Lekha Books

A+ A A-

அபிமன்யு - Page 5

abimanyu

புத்தகத்தின் தாள்களைப் புரட்டி மாமா ஒரு குறிப்பிட்ட பகுதியில் கண்களைப் பதித்தார். அவருடைய உதடுகள் அசைந்தன. புத்தகத்தைத் திறந்து வைத்துப் பிடித்துக் கொண்டே அவர் கண்களை மூடிக் கொண்டு மேல் நோக்கித் தலையைத் திருப்பி நின்று கொண்டு, திரும்பத் திரும்ப வாசித்ததையே வாசித்துக் கொண்டிருந்தார். பிறகு புத்தகத்தை மடக்கித் திரும்பவும் அலமாரி யிலேயே வைத்தார். வாசித்த சமஸ்கிருத சுலோகத்தை முணுமுணுத்துக் கொண்டே வாசலுக்குச் சென்றார். அதையே திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டே ஒரு கனவில் நடப்பதைப் போல மலையின் உச்சியை நோக்கிச் சென்றார். மாமா எங்கு போகிறார் என்பது உண்ணிக்குத் தெரியும்.

மலை மேலே ஒரு பழைய காளி கோவில் இருக்கிறது. காளியின் பக்தனான பெரிய மாமா அந்த இடத்தில், ஒரு மலைச்சரிவில் வந்து தங்கியிருப்பதற்கு முக்கிய காரணமே அந்தக் கோவில்தான். மாநிலத்தில் வேறு எந்த இடத்திலும் அந்த அளவிற்குப் பழமை வாய்ந்த ஒரு காளி கோவில் இல்லவேயில்லை என்று பெரிய மாமா கூறுவார்.

மாமா நடந்து மறைந்தவுடன், அதே திசையை நோக்கி அய்யப்பனும் நடக்க ஆரம்பித்தான்.

படிக்கும் அறையில் இருந்த இன்னொரு அலமாரி முழுவதும் மருந்துகள் இருந்தன. கிடைப்பதற்கு மிகவும் அரிதான மருந்துகள்.

மாமாவின் படுக்கை அறை ஒரு சிறிய அறையாக இருந்தது. படுப்பதற்குத் தவிர வேறு எதற்கும் மாமா அந்த அறையைப் பயன் படுத்தியதில்லை. மாமாவின் படுக்கையறையைத் தவிர, அந்த அறையில் ஒரு பீடம் மட்டுமே இருந்தது. மரக்கட்டையை வைத்து உண்டாக்கப்பட்ட பீடத்தின்மீது ஒரு சாம்பல் தட்டும் ஒரு வெற்றிலை டப்பாவும் மட்டுமே இருந்தன. தூக்கத்திற்கு மத்தியில் இரவு நேரங்களில் நீர் குடிக்க வேண்டும் என்பதற்காக மாமா படுக்கையறையை விட்டு வெளியே வருவார். சாப்பாட்டு மேஜைமீது கூஜாவில் நீர் எப்போதும் இருக்கும்.

உண்ணியின் படுக்கையறை மாமாவின் படுக்கையறையைவிட பெரியதாக இருந்தது. ஒரு கட்டிலும் ஒரு மேஜையும் ஒரு நாற்காலியும் ஒரு பெரிய மரப்பெட்டியும் அந்த அறையில் இருந்தன. உண்ணி தன்னுடைய அறையின் மூலையில் எபோதும் கூஜாவில் நீர் இருக்கும்படி பார்த்துக் கொண்டான். மலை உச்சியில் இருந்த காளி கோவிலின் கிழக்குப் பக்கத்தில் இருக்கும் ஊற்றுப் பாறையில் இருந்து வரக்கூடிய நீர் அது. அந்த நீருக்கு மருத்துவ குணமும் ஏதோ அமானுஷ்ய சக்தியும் இருக்கின்றன என்று மாமா அவனிடம் கூறியிருந்தார். அந்த நீரைப் பருகினால் எப்படிப்பட்ட களைப்பும் இருந்த இடம் தெரியாமல் போய்விடும் என்று உண்ணி நம்பினான். உண்ணி பாட நூல்களை மேஜைமீது அடுக்கி வைத்தான். பள்ளிக்கூடப் பையை சுவரில் இருந்த ஆணியில் தொங்கவிட்டான். மரப் பெட்டியில் இருந்த சிறிய பிரிவில் மை புட்டி, பழைய பேனாக்கள், மலையில் இருந்து எடுத்த வினோதமான பொருட்கள் ஆகியவற்றைப் பத்திரப்படுத்தி வைத்திருந்தான். பெட்டியின் பிரதான பகுதியில் ஆடைகள் வைக்கப்பட்டிருந்தன. அணிந்த ஆடைகளைத் தொங்க விடுவதற்கு சிவப்பு நிறத்தில் காட்டு மரத்தின் கொம்பு இருந்தது.

அய்யப்பன் ஒருநாள் காட்டிற்குச் சென்று அந்த மரக் கொம்பை வெட்டிக் கொண்டு வந்தான். அதை வெட்டுவதற்காகச் சென்ற நாளன்று அய்யப்பன் ஒரு காட்டெருமையைப் பார்த்தான். காட்டெருமை அய்யப்பனை விரட்டியது. வெட்டப்பட்ட மரக் கொம்புடன் அய்யப்பன் ஓடினான். இறுதியில் மரக் கொம்பை எறிந்துவிட்டு, அய்யப்பன் ஒரு பெரிய மரத்தின்மீது ஏறினான். நீண்ட நேரம் மரத்திற்கு அடியிலேயே காத்து நின்றுவிட்டு காட்டெருமை பின்வாங்கிச் சென்றுவிட்டது. எருமை மிகவும் தூரத்தில் போய்க் கொண்டிருப்பதை மரத்தின்மீது அமர்ந்து பார்த்த பிறகுதான், அய்யப்பன் கீழேயே இறங்கினான். அந்தக் காட்டெருமையை சில நாட்களுக்குப் பிறகு பெரிய மாமா துப்பாக்கியால் சுட்டார். மாமிசத்தில் ஒரு பகுதியை ஆசிரமத்திற்குக் கொண்டு வந்தார். மீதியை காளிகோவில் இருக்கும் மலைவாழ் மக்களுக்குக் கொடுத்தார். அந்த காட்டெருமையின் தலையும் தோலும் இப்போதும் ஆசிரமத்தில் பாதுகாத்து வைக்கப் பட்டிருக்கின்றன.

ஸ்டோர் அறையில்தான் அப்படிப்பட்ட பொருட்கள் பாதுகாத்து வைக்கப்பட்டிருக்கின்றன. அன்றாடம் தேவைப்படும் வீட்டுப் பொருட்கள் சமையலறையில் இருக்கும்.

பூஜையறையில் ஒரு ஸ்ரீசக்கரம் வைக்கப்பட்டிருக்கிறது. ஒரு குரு வரைந்து மாமாவிற்குப் பரிசாகத் தந்தது அது என்று கேள்விப் பட்டிருக்கிறான்.

ஸ்ரீ சக்கரத்திற்கு முன்னால்தான் அவர் தினமும் பூஜையை நடத்துவார். ஸ்ரீ சக்கரத்தைப் பற்றி மாமா கூறியவை எதுவும் உண்ணிக்குப் புரியவில்லை. ஆழமான அர்த்தமும் அசாதாரணமான சக்தியும் கொண்ட ஒரு உக்கிரமூர்த்தி அது என்பதை உண்ணி புரிந்து கொண்டிருந்தான்.

ஸ்ரீசக்கரத்திற்குப் பின்னால் ஒரு ரகசிய அறை இருக்கிறது என்பதை உண்ணி கேள்விப்பட்டிருக்கிறான்.

ஒரு இரவு வேளையில் மாமாவிற்கும் அய்யப்பனுக்கும் இடையில் நடைபெற்ற உரையாடலில் இருந்து அவன் அதைத் தெரிந்து கொண்டிருந்தான். மாமாவிற்கும் அய்யப்பனுக்குமிடையில் இருக்கும் நெருக்கத்தையும் அன்றுதான் அவன் தெரிந்து கொண்டான். இரவு தூக்கத்திலிருந்து திடீரென்று கண் விழித்த உண்ணி சாப்பிடும் அறையில் ஏதோ பேச்சு வருவதைக் கேட்டான். சிறுநீர் கழிக்க வேண்டும் என்று தோன்றவே, வாசலை நோக்கி நடக்கும்போது அவன் சற்று சாப்பிடும் அறையை எட்டிப் பார்த்து நின்றான். அப்போதுதான் அய்யப்பனுக்கும் மாமாவிற்கும் இடையில் நடைபெற்ற உரையாடலை அவன் கேட்டான். ஸ்ரீ சக்கரத்திற்குப் பின்னால் இருக்கும் ரகசிய அறையைப் பற்றிய தகவலைத் தெரிந்து கொண்டதைவிட அவனை அந்த நேரத்தில் ஆச்சரியப்பட வைத்த விஷயம்- சாப்பிடும் அறையின் காட்சிதான். அய்யப்பனும் மாமாவும் சமமானவர்களைப் போல ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டி ருந்தார்கள். உண்ணி முழுமையாகத் திகைத்துப் போய்விட்டான். மாமாவைப் பற்றி பேசும்போதுகூட பக்தர்களுக்கே உரிய மரியாதையுடன் நடக்கும் அய்யப்பன், மாமாவிற்கு எதிரில் தான் அமரும் ஸ்டூலின்மீது உட்கார்ந்து பேசிக் கொண்டே சாப்பிடும் காட்சியை உண்ணியின் கண்களால் நம்பவே முடியவில்லை.

திடீரென்று அவர்களுடைய உரையாடல் நின்றது. மாமாவின் மிடுக்கு நிறைந்த குரல் கேட்டது.

“உண்ணி...''

உண்ணி நின்ற இடத்தில் சிறுநீர் கழிக்கவில்லை என்பதுதான் பாக்கி.

“என்ன?'' - அவன் அந்த கேள்வியைக் காதில் வாங்கினான்.

அதற்குள் அய்யப்பன் பணியாளனாக மாறிவிட்டிருந்தான். அவன் மேஜைக்கு அருகில் உணவு பரிமாறுவதைப் போல நடித்துக் கொண்டு நின்றிருந்தான்.

“என்ன?''- மாமாவின் குரல்: “தூக்கம் வரலையா?''

“சிறுநீர் கழிக்க...'' - உண்ணி திக்கித் திக்கி அந்த சொற்களைக் கூறி முடித்தான்.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

கடல்

கடல்

September 24, 2012

மரணம்

மரணம்

May 23, 2012

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel