
அது தேவையில்லை. மனைவிக்கு கணவன் மீது மதிப்பு இருக்க வேண்டும். கணவன் உயிருடன் இருக்கும் போது கணவன் இறந்துவிட்டால், அதற்குப் பிறகு அவனைப் பற்றிய நினைவுகள் மட்டுமே.
சதானந்தன் சொன்னார்:
"அவன் அமைச்சராக ஆகக்கூடியவன்தான். அவனை அமைச்சராக ஆக்கவும் என்னால் முடியும். ஆனால் அதற்கு அவன் ஒப்புக் கொள்ளவில்லை."
சதானந்தன் தொடர்ந்து சொன்னார்:
"சிருதாம்மா, நீங்க கண்ணனை இதயத்தில் வைத்து வழிபடுறீங்க. எனக்கு அது தெரியும். ஆனால், அவனோ? புன்னப்புரை போராட்டத்தில் உயிரைக் கொடுத்த தியாகியை மதிக்காதவனால் அமைச்சராக ஆக முடியுமா?"
"புன்னப்புரை போராட்டத்தில் உயிரைத் தியாகம் செய்தவர்களை அமைச்சர்கள் மறந்துவிட்டார்கள் என்று அவன் சொல்றான்."
"அதைத்தான் கட்டுப்பாட்டை மீறிய செயல் என்று சொல்றோம். இங்கே மலர்களை சமர்ப்பணம் செய்துதான் அவர்கள் சத்திய வாக்குமூலமே சொன்னாங்க-."
"அவன் எங்கே இருக்கான்?"
"சிருதாம்மா, அதை நீங்களே தெரிஞ்சுக்குவீங்க."
சதானந்தன் நடந்தார். அதற்கு மேல் பேசுவதற்கு விரும்பாதைப் போல இருந்தது அவருடைய செயல். அவர் கோபத்துடன் அங்கிருந்து நகர்ந்தார்.
சிருதாம்மாவிற்கு தூக்கம் வருவதைப் போல இருந்தது. அவன் வந்தான் பாதி இரவு தாண்டிய நேரத்தில்.
"அம்மா!"
ஒருமுறை தான் அழைத்தான். சிருதாவின் காதில் அவன் அழைப்பது கேட்டது. அவன் மிகவும் களைத்துப் போய் இருக்கிறான். அலைகிறான். அது மட்டும் உண்மை. சரியான உணவில்லை. சிரமப்பட்டு வேலை செய்கிறான். தாயின் சிறகுக்கு அடியில் வாழும் சிறுவன் அல்ல; இளைஞனும் அல்ல. அவன் எல்லா விஷயங்களையும் பற்றி சிந்திக்கக்கூடிய அளவிற்கு வளர்ந்துவிட்டான் என்றே தோன்றியது.
அவன் என்ன செய்கிறான்? தீவிரமாக எதையோ செய்கிறான் என்பது மட்டும் உண்மை.
"அம்மா! சோறு இருக்கா!"
"இருக்கு. நீ சாப்பிடக்கூடிய சோறு என்றைக்கும் எப்போதும் இங்கே இருக்கும்."
ஒரு தாய் தன் மகனிடம் அப்படியெல்லாம் கூற வேண்டியது இல்லை. 'இருக்கு' அல்லது 'இல்லை' என்று சொன்னாலே போதும். இந்த அளவிற்குத் தெளிவாக விளக்கி அந்நியர்களிடம்தான் கூற வேண்டும். மகனிடம் தாய் கூறக்கூடாது.
"அப்படின்னா, பரிமாறுங்க. எனக்கு கடுமையா பசிக்குது."
"உனக்கு வயிறு நிறைய சாப்பிடுறதுக்கு சாதம் இருக்கு."
"சரி... மகிழ்ச்சி!"
தாய் சிரிக்கவில்லை.
ஐந்தாறு கவளங்களை உருட்டி உருட்டி அவன் உள்ளே போகச் செய்தான். பசியின் வேகம் குறைந்தது.
தாய் தன்னுடைய மகனையே உற்றுப் பார்த்துக் கொண்டிருந்தாள்.
ஸ்டாலின் தன் தாயிடம் கேட்டான்:
"அம்மா, கையில பணம் இருக்கா?"
"இருக்கு..."
"உங்க கையில பணம் கட்டாயம் இருக்கும். அது எனக்குத் தெரியும்."
"எப்போதும் என் கையில் நெல்லும் சக்கரமும் (பழைய திருவிதாங்கூர் நாணயம்) அரிசியும் இருக்கும். எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்தே. ம்... என்ன?"
"எனக்குக் கொஞ்சம் பணம் வேணும்."
"என் கையில இருக்குற பணம் முழுவதும் உனக்காக உள்ளதுதான்."
"சரி மகிழ்ச்சி!"
ஸ்டாலின் முகத்தை உயர்த்திச் சிரித்தான்.
"என்னடா இது?"
"எது அம்மா?"
"ம்..."
ஒரு நிமிடம் ஆனது.
"நீ அமைச்சராக ஆவாய். அப்படித்தானே?"
அதற்கு பதில் இல்லை.
"அப்படி நீ சொல்லிட்டுப் போனியே?"
"போனேன்."
"அதற்குப் பிறகு... நீ கட்டுப்பாடு இல்லாதவனா ஆயிட்டே. கட்சிக்கு எதிரானவனா ஆயிட்டே. நம்முடைய அரசாங்கம் இருக்கிறதுனாலதான் நீ இப்படியெல்லாம் நடக்குறேன்னு இன்னைக்கு செயலாளர் சொன்னார். டேய், நீ என்ன காரணத்துக்காக ஏழாம் தேதி புன்னப்புரை நாளன்று வராமல் இருந்தே? நீ உன் அப்பாவை மறந்திட்டியா?"
"இல்லை. ஏழாம் தேதி நாங்க புன்னப்புரை தினத்தைக் கொண்டாடினோம்."
"என்ன சொன்னே?"
"கொண்டாடினோம் அம்மா. உண்மையாகவே கொண்டாடினோம். சத்தியமா..."
அதற்குப் பிறகும் ஒரு குழப்பம்.
"பெரிய சுடுகாட்டில் நினைவு கூர்வதை விட்டு வேறு எங்கு புன்னப்புரை தினத்தைக் கொண்டாடினீங்க?"
"அதுவா விஷயம்? புன்னப்புரை, வயலார் ஆகியவற்றின் தினங்களை பெரிய சுடுகாட்டிலும் வயலாரிலும் என்று இல்லாமல் இனியும் கொண்டாடுவோம்."
"எந்த இடத்தில்?"
"எங்கெல்லாமோ..."
அந்த அன்னைக்கு கேட்பதற்கு எதுவுமே இல்லை என்ற சூழ்நிலை வந்த சில நிமிடங்களுக்கு மத்தியில் ஸ்டாலின் சொன்னான்:
"அம்மா! இனி பணத்தைத் தாங்க."
அவன் இந்த அளவிற்கு எந்தச் சமயத்திலும் சோறு சாப்பிட்டதில்லை.
சோற்றைச் சாப்பிட அவன் அதிக நேரம் எடுத்துக் கொள்ளவில்லை. வாரி வாரி அவன் சாப்பிட்டான் ஆவேசத்துடன்...
ஸ்டாலின் இப்படியெல்லாம் ஆக வேண்டிய அவசியம் இருக்கிறதா? எப்போதும் அவனை எதிர்பார்த்து சோறும் குழம்பும் பானையில் இருக்கின்றன.
"அம்மா, பணம் தாங்க."
அவன் அவசரப்பட்டான்.
"நீ கொஞ்சம் உட்காரு மகனே. உன்னைக் கண்கள் நிறைய நான் கொஞ்சம் பார்த்துக்குறேன்."
"ம்... நல்லா பார்த்துக்கோங்க."
ஸ்டாலின் பட்டாளத்தைச் சேர்ந்தவர்கள் அட்டென்ஷனில் நிற்பதைப் போல தன் தாய்க்கு முன்னால் நின்றான். சிறிதும் அசையவில்லை. பொம்மையைப் போல அவன் நின்றிருந்தான். உயிரற்றவனைப் போல கண்களில் இமைகள் கூட அசையவில்லை. சிருதா பயந்துபோய் விட்டாள்.
-ஸ்டாலின் கல்லாகிப் போனானா?
மகனைத் தாய் குலுக்கி அழைத்தாள்.
"மகனே! மகனே!"
ஒரு மெல்லிய புன்னகை!
"மகனே, நீ எப்போதும் என்னை பயமுறுத்துறே!"
"பிள்ளைகள் எப்போதும் தாயை பயமுறுத்தத்தான் செய்வாங்க அம்மா."
தொடர்ந்து ஸ்டாலின் சொன்னான்:
"நான் கொடுத்து வைத்தவன் அம்மா, நீங்க அதிர்ஷ்டம் செஞ்சவங்க. உங்களுக்கு அப்படி இப்படின்னு எந்தவித பயமும் வரவேண்டிய அவசியமே இல்லை. ஏனென்றால்..."
சிருதா இடையில் புகுந்து சொன்னாள்:
"நான் உன்னுடைய தந்தையிடம் வேல் கம்பைக் கொடுத்து அனுப்பி வைத்தேன்."
"ஓ! அது ஒரு காலத்துல நடந்தது. அதை விடுங்க அம்மா. உங்களுக்கு கட்சி என்றால் உயிர்மூச்சு. அதுனால..."
"ஆமாம்டா... எனக்கு கட்சி உயிரேதான்."
"கட்சியில் நான் இருந்து கொண்டு சிறைக்குப் போனால், உங்களுக்கு வருத்தம் உண்டாகுமா?"
அதை சிருதா நினைத்திருக்கவில்லை. கட்சியின் அரசாங்கம் வந்துவிட்டது. இனிமேல் கட்சியைச் சேர்ந்தவர்கள் சிறைக்குப் போக வேண்டிய சூழ்நிலை வராது. அதனால் அதை அவள் நினைக்கவேயில்லை.
பதில் எதுவும் வராமல் இருக்கவே ஸ்டாலின் சொன்னான்:
"அமைச்சராக ஆவதற்காக நான் சிறைக்குப் போனால், அதைப் பற்றி என்ன நினைக்கிறீங்க அம்மா?"
"போடா போ!"
"அம்மா உங்களுடைய அரசியல் அறிவு ஒரே குழப்பத்துல இருக்கு. இப்போ இருக்குற பல அமைச்சர்களும் எம்.எல்.ஏ.க்களும் வெள்ளைக்காரர்களின் காலத்துலயும் காங்கிரஸ் ஆண்ட காலத்துலயும் சிறைக்குப் போனவங்கதான்."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook