
காக்கஸஸ் பகுதியிலிருந்த ராணுவத்தில் ஜிலின் என்ற பெயரைக் கொண்ட ஒரு அதிகாரி பணியாற்றிக் கொண்டிருந்தான். ஒருநாள் அவனுக்கு அவனுடைய வீட்டிலிருந்து ஒரு கடிதம் வந்தது. எழுதியிருந்தது அவனுடைய தாய். அதில் அவள் எழுதியிருந்தாள்: ‘எனக்கு மிகவும் வயதாகி விட்டது. மரணத்தைத் தழுவுவதற்கு முன்பு மகனே, உன்னை ஒருமுறை பார்க்க வேண்டுமென்று ஆசைப்படுகிறேன். உடனே புறப்பட்டு வந்து எனக்கு இறுதிவிடை கொடுத்து, என்னை மண்ணில் புதைத்து விட்டுப் போ. ஆனால், உனக்காக நான் ஒரு பெண்ணைப் பார்த்து வைத்திருக்கிறேன். அறிவாளியான அந்தப் பெண் பார்ப்பதற்கு மிகவும் அழகாக இருக்கிறாள். அவளிடம் கொஞ்சம் சொத்துக்கள் கூட இருக்கின்றன. அவள்மீது நீ பிரியம் கொள்வாயானால், அவளைத் திருமணம் செய்து கொண்டு நீ நம் வீட்டிலேயே இருந்து வாழ்க்கையை நடத்தலாம்.’ ஜிலின் தீவிரமான சிந்தனையில் ஆழ்ந்து விட்டான். அந்தக் கடிதத்தில் அவன் தாய் எழுதியிருந்தது உண்மைதான். அவன் தாய் மரணத்தை நோக்கிய பயணத்தில்தான் இருக்கிறாள். இந்தமுறை அவளை அவன் சென்று பார்க்காவிட்டால், இன்னொரு முறை உயிருடன் அவன் பார்க்கமுடியுமா என்பதுகூட சந்தேகம்தான். அவன் இப்போது ஊருக்குக் கிளம்புவதே சரியான ஒரு செயலாக இருக்கும். அதேநேரத்தில் அவன் தாய் சொன்ன பெண் அந்த அளவிற்கு அழகானவளாக இருந்தால், அவளை ஏன் அவன் திருமணம் செய்து கொள்ளக்கூடாது ? அவன் தன்னுடைய மேலதிகாரியைப் போய்ப் பார்த்தான். ஊருக்குப் போகும் விஷயத்தைச் சொல்லி விடுமுறை கேட்டான். விடுமுறை கொடுக்கப்பட்டது. தன்னுடைய நண்பர்களிடம் விடைபெற்றுக் கெண்ட அவன் ராணுவ வீரர்களுக்கு நான்கு வோட்கா புட்டிகளை விடைபெறும் விருந்து நிமித்தமாக வாங்கிக் கொடுத்தான். எல்லாம் முடிந்ததும் ஊருக்குப் புறப்படுவதற்குத் தயாரானான். காக்கஸில் போர் நடந்து கொண்டிருந்த காலமது. இரவாகட்டும் பகலாகட்டும் சாலையில் போவது அவ்வளவு பாதுகாப்பான விஷயமாக அப்போது இல்லை. தான் இருக்கும் இடத்திலிருந்து ஒரு ரஷ்யன் சாலையில் சிறிது தூரம் நடந்து சென்றாலும் சரி அல்லது ஏதாவது வாகனத்தில் பயணம் செய்தாலும் சரி, நிச்சயம் அவனை டார்ட்டர்கள் பிடித்துக் கொன்று விடுவார்கள். இல்லா விட்டால் மலைப்பகுதிக்கு அவனைத் தூக்கிக்கொண்டு போய் விடுவார்கள். அதனால் ஒரு வித்தியாசமான ஒரு ஏற்பாடு அங்கு செய்யப்பட்டது. அதன்படி ஒரு முகாமில் இருக்கும் வீரர்களில் ஒரு பகுதியினர் வாரத்திற்கு இரண்டு முறை கூட்டமாக இன்னொரு முகாமிற்கு வரிசையாக குதிரைகளில் செல்ல வேண்டும். பயணம் போகவேண்டியவர்களை ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்கு அனுப்பி வைப்பதற்காகவே இப்படியொரு திட்டம் அங்கு பின்பற்றப்பட்டது. அது கடுமையான கோடைகாலம். பொழுது புலரும் நேரத்திலேயே சாமான்களை ஏற்றிச் செல்லும் வாகனம் தயாராக ராணுவ கட்டிடத்தின் அருகிலிருந்த நிழலில் நின்றிருந்தது. படை வீரர்கள் குதிரைகளில் ஏறி நகர ஆரம்பித்தார்கள். அவர்கள் சாலையில் கம்பீரமாகச் சென்றார்கள். ஜிலின் குதிரையின் மேல் உட்கார்ந்திருந்தான். அவனுடைய பொருட்களை ஏற்றியிருந்த வண்டி சாமான்கள் ஏற்றப்பட்ட வாகனத்துடன் சென்று கொண்டிருந்தது. அவர்கள் பதினாறு மைல்தூரம் பயணம் செய்யவேண்டும். சாமான்கள் ஏற்றப்பட்டிருந்த வாகனம் மெதுவாக நகர்ந்து போய்க் கொண்டிருந்தது. சில இடங்களில் வீரர்கள் நிற்பார்கள். சில வேளைகளில் வாகனத்திலிருந்த ஏதாவதொரு சக்கரம் சுழன்று வெளியே வருவது மாதிரி இருக்கும். இல்லாவிட்டால் ஒரு குதிரை நடக்கமாட்டேன் என்று அடம் பிடிக்கும். அது சரியாகும் வரை எல்லோரும் சிறிதுநேரம் காத்திருக்க வேண்டியதுதான். மதியநேரம் கடந்து விட்டது. அவர்கள் பாதி தூரத்தைக்கூட கடந்திருக்கவில்லை. சாலை முழுக்க பயங்கர தூது இருந்தது. சூரியன் உக்கிரமாக தகித்துக் கொண்டிருந்தது. நிழல் இருப்பதற்கான அறிகுறி எங்குமே இல்லை. சுற்றிலும் ஒரே வெட்டவெளி பொட்டல். போகும் பாதையில் பெயருக்குக்கூட ஒரு மரமோ இல்லாவிட்டால் செடி, கொடிகளோ இல்லை என்பதுதான் கொடுமையான விஷயம். முன்னால் போய்க் கொண்டிருந்த ஜிலின் நின்றான். தன்னுடைய பொருட்கள் தன்னைக் கடந்து செல்லட்டும் என்பதற்காக அவன் காத்திருந்தான். தனக்குப் பின்னால் அடையாள குழலோசை ஒலிப்பதை அவன் கேட்டான். அவ்வளவுதான் - முழு படையும் அப்படியே சாலையில் நின்று விட்டது. அவன் தனக்குள் இப்படி சிந்திக்க ஆரம்பித்து விட்டான் : ‘நானே தனியா ஏன் போகக்கூடாது ? என்னுடைய குதிரை மிகவும் திறமையானது. ஒருவேளை டார்ட்டர்களே வந்து தாக்கினால்கூட, குதிரைமேல் அமர்ந்து நான் படுவேகமாகப் பாய்ந்தோடி விடமுடியும். இருந்தாலும் அவர்களுக்காகக் காத்திருப்பதுதான் இப்போதைக்கு புத்திசாலித்தனம்.’ சிந்தனையில் ஆழ்ந்தவாறு அவன் உட்கார்ந்திருக்க, காஸ்ட்டிலின் என்ற அதிகாரி துப்பாக்கியுடன் குதிரை மேல் ஏறி வந்து கொண்டிருந்தான். அவன் ஜிலினைப் பார்த்து சொன்னான் : ‘‘வா ஜிலின்... நாம் தனியா போவோம். இந்தச் சாலையில போறதே கஷ்டமான ஒரு அனுபவமா இருக்கு. வெயிலோட கடுமையை நம்மால தாங்க முடியல. என் சட்டை வியர்வையால ‘கசகச’ன்னு இருக்கு.’’ காஸ்ட்டிலின், ஆஜானுபாகுவான உடற்கட்டைக் கொண்ட தடிமனான ஒரு மனிதன். அவன் சிவந்த முகத்திலிருந்து வியர்வை அருவியென வழிந்து கொண்டிருந்தது. ஜிலின் ஒரு நிமிடம் என்ன செய்யலாம் என்று யோசித்தான். அடுத்த நிமிடம் காஸ்ட்டிலினைப் பார்த்து அவன் கேட்டான் : ‘‘உன் துப்பாக்கியில குண்டுகள் நிரப்பப்பட்டிருக்கா ?’’ ‘‘ஆமா...’’ ‘‘அப்படின்னா பரவாயில்ல. சரி... நாம போவோம். ஆனா ஒரு விஷயம். நாம ரெண்டு பேரும் ஒண்ணா சேர்ந்துதான் போகணும்.’’ சாலையில் அவர்கள் முன்னோக்கி குதிரையில் பயணம் செய்தார்கள். இருவரும் பேசிக்கொண்டே சென்றார்கள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டேதான் சென்றார்கள். ஆனால், எல்லாப் பக்கங்களிலும் பார்த்துக் கொண்டேதான் போனார்கள். சுற்றிலும் பார்க்கக்கூடிய அளவிற்கு அந்தப்பகுதி முழுவதும் வெட்ட வெளியாகத்தான் இருந்தது. ஆனால், பரந்து கிடக்கும் வெளியைத் தாண்டியவுடன், சாலை இரண்டு மலைகளுக்குமிடையில் இருக்கும் ஒரு பள்ளத்தாக்கில் இறங்கியது. அப்போது ஜிலின் சொன்னான் : ‘‘நாம அந்த மலைமேல ஏறி சுற்றிலும் ஒரு தடவை பாக்குறது நல்லதா இருக்கும்னு நினைக்கிறேன். டார்ட்டர்கள் ஒரு வேளை நமக்குத் தெரியாமலே நம்மை கவனிச்சிட்டு இருந்தாலும் இருக்கலாம்.’’ அதற்கு காஸ்ட்டிலின் சொன்னான் : ‘‘அது தேவையில்லாத விஷயம்னு நினைக்கிறேன். நாம போய்க்கிட்டே இருப்போம் !’’ அதற்கு ஜிலின் ஒப்புக்கொள்ளவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook