Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 4

abimanyu

“வளரக்கூடியது வளரும். பெரிதாகிவிட்டால், அதற்குப் பின்னால் வளராது. சின்னதாக ஆவதும் இல்லை. நரை விழாமல் கிழவன் ஆக முடியாது. அதுதான் ரகசியம். ஆமாம்...''

உண்ணி அதைக் கேட்டுக் கொண்டு அமைதியாக உட்கார்ந்திருந்த போது, அய்யப்பன் கேட்டான்: “புரிஞ்சதா?''

“புரிந்தது'' -உண்ணி சிரித்துக் கொண்டே சொன்னான். தொடர்ந்து உண்ணி ஒரு சந்தேகத்தை வெளிப்படுத்தினான்: “பிறகு ஏன் பெரிய மாமாவிற்கு நரை அதிகமாக இருக்கு?''

அய்யப்பன் தலைமுடியைத் தடவினான். பதில் இல்லாமல் போகிறபோது அய்யப்பன் செய்யக்கூடியது அதுதான். மிருகங்களின் குரலில் முனகுவான்.

“எல்லாம் ஆண்டவனின் விளையாட்டு.'' சிறிது நேரம் சிந்தித்துவிட்டு ஒரு தத்துவ ஞானியின் கம்பீரத்துடன் அய்யப்பன் பதில் கண்டு பிடித்தான்.

“அப்படியென்றால்- உடற்பயிற்சி செய்யவில்லையென்றால்...?'' -உண்ணி கேட்டான். அதற்குப் பிறகும் அய்யப்பன் முனகிக் கொண்டே இருந்தான்.

ஆனால், உண்ணி உடற்பயிற்சியில் ஈடுபடத்தான் செய்தான். இல்லாவிட்டால் பெரிய மாமா கோபப்படுவார் என்ற விஷயம் அவனுக்குத் தெரிந்திருந்தது. பெரிய மாமா கோமனின் தந்தையைப் போல கஞ்சிப் பானையை எறிந்து உடைப்பதில்லை. மோசமான வார்த்தைகளால் திட்டுவதில்லை. அதிகாலை நேரத்தில் மிதித்து எழுப்புவதில்லை. எனினும், கோமனின் தந்தை என்ற கெட்ட கனவை விட பயங்கரமான கனவாகவும் கவலையைத் தரும் உண்மை யாகவும் பெரிய மாமா இருக்கிறார் என்பதாக உண்ணிக்குத் தோன்றியது.

கோமனுடைய தந்தை சில நேரங்களில் நல்ல வடிவத்திலும் வீட்டிற்கு வந்திருக்கிறான். அப்போது அவன் பழம், மிட்டாய், முறுக்கு ஆகியவற்றை வாங்கிக் கொண்டு வந்து பிள்ளைகளுக்குக் கொடுத்தான். அவர்களை இறுக அணைத்துக் கொண்டு முத்தமிட்டான். அவர்களிடம் இனிமையாகப் பேசினான். திருவிழாவிற்கு கோவிலுக்கு அழைத்துச் சென்றான். சுக்கு காப்பியும் பலகாரமும் வாங்கிக் கொடுத்தான். வேர்க்கடலை வாங்குவதற்கு காசு தந்தான். அந்த அளவிற்கு ஒரு நடத்தை பெரிய மாமாவிடம் இருந்ததே இல்லை. எல்லா நேரங்களிலும் பெரிய மாமா ஒரே மாதிரி இருப்பார். தேள் மலையின் உச்சியில் தேள் பாறையைப் போல குலுக்கல் இல்லாமல், அசைவு இல்லாமல், மாறுதல் இல்லாமல் வேறு ஏதாவது இந்த பூமியில் இருக்கிறது என்றால் அது பெரிய மாமாதான் என்று உண்ணி தெரிந்து வைத்திருந்தான். வெடி வெடிக்கும்போது பெரிய பாறைகள்கூட அடியோடு பெயர்ந்து சிதறி உருண்டு விலகி ஓடும் என்பதை உண்ணி கேள்விப்பட்டிருக்கிறான். எந்த வெடி வெடிக்கும்போது பெரிய மாமா அசைவார் என்று உண்ணி ஆச்சரியப்பட்டான்.

பெரிய மாமா சிரிப்பதை உண்ணி பார்த்ததில்லை. அழுவதையும் பார்த்ததில்லை.

அதை நினைத்ததும் உண்ணி திடீரென்று எழுந்தான். கால்களில் இருந்த சோர்வு திடீரென்று இல்லாமற்போனது. தெற்கு திசை வானத்தின் அழகு முழுமையாக இல்லாமற் போய் விட்டதைப் போல அவன் உணர்ந்தான். மிகவும் சீக்கிரம் வீட்டை அடைய வேண்டும் என்பதைப் பற்றி மட்டுமே அப்போது நினைக்க முடிந்தது. தோளில் இருந்து எடுத்துப் பாறைமீது வைத்திருந்த பையை எடுத்து மீண்டும் தோளில் தொங்கவிட்டவாறு உண்ணி மீண்டும் மலையில் ஏறத் தொடங்கினான்.

2

ண்ணியின் இருப்பிடத்தை ஒரு வீடு என்று அழைக்க முடியாது. ஆசிரமம் என்றுதான் மாமா குறிப்பிடுவார். மகரிஷி இல்லாத ஆசிரமம். பெரிய மாமாதான் மகரிஷி என்று அய்யப்பன் கூறுவதற்கு முயலும்போதெல்லாம் பெரிய மாமா அதைத் தடுப்பார்.

“அதற்கான தகுதி எனக்கு இல்லை அய்யப்பா!  நான் பாவத்தில் வளர்ந்தவன். இப்போதும் என்னிடம் பாவம் எஞ்சி நிற்கிறது'' -மாமா சொன்னார்: “இங்கு இருக்க வேண்டிய மகரிஷி இனிமேல்தான் வர வேண்டும்!''

திடீரென்று மாமாவின் பெரிய தலை மேல் நோக்கித் திரும்பியது. மிகப் பெரிய கண்கள் பாதி அளவில் மூடின. உதடுகள் துடித்தன.

“மகாதேவி!''

மாமா அழைத்தபோது, மாமா நாவால் அல்ல- முழு உடலையும் கொண்டு அழைக்கிறார் என்று அதைக் கேட்பவர்களுக்குத் தோன்றியது.

ஆசிரமம் இருந்த நிலத்திற்கு எல்லைகள் வகுத்தார். அது யாருக்கும் சொந்தமானது அல்ல. ஆனால், அங்கு ஒரு கூரையைக் கட்டி உருவாக்கியது மாமாதான். மாமா பணத்தை முதலீடு செய்து மேற்பார்வை பார்த்தார். அய்யப்பனும் வேறு சில பணியாட்களும் சேர்ந்து அதை உண்டாக்கினார்கள். கருங்கல்லால் ஆன அடித்தளம். அதன்மீது சிமெண்டால் போடப்பட்ட தரை. கருங்கல்லால் ஆன அரைச் சுவர்கள். அரைச் சுவர்களின்மீது மூங்கிலால் ஆன சுவர்கள்... மூங்கில் சுவர்கள் அறைகளைப் பிரித்தன. பனையோலைகளாலான மேற்கூரை...

வீட்டிற்குத் தேவையான அளவு அழகு இருந்தது. மாமாவின் வாசிக்கும் அறை, மாமாவின் படுக்கையறை, பூஜையறை... உண்ணிக்கு படிப்பதற்கும் தூங்குவதற்கும் சேர்த்து ஒரு அறை... சமையலறை, சாப்பிடும் அறை, ஸ்டோர் அறை, வெளி வாசல்...

அய்யப்பன் வாசலில் படுத்தான்.

சமையலறையில் அய்யப்பன் உணவு சமைத்தான். சாப்பிடும் அறையில் இடப்பட்டிருந்த காட்டு மரத்தின் தடியால் செய்யப்பட்ட மேஜைமீது பரிமாறினான். மாமாவும் உண்ணியும் ஒன்றாக உட்கார்ந்து காலை உணவு சாப்பிட்டார்கள். மதியத்திற்கு உண்ணி உணவைக் கொண்டு போய் பள்ளிக் கூடத்தில் வைத்துச் சாப்பிட்டான். ஞாயிற்றுக் கிழமைகளிலும் சனிக்கிழமைகளிலும் மற்ற விடுமுறை நாட்களிலும் மாமாவும் உண்ணியும் ஒன்றாக உட்கார்ந்து மதிய உணவைச் சாப்பிட்டார்கள். இரவு வேளைகளில் அவர்கள் எந்தச் சமயத்திலும் ஒன்றாக உட்கார்ந்து சாப்பிட்டதில்லை. உண்ணி சீக்கிரமே இரவு உணவைச் சாப்பிட்டான். படித்தான். தூங்கினான். அதற்குப் பிறகுதான் மாமாவும் அய்யப்பனும் உணவைச் சாப்பிடுவார்கள்.

படிக்கும் அறையில் இரண்டு மூன்று அலமாரிகள் நிறைய புத்தகங்கள் இருந்தன. பழையனவாக இருந்த பெரிய புத்தகங்கள். அவற்றில் பெரும்பாலான புத்தகங்கள் சமஸ்கிருதத்தில் இருந்தன. மலையாளத்திலும் ஆங்கிலத்திலும் மற்ற மொழிகளிலும் உள்ள புத்தகங்கள் இல்லாமல் இல்லை. புத்தகங்களில் ஒன்றுகூட கதைப் புத்தகமாக இல்லாமல் இருந்ததைப் பற்றித்தான் உண்ணி கவலைப்பட்டான்.

பெரும்பாலும் வேதாந்தம், தத்துவ ஞானம், மதம் ஆகியவை பற்றிய நூல்களே இருந்தன. ஒருநாள் ஒரு கவிதை நூலைப் பார்த்து உண்ணி மிகவும் மகிழ்ச்சியடைந்தான். ஆனால், திறந்து பார்த்த போதுதான் தெரிய வந்தது- அதுவும் மதம் சம்பந்தப் பட்டதுதான் என்பதே. பெரிய மாமா படிக்கும் அறையில் உட்கார்ந்து கொண்டு வாசித்துக் கொண்டிருப்பதை உண்ணி அப்போதும் பார்த்தான்.

சில நேரங்களில் வாசலில் சாய்வு நாற்காலியில் சிந்தனையில் மூழ்கிப் படுத்திருக்கும் மாமா, திடீரென்று எழுந்து படிக்கும் அறைக் குள் செல்வதைப் பார்க்கலாம். அவர் ஓடிச் சென்று ஒரு அலமாரியில் இருந்து ஒரு புத்தகத்தைத் தேடி எடுப்பதை உண்ணி பார்த்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

மலை

மலை

September 24, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel