Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 8

abimanyu

“உண்ணி, நீ விளையாடுவதாக இருந்தால், தேவையில்லை.'' -மாமா சொன்னார்: “அது ஒரு உடல் பயிற்சிதான். அதில் பயன் இருக்கிறது. ஆனால், அதுவும் தேவையில்லை. காலையில் வேண்டிய அளவிற்கு உடல் பயிற்சி செய்துவிட்டுத்தானே நீ பள்ளிக்கூடத்திற்கே போகிறாய்? அங்குமிங்குமாக நடப்பதுகூட நல்ல ஒரு உடல் பயிற்சிதான்.''

இந்த நடக்கும் செயல் ஒரு தண்டனை என்று கூற வேண்டும் போல உண்ணிக்கு இருந்தது. கிராமத்தைச் சேர்ந்த நண்பர்கள் இந்த அளவிற்கு நடக்க வேண்டியதில்லை. பள்ளிக்கூட நேரத்திற்கு சில நிமிடங்களுக்கு முன்னால் அவர்கள் புறப்பட்டால் போதும். வீட்டிற்குச் சென்று தாய், தந்தையுடன் சேர்ந்து உட்கார்ந்து உணவு சாப்பிடலாம். சாயங்காலம் விருப்பம்போல விளையாடித் திரிந்துவிட்டு வீட்டிற்குத் திரும்பி வரலாம். கோமனைப் போல சற்று தூரத்தில் வசிப்பவர்கள் மதிய உணவைச் சுமந்து செல்ல வேண்டும். ஆனால் அவர்கள்கூட மலை ஏற வேண்டியதில்லையே! அவர்கள்மீது உண்ணிக்கு பொறாமை உண்டானது.

“இந்த அளவிற்கு உடல் பயிற்சி முடிந்து...'' -மாமா கூறினார்: “வேறு உடல் பயிற்சி எடுக்க வேண்டிய அவசியமே இல்லை. அளவுக்கு அதிகமானால் அமிர்தமும் விஷம் என்று கேள்விப் பட்டிருக்கிறாய் அல்லவா? அளவுக்கு மீறிய உடல் பயிற்சி உடல் ஆரோக்கியத்திற்குக் கெடுதலாக அமையும்.''

மாமா சுருட்டை உள்ளே இழுத்துப் புகைத்துக் கொண்டே எழுந்தார். அவர் சாப்பாட்டு அறையில் நடக்க ஆரம்பித்தார்.

“உண்ணி, நான் பேசுவதால் நீ சாப்பிடாமல் இருக்க வேண்டும் என்பதில்லை. சாப்பிடுவது காது வழியாக இல்லையே!''

உண்ணி இயந்திரத்தனமாக சாப்பாட்டைத் தொடர்ந்தான்.

“உடலுக்கான பயிற்சி உனக்குத் தேவையான அளவிற்கு இருக்கிறது.'' -மாமாவின் குரல் அதிகமானது. “பிறகு... மனதிற்குத்தான் பயிற்சி வேண்டும். வாசிப்பு, தியானம், பூஜை ஆகியவற்றால்தான் அதை அடைய முடியும். உண்ணி, அதற்கான நேரத்தைத்தான் விளையாட்டை வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பதில் நீ வீண் செய்கிறாய்.''

அதற்குப் பிறகும் மாமா சுருட்டை இழுத்துப் புகையை ஊதியவாறு அங்குமிங்குமாக நடந்து கொண்டிருந்தார்.

“உண்ணி, நீ பெரியவனாக ஆக வேண்டியவன்'' -மாமா சொன்னார்: “எனக்கு முடியாமல் போனதும் உனக்கு அந்த தகுதி கிடைக்க வேண்டும். அதனால்தான் உன்னை நான் இந்த முறையில் வளர்க்கிறேன். நீ தைரியசாலியாக ஆகவேண்டும். பலம் கொண்டவ னாக இருக்க வேண்டும். வெற்றி பெற்றவனாக ஆகவேண்டும். அதற்காகப் பிறந்தவன் நீ. ஜாதகப்படி நீ பெரியவனாக ஆகியே தீரவேண்டும். அதற்குத் தேவையான பயிற்சியைத் தர வேண்டிய பொறுப்பு எனக்கு இருக்கிறது.'' - ஒரு நிமிடம் நிறுத்திவிட்டு தான் கூறியது சரிதானா என்ற அர்த்தத்தில் அவர் அழைத்தார்: “அய்யப்பா!''

“ஆமாம்... எஜமான்!'' - அய்யப்பன் எஜமானரை ஆதரித்துச் சொன்னான்.

உண்ணிக்கு மாமா கூறியதன் அர்த்தம் புரியவில்லை. இப்படித்தான் பெரியவனாக ஆக முடியும் என்றால், பெரியவனாக ஆகாமல் இருப்பதே நல்லது என்றுகூட உண்ணிக்குத் தோன்றியது.

“உண்ணி, உனக்கு அப்பாவை ஞாபகத்தில் இருக்குதா?'' -மாமா கேட்டார்.

“இல்லை.'' -உண்ணி பதில் சொன்னான்.

“அம்மாவை ஞாபகத்தில் இருக்குதா?''

“இல்லை.''

“அந்த நினைவுகள்கூட வேண்டாம் என்று நினைத்துத்தான் உன்னை நான் இளம் வயதிலிருந்தே என்னுடன் கொண்டு வந்துவிட்டேன். உன் அப்பா இறந்துவிட்டார். அம்மா இருந்தாள். இப்போது இருக்கிறாளோ என்னவோ? அப்பா, அம்மாவுடன் கொண்டிருக்கும் உறவுகூட கடமைப்பட்டிருப்பதுதான். கடமைப் பட்டிருப்பதும் வலைகள்தான். விளையாட்டுகள்மீது கொண்டிருக்கும் ஆர்வங்களும் அதேமாதிரி வலைகள்தான். பெரியவனாக ஆவதற் காகப் பிறந்தவனை- உயர்ந்த நிலையை அடைய அனுமதிக்காமல் வலையில் விழ வைப்பது என்ற விளையாட்டு சாதாரணமாக நடக்கக்கூடியதுதான். தற்காலிக மோகங்களும் சில நிமிடங்கள் மட்டுமே நிலைத்து நிற்கக் கூடிய சந்தோஷங்களும் பல வர்ண ஜாலங்களுடன் உன்னை இழுக்கின்றன. ஒருமுறை அதற்கு அடிபணிந்துவிட்டால் நீ நுழைவது ஒரு புதிய உலகத்திற்குள்ளாக இருக்கும். வெளியே - கவர்ச்சியான உலகம். அதற்குள் நுழைந்து செல்லும் ஒரு மனிதன்கூட வெளியே வர முடியாது. வலையில் சிக்கிக் கொண்டால், சிக்கியதுதான். பிறகு... வெளியே வருவதற்கான வழியைத் தேடி அலைய வேண்டும். அலைந்து திரிந்து இறுதியில் வழியைக் கண்டுபிடிக்க முடியாமல் தளர்ந்து, தகர்ந்து, ஏதாவதொரு இருண்ட மூலையில் நெளிந்து விழுந்து மரணத்தைத் தழுவுவது... தனக்கென்று இருக்கும் பாதையை விட்டுவிட்டு, மேலோட்டமான சுகங்கள் என்னும் மாயவலையை நோக்கிச் செல்லும் ஒவ்வொருவரின் அனுபவமும் அதுதான். அய்யப்பா!'' “ஆமாம் எஜமான். உண்மை! உண்மை!'' -அசாதாரணமான ஒரு பிரகாசம் அய்யப்பனின் முகத்தில் தோன்றியது.

ஆனால், உண்ணி நினைத்தான் -அந்த வலைகள்தானே சுகமானவை!

முந்தைய நாள் ராகுலன் திரைப்படம் பார்த்த விஷயத்தைச் சொன்னான். அவனும் அம்மாவும் அப்பாவும் ஒன்றாகச் சேர்ந்து திரைப்படம் பார்க்கச் சென்றிருக்கிறார்கள். புரிந்து கொள்ள முடியாத பகுதிகளை அவனுடைய தந்தை அவனுக்கு விளக்கிக் கூறியிருக்கிறார். மிகவும் சுவாரசியமாக இருந்தது என்று ராகுலன் சொன்னான். ராகுலன் திரைப்படத்தைப் பற்றி விளக்கமாகப் பேசியபோது உண்ணியிடம் ஆர்வம் தோன்றியது. ராகுலன்மீது உண்ணிக்கு பொறாமைகூட தோன்றியது.

உண்ணி திரைப்படம் பார்த்ததில்லை.

கோமன் கூட திரைப்படம் பார்த்திருக்கிறான். ஓணத்திற்கு கோமனின் தந்தை பிள்ளைகளையும் அவர்களுடைய தாயையும் திரைப்படம் பார்ப்பதற்காக அழைத்துச் செல்வான். வேறு சில நாட்களில் திரைப்படத்திற்குச் செல்ல காசு தருவான். தன்னுடைய வகுப்பில் தன்னைத் தவிர, மற்ற மாணவர்கள் எல்லாரும் திரைப்படங்களைப் பார்த்திருப்பவர்கள் என்பது தெரிந்தது. உண்ணிக்கு கடுமையான வருத்தம் உண்டானது. என்னவொரு கேடு கெட்ட விஷயம்? இந்தக் காலத்தில், திரைப்படம் பார்த்ததே இல்லை என்று கூறுவது என்றால்...

சாப்பிடுவதை நிறுத்திவிட்டு, வெறுமனே உட்கார்ந்து கொண்டிருந்த உண்ணியைப் பார்த்து மாமா சொன்னார்:

“போய் கையைக் கழுவிவிட்டு வா.''

உண்ணி இயந்திரத்தனமாக எழுந்தான். போய் கையைக் கழுவி விட்டுத் திரும்பி வந்தான்.

“காலம் செல்லச் செல்ல வலைகள் அதிகமாகும்.'' -மாமா தொடர்ந்து சொன்னார்:

“அவற்றின் நிறக் கவர்ச்சியும்... நாம் மேலும் மேலும் கவர்ந்து இழுக்கப்படுவோம். இளம் வயதிலேயே முழுமை யான கட்டுப்பாட்டுடன் இருக்கப் பழகிக் கொண்டால் மட்டுமே, நம்மால் அந்த வலையில் சிக்காமல் தப்பிக்க முடியும். எனக்கும் அய்யப்பனுக்கும் அந்த முழுமையை அடைய முடியவில்லை. உனக்கு அது நடக்க வேண்டும், உண்ணி.''

உண்ணி சலனமற்ற கண்களுடன் எந்தவித அசைவும் இல்லாமல் நிற்பதை மாமா பார்த்தார். அவர் சொன்னார்: “உண்ணி, நீ போய் படி. படித்து முடித்து படுக்குறப்போ நான் சொன்ன விஷயங்களை நினைச்சுப் பார்க்க முயற்சி செய். நல்லா சிந்திச்சுப் பார்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel