சன் நாயர்...?’’

அதைக் கேட்டதும் மாறாப்பு துணியால் தன் கண்களில் வழிந்த கண்ணீரைத் துடைத்தாள் கவுரியம்மா.

‘‘அவர் இறந்து பத்து வருஷமாச்சு. குழந்தை... நீ கார்ல போறதைப் பார்த்து பல தடவை நான் நின்னுருக்கேன்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel