Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 7

abimanyu

ஆசிரமத்தின் வாசலில், அது உயரத்தில் இருந்ததால் மாலை நேரத்தின் இயல்பான வெளிச்சம் தெளிவாகக் காணப்பட்டது. மலையின் அடிவாரங்களில் இப்போது இருட்டு பரவ ஆரம்பித்தி ருக்கும். ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வரும்போது இருட்டாகி விட்டிருக்கும் என்பதை உண்ணி தெரிந்து வைத்திருந்தான். அவன் பயப்பட்டான். அதை வெளியே காட்டிக் கொள்ளாமல் உண்ணி உள்ளே சென்று மரக்கொம்பில் மாட்டப்பட்டிருந்த துண்டை எடுத்துக் கொண்டு புறப்பட்டான்.

“உண்ணி, நீங்க வர்றப்போ நேரமாயிடும்.'' - அய்யப்பன் சொன்னான்: “நானும் வர்றேன்.''

உண்ணி நன்றிப் பெருக்குடன் அய்யப்பனைப் பார்த்தான்.

“அய்யப்பா, நீ போக வேண்டாம்.'' -மாமா கட்டளையிட்டார்: “உண்ணி நீ போய் குளிச்சிட்டு வா.''

பிறகு எதுவும் கூறுவதற்கு இல்லை என்பதை உண்ணியும் அய்யப்பனும் அறிந்து கொண்டிருந்தார்கள். அவர்கள் இருவரும் வாயைத் திறக்கவில்லை.

உண்ணி ஆற்றின் கரையில் நடந்தான். நடக்கவில்லை- அவன் ஓடிக் கொண்டிருந்தான்.

ஆற்றின் கரையில் இயல்பாக இருக்கும் வெளிச்சம் இருந்தது- ஆற்றிலும்.

குளிர்ந்த நீரில் மூழ்கி நிமிர்ந்து மேற்கு திசையைப் பார்த்தபோது, வானத்தில் சாயங்கால மேகங்கள் இருண்டு கொண்டிருப்பது தெரிந்தது.

குளித்து முடித்து வெளியே வந்தபோது இருட்டிவிட்டிருந்தது. இருட்டு விழுந்தவுடன் ஆற்றின் ஓட்டம் உண்டாக்கிய சத்தம்கூட இதற்கு முன்பு கேட்டிராத ஒன்றைப் போலவும் அச்சத்தை உண்டாக்கக்கூடியதாகவும் தோன்றியது. உள்ளே நடுக்கத்தை உண்டாக்கக்கூடிய காட்டின் சத்தங்கள் வேறு.

இங்கு வந்ததைப் போல திரும்பிச் செல்லும்போது ஓட முடியாது. நல்ல இருட்டு. இருட்டில் ஓடினால் தட்டுத் தடுமாறி விழ வேண்டியதிருக்கும். அதைவிட நல்லது மெதுவாக நடப்பதுதான். வழியில் ஊர்ந்து செல்லும் உயிரினங்கள் இருக்கும். இரவு நேரத்தில் பூதங்களும் வெளியேறி அலைந்து கொண்டிருக்குமே!

இரவில் ஆற்றின் படித்துறையில் குளிப்பதற்காகச் சென்ற ஒரு மலைவாழ் பெண்ணை சுடலை மாடன் அடித்த கதையை சமீபத்தில் தான் அவன் கேட்டான். மலைவாழ் பெண் கர்ப்பிணியாக இருந்தாள். அவளை சுடலை மாடன் அடித்துக் கொன்றுவிட்டான். மலைவாழ் பெண்ணின் இறந்த உடலில் இரத்தமே இல்லை என்று அதைப் பார்த்தவர்கள் சொன்னார்கள். கர்ப்பமாக இருக்கும் பெண்ணுக்கு மோசமான மரணம் நடைபெற்றால் அவளுடைய ஆன்மா பேய் வடிவம் எடுத்து அலைந்து திரியும் என்று அவன் கேள்விப்பட்டிருக்கிறான்.

அப்போது திடீரென்று யாரோ தேம்பி அழும் சத்தத்தைக் கேட்டு உண்ணி நடுங்கிவிட்டான். திரும்பிப் பார்த்தான். இருட்டைத் தவிர எதையும் பார்க்க முடியவில்லை. இருட்டில், இருட்டைவிட கறுப்பாக இருந்த மரங்களின் நிழல்கள் தெரிந்தன.

அழுதது யார்?

ஒரு பெண்ணின் சத்தம்தான் என்று தோன்றியது. இங்கு இந்த நேரத்தில் எந்தப் பெண் வந்திருப்பாள்? குறிப்பாக மலைவாழ் பெண்ணின் மோசமான மரணத்திற்குப் பிறகு பகல் வேளையில்கூட பெண்கள் யாரும் அந்தப் பக்கம் தனியாக வருவதில்லை. தனக்கு வெறுமனே தோன்றியிருக்கும் என்று உண்ணி நினைத்துக் கொண்டான். காளியைப் பற்றிய மந்திரங்களை முணுமுணுத்துக் கொண்டே உண்ணி நடந்தான்.

ஒவ்வொரு அடியை வைக்கும்போதும், காதுகள் சத்தங்களுக்காக அலைந்து கொண்டிருந்தன. கேட்ட சத்தங்கள் காட்டில் எப்போதும் கேட்கக் கூடிய சாதாரண சத்தங்கள்தான் என்பதை நம்புவதற்கு அவன் முயற்சி செய்தான். எனினும், அய்யப்பன் தன்னுடன் வந்திருந்தால் நல்லதாக இருந்திருக்கும் என்று அவன் ஆசைப்பட்டான். அப்போது அவனுக்கு மாமாமீது கோபம் உண்டானது. மாமா தடுக்காமல் இருந்திருந்தால் அய்யப்பன் வந்திருப்பான். கதைகள் கூறியிருப்பான். சிறிதும் பயமே இல்லாமல் சந்தோஷமாகத் திரும்பிச் சென்றிருக்கலாம்.

மாமா இன்று மிகவும் கோபத்தில் இருக்கிறார் என்பதை உண்ணி புரிந்து கொண்டான். இல்லாவிட்டால் நிச்சயமாக தன்னை இந்த சாயங்கால நேரத்தில் தனியாக அனுப்பி இருக்கமாட்டார். தான் வருவதற்குத் தாமதமானதால் மாமா கடும் கோபத்துடன் இருக் கிறார். மாமா கடும் வார்த்தைகளால் திட்டவோ இரண்டு அடிகளைக் கொடுக்கவோ செய்திருந்தால், அது இதைவிட சிறந்த தாக இருந்திருக்கும் என்று அவன் நினைத்தான். இந்த தண்டனை சற்று அதிகம் என்று அவனுக்குத் தோன்றியது.

ஒவ்வொரு அடியை வைக்கும்போதும் பயத்தைத் தாங்கிக் கொண்டு, ஒவ்வொரு நிமிடத்திலும் எந்தச் சத்தத்தையும் எந்த ஆபத்தையும் எதிர்பார்த்துக் கொண்டு, ஒவ்வொரு இலையின் அசைவிற்கும் ஒவ்வொரு சத்தத்திற்கும் நடுங்கிக் கொண்டே உண்ணி நடந்தான். இறுதியில் காளியின் கருணையால் உண்ணி ஆசிரமத்தை அடைந்தான்.

ஆசிரமத்தில் விளக்கு வைக்கப்பட்டிருந்தது. மாமாவும் அய்யப்பனும் பூஜையை ஆரம்பிப்பதற்காக உண்ணியின் வருகையை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். உண்ணி வந்ததும் மாமா சொன்னார்:

“பூஜையை ஆரம்பிப்போம்.''

பூஜை ஆரம்பமானது. பூஜை முடிவடைந்தது. மாமா சொன்னார்: “அய்யப்பா, உண்ணிக்கு உணவு கொடு.''

உண்ணி உணவைச் சாப்பிட ஆரம்பித்தபோது, மாமா அங்கு வந்தார். அவனுக்கு எதிரில் இருந்த ஸ்டூலின்மீது உட்கார்ந்தார். அது அசாதாரணமான ஒரு செயலாகத் தெரிந்ததால், உண்ணி பதைபதைப்புடன் மாமாவைப் பார்த்தான். அவனுடைய மனதிற்குள் இருந்த பதைபதைப்பைப் புரிந்து கொண்ட மாமா சொன்னார்:

“உண்ணி, சாப்பிடு.''

அவன் சாப்பாட்டைத் தொடர்ந்தான். இயந்திரத்தனமாக தான் சாதத்தின் உருண்டைகளை விழுங்கிக் கொண்டிருக்கிறோம் என்பதையும், தன்னுடைய பசி எங்கோ போய் மறைந்து விட்டிருக்கிறது என்பதையும் உண்ணி தெரிந்து கொண்டிருந்தான்.

“உண்ணி, இன்றைக்கு நீ பள்ளிக்கூடத்தில் இருந்து வருவதற்கு ஏன் தாமதமானது?'' அவன் முன்கூட்டியே எதிர்பார்த்திருந்த கேள்வி மிகவும் தாமதமாக மாமாவிடமிருந்து வந்தது.

கையில் உருட்டி வைத்திருந்த உருண்டையை வாய்க்குள் போடலாமா, பாத்திரத்தில் போடலாமா என்று தெரியாமல் உண்ணி எந்த வித அசைவும் இல்லாமல் உட்கார்ந்திருந்தான்.

“இன்னைக்கு...''- உண்ணி தடுமாறினான்.

“இன்னைக்கு... பள்ளிக்கூடத்தில் பந்து விளையாட்டு இருந்தது...''

“உண்ணி, நீ விளையாட்டில் பங்கெடுத்தாயா?'' -மாமா சாதாரணமாகக் கேட்டார்.

“இல்லை...'' - உண்ணி பதில் சொன்னான்: “நான் பார்த்துக் கொண்டு நின்றிருந்தேன்.''

“விளையாடுவதைப் பார்த்துக் கொண்டு நிற்கக்கூடாது என்று பல நேரங்களில் நான் சொல்லியிருக்கேன்ல?'' - மாமா சொன்னார்: “அந்த நேரம் வீணாக ஆயிடுது. நேரம் நம் கையில் இல்லை. அதைப் பாழாக்குவதற்கு நமக்கு உரிமையில்லை.''

மாமா நிறுத்தினார். ஒரு பெரிய சுருட்டிற்கு நெருப்பைப் பற்ற வைத்தார்.

உண்ணியுடைய மனதின் கண்கள் விளையாட்டு மைதானத்தில் இருந்தன. கால்பந்து மைதானத்தில் போட்டி போட்டு விளையாடிக் கொண்டிருக்கும் நண்பர்களின் உற்சாகமான அசைவுகளையும் சந்தோஷத்தில் திளைத்திருக்கும் முகங்களையும் அவன் பார்த்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel