Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 9

abimanyu

உண்ணி பதிலெதுவும் கூறாமல் நின்றான்.

“உண்ணி, நான் சொன்னதை நீ காதில் வாங்கினாயா?''

“ம்...''

“அப்படியென்றால், போ.''

உண்ணி தன்னுடைய அறையை நோக்கிச் சென்றான். பாடப் புத்தகங்களுடன் மேஜைக்கு அருகில் போய் உட்கார்ந்தான். மேஜை மீது இருந்த விளக்கின் வெளிச்சம் திறக்கப்பட்ட புத்தகத்தின் எழுத்துகளில் விழுந்தது.

ஆனால், உண்ணி அந்த எழுத்துகளைப் பார்க்கவில்லை.

4

ராகுலன் தன்னுடைய வீட்டிற்கு அழைத்தபோது உண்ணி அதற்கு மறுப்பு தெரிவித்தான்.

“எந்தவொரு வீட்டிற்கும் போகக்கூடாது என்று மாமா சொல்லிஇருக்கிறார்.'' -அவன் சொன்னான்.

“ஏன்?'' -ராகுலன் கேட்டான்.

“எனக்குத் தெரியாது.'' -உண்ணி சொன்னான்.

“அப்படியென்றால் நான் சொல்றேன்.'' ராகுலனுக்கு அவனுடைய வயதைத் தாண்டிய பக்குவம் இருப்பதாகத் தோன்றியது.

“வேறு எந்த வீட்டிற்கும் போகக்கூடாது என்று என் அப்பாவும் அம்மாவும் என்னிடம்கூடத்தான் சொல்றாங்க. ஆனால், நான் கிரிஜாவின் வீட்டிற்குப் போன விஷயத்தைச் சொன்னப்போ, அப்பாவும் அம்மாவும் என்னைத் தடுக்கவில்லை. அதற்காகத் திட்டவும் இல்லை. அது ஏன் என்று உனக்குப் புரியுதா?''

“இல்லை...'' -உண்ணி தன் குற்றத்தை ஒப்புக் கொண்டான்.

“பார்த்தியா? அதனால்தான் உனக்கு சில நேரங்களில் கொஞ்சம்கூட அறிவே இல்லைன்னு நான் சொல்றது...'' -ராகுலன் மீண்டும் பக்குவம் வந்தவனைப் போல பேசினான். “பள்ளிக்கூடத்தில் பல தரப்பட்ட மாணவர்கள் படிக்கிறார்கள். அவர்கள் எல்லாரும் நம்முடைய நண்பர்களாக இருப்பார்கள். ஆனால், உண்மையாகச் சொல்லப்போனால்- நெருக்கமாகப் பழகக் கூடியவர்கள் சிலர்தான் இருப்பார்கள். பெரும்பாலான வீடுகள் நாம் யாரும் போவதற்கோ பழகுவதற்கோ முடியாதவையாகத்தான் இருக்கும். அதனால்தான் நாம் பிற வீடுகளுக்குச் செல்லக் கூடாது என்று அப்பாவும் அம்மாவும் மாமாவும் தடைபோடுகிறார்கள். புரியுதா?''

அவன் கூறியது சரிதான் என்று உண்ணிக்கும் தோன்றியது. ஆனால்...

“இருந்தாலும்...'' -உண்ணி சந்தேகத்தை வெளிப்படுத்தினான்.

“அப்படியொன்றும் இல்லை...'' -ராகுலன் சொன்னான்: “என் வீட்டிற்கு வந்ததாகச் சொன்னால் உன் மாமா திட்ட மாட்டார். என் அம்மாவை எடுத்துக் கொண்டால், அவங்க உன்னைப் பார்க்க வேண்டும் பார்க்க வேண்டும் என்று எப்போதும் சொல்லிக் கொண்டே இருப்பாங்க. அம்மாவுக்கு உன்னை நல்லா தெரியும். நான் சொல்லிச் சொல்லி அம்மாவுக்கு இப்போ உன்னை முழுசா தெரியும்.''

ராகுலன் சிரித்தான். “உன்னைப் பார்த்தால் யாரும் சொல்லாம லேயே என் அம்மாவுக்கு நீதான் உண்ணின்னு தெரியும்.''

ராகுலன் மீண்டும் சிரித்தான்.

உண்ணிக்கு சிரிப்பு என்பது எப்போதும் இருக்கக்கூடிய ஒன்று அல்ல என்பதால், அவன் சிரிக்க முயற்சித்தபோது சிரிப்பு மிகவும் சகிக்க முடியாமல் இருந்தது.

“என் பிறந்த நாளன்று மதியம் சாப்பிடுவதற்கு உன்னை அழைக்க வேண்டும் என்று அம்மா சொன்னாங்க. அந்த நாளன்று நான் அழைத்துக் கொண்டு வருகிறேன் என்று சொல்லியிருக்கிறேன். அன்று நீ வந்தே ஆகவேண்டும்.''

“ஆனால்...'' -உண்ணி அதற்குப் பிறகும் தயக்கத்திற்குள் விழுந்தான்.

“ஒரு ஆனாலும் இல்லை...'' -ராகுலன் சொன்னான். அவன் திடீரென்று உண்ணியின் தோளில் கையை வைத்தான். உண்ணியின் கண்களையே உற்றுப் பார்த்தான். ராகுலன் பேசியபோது, அவனுடைய குரல் நெகிழ்ந்தது.

“உனக்கு என்மீது அன்பு இல்லை.'' -அவன் சொன்னான்.

“அதுவல்ல ராகுலா.'' -உண்ணி சொன்னான்: “எனக்கு...''

அவன் எப்படித் தொடர்வது என்று தெரியாமல் நிறுத்தினான்.

“நீ எதுவும் சொல்ல வேண்டாம்.'' -ராகுலனின் குரல் மேலும் கனத்தது. “உனக்கு என்மீது விருப்பம் இருந்தால், என்னுடைய பிறந்த நாளுக்கு வீட்டிற்கு வருகிறேன் என்று சொல்லு!''

“அதைப் பற்றி நாம் சிந்திப்போம்.'' -உண்ணி சொன்னான்: “நீ சனிக்கிழமை பார்த்த திரைப்படத்தைப் பற்றிச் சொல்லு.''

“நீ வாக்குறுதி தா.''

“அதைப் பற்றிச் சிந்திக்கலாம் என்று சொல்லிவிட்டேனே! நீ கதையைச் சொல்லு.''

“வேண்டாம்... வேண்டாம்... வாக்குறுதி தந்தபிறகு கதை!''

ஒன்றிரண்டு நிமிடங்கள் அமைதி நிலவியது. அந்த அமைதிக்குள் துடுப்பைச் செலுத்தி உண்ணி இன்னொரு கரையை நோக்கிச் சென்றான். மாமாவின் நரைத்த மேல் மீசையும் அதற்கு மேலே ஒளி வீசிக் கொண்டிருக்கும் கண்களும் எந்தச் சமயத்திலும் மாறாத குணமும் எந்த நிமிடத்திலும் தாளத் தவறுகள் உண்டாகாமல் இருக்கும் குரலும் நிறைந்த ஒரு கரைக்கு... அந்தத் தீவின் தலைவர் மாமாதான். தலைவருடைய வேலைக்காரன் அய்யப்பன். மினுமினுப்பான, கறுத்த தோலையும் சப்பையான மூக்கையும் சிறிய கண்களையும் கொண்ட அய்யப்பன்... மேலுதட்டின் மீதும் தாடையிலும் இரத்தம் கசிய நின்று கொண்டிருக்கும் அய்யப்பன். மாமாவுடன் சேர்ந்து உட்கார்ந்து கொண்டு உணவு சாப்பிடும் அய்யப்பன்.

கையில் நீளமான கத்தியைப் பிடித்திருக்கும் அய்யப்பனும் துப்பாக்கியைக் கையில் வைத்திருக்கும் மாமாவும் சேர்ந்து கொண்டு உண்ணியைத் துரத்துகிறார்கள். உண்ணி பயந்து ஓடுகிறான். காட்டு வேர்களில் தட்டி அவன் விழுகிறான். காட்டுச் செடிகளின் முட்புதர்களில் சிக்கி அவனுடைய ஆடைகளும் உடலும் கிழிகின்றன. கூர்மையான சரளைக் கற்களும் விழுந்து கிடக்கும் முட்களும் அவனுடைய கால்களுக்குள் நுழைகின்றன. உடம்பெங்கும் குருதி வழிய அவன் தன் உயிரைக் காப்பாற்றிக் கொள்வதற்காக ஓடுகிறான். ஓடி ஓடிக் காட்டைக் கடந்து வெட்ட வெளி நிலத்தை அடைந்து திரும்பிப் பார்த்தபோது, அவனைப் பின்தொடர்ந்து வந்து கொண்டிருந்த மாமாவும் அய்யப்பனும் முன்னால் ஓடிக் கொண்டிருக்கிறார்கள். முன்னால் அசைந்து புரளும், இரைச்சலிட்டு ஆரவாரிக்கும் நீர்ப்பரப்பு. எல்லையற்ற நீர்ப்பரப்பு. அவன் பார்த்திராத பள்ளிக் கூடத்தில் காதால் மட்டும் கேட்டுத் தெரிந்து வைத்திருக்கும் கடல் என்ற முடிவற்ற நீர்ப்பரப்பு. சுற்றிலும் நீர். மத்தியில் காடு. காட்டில் தன்னைப் பின் தொடர்ந்து கொண்டிருக்கும் ஆயுதங்களைத் தாங்கிய இரண்டு மனிதர்கள். உண்ணி நடுங்கிச் சிதறிக் கொண்டிருந்தான்.

இந்தக் கொடூரமான- அச்சத்தை வரவழைக்கக்கூடிய காட்சியை தன்னுடைய கண்களுக்கு உள்ளே இருந்து இல்லாமல் செய்ய வேண்டுமே என்று அவனுடைய மனம் மலை உச்சியில் இருந்த பகவதியிடம் வேண்டிக் கொண்டது.

“ம்... சொல்லு உண்ணி.'' -உண்ணி அவனுடைய தோளைப் பிடித்துக் குலுக்கினான்.

தூக்கத்திலிருந்து எழுப்பப்பட்டவனைப் போல எதுவும் புரியாமல், திகைத்துப் போய் உண்ணி கேட்டான்: “என்ன சொல்றது?''

“அடடா! அதற்குள் மறந்து விட்டாயா?''

ராகுலன் சொன்னான்: “பிறந்த நாளன்று என்னுடைய வீட்டிற்கு வருகிறேன் என்று வாக்குறுதி தரவேண்டும். அதற்குப் பிறகுதான் திரைப்படத்தின் கதையைக் கூறுவேன்.''

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel