
அவள் அதற்கு எந்த பதிலும் கூறவில்லை. ஒரு உயிரற்ற சடலத்தைப் பார்த்ததைப் போல அவள் சிறிது நேரம் அப்படியே செயலற்று நின்று விட்டாள். அவளின் பார்வையில் கொஞ்சம் கூட துடிப்பே இல்லாமல் இருந்தது. எல்லா ஆசைகளையும் முழுமையாக உதறியெறிந்த ஒரு பெண்ணாக அவள் மாறிப் போய் நின்றிருந்தாள். அதே பார்வையுடன், பின்னோக்கி... பின்னோக்கி... மெதுவாக அவள் நடந்து அவனை விட்டு நீங்கினாள்.
“மாயா!” - புருஷன் அழைத்தான்.
“நீ போகாத... போகாத... நாம ரெண்டு பேரும் சேர்ந்து இங்கேயிருந்து தப்பிச்சிடலாம்...”
“வேண்டாம்... வேண்டாம்...” - மாயா உரத்த குரலில் கத்தியவாறு ஓடத் தொடங்கினாள்.
“நான் தப்பிக்க விரும்பல. தப்பிக்கிறதுக்கு என்ன இருக்கு?”
ஒரு நிமிடம் புருஷன் அவளுக்குப் பின்னால் போவதா வேண்டாமா என்று சிந்தித்தவாறு நின்றிருந்தான். சிறிது முயற்சி செய்தால் ஒரு வேளை அவளை அவளின் தீர்மானத்திலிருந்து அவனால் மாற்றி விட முடியும். மாறாக, சேஷனை அவன் இழக்க நேரிட்டால்...? அவரை அவன் இழந்துவிட்டால், ஊருக்குப் போகும் பாதையை அவன் எப்படித் தெரிந்து கொள்ள முடியும்? அதற்குப் பிறகு எந்தக் காலத்திலம் அந்தப் பாதையைத் தெரிந்து கொள்ளவே முடியாமற்போய்விடும் என்பதே உண்மை.
மாயாவை இழப்பது என்பது அந்த நிமிடத்தில் அவனுக்கு ஒரு மிகப் பெரிய விஷயமாகத் தோன்றவில்லை. அவன் மனதில் உண்டான துக்கத்தை அடக்கிக் கொண்டு அவள் ஓடிச் சென்ற திசையையே பார்த்தான்.
அவள் மரங்களுக்கப்பால் மறைந்து விட்டிருந்தாள். அந்தப் பக்கத்திலிருந்து புலி உறுமும் சத்தம் கேட்டது. மனித எலும்புகள் நொறுங்கும் சத்தமும் கேட்டது.
மாலை நேரம் வரும் வரை புருஷன் அங்கேயே நின்றிருந்தான். மாலை நேரம் வந்ததும் சேஷன் இருந்த இடத்தை விட்டு எழுந்தார்.
சிறிது தூரத்தில் படர்ந்து கிடக்கும் கொடிகளுக்கு அப்பால் இரண்டு உயிர்கள் நிரந்தரமாகப் பிரிந்து போன கதையை அவர் தெரிந்திருக்கவில்லை. அங்கிருந்து கேட்ட சத்தங்களோ, அசைவுகளோ எதுவும் அவரைப் போய் அடையவில்லை. தன்னுடைய செயலில் அந்த அளவுக்கு அவர் முழுமையாக மூழ்கிப்போயிருந்தார்.
சேஷன் நடக்க ஆரம்பித்தபோது, புருஷன் அவரைப் பின் தொடர்ந்தான்.
அந்த நேரத்தில் சேஷனுக்க முன்னால் போய் நிற்க அவனுக்கு பயமாக இருந்தது. அந்தப் பயம் எதற்காக வந்தது என்பதற்கான காரணம்தான் அவனுக்குத் தெரியவில்லை.
சேஷனுக்கு எதுவுமே தெரியவில்லை. பெரிது பெரிதாக காலடியை எடுத்து வைத்து, இடப்பக்கமோ வலப்பக்கமோ பார்க்காமல் அவர் வேகமாக நடந்து போய்க் கொண்டிருந்தார். அவர் ஒவ்வொரு அடியை எடுத்து வைக்கிறபோதும், காடே அதிர்வதைப் போல் புருஷனுக்குத் தோன்றியது.
இப்போது நன்கு இருட்டிவிட்டிருந்தது. புருஷன் மிகவும் களைப்படைந்து போயிருந்தான். புருஷன் எந்த இடத்திலும் அமர்ந்து இளைப்பாறப் போவதில்லை என்பதை அவன் நன்றாகவே தெரிந்து வைத்திருந்தான். அந்த நினைப்பே அவனை மேலும் தளர்வடையச் செய்தது.
சேஷன் தலைக்கு மேலே பெரிய பெரிய வௌவால்கள் சிறகடித்துப் பறந்து கொண்டிருந்தன. அவற்றின் தொந்தரவு அதிகம் ஆனபோது, அவர் ஒரு காட்டு மிருகத்தைப் போல அலறினார். அப்போது முழு காடும் குலுங்குவதைப் போல புருஷன் உணர்ந்தான். சேஷனின் அந்த அலறல் சத்தத்தைக் கேட்டு, குள்ள நரிகள் ஊளையிட்டன. நரியின் ஊளைச் சத்தத்தைக் கேட்டு சேஷன் விழுந்து விழுந்து சிரித்தார்.
அந்தப் பயணம் பொழுது புலரும் வரை நீண்டது.
பொழுது புலர்வதற்கு சற்று முன்னால் அவர்கள் காட்டின் எல்லையை அடைந்தார்கள்.
கிழக்குப் பக்கம் பிரகாசம் தெரிந்தது. வெளிச்சம் பரவிவிட்டிருந்த ஆற்றில் இறங்கி சேஷன் நீர் குடித்தார். ஒரு காட்டு மிருகம் நீர் குடிக்கும் ஓசையை அப்போது சேஷனின் செயலில் புருஷன் உணர்ந்தான். அப்போது கூட சேஷனுக்கு முன்னால் போய் நிற்கும் தைரியம் அவனுக்கு வரவில்லை.
ஆற்றுக்குப் பக்கத்தில் ஒரு பெரிய மரத்தின் கீழேயிருந்த ஆடைகளை எடுத்து சேஷன் அணிந்தார். நிர்வாண கோலத்தை அவர் முழுமையாக ஆடை கொண்டு மறைத்த பிறகுதான் புருஷனுக்கு அவரை நேருக்கு நேராகப் பார்க்க தைரியமே வந்தது. நிர்வாண கோலத்திலிருந்து விடுபட்ட நிமிடத்திலேயே சேஷனிடம் இருந்த ஒரு பயங்கரத்தனம் சற்று குறைந்து விட்டதைப் போல் உணர்ந்தான் புருஷன்.
இப்போது சேஷனுக்கு முன்னால் போய் நிற்க அவன் தீர்மானித்தான். காட்டைத் தாண்டி தூரத்தில் கிராமத்தைச் சேர்ந்த மனிதர்களின் சத்தம் அப்போது அவன் காதுகளில் வந்து விழுந்து கொண்டிருந்தன. அந்தச் சத்தம் இவ்வளவு நேரமும் இல்லாதிருந்த ஒரு சுய உணர்வு நிலைக்கு அவனைக் கொண்டு வந்தது.
பலவித சிந்தனைகளுடன் அவன் சேஷன் முன்னால் போய் நின்றான். அவன் கால்கள் லேசாக நடுங்கிக் கொண்டிருந்தன. ஒரு காட்டு மிருகத்திடம் இல்லாவிட்டால் பிசாசின் முன்னால் போய் நிற்கும் நிலையைப் போல் தன்னுடைய தற்போதைய நிலையை அவன் எண்ணிப் பார்த்தான்.
சேஷன் தன் முன்னால் வந்து நின்றிருக்கும் அவனையே வைத்த கண் எடுக்காது பார்த்தார். அவரின் கண்களில் அதுவரை பற்றி எரிந்து கொண்டிருந்த பெரும் நெருப்பு திடீரென்று அணைந்தது. அந்தக் கண்களில் கருணையும், நம்பிக்கையும் தெரிவதைப் போல் புருஷன் உணர்ந்தான்.
“நான்... புருஷன்...” - அவன் சொன்னான். “அவுசேப்போட மகன்”
சேஷன் அவனைத் தெரிந்து கொண்டது போல் தலையை ஆட்டினார்.
“நான் நேற்று பகல்ல இருந்து உங்க பின்னாடிதான் இருக்கேன்.”
அதைச் சொன்னபோது புருஷனின் குரலில் ஒருவித பயம் கலந்திருந்தது.
அவன் அப்படிச் சொன்னதைக் கேட்டு, சேஷனின் கண்கள் விரிந்தன.
“நீங்க அந்த எலும்புக் கூட்டுடன் உடலுறவு கொண்டதை நான் பார்த்தேன்.”
புருஷன் சொன்னான்.
சேஷன் ஒரு சிலையைப் போல அசையாமல் நின்றிருந்தார்.
“நீங்கதான் நான் காட்டை விட்டு வெளியே வர உதவினீங்க. நீங்க வழி காட்டியதை வச்சுத்தான் என்னால காட்டை விட்டு வெளியே வர முடிஞ்சது.”
புருஷன் ஒரு கல்லைப் பார்த்துச் சொல்வது போல் மனதில் பக்தி மேலோங்கிய குரலில் சொன்னான்.
“உங்களுக்கு நன்றி.”
அதைக் கேட்டு சேஷன் விழுந்து விழுந்து சிரித்தார். அவரின் சிரிப்பு காடு முழுக்க எதிரொலித்தது. சிரிப்பின் முடிவில் அவர் இரு கைகளையும் சேர்த்துத் தட்டினார். தன்னுடைய தொடைகளைத் தட்டியவாறு உரத்த குரலில் கத்தினார்.
“பயங்தாங்கொள்ளி...” - சிரிப்பின் முடிவில் அவர் சொன்னார்.
“மூணாவது வண்டி வரப் போகுது...”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook