Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 12

abimanyu

அவளுடைய சதைப்பிடிப்பான கைகள் அவனை இறுகத் தழுவின. அவனுடைய உடல் அன்பின் வெப்பத்துடன் அவளை உரசியது. அவளுடைய பெரிய மார்பகத்தில் அவன் தன்னுடைய அபய இடத்தைக் கண்டு பிடித்தான்.

ஆசிரம அறையின் இருட்டில் அவனுடைய மோகம் அமைதியாக அழைத்தது: "அம்மா... அம்மா... அம்மா...'

இருட்டு அசைவே இல்லாமல் நின்று கொண்டிருந்தது.

உணவு சாப்பிடும்போது, அவனுக்குப் பரிமாறுவதில்தான் அம்மாவின் கவனம் இருந்தது. ராகுலனின் தந்தையும் உண்ணியின் உணவு விஷயத்தில் ஈடுபாட்டைக் காட்டினார்.

அங்கு பரிமாறப்பட்டவைகளில் பெரும்பாலானவை அவனுக்கு இதற்கு முன்பு தெரிந்திராத உணவுப் பொருட்களாக இருந்தன. அவனுக்கு அங்குள்ள உணவு மிகவும் ருசி நிறைந்தவையாகவும் பிடித்தவையாகவும் தோன்றின.

எனினும், ராகுலனின் தாய் சொன்னாள்:

“உண்ணி, உனக்கு திருப்தி உண்டாகி இருக்காது. அப்படித்தானே? காட்டில் கிடைக்கும் மாமிசத்திற்கு நிகராக ருசியுள்ள உணவுப் பொருள் இருக்குமா? எங்களுக்கு வருடத்திற்கு ஒருமுறைதான் காட்டு மாமிசமே கிடைக்கும்!''

உண்ணிக்கு வெறும் மரியாதைக்காக பேசத் தெரியாது. அதனால் அவன் உண்மையைச் சொன்னான்.

“எனக்கு மிகவும் திருப்தி. இந்த அளவிற்கு ருசி நிறைந்த உணவை நான் சாப்பிட்டதே இல்லை.''

அம்மா அவனுடைய தலைமுடியை வருடினாள்.

“உண்ணி, நீ சும்மா சொல்றே!'' -அவள் சொன்னாள்: “என்னை சந்தோஷப்படுத்த வேண்டும் என்பதற்காக!''

“இல்லை அம்மா.'' -உண்ணி சொன்னான்: “நான் உண்மையைத்தான் சொன்னேன். எனக்கு இங்கே சாப்பிட்ட உணவு மிகவும் பிடிச்சிருக்கு.''

அம்மா மீண்டும் அவனுடைய தலை முடியை வருடினாள்.

“உண்ணி, உன்னுடைய பெரிய மாமாவைப் பற்றி நான் கேள்விப்பட்டிருக்கிறேன்.''

சாப்பிடுவதற்கு மத்தியில் ராகுலனின் தந்தை சொன்னார்: “பெரிய சித்தராம்!''

“அப்படியா?'' -அம்மா ஆச்சரியத்துடன் கேட்டாள்.

“இந்த விஷயத்தை உண்ணி என்னிடம்கூட கூறவில்லையே!'' -ராகுலன் சொன்னான்.

உண்ணி எதுவும் பேசவில்லை.

“அவர் முன்பு ராணுவ அதிகாரியாக இருந்தவர். ராணுவ சேவையை விட்டுவிட்டு ஊருக்கு வந்ததிலிருந்து வாசிப்பு, ஆராய்ச்சி, தியானம் என்று இறங்கிவிட்டார்.'' -அப்பா தொடர்ந்து சொன்னார்: “அவர் மிகப் பெரிய பண்டிதர். அவருக்குத் தெரியாத மூலிகை மருந்தே இல்லை. அவரின் கையில் இருக்கும் ஒரு பச்சிலை மருந்தின் தைலத்தைத் தேய்த்தால் மிகவும் கடுமையான பாம்பின் விஷம்கூட ஒன்றும் இல்லாமற் போய்விடும். எங்களுடைய க்ளப்பில் அவரைப் பற்றித்தான் எப்போதும் பேசிக் கொண்டிருப்போம்.''

“அப்படியா?'' -அம்மா ஆச்சரியத்தை வெளிப்படுத்தினாள்.

ஆனால், உண்ணிக்கு அந்த உரையாடல் பிடிக்கவில்லை. மாமாவைப் பற்றி பேசியபோது மாமாவின் உருவம் அவனுடைய மனத் திரையில் தோன்றியது. உக்கிர மூர்த்தியாக இருக்கும் உருவமும் அமைதியும் கம்பீரமும் தாள மாறுபாடு இல்லாத குரலும் அவனை நடுங்கச் செய்தன.

ராகுலனின் தந்தை மாமாவைப் பற்றிய பேச்சை நிறுத்தியபோது உண்ணிக்கு மிகவும் நிம்மதியாக இருந்தது.

உணவின் இறுதிப் பகுதி ஃப்ரூட் சாலட். பழங்கள், இனிப்பு, குளிர்ச்சி எல்லாம் சேர்ந்திருந்த அந்த உணவுப் பொருள் உண்ணிக்கு மிகவும் பிடித்திருந்தது.

உணவைவிட அன்பு மறக்க முடியாத ஒன்றாக இருந்தது. ராகுலனின் தாயுடன் மிகவும் அதிகமாக அவன் உரையாடினான். அவனைக் கட்டிப்பிடித்து அருகில் உட்கார வைத்துக் கொண்டு, அவனுடைய தாய், தந்தையைப் பற்றிக் கேட்டாள். தாய், தந்தையரைப் பார்த்ததில்லை என்று சொன்னபோது, உண்ணியின் கண்கள் நிறைந்துவிட்டன. ஆனால், அம்மா புடவைத் தலைப்பால் அவனுடைய கண்ணீரைத் துடைத்தாள்.

“மகனே, கவலைப்படாதே!'' -அம்மா சொன்னாள்: “நான்தான் உன் அம்மா! என் ராகுலனைப் போலத்தான் நீயும் எனக்கு. அம்மாவை எப்போது பார்க்க வேண்டும் என்று தோன்றினாலும் இங்கே வந்துடு!''

அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

“அம்மா... அம்மா... அம்மா...'' -அவளுடைய மார்பில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டு ஆசையைத் தணித்துக் கொள்வதைப் போல அவன் திரும்பத் திரும்ப அழைத்தான்.

“மகனே... என் மகனே...'' -அம்மா அவனை இறுக அணைத்துக் கொண்டாள்.

அந்த அணைப்பின் சுகத்தை நினைத்துப் பார்த்தவுடன் அவன் தன் தலையணையில் முகத்தை அழுத்தி வைத்துக் கொண்டான். “இது என்னுடைய தாயின் மார்பகம்.'' -அவன் நினைத்தான்: “இது என்னுடைய அபய இடம்.'' தலையணையில் உதட்டை வைத்துக் கொண்டு அவன் அழைத்தான்: “அம்மா...''

அடுத்த நிமிடம் அவனுக்கு சுற்றுப்புறத்தைப் பற்றிய புரிதல் உண்டானது. சத்தம் வெளியே வந்தால் பிரச்சினை. தூங்காமல் படுத்திருக்கக் கூடாது என்பது சட்டம். இரவின் அமைதியில் சிறிய சிறிய சத்தங்கள்கூட இடி முழக்கங்களைப் போல பெரியதாகக் கேட்கும். மாமாவும் அய்யப்பனும் கேட்டு விடுவார்கள் என்பது மட்டும் உறுதி. அவனுடைய நினைப்பு சரியாகவே இருந்தது. வெளியே மாமாவின் குரல் கேட்டது.

“உண்ணி!''

உண்ணி பதிலெதுவும் கூறவில்லை. அழைத்ததைக் காதில் வாங்கவும் இல்லை. சத்தத்தைக் கேட்டான். மாமாவின் காலடிச் சத்தங்களைக் கேட்டான். மாமா வாசிக்கும் அறையை விட்டு, வாசலுக்கு வந்திருப்பதை உண்ணி தெரிந்து கொண்டான்.

“உண்ணி ஏதாவது சொன்னானா அய்யப்பா?''

“உறங்கிக் கொண்டிருப்பார். ஏதோ சத்தம் கேட்டது'' -அய்யப்பனின் பதில் உண்ணிக்கு நிம்மதியை அளித்தது.

ஆனால்...

“தூக்கத்தில் இருக்க வாய்ப்பில்லை.'' -மாமா சொன்னார்: “சமீப காலமாக அவனுடைய உறக்கம் சரியாக நடக்கவில்லை என்று தோன்றுகிறது.''

அடுத்த நிமிடம் மாமா அதைச் சோதித்துப் பார்ப்பதற்காக தன்னுடைய படுக்கையறைக்குள் வருவார் என்று உண்ணி பயந்தான்.

கடவுளின் அருள் என்றுதான் சொல்ல வேண்டும். அது நடக்கவில்லை.

“அய்யப்பா...'' -மாமா அழைத்தார்.

“என்ன?''

“நான் ஒரு சுலோகத்தை உருவாக்கினேன்.''

“அப்படியா?'' -அய்யப்பன் ஆர்வத்துடன் கேட்டான்.

இப்போது அய்யப்பனின் முகம் எப்படி இருக்கும் என்பது உண்ணிக்கு தெரியும். சிறிய கண்கள் பிரகாசமாக இருக்கும். நெற்றி யில் சுருக்கங்கள் விழுந்திருக்கும். உதடுகள் சற்று மலர்ந்திருக்கும்.

“அப்படியென்றால், கேள்...'' -மாமா சொன்னார்.

உண்ணிக்கு சந்தோஷமாக இருந்தது. விஷயம் மாறிவிட்டது. ஆர்வம் சுலோகத்தை நோக்கிப் போய்விட்டதால், மாமா இனி இந்தப் பக்கம் வர மாட்டார்.

மாமா சுலோகத்தைக் கூறும் சத்தம் கேட்டது. மாமாவின் தனித்துவமான குரலுக்கு சற்று மாறுபாடு உண்டாவது- சுலோகங்களைக் கூறும்போதும் பூஜை செய்கிறபோதும் "மகாதேவீ' என்று அழைக்கும்போதும்தான். அந்த மாறுபட்ட குரல் காட்டில் இரவு நேரத்தில் உரத்துக் கேட்டது. உண்ணிக்கு வரிகள் சரியாகப் புரியவில்லை. ஆனால், அர்த்தம் புரிந்தது. ரத்த வடிவத்தில் இருக்கும் அசுரனின் குருதியை நக்கிக் குடிக்கும் வாய்க்குள் பிறந்த அசுரர்களை விழுங்கும் காளியைப் போற்றிப் புகழும் ஒரு சுலோகம் அது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel