
கர்ப்பமாக இருந்த திருமணமாகாத ஒரு பெண்ணை அவர் திருமணம் செய்தார். உண்மையாகவே அது ஒரு தையரிமான செயல்தான். அவர் அப்படியொரு காரியத்தைச் செய்ததற்கு அவருடைய புத்திசாலித்தனமே காரணம். வேறு ஏதாவதொரு பெண்ணுடன் அவர் உறவு கொள்கிறார் என்று வைத்துக் கொள்வோம்.
கேட்டால் தான் ஒரு உத்தமி என்று அவள் சொல்வாள். அவளை அப்போது நம்புவதைத் தவிர வேறு வழியில்லை. அவள் சொல்வது சரியா, தவறா என்பதை எப்படிக் கண்டுபிடிக்க முடியும்? இங்கு ஒரு பெண்ணின் தவறு தெளிவாக நிரூபிக்கப்பட்டிருக்கிறது. ஒரு பெண் தன்னை முட்டாளக்கவில்லை என்பதை உண்மையாகவே இந்த விஷயத்தில் நம்பலாமே!
அந்தத் தாம்பத்திய வாழ்க்கை பலரும் ஏற்றுக் கொண்ட ஒரு ஒப்பந்தத்தை அடிப்படையாகக் கொண்டிருந்தது. ஜானகி அம்மாவின் வயிற்றில் இருக்கும் குழந்தை மீது பத்மநாபப்பிள்ளையால் பாசம் செலுத்த முடியாது. அந்தக் குழந்தையை அவருடைய வாழ்க்கையுடன் சம்பந்தப்படுத்தி யாரும் பேசக்கூடாது. அது மட்டுமல்ல... அந்தக் குழந்தையை அவரிடம் காட்டாமலேயே இருந்தால்கூட அது நல்ல விஷயம்தான். அப்படி அவர் நடந்து கொண்டதுகூட ஒருவிதத்தில் நியாயமானதுதான். ஜானகி அம்மா அதற்கு ஒப்புக் கொண்டாள். அந்தக் குழந்தை ஒரு குறிப்பிட்ட வயதை அடையும் வரை அந்த வீட்டில் வைத்தே வளர்க்கலாம். அந்தக் குழந்தை மீது ஜானகி அம்மா அன்பு செலுத்துவதைத் பற்றி எந்தவித எதிர்ப்பும் இல்லை. ஜானகி அம்மா செய்த தவறு காரணமாக பத்மநாபப் பிள்ளை அவள் கவலைப்படுவது மாதிரி நடக்க மாட்டார். அந்தத் தவறு யாரால் நடந்தது, எப்படி நடந்தது போன்ற விஷயங்களைத் தெரிந்து கொள்ளும் சாதாரண ஆர்வம் கூட அவரிடம் இல்லை என்பதே உண்மை. ஜானகி அம்மா அவர் மீது அன்பு செலுத்த வேண்டும்; அவரை அக்கறையுடன் பார்த்துக் கொள்ள வேண்டும்; அவரின் மனைவியாக நடந்து கொள்ள வேண்டும். தான் இதுவரை எந்த ஒரு ஆணையும் காதலித்ததில்லை என்று அவர் கேட்காமலே ஜானகி அம்மா சத்தியம் பண்ணிச் சொன்னாள்.
கடைசியில் ஒரு வீடு உருவாக்கப்பட்டது. நவநாகரீக பாணியில் அமைந்த ஒரு பங்களா அது. அந்த வீட்டில் எதற்கும் எந்தக் குறையும் இல்லை. பத்மநாபப் பிள்ளையிடம் ஏராளமான பணம் இருந்தது.
ஜானகி அம்மா வர்ணிக்க முடியாத அழகைக் கொண்ட ஒரு பெண்ணாக இருந்தாள். நல்ல நிறம், தலையில் நிறைய முடி, சிவந்த அதரங்கள், பதினேழு வயது. அவளை யாராக இருந்தாலும் ஒருமுறை கட்டாயம் பார்ப்பார்கள். அவளின் சோகம் கலந்த புன்னகையில்கூட வார்த்தையால் விவரிக்க முடியாத ஒரு கவர்ச்சி இருக்கவே செய்தது. அவளின் பெரிய கண்களில் ஒரு சோகம் எப்போதும் நிழலாடிக் கொண்டே இருக்கும்.
மாலை நேரத்தில் குளித்து, கூந்தலை வாரி முடித்து முடிச்சிட்டுப் பின்னால் போட்டவாறு சுவருக்கு அப்பால் அவள் பார்த்துக் கொண்டிருப்பதை பத்மநாபப்பிள்ளை பார்த்துக் கொண்டிருப்பார். உண்மையாகவே அவள் பேரழகிதான்! ஒரு அபூர்வமான படைப்பு தான்! ஆனால், அவளுடைய வயிறு சற்று வீங்கியிருப்பதைப் பார்த்து நெருப்பு எரிந்து கொண்டிருப்பதைப் போல அவருடைய கோபம் மனதிற்குள்ளேயே கனன்று கொண்டிருக்கும். அந்த வயிற்றுக்குள் ஒரு குழந்தை இருக்கிறது! ஒரு பெரிய ரகசியத்தை அவள் தனக்குள் ஒளித்து வைத்திருக்கிறாள்!
அந்த வீட்டிற்கு அவருடைய நண்பர்களும் உறவினர்களும் வருவதுண்டு. அவர்களுக்குத் தன்னுடைய மனைவியை அறிமுகப்படுத்தி வைக்கும்போது அவர் ஒரு முட்டாளைப் போல நெளிவார். செயற்கையான ஒரு சிரிப்பை விருப்பமேயில்லாமல் வரவழைத்துக் கொண்டு சிரிப்பார். சொல்லப்போனால் அந்த மாதிரியான நேரங்களில் அவர்களிடமிருந்து சற்று விலகி நிற்க அவர் முயற்சிப்பார். அவரையும் மீறி ஏதாவது அவர்களுக்கு விளக்கிச் சொல்ல அவருடைய நாக்கு முயற்சிக்கும். அதே நேரத்தில், அப்படி ஒரு சூழ்நிலை உண்டாகாமல் கட்டுப்படுத்துவது எப்படி என்பதும் அவருக்கு நன்றாகவே தெரியும்.
வருபவர்களெல்லாம் ஜானகி அம்மாவின் வயிற்றை உற்று பார்ப்பார்கள். வயிற்றை நன்கு மூடி வைக்கும்படி அவளைப் பார்த்து சொன்னால் என்ன என்று அவர் நினைப்பார். பின்னர் வேண்டாம் என்று விட்டு விடுவார். வீங்கிப் போயிருக்கு வயிற்றை யாரும் பார்க்காமல் இருக்க வேண்டும் என்று ஜானகி அம்மாவும் அதற்கேற்றபடி உடை உடுத்தத்தான் செய்கிறாள். எனினும், அது வெளியே தெரியத்தான் செய்கிறது!
மாலை நேரத்தில் வெளியே செல்லும்பொழுது ஜானகி அம்மாவையும் தன்னுடன் அழைத்துச் சென்றால் என்ன என்று அவர் நினைப்பார். ஆனால், அந்த வீங்கிப் போயிருக்கும் வயிற்றை நினைத்து அவர் பேசாமல் இருந்து விடுவார். அது உண்மையிலேயே அந்தச் சூழ்நிலைக்குப் பொருத்தமில்லாத ஒன்றுதான். அந்த வயிற்றையேதான் எல்லோரும் பார்த்துக் கொண்டிருப்பார்கள்!
அந்த வயிறு வீக்கம் ஒருநாள் இல்லாமற் போகத்தானே போகிறது என்று தன்னைத்தானே அவர் சமாதானப்படுத்திக் கொள்வார். அதற்குப்பிறகு அவளை யாரிடம் வேண்டுமென்றாலும் எந்தவித தயக்கமும் இன்றி அவர் காட்டலாம். விருந்திற்குப் போகலாம். மாலை நேரத்தில் வெளியே செல்லும்போது அவர் அவளைத் தன்னுடன் அழைத்துச் செல்லலாம். குறைவே இல்லாத ஆவேசம் நிறைந்த இறுக்கமான அணைப்பையும் முத்தத்தையும் அப்போதுதான் அவள் எதிர்பார்க்க முடியும். ஆனால், இந்த விஷயங்களையெல்லாம் ஜானகி அம்மாவிடம் கூறுவதற்கு அவரிடம் தைரியமில்லை.
ஜானகி அம்மா அவர் சொன்னதைக் கேட்டு நடக்கும் நல்ல மனைவியாக இருந்தாள். உரத்த குரலில் அவள் பேசுவதில்லை. வெளியே தெரியும்படி சிரிப்பதும் இல்லை. அடக்கமும் ஒடுக்கமும் கொண்ட பெண்ணாக அவள் இருந்தாள். அவளாக எந்தச் சமயத்திலும் அவரை நெருங்கிப் போவதில்லை. அவர் அழைத்தால் மட்டுமே அவள் போய் நிற்பாள். அப்படியே அவர் அழைத்தாலும் அவள் அவருடன் ஒட்டிக்கொண்டு நிற்பதில்லை. சிறிது இடைவெளிவிட்டே நிற்பாள். அந்த அழைப்பைக் காது கொடுத்துக் கேட்பது ஒரு மனைவி கேட்பதைப் போல் அல்ல. அவருக்கு அருகில் இருக்கும்போது கூட எதுவும் பேசாமல் மணிக்கணக்கில் அவள் இருப்பாள். தனக்கு அது வேண்டும், இது வேண்டும் என்று அவள் கேட்பதேயில்லை. தன்னுடைய கருத்து இதுதான் என்று கூட அவள் எதைப் பற்றியும் கூறுவதில்லை. அவள் உண்மையில் மனதில் நினைத்து கொண்டிருப்பது தான் என்ன?
இப்படியே நான்கு மாதங்கள் ஓடிவிட்டன. அது ஒரு ஞாயிற்றுக்கிழமை பதினைந்தாம் தேதி பொழுது புலர்ந்ததிலிருந்து ஜானகி அம்மா செயல்பட முடியாத நிலையில் இருந்தாள். எனினும், அதை அவள் வெளியே காட்டிக் கொள்ளவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook