Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 3

abimanyu

அய்யப்பனுக்கு கறுப்பு நிறத்தில் தோல் இருக்கும். அந்த அளவிற்குத் தலை முடியும் கறுப்பாக இருக்கும். முகத்தில் வயதை வெளிப்படுத்தும் கோடுகள் இருந்தாலும், தலைமுடியில் ஒன்றுகூட நரைக்கவில்லை. நல்ல சதைப்பிடிப்புடன் அய்யப்பன் இருப்பான். உடலில் முடி என்று எதுவும் இருக்காது. கொழுத்த, மென்மையான உடல் அய்யப்பனுக்கு. உடலிலேயே ஐந்தாறு செம்பு நிற உரோமங்கள் இருப்பது மூக்கிற்குக் கீழேயும் தாடையிலும்தான். ஒரு வாரம் ஆகிவிட்டால் செம்பு நிற உரோமங்களுக்கு கால் அங்குலம் நீளம் கூடும். உடைந்த ஒரு வட்டக் கண்ணாடியுடன் அய்யப்பன் வாசலுக்கு வந்து உட்கார்ந்திருப்பான். கண்ணாடியை ஒரு கல்லின்மீது சாய்த்து வைப்பான். எல்லா வாரமும் செய்யக்கூடிய வழக்கமான ஒரு செயல்தான் என்றாலும், ஒவ்வொரு முறையும் கண்ணாடியை ஒழுங்காக நிற்கச் செய்வதற்கு அய்யப்பன் சிறிது நேரம் படாத பாடு படுவான். இந்தச் சம்பவம் நடப்பது ஞாயிற்றுக் கிழமை என்பதால் உண்ணியால் அதைப் பார்க்க முடியும். கண்ணாடியை நிற்கச் செய்தவுடன், ஒரு மண் பாத்திரத்தில் இருக்கும் நீருடன் அய்யப்பன் கண்ணாடியைப் பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பான்.

எதையோ தேய்த்து சுத்தப்படுத்துவதைப் போல நீரைத் தொட்டு முகத்தில் தடவிக் கொண்டே இருப்பான். அது முடிந்தவுடன், கத்தியை எடுத்துத் தேய்ப்பான். பெரிய மாமாவின் தூக்கி எறியப்பட்ட பழைய இடுப்பு பெல்ட்டுகளில் ஒன்றின்மீது கத்தியை வைத்து அவன் கூர்மைப்படுத்துவான். பார்த்தால் பயத்தைத் தோற்றுவிக்கக்கூடிய நீண்டு வளைந்த பெரிய கத்தி ஒரு தனி சத்தத்துடன் பெல்ட்டின் மீது அங்குமிங்குமாக நகரும். அப்போது அய்யப்பனின் கண்களில் தெரியும் குரோதத்தைப் பார்த்தால், அவன் கத்தியைக் கூர்மைப்படுத்துவது யாருடைய கழுத்தையோ வெட்டுவதற்காக இருக்குமோ என்று தோன்றும். கத்தியைக் கூர்மை செய்யும் செயல் முடியும்போது, முகம் காய்ந்து வறண்டு போயிருக் கும். அதற்குப் பிறகும் நீரைத் தேய்த்து விடுவான். பிறகு கத்தியைப் பயன்படுத்துவது ஆரம்பமாகும். ஒரு உரோமத்தைக்கூட மீதம் வைக்காமல் மிகவும் கவனம் செலுத்தி பல முறை கத்தியைப் பயன் படுத்துவான். அதைப் பார்க்கும்போது தோலைக்கூட அய்யப்பன் உரித்து எடுத்து விடும் வெறியுடன் இருக்கிறானோ என்று தோன்றும். இறுதியில் கத்தியைப் பயன்படுத்துவது முடிந்தவுடன், மேலுதட்டின் மீதும் கீழ்த்தாடையிலும் இரத்தத்தை வெளிப்படுத்தியவாறு, ஏதோ கடுமையான வேலை முடிந்து விட்டதைப் போல தளர்ந்து போய், மேலும் கீழும் மூச்சு விட்டவாறு வியர்வை வழிய அய்யப்பன் எழுந்திருப்பான். மிகவும் உயரமான மரத்தின் அடியை நோக்கிப் பதைபதைப்புடன் ஓடுவான். ஏதோ ஒரு பச்சிலையைப் பறித்து நசுக்கி, அதை மேலுதட்டிலும் கீழ்த்தாடையிலும் நீண்ட நேரம் வைத்திருப்பான். திரும்பி வந்த பிறகு பற்களைக் கடிப்பான். கண்கள் சிறியனவாக ஆகிவிடும். நெற்றியைச் சுளிப்பான். சுருக்கமாகக் கூறுவதாக இருந்தால், மிகுந்த வேதனையை அவன் அனுபவிக்கி றான் என்பது தெளிவாகத் தெரியும். பிறகு கத்தியைக் கழுவி சுத்தம் செய்யும் செயல் நடக்கும். இவை அனைத்தும் மணிக்கணக்காக நடக்கும்.

“மிகுந்த வேதனை, சின்ன எஜமான்'' -அய்யப்பன் வலியைத் தாங்கிக் கொண்டே கூறியவாறு நடந்து செல்வான். “கடவுள் மனிதனுக்கு எதற்குத்தான் மீசையை வைத்தாரோ?''

“யாருக்குத் தெரியும்?'' -உண்ணி சாதாரணமாகக் கூறுவான்.

ஆனால், உடம்பெங்கும் உரோமங்களைக் கொண்ட, தினமும் முகத்தை சவரம் செய்யக் கூடிய மாமாவின் முகத்தில் ரத்தம் கசிவதை உண்ணி பார்த்ததேயில்லை.

“அது இங்கிலீஷ் கத்தி'' -அய்யப்பன் விளக்கிச் சொன்னான்: “பட்டு மாதிரி இருக்கும். காயமே உண்டாகாது.'' தமிழும் மலையாளமும் கலந்த ஒரு வெங்கல மொழியில் அய்யப்பன் பேசுவான். அந்த மொழியில் நீண்ட பெருமூச்சை விட்டவாறு அய்யப்பன் தொடர்ந்து சொன்னான்: “அதே மாதிரி நம்மால முடியுமா? முடியாது.''

தொடர்ந்து அய்யப்பன் எந்தவொரு காரணமும் இல்லாமல் பயங்கரமாகச் சிரித்தான்.

நினைவு தெரிந்த காலத்திலிருந்து உண்ணி அய்யப்பனைப் பார்த்து வருகிறான். அய்யப்பனிடம் எந்தவொரு மாறுதலும் உண்டாகவில்லை. உண்ணி வளர்ந்தான். மரங்கள் வளர்ந்தன. விளைச்சல்கள் மாறி மாறி வந்தன. கிராமத்தில் புதிய வீடுகளும் கடைகளும் உண்டாயின. மலையில் இருக்கும் பாறைகளுக்கும் பெரிய மாமாவிற்கும்கூட மாற்றங்கள் உண்டாயின. மாமா மேலும் சற்று தடிமனாக ஆனார். தலை முடிகள் இன்னும் கொஞ்சம் நரைத்தன. அய்யப்பன் அப்போதும் இப்போதும் ஒரே மாதிரி இருந்தான். அய்யப்பன் எப்போதும் அய்யப்பன்தான். வயது வேறுபாடுகூட இல்லை அய்யப்பனுக்கு. கண்களுக்குக் கீழேயும் கன்னத்திலும் இருக்கும் சுருக்கங்களுக்குக்கூட எந்தவொரு மாற்றமும் உண்டாகவில்லை.

“பெரிய எஜமான்கூட வர்றப்போவும் நான் இப்படித்தான். அதன் ரகசியம் தெரியுமா?'' -தொடர்ந்து குரலை அடக்கிக் கொண்டு, ரகசியத்தைக் கூறுவதைப் போல அய்யப்பன் சொன்னான்: “உடல் பயிற்சி.''

தினமும் நடக்கும் செயல்களில் உடல் பயிற்சி மிகவும் முக்கியமான ஒரு விஷயமாக இருந்தது. அதைச் செய்வதற்கு உண்ணியும் கட்டாயப்படுத்தப்பட்டான். அதிகாலைப் பொழுதில் ஒரு மணி நேரமோ அதைவிட அதிக நேரமோ அவர்கள் மூவரும் உடற்பயிற்சி செய்தார்கள். மிகவும் அதிகமான நேரம் செய்தது மாமாதான். அந்தச் சமயத்தில் உண்ணி அந்த விஷயத்தில் சோம்பேறித்தனத்தைக் காட்டினான். புலர்காலைப் பொழுதிற்கு முன்பிருக்கும் இரவின் சிறிய மணித்துளிகளில், சுருண்டு படுத்து, அணிந்திருக்கும் ஆடையை அவிழ்த்து மூடித் தூங்கிக் கொண்டிருப்பதற்கு இணையான ஒரு பெரிய சுகத்தைப் பற்றி உண்ணியால் நினைத்துப் பார்க்கக்கூட முடியவில்லை. அந்த சுகத்தை தியாகம் செய்துவிட்டுதான் அதிகாலை வேளையில் உடல் பயிற்சி செய்வதற்காக அவன் கண் விழிக்க வேண்டியதிருந்தது. உண்மையாகச் சொல்லப்போனால் மாமாவிற்கு பயந்துதான் உண்ணி சற்று முன் கூட்டியே கண் விழிக்கவும் உடல் பயிற்சியில் ஈடுபடவும் செய்தான்.

“உடல் பயிற்சி செய்தால் உடல் பலம் கொண்டதாக மாறும். மனிதன் எப்போதும் ஒரே மாதிரி இருப்பான்.'' -அய்யப்பன் சொன்னான்.

“எப்போதும் ஒரே மாதிரி இருந்தால் போதுமா?'' -உண்ணி கேட்டான்: “நான் வளர வேண்டாமா?''

ஏதோ தமாஷைக் கேட்டதைப் போல அய்யப்பன் சிரித்தான். உண்ணிக்கு இதுவரை பெயர் தெரியாத- அதே நேரத்தில், பல நேரங்களிலும் அவன் கேள்விப்பட்டிருக்கும் ஒரு காட்டுப் பறவையின் சத்தத்தை அய்யப்பன் அப்போது வெளிப்படுத்தினான். அவன் சிரித்தபோது, அந்தக் காட்டுப் பறவை கூட்டத்தைக் கூட்டிக் கொண்டு ஓசைகள் உண்டாக்குவதைப் போல உண்ணிக்குத் தோன்றியது. சிரிப்பு என்ற அந்த சகித்துக் கொள்ள முடியாத செயல் முடிந்தவுடன், அய்யப்பனின் குரல் உயர்ந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel