Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 10

abimanyu

நிகழ்காலத்திற்குத் திரும்பி வருவதற்கு, மனதிற்குள் பலமாக பிரகாசித்து நுழைந்த ஒரு பயங்கரமான காட்சியிலிருந்து தற்போதைய நடைமுறைக்குத் திரும்பி வருவதற்கு உண்ணி மிகவும் சிரமப்பட வேண்டியதிருந்தது. ஆனால், திரும்பி வந்தபோது மனதிற்கு நிம்மதியாக இருந்தது. உலகம் சாதாரணமாக இருந்தது. முன்னால் ராகுலன் இருந்தான். இடம் - பள்ளிக்கூட வளாகத்திற்குள் இருக்கும் ஆலமரத்தின் அடியாக இருந்தது. உண்ணி நீண்ட பெருமூச்சு விட்டான்.

ராகுலன் வற்புறுத்தினான்: “எனக்கு வாக்குறுதி தா, உண்ணி.''

உண்ணி மீண்டும் திகைப்புடன் பார்த்தான்.

“என்ன வாக்குறுதி?''

“வீட்டிற்கு வருகிறேன் என்று.''

“வர்றேன்...'' உண்ணி முணுமுணுத்தான்.

“திரைப்படத்தின் கதை?''

பள்ளிக்கூட மணி அடித்தது. அவர்கள் வகுப்பறைக்குச் சென்றார்கள்.

ராகுலனின் பிறந்த நாளன்று உண்ணி ராகுலனின் வீட்டிற்குச் சென்றான்.

மதிய நேர மணி அடித்தபோது, அவர்கள் ஒன்றாக வகுப்பறையைவிட்டு வெளியே வந்தார்கள். பள்ளிக்கூடத்தின் வெளி வாசல் கதவுக்கு வெளியே கருப்பு நிறத்தில் இருந்த கார் ராகுலனை எதிர்பார்த்துக் காத்து நின்றிருந்தது. ஓட்டுனர் கதவைத் திறந்து பிடித்திருந்தான். ராகுலனும் உண்ணியும் ஏறினார்கள்.

உண்ணிக்கு மனதிற்குள் பதைபதைப்பு இருந்தது.

அவன் காரில் முதல் தடவையாக அப்போதுதான் ஏறுகிறான். காரிலும் பேருந்திலும் ஏற வேண்டிய தேவையே உண்ணிக்கு உண்டானதில்லை.

பள்ளிக்கூடத்திலிருந்து ஆசிரமத்திற்குத் திரும்பிச் செல்லும் போது சில நேரங்களில் காலியாக வரும் மாட்டுவண்டிகளுக்குப் பின்னால் பிடித்துக் கொண்டு நடந்திருக்கிறான். சில சந்தர்ப்பங்களில் வண்டிக்காரனின் கருணை மனத்தால் வண்டியில் ஏறி உட்காரு வதற்கும் வாய்ப்பு கிடைத்திருக்கிறது. இவையெல்லாம் சற்று சிறிய வயதில் இருந்தபோது நடந்தவை. இப்போது வண்டியின் பின்னால் பிடித்துக் கொண்டு நடப்பது என்பது வெட்கக் கேடான விஷயம். சற்று வயதில் மூத்தவர்களாக இருக்கும் மாணவர்கள் அப்படி நடப்பதில்லை.

காருக்குள் ஏறி உட்கார்ந்தபோது, உண்ணிக்கு நிலை கொள்ளாத ஒரு மனநிலை உண்டானது. குஷன் இருக்கையின் மென்மைத்தனமும் ஸ்பிரிங்கின் அசைவும் சேர்ந்து ஒருவித அசாதாரண தன்மையை உண்டாக்கின.

அவர்கள் இருவரும் ஏறி அமர்ந்தவுடன் ஓட்டுனர் கதவை அடைத்துவிட்டு, முன் இருக்கையில் ஏறி உட்கார்ந்து காரை ஓட்ட ஆரம்பித்தான்.

கார் நகர்ந்தபோது, வெளியே பார்த்துக் கொண்டிருந்த உண்ணிக்கு முதலில் உண்டான அமைதியற்ற தன்மையுடன் ஒரு விதமான புதிய சுகமான உணர்வும் உண்டானது. உண்ணிக்கு கார் பயணம், கிராமத்து தெருக்களின் புதிய உயிரோட்டமான ஒரு தரிசனத்தை அளித்தது. வேகமாகப் பின்னோக்கி நகர்ந்து கொண்டி ருக்கும் ஆட்களும் கட்டிடங்களும் வாகனங்களும், அதைவிட வேகமாக நகரும் வானமும் சேர்ந்து அவனுக்குப் புதிய சுவாரசியமான காட்சிகளாக இருந்தன. ராகுலன் என்னவோ கூற, அதை உண்ணி கேட்கக்கூட இல்லை. தினமும் இப்படிப் பயணம் செய்ய முடிகிற ராகுலன்மீது அவனுக்கு பொறாமையே உண்டானது.

காலையில் ராகுலன் பள்ளிக் கூடத்திற்கு வருவதும், சாயங்காலம் திரும்பிச் செல்வதும் காரில்தான். மதிய நேரம் ராகுலன் வீட்டிற்குச் செல்வதில்லை. வீட்டிலிருந்து வேலைக்காரன் சாதம் கொண்டு வருவான். காலையில் ராகுலனின் தந்தை அவனைப் பள்ளிக் கூடத்திற்கு காரில் கொண்டு வந்து விடுவார். மாலையில் ஓட்டுனர் காருடன் வந்து அழைத்துக் கொண்டு செல்வான். இதுதான் வழக்கமாக நடப்பது.

ராகுலனுக்கு என்ன ஒரு சுகமான வாழ்க்கை! உண்ணி சிந்தித்தான். உண்ணியை எடுத்துக் கொண்டால், அவன் நடந்தே ஆகவேண்டும். வெறும் நடை போதாது. மலைமீது ஏற வேண்டும்.

கீழே எங்கேயாவது, கிராமத்தில் இருக்கும் ஏதாவது ஒரு வீட்டில் தங்குவதைப் பற்றி உண்ணி ஒன்றிரண்டு தடவை மாமாவிடம் கூறியிருக்கிறான்.

“கிராமம் அசுத்தமானது.'' மாமா சொன்னார்: “அங்கு மனிதர்கள் ஏராளமாக இருக்கிறார்கள். அசுத்தமான மனிதர்கள். அவர்களுடைய சுவாசிக்கும் காற்று நிறைந்த வெட்டவெளி அசுத்தமானதாகி விடுகிறது. போதாதற்கு, அங்கு தொழிற்சாலைகள் இருக்கின்றன அல்லவா? தொழிற்சாலைகளின் புகைக் குழாய்கள் வெளியே விடும் கறுப்புப் புகை முழுக்க விஷம்... இங்கே எடுத்துக் கொண்டால், அப்படிப்பட்ட அசுத்தங்கள் எதுவும் இல்லை. இயற்கையின் அழகும் சுத்தமும் மலையில் இருக்கின்றன. இயற்கை புனிதத் தன்மையுடன் இருக்கிறது. இயற்கைதான் அன்னை. இயற்கை அப்பழுக்கற்றது. இங்குதான் சுத்தமான காற்று கிடைக்கும். இங்குதான் ஆரோக்கியம் தங்கி நிற்கும்.''

மாமா கறுப்பு நிறத்தில் இருந்த பெரிய சுருட்டை இழுத்துப் புகைத்தார். புகையை ஊதினார். புகையிலையின் முகத்தைச் சுளிக்க வைக்கக்கூடிய எரிந்த வாசனை உண்ணியின் உள்ளுக்குள் வேகமாக நுழைந்தது. அவன் இருமினான். மாமா தொடர்ந்து சொன்னார்: “கிராமத்தில் பல வகைப்பட்ட கவர்ந்து இழுக்கக்கூடிய விஷயங்கள் இருக்கின்றன, உண்ணி. திரைப்பட அரங்குகள், தேநீர்க் கடைகள், மது விற்பனை நிலையங்கள்... குழந்தைகளை வழி தவறச் செய்யக்கூடிய, அவர்களைப் பொறியில் சிக்க வைக்கக்கூடிய எல்லா வகைப்பட்ட வலைகளும் அங்கு தயார் பண்ணி வைக்கப் பட்டிருக்கின்றன. அங்கு தங்கினால் இந்த கவர்ச்சியான விஷயங்கள் தினமும் செயல்பட்டுக் கொண்டிருக்கும். அவற்றை எதிர்த்து நிற்பது என்பது மிகவும் கஷ்டமான விஷயமாக இருக்கும். புரியுதா?''

உண்ணி பதிலெதுவும் கூறவில்லை.

“பிறகு... மலை ஏறக்கூடிய விஷயம்.'' மாமா தொடர்ந்து சொன்னார்: “அதனால் பரவாயில்லை. தினமும் ஒருமுறைதானே ஏறி வர வேண்டியதிருக்கிறது! அது மிகச் சிறந்த உடல் பயிற்சி. உடல் நலத்திற்கு உடல் பயிற்சியைவிட சிறந்த மருந்து வேறு இல்லை.''

உண்ணி பதிலெதுவும் கூறவில்லை.

கார் ராகுலின் வெளி வாசல் கதவைக் கடந்தபோது சுவரில் இருந்த பெயர்ப் பலகை உண்ணியின் கவனத்தில் பட்டது. "பி.கெ.எஸ். நாயர், அசிஸ்டெண்ட் எஞ்ஜினியர்' என்று ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த பெயர்ப் பலகை. பி.கெ.எஸ். நாயர் ராகுலின் தந்தை என்பதை உண்ணி புரிந்து கொண்டான்.

இரு பக்கங்களிலும் இருந்த பூஞ்செடிகளுக்கு மத்தியில் முன்னோக்கி நகர்ந்த காரில் உட்கார்ந்து கொண்டே உண்ணி ராகுலின் வீட்டைப் பார்த்தான். மிகவும் பெரியது என்று கூற முடியா விட்டாலும், அழகான- இரண்டு மாடிகள் கொண்ட கட்டிடமாக அது இருந்தது.

கார் போர்ச்சில் போய் நின்றது. ஓட்டுனர் இறங்கினான். அவன் வருவதற்கு முன்பே ராகுலன் கதவைத் திறந்து இறங்கினான். அவன் திறந்து பிடித்திருந்த கதவின் வழியாக உண்ணியும் இறங்கினான்.

அப்போது நடுத்தர வயதைக் கொண்ட ஒரு பெண்ணும் ஒரு இளம் பெண்ணும் வாசலில் தோன்றினார்கள். அவர்கள் ராகுலனின் தாயும் அக்காவும்தான் என்பதை முடிவு செய்வதற்கு உண்ணிக்கு கஷ்டமாக இல்லை.

நடுத்தர வயது பெண் வந்து உண்ணியின் கையைப் பிடித்தாள்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel