
அந்த மரத்திற்கடியில் அவனுடைய மடியில் தன் தலையை வைத்து அவள் படுத்துத் தூங்கினாள். நிம்மதியாகத் தூங்கினாள். அவளுடைய தூக்கத்திற்கு சிறு தொந்தரவு கூட இருக்கக்கூடாது என்று அவன் அசையாமல் நீண்ட நேரம் உட்கார்ந்திருந்தான். அவள் தன் கண்களைத் திறந்தபோது, அவளுடைய முகத்தையே பார்த்தவாறு அவன் உட்கார்ந்திருந்தான்.
பசி, தாகம், களைப்பு எதைப் பற்றியும் கவலைப்படாமல் ஒவ்வொரு ஊரையும் பார்த்தவாறு ஜானகி அவனுக்குப் பின்னால் நடந்து போய்க் கொண்டிருந்தாள். ஓணாட்டுக்கரையின் சமதளப் பகுதிகளையும், மரவள்ளிக் கிழங்கும் மிளகும், பலாவும், மாங்காயும் விளையும் இடங்களையும் தாண்டி, செடிகளும், ரப்பர் தோட்டங்களும் இருக்கும் மலைச்சரிவுகளில் ஏறி உயரத்தை நோக்கி அவர்கள் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். அவை எதுவும் அவள் பார்த்த இடங்கள் இல்லை. அவள் பறந்து கிடக்கும் உலகத்திற்குள் காலடி எடுத்து வைத்திருக்கிறாள். அந்தச் சந்தோஷம் அவள் மனதில் இருக்கத்தானே செய்யும்!
எனினும், எங்கு போகிறோம் என்று அவன் கூறவில்லை. அவள் அதைக் கேட்கவுமில்லை. ஒரு பெரிய மலையின் பள்ளத்தைத் தாண்டி வளைந்து நெளிந்து ஏறிச் செல்லும் சாலை எங்குபோகிறது என்று தனக்கு உண்டான ஆர்வத்தில் ஒருமுறை அவனிடம் கேட்டாளே தவிர, தாங்கள் எங்கு நோக்கிப் போகிறோம் என்று அவள் கேட்கவேயில்லை. சாலையை விட்டு விலகி குறுக்குப் பாதைகள் வழியாகவும் அவர்கள் பயணம் செய்தார்கள். அப்போது மேல்நோக்கி ஏறி பழக்கமில்லாத அவளுக்கு அவன் ஊன்றிக் கொள்வதற்காக ஒரு காட்டுக்கொம்பை வெட்டிக் கொண்டுவந்து கொடுத்தான். அவள் பல இனங்களைச் சேர்ந்த குரங்குகளைப் பார்த்தாள். பறவைகளைப் பார்த்தாள். அவளைப் பார்த்து பற்களைக் காட்டிய கருங்குரங்கைப் பார்த்து அவள் வக்கணை காட்டினாள். காட்டிற்குள் எங்கோயிருந்துகொண்டு ஒரு பறவை தன் துணையைச் சத்தம் எழுப்பி அழைத்தது. அவள் பதிலுக்குக் கூவினாள். சிறிதும் நிறுத்தாமல் வெட்டுக்கிளிகள் சத்தம் உண்டாக்கிக் கொண்டிருந்த ஒரு பகுதியைத் தாண்டிச் சென்றபோது ஒரு சத்தம் நிறைந்த உலகில் இருக்கும் வாழ்க்கையின் அபூர்வ அனுபவம் அவளுக்கு உண்டானது. அவனைத் தவிர வேறு யாரையும் பார்க்காமலே அவளுக்கு இரண்டு நாட்கள் ஓடிவிட்டன. அன்று அவள் அவனிடம் சிரித்துக் கொண்டே கேட்டாள்:
“இடம் அருமையா இருக்கு. ஏன் உங்களுக்குப் பிடிக்கல?”
அவர்கள் ஒரு தேயிலைத் தோட்டத்தை அடைந்தார்கள். அப்போது அவளிடம் அவன் சொன்னான்:
“நாம இங்கேதான் வந்தோம். புரியுதா?
அந்தத் தேயிலைத் தோட்டம் பீருமேட்டில் இருந்தது. அப்போது அங்கு தோட்டத்தைப் பெரிதாக ஆக்கும் வேலைகள் நடைபெற்றுக் கொண்டிருந்தன. சிரமமில்லாமல் அவனுக்கு அங்கு ஒரு வேலை கிடைத்தது. பெண்களுக்கும் அங்கு வேலை இருக்கிறது.
தனக்கும் ஒரு வேலை வாங்கித் தரும்படி அவள் சொன்னாள்.
பணியாட்களுக்கு வசிப்பதற்கென்று கட்டப்பட்டிருந்த வீடுகளில் அவளுக்கும் ஒரு வீடு கிடைத்தது. அதில் அவள் தனியாக இருக்க முடியாது.
அவர்கள் அங்கு சென்று ஐந்து நாட்கள் ஆகியிருக்கும். வேலை முடித்து ஒருநாள் அவன் வந்து நின்றபோது அவனை அவளுக்கு அடையாளமே தெரியவில்லை. அந்த முகத்தில் அந்த அளவிற்கு மாற்றம் தெரிந்தது. ஒரு நிமிடம் அவள் ஆச்சரியப்பட்டு நின்று விட்டாள். வட்ட முகம் கொண்ட ஒரு மனிதன் அவளுக்கு முன்னால் நின்று சிரித்துக் கொண்டிருந்தான். அவள் சிரிப்புடன் சொன்னாள்:
“நான் விரும்பியதும் என்னை விரும்பியதும் ஒரு தாடிக்கார மனிதன்தான்!”
அதற்கு அவன் கேட்டான்: “அப்படின்னா இந்தத் தாடி இல்லாதவனை நீ விரும்பலையா?”
“முன்னாடி இருந்ததைவிட இப்போத்தான் அதிக விருப்பம்!”
ஜானகி தன்னுடைய வாழ்க்கை நாயகனின் உண்மைத் தோற்றத்தைப் பார்த்துப் பார்த்து மனதில் சந்தோஷப்பட்டுக் கொண்டிருந்தாள்.
ஒரு வாரத்திற்குள் அவனுடைய காவி வேஷ்டியும் மாறியது. அவளும் தன்னுடைய காவித் துணியிலிருந்து விடுபட்டாள். வாழ்க்கையில் ஒரு அத்தியாயம் அந்த வகையில் முடிந்து விட்டதாக அவள் நினைத்தாள்.
அவளுக்கு வேலை கிடைத்தது. நாளொன்றுக்கு ஒரு ரூபாய் கூலியாகக் கிடைத்தது. படிப்படியாக எதிர்காலத்தைப் பற்றிய திட்டங்கள் அவளிடம் உருவாயின. ஒரு வீட்டிற்குக் கட்டாயம் தேவைப்படக்கூடிய பொருட்களை முதலில் வாங்கி சேகரிக்க வேண்டும். நீர் அருந்துவதற்குப் பாத்திரமெதுவும் இல்லை. அன்று மாலையில் தன்னுடைய திட்டங்களை அவனிடம் அவள் சொன்னாள். அந்தத் திட்டங்கள் தேவையற்றவை என்று கூறுவதற்கில்லை. அவளுடைய நிலைமையைக் கணக்கிட்டுப் பார்த்தால் ஒரு வரையறைக்குள் இருந்த ஆசைகளே அவை. அங்கு வேலை செய்து பத்து சக்கரம் (திருவிதாங்கூர் நாணயம்) சம்பாதிக்க வேண்டும். காலம் முழுவதும் அந்த மலைப்பிரதேசத்தில் வாழ்ந்து கொண்டிருக்க முடியாது. கிராமப் பகுதியைத் தேடிச் சென்று எங்காவது ஒரு சிறு வீட்டைக் கட்டி வாழ வேண்டும். அவளுடைய அந்தத்திட்டங்களைப் பற்றி அவன் எதுவும் சொல்லவில்லை.
ஒரு பெண்ணுக்கு ஒரு வீடும் காப்பாற்றுவதற்கு ஒரு மனிதனும் கிடைத்துவிட்டான் என்பது மட்டுமல்ல, ஜானகியின் வாழ்க்கையில் நடந்தது- கிடைத்த அந்த மனிதன், அவள் மீது உண்மையான அன்பு வைத்திருந்தான் என்பது கூட குறிப்பிடத்தக்க ஒரு விஷயம்தான். ஆணும் பெண்ணும் சேர்ந்து ஒரு வீட்டில் வாழ்வதோடு வாழ்க்கை முடிந்துவிடுவதில்லை என்று கொஞ்சுகிற குரலில் அவள் அடிக்கடி அவனிடம் கூறிக் கொண்டிருந்தாள்.
“இருந்தாலும் நீங்க பிடிவாதக்கார ஆளுதான். அடடா என்ன பிடிவாதம்.”
சில நேரங்களில் அவன் அதற்குப் பதில் கூறுவான்:
“அப்படி பிடிவாதக்காரனா இருக்குறதுதான் நல்லது, பெண்ணே!”
அந்த வாழ்க்கையில் ஒரு முழுமையற்ற தன்மை இருந்தது. குறிப்பிட்டுக் கூறக் கூடிய முழுமையற்ற தன்மை. ஆனால், அந்த முழுமையற்ற தன்மை அவர்களுக்கிடையே இருந்த உறவை பாதிக்கவில்லை. சாதாரண சூழ்நிலையாக இருந்தால், அந்த உறவைக் கிழக்கு மலைப் பகுதியின் மரங்களுக்கு மத்தியில் ஆட்சி செய்யும் பனியில் உறைந்து போயிருக்கும் அந்தச் சிறிய வீட்டிற்குள் எல்லா இரவுகளிலும் பரிதாபமான ஒரு கெஞ்சல் குரல் ஒலிக்கும்.”
“என் கூட நெருக்கமா படுக்கக்கூடாதா?”
அதற்குப் பதில் வரும்:
“வரட்டும், பெண்ணே… வரட்டும்.”
அவள் பதைபதைக்கும் குரலில் கூறுவாள்:
“ஓ... எப்போ பார்த்தாலும் வரட்டும் வரட்டும்னு ஒரு பல்லவி. இப்படியே எவ்வளவு நாட்களுக்குச் சொல்லிக்கிட்டு இருப்பீங்க?”
ஓய்வாக இருக்கும் நேரங்களில் இந்த விஷயம் பேசப்படும் விஷயமாக இருந்தது. அவன் உறுதியான குரலில் ஒருநாள் அறிவுரை கூறுவதைப்போல் அவளிடம் சொன்னான்: “உனக்கு ஒரு குழந்தை வேண்டாம்!”
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook