Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 14

abimanyu

6

காலையில் ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது உண்ணியின் நினைப்பு ராகுலனின் வீட்டில் குளியலறையில் இருந்தது. வாஷ்பேசின். வாஷ்பேசினுக்கு மேலே பதிக்கப்பட்டிருந்த கண்ணாடிக் குழாய். ஷவர். ஓ... என்ன சுவாரசியம்! உண்ணி நினைத் துப் பார்த்தான். ஷவரின் குழாயைத் திறந்து அதற்கு அடியில் நிற்கும்போது... மழை பெய்வதைப் போல நீர் சிதறி விழும். ஷீபாதான் அவனுக்கு அதைக் காட்டினாள். அவர்கள் இருவரின் உடல்களிலும் நீர் தெறித்து விழுந்தது. அடுத்த நிமிடம் ஷீபா குழாயை அடைத்தாள். இல்லாவிட்டால் இரண்டு பேரும் அங்கேயே குளித்து ஒரு வழி ஆகியிருப்பார்கள்.

குளியலறையில் இருக்கும்போது ஷீபா கேட்டாள்: “உண்ணி, நீ தினமும் எங்கு குளிப்பாய்?''

“ஆற்றில்...'' -உண்ணி சொன்னான்.

“அதிர்ஷ்டசாலி!'' - ஷீபா சொன்னாள்: “ஆற்றில் குளிக்க வேண்டும் என்று எனக்கு எந்த அளவிற்கு ஆசை இருக்கிறது தெரியுமா? நீருக்குள் மூழ்கிக் கிடக்கலாம். அப்படியே மூழ்கிக் கிடந்து கண்களைத் திறந்து பார்த்தால் ஆற்றின் அடிப்பகுதியில் இருக்கும் உருளைக் கற்கள் அனைத்தும் பெரிதாகத் தெரியும். இல்லையா?''

உண்ணி சிரித்தான். ஷீபா தொடர்ந்து சொன்னாள்: “நான் சிறு குழந்தையாக இருந்தபோது ஆற்றில் குளித்திருக்கிறேன். ஆற்றில் குளிப்பது என்பது மிகவும் சுவாரசியமான விஷயம்!''

அது உண்மைதான் என்பதை உண்ணியும் உணர்ந்தான். ஷவருக்குக் கீழே எவ்வளவு நேரம் நின்றாலும், இந்த நீருக்குள் மூழ்கிக் கிடப்பதைப் போன்ற சுகமான அனுபவம் கிடைக்காது.

ஆனால், ராகுலனின் வீட்டில் ஷவர் மட்டுமல்ல- ராகுலன் இருக்கிறான். ஷீபா இருக்கிறாள். அம்மா இருக்கிறாள். அப்பா இருக்கிறார். அந்த வீட்டில் செலவழித்த சுருக்கமான நேரம்தான் தன்னுடைய வாழ்க்கையிலேயே மிகவும் விலை மதிப்புள்ள நேரம் என்று உண்ணி நினைத்தான். இந்த அளவிற்கு சந்தோஷம் அவனுடைய வாழ்க்கையில் முன்பு எந்தச் சமயத்திலும் இருந்ததில்லை. எந்த அளவிற்கு சிரித்தான்? தான் இந்த அளவிற்கு சிரித்ததே இல்லை என்பதை மிகவும் ஆச்சரியத்துடன் உண்ணி நினைத்துப் பார்த்தான்.

இந்த ஆற்றில் குளிப்பது மிகவும் இன்பமான ஒரு அனுபவம். ஆனால், தன்னுடன் ராகுலனோ ஷீபாவோ இருக்க வேண்டும் என்று அவன் நினைத்தான். அந்தப் பக்கமும் இந்தப் பக்கமும் நீரைத் தெறிக்கச் செய்து கொண்டும், தமாஷாக பேசிக் கொண்டும் பிடித்துக் கொண்டும் இழுத்துக் கொண்டும் விளையாடிக் கொண்டும் குளித்திருந்தால், குளியல் சுவாரசியமாக இருந்திருக்கும்! கீழே இருக்கும் படித்துறையில் குளித்துக் கொண்டிருக்கும் அய்யப்பனோ, மேலே இருக்கும் படித்துறையில் குளிக்கும் மாமாவோ அப்படிப்பட்ட விளையாட்டுகளுக்குப் பொருத்தமாக இருக்க மாட்டார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் விளையாட்டுகள் இல்லை. வாழ்க்கை வாழ்ந்து முடிக்கக்கூடிய ஏதோ ஒன்று என்பதுதான் அவர்களுடைய எண்ணமாக இருந்தது.

உண்ணிக்கு மாமா மீதும் அய்யப்பன் மீதும் வெறுப்புகூட உண்டானது. எனினும், அவன் ஆற்றில் குளித்துவிட்டு மேலே வந்தான். அவர்களுக்காக அவன் காத்து நின்றிருந்தான். அவர்கள் குளித்து முடித்து வந்தபோது அவர்களுடன் சேர்ந்து ஆசிரமத்திற்குச் சென்றான். பூஜையறையில் அவர்களுடன் பூஜையில் பங்கெடுத்தான்.

பூஜை வேளையிலும் அவனுடைய மனம் வேறு எங்கோ இருந்தது.

"என் மனம் உன்னை விட்டுப் போய்விட்டால்...' -உண்ணி பிரார்த்தித்தான்: "காளி, என்னை மன்னித்துவிடு.'

ராகுலனின் தாய் காளியின் பாசத்துடன் அவனுக்கு முன்னால் நின்றிருந்தாள். ராகுலனின் அக்காவும்தான். "காளியின் அவதாரங்கள் அவர்கள்' -உண்ணி தனக்குத்தானே கூறிக் கொண்டான். "அவர்களை எனக்குச் சொந்தமானவர்களாக ஆக்கு.' -அவன் காளியிடம் கெஞ்சிக் கேட்டுக் கொண்டான்.

கடமைகளும் உறவுகளும் நிறைந்த வாழ்க்கைதான் மலை உச்சியில் தனிமையாக- அமைதியாக வாழும் வாழ்க்கையைவிட சிறந்தது என்று அவனுக்குத் தோன்றியது. அந்த வாழ்க்கைக்காக அவன் ஏங்கினான். அந்த வாழ்க்கை கிடைக்க வேண்டுமே என்று அவன் காளியிடம் வேண்டிக் கொண்டான்.

திடீரென்று அவனுக்கு இயற்கைமீது அளவற்ற அன்பு தோன்றியது. காட்டில் இருக்கும் பெரிய மரங்கள் மீதும் காட்டு மலர்கள் மீதும் அருவி மீதும் பாசம் உண்டானது. இந்த இயற்கையின் அழகைப் பார்ப்பதற்காக கிறங்குபவனுக்கு இது அழகு நிறைந்தது தான் என்பதை அவன் நினைத்துப் பார்த்தான். ஆசிரமத்தில் கூண்டுக்குள் அடைக்கப்பட்டதைப்போல இருந்தால், இந்த அழகை அனுபவிக்கவே முடியாது என்பதை உண்ணி எண்ணிப் பார்த்தான்.

“உண்ணியின் இடத்திற்கு நாம ஒருநாள் போகணும், அப்பா.'' -ஷீபா சொன்னாள்.

“உண்மைதான்.'' -அம்மா ஷீபாவின் கருத்தை ஒப்புக் கொண்டு சொன்னாள்.

“உண்ணி என்னைக்கூட இதுவரை அழைத்துக் கொண்டு போனதில்லை.'' -ராகுலன் குற்றம் சாட்டினான்.

“என்ன உண்ணி, நாங்கள் ஒருநாள் வரலாமா?'' -ராகுலனின் தந்தை கேட்டார்.

உண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு சிரித்தான்.

“பார்த்தீங்களா பார்த்தீங்களா?'' -ராகுலன் சிரித்துக் கொண்டே சொன்னான்: “திருடன்! எதுவும் பேசாமல் இருக்கிறான்!''

“போடா'' -அம்மா உண்ணியின் உதவிக்கு வந்தாள். “அழைக்க வேண்டியது உண்ணியா? உண்ணியின் மாமா அல்லவா?''

“நாம் யாருடைய அழைப்பையும் எதிர்பார்த்துக் காத்திருக்க வேண்டாம்.'' -அப்பா சொன்னார்: “நாம அங்கே போகலாம்.''

“அதுதான் சரி.'' -ஷீபா சொன்னாள்.

“அங்கே வரக்கூடாது என்று அவர் சொல்லவில்லையே!'' -ராகுலன் தன் கருத்தைச் சொன்னான்.

“ஆமாம்.'' -அப்பா சிரித்தார்.

உண்ணி அப்போதும் எதுவும் பேசவில்லை.

ஆனால், பூஜையறையில் இருந்துகொண்டு உண்ணி ஆசைப் பட்டான்- அவர்கள் எல்லாரும் வந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும்! அப்பாவும் அம்மாவும் பெரிய மாமாவுடன் உரையாடிக் கொண்டிருக்கும் நேரத்தில், அவன் ராகுலனுடனும் ஷீபாவுடனும் சேர்ந்து காட்டில் விளையாடிக் கொண்டிருக்கலாம். ஆற்றிற்குச் சென்று குளிக்கலாம். அவர்களுக்கு காட்டையும் காட்டில் இருக்கும் காளி கோவிலையும் சுற்றிக் காட்டலாம். தினமும் ஊரில் வாழும் ஷீபாவும் ராகுலனும் காட்டைப் பார்த்தால் சந்தோஷப் படுவார்கள்.

அவன் ராகுலனையும் ஷீபாவையும் காளி கோவிலுக்கு அழைத் துக் கொண்டு செல்வான். காளி ரத்த மயமாக இருக்கும் அசுரனைக் கொல்வதற்காகப் பயன்படுத்திய கதாயுதங்களில் ஒன்று என்று நம்பப்படும், கோவில் நிலத்தில் இருக்கும் ஒற்றைக் கல்லைச் சுட்டிக் காட்டுவான். காளி கோவிலுக்கு வடக்குப் பகுதியில் மேலே இருக்கும் தாமரைப் பாறையை அவர்களுக்குக் காட்டுவான். தாமரைப் பாறைக்கு நடுவில் இருக்கும் பாறைக்குள் இருந்து ஊறி வரும், கோடை காலத்திலும் வற்றாத ஆச்சரியமான கிணற்றைப் பார்க்கும் போது ஷீபாவும் ராகுலனும் ஆச்சரியப்படுவார்கள். தாமரைப் பாறைக்கு அருகில் பீமசேனனின் காலடிச்சுவடு பதிந்த பீமன் பாறையைக் காட்டும்போது அவர்களுக்கு என்ன ஒரு சந்தோஷமாக இருக்கும்!

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel