
வாசலில் நின்றவாறு க்ளாராவும் ஏங்கி ஏங்கி அழுது கொண்டிருந்தாள். அவள் தலையைக் குனிந்தவாறு கண்ணீர் சிந்திக் கொண்டிருந்தாள். எனக்கு என்ன செய்ய வேண்டும் என்றே தெரியவில்லை. சில நிமடங்கள் சென்றதும், சாக்கோ அண்ணன் சொன்னார்:
"நீ வேலை செஞ்சு கிடைக்கிற காசையெல்லாம் இங்கே கொண்டு வந்து செலவழிச்சிக்கிட்டு இருக்கியே!"
"அதுனால என்ன சாக்கோ அண்ணே? உங்களை விட்டா உலகத்துல எனக்கு யார் இருக்காங்க?"
சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருந்துவிட்டு சாக்கோ அண்ணன் சொன்னார்:
"எல்லாம் கடவுள் தீர்மானிச்ச விஷயங்கள். க்ளாரா, தெரியுதா? எல்லாம் கடவுள் தீர்மானிச்சது..."
சிறிது நேரம் கழித்து சாக்கோ அண்ணன் தொடர்ந்தார்.
"நாய்க்குட்டி... க்ளாரா பாவம். த்ரேஸ்யாக்குட்டி ஒரு பச்சைப்புள்ளை. அவங்களை உன்கிட்ட நான் ஒப்படைக்கிறேன். உன்னை விட்டா எனக்கு வேற யாருமில்ல."
தொடர்ந்து க்ளாராவிடம் சாக்கோ அண்ணன் சொன்னார்:
"க்ளாரா, இவனை நீ நல்லா பார்த்துக்கணும். அவனுக்குன்னு இந்த உலகத்துல யாருமில்ல..."
நானும் க்ளாராவும் 'சரி' என்று தலையை ஆட்டினோம். இப்படியெல்லாம் அவர் சொல்ல வேண்டும் என்ற அவசியமே இல்லை. இப்படியொரு சூழ்நிலை ஏன் வந்தது? இப்படியொரு காட்சியை க்ளாரா ஏன் உருவாக்கினாள் என்பதைத்தான் என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. சாக்கோ அண்ணன் சொல்லவில்லையென்றாலும் நான் அவர்களை என்னுடைய சொந்தமென நினைத்துப் பார்க்கத்தான் செய்வேன். அதே மாதிரி அவளும் என்னைக் கவனமாக பார்த்துக் கொள்வாள்.
மறுநாள் நான் வேலைக்குச் செல்லவில்லை. சாக்கோ அண்ணனின் நிலைமை படுமோசமாக இருந்தது. அன்று அவர் இந்த உலகத்தை விட்டு நிரந்தரமாக நீங்கி விட்டார்.
அவரின் பிணத்தைப் பெட்டிக்குள் வைத்து தேவாலயத்திற்குக் கொண்டு செல்லும்போது, த்ரேயாக்குட்டி க்ளாராவிடம் கேட்டாள்:
"அம்மா, அப்பாவை எங்கே கொண்டு போறாங்க?"
க்ளாரா பதில் எதுவும் சொல்லாததால், அதே கேள்வியை அவள் என்னைப் பார்த்துக் கேட்டாள்.
சவ அடக்கம் முடிந்தது. நானும் ஒரு கை மண்ணை எடுத்து அந்தக் குழிக்குள் போட்டேன். என்னுடைய வாழ்க்கையில் ஒரே ஒருவரின் இறுதிச் சடங்கை மட்டுமே நான் செய்திருக்கிறேன். அது-சாக்கோ அண்ணனின் இறுதிச் சடங்குதான். அதற்கு முன்பு வேறு யாருடைய இறுதிச் சடங்கையும் செய்வதற்கான வாய்ப்பு எனக்குக் கிடைக்கவில்லை என்பதே உண்மை.
நாங்கள் சவ அடக்கம் முடிவடைந்து திரும்பி வந்தோம். த்ரேஸ்யாக்குட்டி என்னை இறுகக் கட்டிப் பிடித்துக் கொண்டு சொன்னாள்:
"மாமா, நீங்க எங்களை விட்டுப் போயிட மாட்டீங்களே?"
மறுநாள் காலையில் நான் வேலைக்குப் புறப்பட்டேன். தாயும் மகளும் என்னையே பார்த்தவாறு நின்றிருந்தார்கள். நான் மீண்டும் திரும்பி வருவேனா என்ற பயம் அவர்களுக்கு இருக்கலாம். நான் சொன்னேன்:
"த்ரேஸ்யாக்குட்டி சாயங்காலம் சீக்கிரம் வந்திடுறேன், என்ன?"
நாட்கள் பல கடந்தன. சாக்கோ அண்ணன் படுத்திருந்த அறையில்தான் நான் படுக்கிறேன். அதற்கடுத்த அறையில் அவள் இந்த இரண்டு அறைகளுக்குமிடையில் கதவு இருக்கிறது. எப்போதும் இரவில் படுப்பதற்கு முன்பு, அந்தக் கதவைத் தாழ் போட்டுப் பூட்ட நான் மறந்ததே இல்லை.
இருந்தாலும் அது என்னுடைய வீடுதான். அவர்கள் என்னுடையவர்கள்தான்.
கையில் என்ன கிடைத்தாலும், அதைக் கொண்டு வந்து க்ளாராவிடம் கொடுத்து விடுவேன். அவள் என்னுடைய வீட்டு சொந்தக்காரியாக இருந்தாள்.
இரவு நேரத்தில் அந்தக் கதவைத் திறக்கலாமா என்று நினைத்து அவள் அதை மெதுவாகத் தள்ளி பார்ப்பாளோ?
சாக்கோ அண்ணன் மரணத்தைத் தழுவி அதிக நாட்கள் ஆகவில்லை. அப்போது முதல் என்னுடைய மனதில் ஒரு எண்ணம் இருந்தது. எப்படியும் ஐந்நூறு ரூபாய் சம்பாதிக்க வேண்டும் என்பதே அது. ஒருநாள் நான் பஸ் ஸ்டாண்டில் நின்று கொண்டிருந்த போது, ரஹ்மான் முதலாளி காரில் வந்து கொண்டிருந்தார். என்னைப் பார்த்ததும் அருகில் வரும்படி அழைத்தார். பின்னாலேயே தன்னுடைய கடைக்கு வரும்படி என்னிடம் அவர் சொன்னார். மிகவும் முக்கியமான ஏதோ ஒரு விஷயம் என்பதை மட்டும் என்னால் புரிந்து கொள்ள முடிந்தது. நான் அவரைத் தொடர்ந்து கடைக்குப் போனேன். ஏதோ பெரிய அளவில் நமக்குக் கிடைக்கப் போகிறது என்று மனதிற்குள் நினைத்துக் கொண்டேன்.
ரஹ்மான் முதலாளி மலைகளில் விளையும் பொருட்களை விற்பனை செய்யும் ஒரு பெரிய வியாபாரி. அவரிடம் ஏராளமான சொத்துக்கள் இருக்கின்றன. குடிசைகளில் குடியிருக்கும் சில பெண்களை அவர் நேரடியாக போய்ப் பார்ப்பார். இங்குமங்குமாய் அவருக்குக் குழந்தைகள் இருக்கின்றன என்று பொதுவாகவே எல்லோரும் சொல்வார்கள். சில நேரங்களில் அவரே பயங்கர தர்மசங்கடமான சூழ்நிலைகளில் மாட்டிக் கொள்வதும் உண்டு. எந்த விஷயத்தையும் அவர் ரகசியமாக வைப்பதில்லை. அவரின் நிலங்களில் வேலை செய்யும் பெண்களில் யாராவது பிரசவமாகி விட்டால், அந்த விஷயம் மிகப்பெரிய பூகம்பமாக வெடிக்க ஆரம்பித்துவிடும். ஏதாவதொரு பெரிய வக்கீலோ அல்லது அவரின் குமாஸ்தாவோ அவளைக் கைகளில் எடுத்துக் கொள்வார்கள். ஒரு நோட்டீஸ் விடுவார்கள். தொடர்ந்து வழக்கு நடக்கும். அவ்வளவுதான்- முதலாளி பயந்து போய் ஓட ஆரம்பித்துவிடுவார். முதலாளி இந்த மாதிரி சமயங்களில் பயந்து ஓடக்கூடிய மனிதர் என்பது உலகமே அறிந்த ஒரு செய்தி. பெரிய அளவில் பணம் செலவாகும். ஆனால், பொதுவாக பெண்ணுக்கு பெரிதாக எதுவும் இந்த விஷயத்தில் கிடைத்துவிடாது. வக்கீலோ அல்லது அவரின் குமாஸ்தாவோதான் நிறைய இதில் சம்பாதிப்பார்கள். ஒரு தடவையோ, இரண்டு தடவையோ, மூன்று தடவையோ, பத்து தடவையோ கூட தவறு நடக்கலாம். அதற்குப் பிறகாவது கூட அவர் சரியான ஒரு மனிதராக இருக்க வேண்டாமா? அதுதான் கிடையாது. அதற்குப் பிறகும் தவறுகளைத் தொடர்வார். பணம் பறிப்பதற்காக சதா நேரமும் முதலாளியைக் கண்காணித்துக் கொண்டிருப்பவர்களும் இருக்கவே செய்கிறார்கள். அதுவே அவர்களின் பிழைப்பாக இருக்கும்.
ஆனால் எவ்வளவு செலவுகள் வந்தால் என்ன? அவவரப் போல லாபம் சம்பாதிக்கக்கூடிய ஒரு வியாபாரியைப் பார்க்கவே முடியாது. பணம் அவரிடம் வந்து சேர்ந்த வண்ணம் இருக்கிறது.
முதலாளியிடம் ஒரு நடுக்கம் தெரிந்தது. அதை நான் எப்படியோ கண்டுபிடித்து விட்டேன். அவரைப் பார்ப்பதில் பெரிய அளவில் நமக்க வரவு இருக்கிறது என்பதையும் என்னால் உணர முடிந்தது.
மற்றொரு மிளகு வியாபாரியான கோபாலன் முதலாளியும் அதே பகுதியில் இருக்கிறார். அவரை நான் அவமானப்படுத்த வேண்டும் இதுதான் விஷயமே. நான் 'சரி'யென்று சம்மதித்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook