Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 13

abimanyu

மாமா முதலில் மொத்தமாகச் சொன்னார். பிறகு ஒவ்வொரு வரியாக, நிறுத்த வேண்டிய இடங்களில் நிறுத்தி, விளக்கினார். தொடர்ந்து மாமா சொல்லித் தந்தார். அய்யப்பன் அதைக் காதில் வாங்கிச் சொன்னான். அய்யப்பன் காதில் வாங்கிச் சொல்லும் போதுதான், எப்படிப்பட்ட சுலோகமும் உன்னதம் என்ற நிலையை அடையும். சுலோகத்தைக் கூறும்போது அய்யப்பனின் குரல் அசாதாரணமானதாகவும் இனிமையானதாகவும் இதற்கு முன்பு கேட்டிராததாகவும் உயர்வானதாகவும் மாறிவிடும். மினுமினுப்பான- மென்மையான- கறுத்த ஒரு அவலட்சணமான வடிவத்தில் இருந்து இந்த அளவிற்கு அருமையான குரல் வெளியே வருகிறது என்பதை நம்புவதற்குக் கூட முடியாது.

அந்த அளவிற்கு அந்த நேரத்தில் அய்யப்பனின் குரல் மிகவும் அருமையாக இருக்கும்.

ஆனால், இருட்டில், அறையில் தூங்க முடியாமல் படுத்திருந்த உண்ணிக்கு அந்த நேரத்தில் ராகுலனின் தாயின் குரல்தான் உயர்வானதாகவும் இனிமையானதாகவும் தெரிந்தது. சிறந்ததாக இருக்கும் இன்னொரு குரலைப் பற்றி நினைத்துப் பார்க்கக்கூட அவனால் முடியவில்லை.

அய்யப்பனின் குரல் பக்தர்களை வானத்தை நோக்கி உயர்த்தியபோது, அம்மாவின் குரல் உண்ணியை மண்ணை நோக்கி இழுத்தது. அவனுக்கு மண்ணை நோக்கி வரவேண்டும் என்ற எண்ணம்தான் இருந்தது. மாமாவும் அய்யப்பனும் பாறைகளும் காட்டு மிருகங்களும் விஷத்தை முறிக்கும் மூலிகைகளும் காட்டு ஊற்றுகளும் காட்டுக் கிளிகளும் பெரிய மரங்களும் நிறைந்த மலையின் சிறப்பை விட அவனை அப்போது ஈர்த்தது ராகுலனும் ஷீபாவும் அம்மாவும் அப்பாவும் ஃப்ரூட் சாலட்டும் ரெக்கார்ட் இசையும் உள்ள மண்தான். பிறகு... காளி...?

“காளி மலையில் மட்டுமல்ல'' -உண்ணி சொன்னான்: “மண்ணிலும் இருக்கிறாள். காளி எங்கும் இருக்கிறாள்.''

“பிறகு... நான் எதற்கு...?'' -உண்ணி கேட்டான்: “நான் மட்டும் எதற்கு சந்தோஷங்களையும் அன்பையும் தியாகம் செய்துவிட்டு, இந்த மலைக்கு மேலே திருப்தியே இல்லாமல் வாழணும்?''

“அது உன்னுடைய பிறப்பின் சம்பளம். உன்னுடைய கர்ம யோகம்.'' -மாமா சொன்னார்.

உண்ணி நடுங்கினான். மாமா தான் தூங்கவில்லை என்பதைத் தெரிந்து கொண்டு வந்திருக்கிறார் என்பதை அவன் புரிந்து கொண்டான்.

ஆனால், அவன் பார்த்தபோது இருட்டு மட்டுமே இருந்தது. அமைதியான இருட்டு. மாமா படுக்கைக்கு அருகில் இருந்தால், அவருடைய மூச்சு விடும் சத்தமாவது கேட்குமே!

அய்யப்பனுக்கு சுலோகம் சொல்லிக் கொடுக்கும் சத்தம் வாசலில் கேட்டபோது, மாமா அறைக்குள் வரவில்லை என்பது உண்ணிக்கு உறுதியாகத் தெரிந்தது.

ஷீபாவும் ராகுலனும் ஒன்றாக உட்கார்ந்து கேரம் விளையாடியதை உண்ணி நினைத்துப் பார்த்தான். என்ன ஒரு சுவாரசியம்!

ஷீபாவைப் பார்த்துக் கொண்டிருப்பதே சந்தோஷமான விஷயம் தான்! ஷீபா பேரழகு படைத்தவளாக இருந்தாள். கடைந்தெடுத்ததைப் போன்ற உடலமைப்பு. நீண்டு மலர்ந்த கண்கள். அடர்த்தியான புருவங்கள். சுருண்ட தலைமுடி. நீளமான மூக்கு. பருக்கள் முளைக்கும் கன்னங்கள். நீளமான கை, கால்கள். மெலிந்த, முனை கூர்மையான விரல்கள். அவள் நகங்களைச் சிவப்பாக்கியிருந்தாள்.

“மருதாணியா?'' -உண்ணி கேட்டான்.

“இல்லை.'' -ஷீபா சொன்னாள்: “க்யூட்டெக்ஸ்.''

உண்ணிக்கு அது ஒரு புதிய வார்த்தையாக இருந்தது. நகத்திற்குப் போடும் சாயங்களில் அது ஒன்று என்ற விஷயத்தை ஷீபா அவனுக்குச் சொல்லிக் கொடுத்தாள்.

கேரம் விளையாட்டிற்கு மத்தியில் ஷீபா, உண்ணி இருவரின் விரல்களும் தொட்டபோதெல்லாம் அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. அவன் ஏதோ உள்ளுணர்வால் பாதிக்கப்பட்டவனைப் போல உடனடியாகக் கையைப் பின்னால் இழுத்துக் கொண்டான். எந்தவொரு காரணமும் இல்லாமல் அவன் அவளைப் பார்த்தான். அவள் அவனையும். அவர்களுடைய கண்கள் சந்தித்தபோது, ஷீபாவின் கண்களில் ஒரு அளவுக்கு மீறிய பிரகாசம் தெரிந்ததைப் போல உண்ணி உணர்ந்தான். அந்தப் பிரகாசம் எப்படி வந்தது? அதன் அர்த்தம் என்ன?

இருட்டால் அந்தக் கேள்விக்கு பதில் கொடுக்க முடியவில்லை. "எனக்கு தெரியலையே!' -உண்ணி புலம்பினான். ஒருவேளை அதற்கு குறிப்பிட்டுக் கூறும் அளவிற்கு அர்த்தம் எதுவும் இல்லாமல்கூட இருக்கலாம்.

எனினும், அதற்குப் பிறகும் ஷீபா இருட்டில் வெளிச்சத்தால் படைக்கப்பட்ட ஒரு பேரழகியாக அவனுடைய அறைக்குள் படுக்கைக்கு அருகில் நின்று கொண்டிருந்தாள்.

உண்ணி கூர்ந்து பார்த்தான். ஆமாம்... அவளேதான். எப்போது வந்தாள்? உண்ணி கேட்டான்.

அவள் பதிலெதுவும் கூறவில்லை. அடுத்த நிமிடம் அவள் இருட்டில் கரைந்து காணாமல் போனாள்.

அவன் படுக்கையில் படுத்துக் கொண்டே அறை முழுவதிலும் கண்களை ஓட்டினான். யாரும் இல்லை. அறை முழுவதும் இருட்டு முடியை அவிழ்த்துவிட்டு உற்சாகத்துடன் நின்று கொண்டிருந்தது.

வாசலில் அய்யப்பன் சுலோகங்களைக் கூறுவது கேட்டது. அதற்குத் தாளம் போடுவதைப் போல பின்புலத்தில் காட்டின் சத்தங்கள் உரத்துக் கேட்டன.

விடை கூறிவிட்டு வெளியேறுவதற்கு முன்னால் ஷீபா அறையில் அவனுடைய கையைப் பிடித்து அழுத்தினாள்.

“இனிமேலும் வரணும், தெரியுதா?'' -அவள் சொன்னாள்.

அவள் கையைப் பிடித்து அழுத்தியபோது, அவனுக்கு என்னவோ போல இருந்தது.

அதை நினைக்கும்போதெல்லாம் அவனுக்கு ஒரு மாதிரி இருந்தது. "எதற்காக?' - அவன் கேட்டான்: "அவள் கையைப் பிடித்து அழுத்த வேண்டும்?'

அம்மா இறுகக் கட்டிப் பிடித்தபோது உண்டாகாத ஒரு தனிப்பட்ட சந்தோஷத்தை அவளுடைய தொடல் அவனிடம் உண்டாக்கியது. அது ஏன் என்பதைப் பற்றி உண்ணி தலை வலிக்கும் அளவிற்கு யோசித்துப் பார்த்தான். ஒரு பதிலும் கிடைக்கவில்லை. அந்தத் தொடல் உண்டாக்கிய நிலைகொள்ளாமை சுகமான ஒரு அனுபவமாக இருந்தது என்பதையும், அந்தத் தொடுதலை ஏற்றுக் கொள்வதற்கு இனிமேலும் தனக்கு ஆசையாக இருக்கிறது என்பதையும் உண்ணி புரிந்து கொண்டான்.

காருக்குள் ஏற முயன்ற உண்ணியைத் தழுவியவாறு அம்மா சொன்னாள்: “அடிக்கடி வரணும். தெரியுதா மகனே?''

“வர்றேன் அம்மா.'' -அதைச் சொன்னபோது தான் அழுது விடுவோமோ என்று உண்ணிக்குத் தோன்றியது. அவன் அதற்குள் காருக்குள் நுழைந்துவிட்டான்.

பள்ளிக்கூடத்தின் வாசல் வரை ராகுலனின் தந்தை அவர்களுடன் இருந்தார். பள்ளிக்கூடத்தின் வாசலில் அவர்களை இறக்கிவிட்டு, செல்வதற்கு முன்னால் அவரும் உண்ணியை வீட்டிற்கு மீண்டும் வரும்படி அழைத்தார்.

திடீரென்று உண்ணி நினைத்தான் - அதுதான் வாழ்க்கை... அதுதான் அன்பு.

ரத்தத் துளிகளில் இருக்கும் அசுரனின் குருதியைக் குடிக்கும் காளியின் புகழைப் பாடியவாறு வாசலில் அய்யப்பனின் குரல் உரத்து ஒலித்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel