Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 11

abimanyu

“வா மகனே...'' -அவள் சொன்னாள்: “நான் எவ்வளவு நாட்களாக உன்னைப் பார்க்க வேண்டும் என்று ஆவலாக இருக்கிறேன் தெரியுமா?''

அவளுடைய மனதைத் தொடக்கூடிய குரலும் உண்ணிக்குள் ஏதோ சுகமான உணர்வை உண்டாக்கியது. அது என்ன என்பதை வார்த்தைகளால் விளக்கிச் சொல்ல அவனால் முடியவில்லை.

“அம்மா, உண்ணி நான் எந்த அளவுக்கு வற்புறுத்தி வந்திருக்கி றான் தெரியுமா?'' -ராகுலன் சொன்னான்: “எனினும் மிகவும் தயக்கம்...''

உண்ணி வெட்கப்பட்டுக் கொண்டு நின்றிருந்தான்.

அவனை இறுக அணைத்துக் கொண்டு அம்மா கேட்டாள்: “அப்படியா உண்ணி?''

உண்ணி வெட்கப்பட்டுச் சிரிக்க முயற்சித்தான்.

அப்போது ஒரு குரல் கேட்டது: “இதுதான் இவன் எப்போதும் சொல்லும் உண்ணியா?''

அந்தக் குரலுக்குப் பின்னால் ராகுலனின் தந்தை தோன்றினார். உண்ணி அவரைப் பார்த்தான். அவர் முன்னோக்கி வந்து உண்ணியின் கையைப் பிடித்தார்.

“வா... வா...''

உண்ணி அவருடன் சேர்ந்து உள்ளே சென்றான். அலங்கரிக்கப்பட்டிருந்த வரவேற்பறை அவனை ஆச்சரியம் கொள்ளச் செய்தது.

“உட்காரு... உட்காரு...'' -ராகுலனின் தந்தை சொன்னார். உண்ணி தயங்கி நின்றான்.

“உட்காரு'' -ராகுலனின் தந்தை உண்ணியைப் பிடித்து உட்கார வைத்தார். அவரும் அவனுக்கு அருகில் உட்கார்ந்தார். எதிர்பக்கத்தில் அம்மா உட்கார்ந்தாள்.

“அம்மாவுக்கும் அப்பாவுக்கும் இனி நாங்கள் தேவையில்லை என்று தோணுது.'' இன்னொரு சோபாவில் உட்கார்ந்து கொண்டே ராகுலனின் அக்கா கூறினாள்.

“உண்மைதான்.'' அவளுக்கு அருகில் அமர்ந்தவாறு ராகுலன் சொன்னான். அவன் தொடர்ந்து சொன்னான்: “உண்ணி, இதுதான் என்னோட ஷீபா அக்கா. நான் உன்னிடம் சாலமன் அண்ட் ஷீபாவின் கதையைக் கூறியிருக்கிறேன் அல்லவா?''

தொடர்ந்து அவன் ஷீபாவைப் பிடித்துக் குலுக்கினான்.

உண்ணி ஷீபாவைப் பார்த்தான். அவளுடைய அழகு காட்டின் அழகுகளையே தோற்கடிப்பதைப் போல அவன் உணர்ந்தான். தனக்கு இப்படி ஒரு அக்கா இருந்திருந்தால், அவளை இப்படி இறுக அணைக்க முடிந்திருந்தால் எப்படி இருக்கும் என்று உண்ணி மனதில் நினைத்தான்.

தம்பியின் பிடியில் இருந்து பலவந்தமாக விடுபட முயற்சித்தவாறு ஷீபா சொன்னாள்:

“சும்மா இரு பையா.''

“பையனா?'' -ராகுலன் கோபப்பட்டான். “என்னை பையன் என்று அழைத்தால், நான் பெண்ணே என்று அழைப்பேன்!''

“அழைத்தால் காதைப் பிடித்து நான் புண்ணாக ஆக்குவேன்.''

“அவ்வளவுதானா? அதை நான் இப்போதே செய்கிறேன்.''

ராகுலன் கூறியதுடன் நிற்கவில்லை. அவன் அவளுடைய காதைப் பிடித்து திருகவும் செய்தான்.

“அம்மா! இதைப் பார்த்தீங்களா? இந்தப் பையன்...!'' -ஷீபா சிணுங்கினாள். அவள் அவனுடைய பிடியிலிருந்து பலவந்தமாக விலகி குதித்து எழுந்தாள். “பிறந்த நாள் என்றுகூட நான் பார்க்க மாட்டேன்.''

அப்பாவும் அம்மாவும் சிரித்தார்கள். உண்ணி சிரித்தான். அதைப் பற்றி உண்ணிக்கே ஆச்சரியம் தோன்றியது.

“சாப்பாடு கொண்டுவரும்படி சொல்லட்டுமா?'' -அம்மா கேட்டாள்.

“நான் உண்ணிக்கு வீட்டைக் கொஞ்சம் காட்டட்டுமா, அம்மா. என்னுடைய அறையையும், அக்காவின் அறையையும்கூட...'' -ராகுலன் சொன்னான்.

“ஆமாம்... அது முடிந்த பிறகு சாப்பாட்டை வச்சுக்குவோம்.'' அப்பா தன் மகனின் கருத்தை ஒப்புக் கொண்டார்.

“வா உண்ணி.'' ராகுலன் எழுந்தான். உண்ணியும் எழுந்தான்.

அவர்கள் மேலே செல்லும் படிகளில் ஏறத் தொடங்கியபோது, ஷீபா சொன்னாள்: “நானும் வர்றேன்.''

அவள் அவர்களைப் பின் தொடர்ந்தாள்.

அசிஸ்டெண்ட் எஞ்ஜினியரின் வீட்டின் மேல் மாடியில் இருந்த அழகான விஷயங்களை நோக்கி ஷீபாவுடனும் ராகுலனுடனும் சேர்ந்து உண்ணி ஏறிச் சென்றான்.

5

விளக்கை ஊதி அணைத்துவிட்டு, தூங்குவதற்குப் படுத்த பிறகும் உண்ணிக்கு உறக்கம் வரவில்லை. அறையின் இருட்டையே வெறித்துப் பார்த்துக் கொண்டே அவன் படுத்திருந்தான்.

ஆசிரமத்தில் குறிப்பிட்டுக் கூறுகிற மாதிரி சத்தம் எதுவும் கேட்கவில்லை. மாமா வாசிக்கும் அறையில் இருந்தார். வாசலில் அய்யப்பன் இருக்கிறான் என்பதை, கதவின் சிறிய இடைவெளி வழியாக உண்ணியின் அறைக்குள் விழுந்த வெளிச்சத்தின் கீற்று அழைத்துச் சொன்னது.

திறந்து கிடந்த மூங்கிலால் ஆன சாளரத்திற்கு வெளியே இருட்டில் காடு சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்தது. இரவின் அமைதியில் விஷத் துளிகளைப் போல காட்டின் சத்தங்கள் கேட்டன.

உண்ணியின் கவனம் அந்த சத்தங்களிலோ இருட்டிலோ பதிந்திருக்கவில்லை.

அவனுக்குள் இருந்த அவன் பி.கெ.எஸ். நாயரின் வீட்டின் அந்தப்புரங்களில் ஷீபாவுடனும் ராகுலனுடனும் சேர்ந்து சந்தோஷத்துடன் நடந்து கொண்டிருந்தான்.

அங்கு கண்டவை அனைத்தும் அவனுக்கு ஆச்சரியமாக இருந்தன. ரேடியோக்ராம், ட்ரான்சிஸ்டர் ரேடியோ, ரெக்கார்ட் பிளேயர், டெலிஃபோன்- இவற்றை மட்டுமல்ல- தண்ணீர்க் குழாய், ஷவர்பாத், மின்சார விளக்கு- இவற்றைக்கூட அவன் வாழ்க்கையில் முதல் தடவையாகப் பார்க்கிறான். ஃப்ரிட்ஜிலிருந்து எடுத்த நீரின் குளிர்ச்சி அவனுடைய வயிற்றையும் குடலையும் மரத்துப் போகச் செய்தது.

ஆச்சரியங்களைவிட சந்தோஷங்களுடன் உண்ணி அந்த வீட்டை விட்டு வெளியேறினான். அப்பாவும் அம்மாவும் ஷீபாவும் ராகுலனும் அந்த வீட்டின் உறுப்பினர் என்பதைப் போலவே அவனிடம் நடந்து கொண்டார்கள்.

ராகுலனின் தாய் "மகனே" என்று வாசலுக்கு அருகில் முதல் தடவையாக அழைத்தபோது தனக்குள் உண்டான இதற்கு முன்பு உணர்ந்திராத சந்தோஷம் எப்படிப்பட்டது என்பதை வார்த்தைகளால் கூறுவதற்கு உண்ணி பயனில்லாமல் முயற்சித்தான். அவனைச் சுற்றிலும் அறையில் சூழ்ந்து நின்றிருந்த இருட்டிற்கு இந்த விஷயத்தில் அவனுக்கு உதவி செய்ய முடியவில்லை. ஒரு விஷயம் மட்டும் அவனுக்கு நன்கு தெரிந்திருந்தது. அந்தப் புத்துணர்வை அளித்தது ஒரு வகையான சுகம் என்பதே அது. வார்த்தைகளால் கூற முடியாத ஒரு சுகம். தனக்கு யாரோ இருக்கிறார்கள் என்று வாழ்க்கையில் முதல் தடவையாக அவனுக்குத் தோன்றியது. ராகுலனின் தாயை "அம்மா' என்று அழைத்தபோது, அவனுடைய ஆன்மாவும் உடலும் ஒரு வகையான உணர்ச்சி நிறைந்திருக்க நின்றிருந்தன.

அந்தத் தாயின் குரல், அந்த தாயின் தொடல் எல்லாவற்றையும் மீண்டும் அனுபவிக்க வேண்டும் என்ற ஆர்வம், மலையின் இரவு வேளைக்கு நடுவில், ஆசிரமத்தின் சிறிய படுக்கையறையின் இருட்டில், தனியாகப் படுத்திருந்தபோது அவனுக்குள் அலைகளை எழுப்பிக் கொண்டு உயர்ந்து நின்றது.

அம்மா அவனைத் தன்னுடைய உடலோடு சேர்த்து நிறுத்திக் கொண்டாள். அவளிடமிருந்து தாயின் வாசனை கிளம்பி வருவதை தெரிந்து கொண்டான். அவன் கேள்விப்பட்டிருந்த மிகவும் சக்தி படைத்த வாசனை அதுதான். அது அன்பின், பாசத்தின் வாசனை. அம்மா தொட்டபோது அவன் ஏதோ தெரிந்திராத சந்தோஷப் பகுதிகளை நோக்கி உயர்ந்து சென்றான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel