Lekha Books

A+ A A-

உலக்கை

ulakkai

ன்றரைக் கட்டு ஓலைகளையும் கொஞ்சம் மூங்கில் துண்டுகளையும் வைத்து கொச்சய்யப்பன் அந்த நிலத்தில் ஒரு குடிசையைக் கட்டினான். குனிந்து உள்ளே போனால், கொச்சய்யப்பன் சிரமப்பட்டு கால்களை நீட்டிக் கொண்டு படுக்கலாம். அந்தக் குடிசை அந்த அளவிற்குத்தான் இருந்தது.

ஏரிக்கரையில் குண்டும் குழியுமாக இருக்கும் நிலப்பகுதி அது. ஏரியில் தண்ணீர் புரண்டு வந்தால், நிலம் முழுவதும் அதில் மூழ்கிவிடும். இங்குமங்குமாகப் புற்களும் முட்செடிகளும் வளர்ந்து காணப்பட்டன. ஒரு ஏக்கருக்கும் அதிகமான பரப்பளவு அதற்கு இருந்தது.

அதன் சொந்தக்காரரான மாடம்பி அந்த நிலத்தைப் பற்றி நினைப்பதே இல்லை. எப்போதாவது யாராவது அதைப்பற்றி ஞாபகப்படுத்தினால், அதைக் காதிலேயே அவர் போட்டுக் கொள்ள மாட்டார். அவருடைய முழுகவனத்தையும் பிடித்து வைத்திருக்கக்கூடிய அளவிற்கு பெரிய அளவில் தென்னந்தோப்புகளும் நெல் வயல்களும் இருந்தன.

ஏதோ ஒரு குடும்பத்தகராறு காரணமாகத் தன்னுடைய சகோதரர்களுடன் சண்டை போட்டுக்கொண்டு, கொச்சய்யப்பன் தனியாக வசிக்க முடிவெடுத்தான். மாடம்பியின் வீட்டிற்கு வெளியே ஒரு ஓரத்தில் பணிவாக நின்று கொண்டு அவன் வீடு கட்டுவதற்கு அனுமதி கேட்டான். மாடம்பி அலட்சியமாக முனக மட்டுமே செய்தார்.

நீர் கரையேறி வந்தால் மூழ்காமல் இருக்க வேண்டும் என்பதற்காக சுற்றிலும் இருந்த மண்ணை வெட்டி உயர்த்திய பிறகுதான் அவன் வீட்டையே உண்டாக்கினான். ஏரியின் கரையில் புற்கள், முட்செடிகள் ஆகியவற்றுக்கு மத்தியில் ஒரு பாறையைக் கொண்டு வந்து வைத்திருப்பதைப்போல கொச்சயப்பனின் வீடு இருந்தது.

கொச்சய்யப்பன் எப்போதும் வேலை செய்யக்கூடிய ஒருவனாக இருந்தான். நிலத்தைக் கொத்துவது, சுமைகள் தூக்குவது, படகு ஓட்டுவது என்று எந்த வேலையாக இருந்தாலும அவன் செய்வான்.

அப்போது கொச்சய்யப்பனுக்கு இருபத்து இரண்டு வயதுக்குமேல் இருக்காது. நல்ல பலமும் துடிப்பும் கொண்ட உடலை அவன் கொண்டிருந்தான். எவ்வளவு வேலைகள் செய்தாலும் அவனுக்கு சிறிதுகூட களைப்பு உண்டாகாது.

மாலை நேரத்தில் வேலை முடிந்து வந்தவுடன் கொச்சய்யப்பன் சமையல் செய்து சாப்பிடுவான். அதற்குப் பிறகு மண்வெட்டியையும் கூடையையும் எடுத்துக்கொண்டு ஏரியை நோக்கிச் செல்வான். நீருக்கடியில் இருந்து மண்ணை வெட்டிக் கூடையில் போட்டு நிலத்தில் கொண்டு வந்து போடுவான். அப்படி நள்ளிரவுவரை அவன் மண் சுமப்பான். மீதமிருக்கும உணவைச் சாப்பிட்டு விட்டு தூங்கச் செல்வான்.

ஒரே வருடத்தில் நிலத்தில் இருந்த குழிகள் அனைத்தையும் அவன் மண்ணைக் கொண்டு மூடினான். புற்களையும் முட்செடிகளையும் வெட்டி, இல்லாமல் செய்தான். அதற்குப் பிறகும் அந்த நிலம் சுற்றிலும் இருந்த நிலங்களைவிட உயர்ந்ததாகத் தெரியவில்லை. ஏரியில் இருந்து மண்ணை எடுக்க வேண்டிய சிரமம் மேலும் அதிகமானது.

நிலத்திற்கு மத்தியில் வாய்க்கால் வழியாக உள்ளே படகைச் செலுத்திச் சென்றால் வேண்டுமளவிற்கு மண்ணைக் கொண்டு வரலாம். கொச்சய்யப்பன் குறைவான கூலிக்குப் படகை எடுத்து, நள்ளிரவு நேரம் வரை மண்ணைக் கொண்டு வருவான். நிலவு இருக்கும் இரவு நேரமாக இருந்தால் வடக்குப் பக்க வீட்டில் இருக்கும் அந்தோணியும் உடன் வருவான். கொச்சய்யப்பன் படகில் கொண்டு வரும் மண்ணை நிலத்தில் சுமந்து கொண்டு போய் போடுவதை வெறுமனே அவன் பார்த்துக்கொண்டு நின்றிருப்பான். இடையில் ஏதாவது அவன் கூறுவான். அவர்கள் இருவரும் ஒரே வயதைக் கொண்டவர்கள். அந்தோணிக்குத் திருமணமாகிவிட்டது - கொச்சய்யப்பனுக்குத் திருமணம் ஆகவில்லை என்ற ஒன்று மட்டும்தான் அவர்களுக்கிடையே இருந்த வித்தியாசம்.

சில நேரங்களில் அந்தோணி கேட்பான் : “கொச்சய்யப்பா, நீ எதற்கடா கண்டவனின் நிலத்திலும் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கே?”

அதற்கு கொச்சய்யப்பன் அலட்சியமாக பதில் கூறுவான்: “ கண்டவனின் நிலமாக இருந்தாலும், நமக்குச் சொந்தமானதாக இருந்தாலும் நாம் வசிக்கும் இடம் நன்றாக இருக்க வேண்டாமா அந்தோணி மாப்பிள்ளை?”

“நன்றாக வசித்துக் கொண்டிருக்கும்போது, வசிப்பதற்கு வேறு ஆட்கள் வருவார்கள்.”

கொச்சய்யப்பன் உறுதியான குரலில் கூறுவான்: “அந்த முதலாளி நெறிகளும் அறிவும் உள்ளவர்.”

அந்தோணி அதை எதிர்த்து எந்த வாதமும் செய்ய மாட்டான். அர்த்தம் நிறைந்த ஒரு முனகலுடன் அவன் அதை அத்துடன் முடித்துக் கொள்வான்.

மேலும் ஒரு வருடம் கடந்த பிறகு, அந்த நிலத்தைச் சுற்றிலும் நிறைய வீடுகள் இருந்தன.

ஒருநாள் எதிர்பாராத சூழ்நிலையில் ஆட்களுடன் அந்த வழியாகக் கடந்து சென்ற மாடம்பி, நிலத்தைப் பார்த்தார். அவர் கொச்சய்யப்பனை அழைத்துச் சொன்னார்: “பத்து தென்னங்கன்றுகளை நட்டு வைத்தால், நீ எப்போதாவது ஒரு இளநீரைக் குடிக்கலாமே கொச்சய்யப்பா?”

கொச்சய்யப்பன் தீர்மானித்திருந்த ஒரு விஷயம்தான் அது. அவன் பன்னிரண்டு தென்னங்கன்றுகளை விலைக்கு வாங்கி வீட்டைச் சுற்றி நட்டு வைத்தான். மூன்று வருடங்களில் அந்த நிலம் முழுக்க அவன் தென்னங்கன்றுகளை நட்டான். ஒவ்வொரு கன்றுக்கும் தனித்தனியாக வேலி அமைத்தான். அதற்கும் மேலாக, நிலத்தைச் சுற்றி பலமான வேலியையும் கட்டினான்.

அவன் தினமும் அதிகாலையில் எழுந்திருப்பான்.

ஒவ்வொரு தென்னங்கன்றையும் தனி கவனம் செலுத்திப் பார்ப்பான். அதற்கு செய்ய வேண்டியவற்றைச் செய்வான். வேலை முடிந்து வந்த பிறகும் அவன் தூக்கம் வரும் வரையில் தென்னங்கன்றுகளை விட்டு சிறிதும் நகர மாட்டான்.

தென்னங்கன்றுகள் அனைத்தும் நன்கு வளர ஆரம்பித்தன. வரிசையாக செழிப்பாக வளர்ந்து நின்றிருக்கும் கன்றுகளைப் பார்க்கும்போதெல்லாம் அவனுடைய கண்கள் ஈரமாகிவிடும். அந்தத் தென்னங்கன்றுகளைப் பார்த்து, அந்த ஓலைகளைத் தடவிக் கொண்டிருக்கும் காற்றை அனுபவித்துக் கொண்டே அவன் அப்படியே நின்றிருப்பான். அதைத் தாண்டிய ஒரு சந்தோஷத்தை அவன் உணர்ந்ததேயில்லை.

மாடம்பியும் அவருடைய ஆட்களும் அதற்குப் பிறகும் அந்த வழியாகக் கடந்து சென்றார்கள். அவர் நிலத்திற்குள் கால் வைத்து தென்னங்கன்றுகளைப் பார்த்தார். தன்னுடன் இருந்த கணக்குப் பிள்ளைக்கு சில கட்டளைகளைப் பிறப்பித்தார். கொச்சய்யப்பனை அழைத்து தென்னை பயிர் செய்வதைப் பற்றி சில ஆலோசனைகளைச் சொன்னார்.

அதற்குப் பிறகு மாடம்பியின் கணக்குப் பிள்ளை மாதத்தில் ஒன்றோ இரண்டோ தடவை அங்கு வருவது என்பது வழக்கமான ஒரு செயலாகிவிட்டது. கொச்சய்யப்பன் வேலைக்குப் போயிருக்கும் நேரத்தில் அந்த மனிதன் வருவதாக இருந்தால், தான் வந்த விஷயத்தை அறிந்துகொள்ள வேண்டும் என்பதற்காகவே ஏதாவதொன்றை மாற்றி விட்டோ, கீழே விழ வைத்துவிட்டோ அவன் செல்வான். கொச்சய்யப்பன் இருக்கும் நேரத்தில் வந்துவிட்டால் சற்று அதிகாரத்தொனியில் அவன் ஒன்றிரண்டு கட்டளைகளைப் பிறப்பித்து விட்டுச் செல்வான்.

ஒருநாள் அந்தோணி கேட்டான்: “என்ன கொச்சய்யப்பா, முதலாளி வீட்டுல இருந்து அடிக்கடி வர்றாங்களே?”

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel