Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 2

abimanyu

காளிகாவை அடைந்தவுடன், கோமன் அவனுடைய வீட்டிற்குத் திரும்பினான். உண்ணி தனிமையில் விடப் பட்டான்.

பள்ளிக்கூடப் பையைத் தோளில் தொங்க விட்டுக் கொண்டு, நிர்வாண மான கால்கள் சரளைக் கற்களில் மிதித்து, கால் பாதங்களிலிருந்து கிளம்பி உள்ளேயே மேல் நோக்கிப் பரவி ஏறிய வேதனையைக் கடித்து அழுத்தியவாறு, அஸ்தமனத்தை நெருங்கிக் கொண்டிருந்த பகலுக்கு முதுகைக் காட்டிக் கொண்டு, மலை மேலே செல்லும் ஒற்றையடிப் பாதையில் நடந்து ஏறிய உண்ணிக்கு முன்னால் அவனுடைய நிழல் சாய்ந்து கிடந்து ஊர்ந்து ஏறிக் கொண்டிருந்தது. சரளைக் கற்களின் மேல் ஒரு அட்டையைப் போல ஒட்டிக் கொண்டு கிடந்த நிழல் அவனை இழுத்துக் கொண்டு போவதைப் போல தோன்றியது.

சிவப்பு நிறத்தில் இருந்த சரளைக் கற்கள் நிறைந்த ஒற்றையடிப் பாதையின் இரண்டு பக்கங்களிலும் அடர்ந்த புதர்கள் இருந்தன. புதர்களில் இருந்த முட்செடிகள் உண்ணியின் ஆடையைக் கடித்து இழுத்தன. ஆடை கிழிந்து போகாமல் இருப்பதற்காக அவன் நின்று, மெதுவாக முட்களின் பிடியில் இருந்து சட்டையை விடுதலை செய்தான்.

சிறிது தூரம் ஏறியவுடன் உண்ணியின் கால்கள் எப்போதும் போல தளர்ந்து போயின. அவன் ஒரு பாறையின்மீது உட்கார்ந்து மேற்கு திசையில் பார்த்தான். அஸ்தமனம் மேற்கு திசையில் இருந்த மேகங்களின் கழுத்துக்களில் வானவில்களாக நிறைந்து இருந்தது. சாயங்கால வானத்தின் விளிம்பிற்குப் பறந்து போய்ச் சேர வேண்டும் என்ற ஒரு ஆசை அந்த நிமிடத்தில் அவனுக்குள் தோன்றியது. முளையிலேயே அவன் அதைக் கிள்ளி எறியவும் செய்தான்.

கூடுகளில் அடைவதற்காக வரும் பறவைகளின் ஆரவாரம் அவனுக்குள் ஆர்வத்தை உண்டாக்கியது.

பறவைகளின் ஆரவார சத்தங்கள் நிறைந்த வானத்திற்குக் கீழே அடிவாரத்தில் கிராமம் விரிந்து கிடந்தது. அஸ்தமனத்தின் சிவந்த பின்புலத்திற்கு எதிராக கிராமத்தின் அழகான தோற்றத்தைப் படைத்த அறிமுகமில்லாதவர்களும், யாரென்று தெரியாதவர் களுமான கலைஞர்கள்மீது அவனுக்கு மிகப் பெரிய மதிப்பு உண்டானது.

ஆனால், தூரத்தில்- கீழே தெரிந்த கிராமம், உண்ணிக்கு தெரியாத ஒன்றல்ல. அங்குதான் அவனுடைய பள்ளிக்கூடம் இருக்கிறது. பள்ளிக்கூடம் தவிர, கிராமத்தில் தேவாலயங்கள், சந்தை இடங்கள், மருத்துவமனை, தபால் அலுவலகம் ஆகியவையும் இருந்தன. கிராமத்தின் வீடுகளில் உண்ணியின் நண்பர்கள், அவர்களுடைய தாய் தந்தையருடன் வாழ்ந்தார்கள்.

அதிர்ஷ்டசாலிகளான அந்த நண்பர்களைப் பற்றி உண்ணி நினைத்தான்.

கிராமத்திற்கும் மலைக்கும் இடையில் இருக்கும் எல்லையாக காளி காவு இருந்தது.

காளி காவில் தாழ்ந்த ஜாதியைச் சேர்ந்தவர்கள் வசித்தார்கள். அவர்களில் சிலர் கல்வி கற்கத் தொடங்கியிருந்ததால், காளி காவு வரை உண்ணிக்கு துணைக்கு ஆள் இருந்தார்கள். காளி காவில் இறுதியாக இருந்த வீட்டில் கோமன் தன்னுடைய தந்தை தேவனுடனும் தாய், அக்கா, தம்பி ஆகியோருடனும் வாழ்ந்தான்.

கோமனிடம் விடை பெற்றுவிட்டால், தினமும் உண்ணி தனிமையில் விடப்பட்டு விடுவான்.

"இல்லாவிட்டாலும் நீ தனிதான். தனியாகத்தான் இருக்க வேண்டும். " -பெரிய மாமாவின் வார்த்தைகள் உண்ணியின் மனதிற் குள் அலைகளைப் போல அசைந்து கொண்டிருந்தன. தனியாக இருப்பவனின் முரட்டுத்தனம் தெரியாதா?

ஆனால், உண்ணி நினைத்தான்- இந்த அளவிற்கு முரட்டுத்தனம் எதற்கு?

திடீரென்று அவன் கையைச் சுருட்டி பாறை மீது இடித்தான்.

தனியாக இருந்து பலத்தை வெளிப்படுத்துவதைவிட தேவைப் பட்டால், சற்று பலவீனமானவனாக இருந்தாலும், வாழ்வது எவ்வளவோ மேல் என்று அவனுக்குத் தோன்றியது.

மற்ற பையன்களுக்கும் முரட்டுத்தனத்திற்கு எந்தவிதக் குறைவும் இல்லை. பள்ளிக்கூடத்தில் கயிறு இழுக்கும் போட்டியில் உண்ணியும் நண்பர்களும் தோல்வியடைந்து விட்டார்கள். ஓட்டப் பந்தயத்திலும் தாண்டுவதிலும் உண்ணிக்கு இரண்டாவது இடம்தான் கிடைத்தது. முதல் இடத்தைப் பெற்ற ராகுலன் தனியாக இருப்பவன் அல்ல. அவன் தன்னுடைய தாய், தந்தையுடனும் உடன்பிறப்புக்களுடனும் கிராமத்தில் வசிக்கிறான்.

அப்போது உண்ணிக்கு ராகுலன் மீது பொறாமை தோன்றியது. கோமன் மீதும் அதே பொறாமை தோன்றியது. கோமனுடைய தந்தை மிகவும் ஏழை. தேவன் மற்றவர்களின் விவசாய நிலங்களில் வேலை செய்தான். மிகவும் சாதாரணமான கூலியைப் பெற்று, கூலியாகக் கிடைத்த பணத்திலிருந்து கள்ளு குடித்த தொகையைக் கழித்து, மீதியிருக்கும் பணத்தை மட்டுமே அவன் வீட்டிற்குக் கொண்டு வந்து தருவான். அந்தச் சிறிய தொகையை வைத்துதான் அந்த வீடு வாழ்ந்து கொண்டிருந்தது. கோமனின் தாயும் வெளியே சென்று பணிகள் செய்வாள். காட்டிற்குச் சென்று விறகு ஒடித்துக் கொண்டு வந்து, நெருப்பை எரிய வைத்து அவள் உணவைச் சமைத்தாள். இருக்கும் கஞ்சியை அவள் பிள்ளைகளுக்குப் பரிமாறி னாள். மீதியிருக்கும் கஞ்சியை வைத்துக்கொண்டு தேவனுக்காகக் காத்திருந்தாள். தேவன் புளித்த கள்ளு, கள்ளச் சாராயம் ஆகியவற்றின் வாசனையுடனும் ஓசையுடனும் அங்கு வந்தான். தாயையும் பிள்ளை களையும் வாய்க்கு வந்தபடி மோசமான வார்த்தைகளால் திட்டி னான். கஞ்சி இருந்த பானையை எறிந்து உடைத்தான். சாணம் மெழுகப்பட்ட முன் திண்ணையில் படுத்து குறட்டை விட்டுத் தூங்கி, பொழுது விடிவதற்கு முன்பே எழுந்தான். பிள்ளைகளை மிதித்து எழுப்பினான். அதிகாலைக் குளிரில், ஆற்றுக்குச் சென்று குளித்துவிட்டு வரும்படி சொன்னான். குளித்து முடித்து பால் இல்லாத காப்பியைப் பருகிவிட்டு வேலைக்குப் புறப்பட்டான்.

அதையெல்லாம் கேட்டபோது ஒரு கவலை நிறைந்த கனவைக் காண்பதைப் போல உண்ணி உணர்ந்தான்.

உண்ணியின் பெரிய மாமா வேலைக்குச் செல்வதில்லை. காலையில் குளியலும் பூஜையும் முடிந்துவிட்டால், புத்தகங்களைப் படிப்பதில் மூழ்கிவிடுவார். சில நேரங்களில் ஒரே இடத்தில் உட்கார்ந்து கொண்டு எதையோ எழுதிக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம். சாயங்கால வேளைகளில் மலையைச் சுற்றி நடப்பார். திரும்பி வந்த பிறகு மீண்டும் குளியலும் பிரார்த்தனையும். பிறகு உண்ணியை அழைத்து அறிவுரை கூறுவார். உண்ணி தூங்கும்போது, அவர் தூங்கியிருக்க மாட்டார். உண்ணி கண் விழிக்கும்போதும், பெரிய மாமா கண் விழித்துக் கொண்டிருப்பதைப் பார்க்கலாம்.

பெரிய மாமா வேலை எதுவும் செய்வதை உண்ணி பார்த்ததே இல்லை. வேலைக்கு அய்யப்பன் என்ற ஒரு பணியாள் இருக்கிறான். அய்யப்பன் உணவு சமைக்கிறான். ஆடைகளைச் சலவை செய்து சுத்தமாக்குகிறான். வீட்டைப் பெருக்குகிறான். பெரிய மாமாவின் கால்களை அமுக்கி விடுகிறான். பூஜைக்கு மாமாவிற்கு உதவியாக இருக்கிறான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel