
அந்த இடத்தில் சுருண்டு படுத்திருக்கும்போது தினமும் அவள் தன்னுடைய முழு வாழ்க்கையையும் மனதில் நினைத்துப் பார்ப்பாள். நீதிமன்றத்தில் குமாஸ்தாவாக வேலை பார்த்த அவளுடைய தந்தை பரமுபிள்ளை தினமும் ஏதாவது ஜானகியின் தாயிடம் கொண்டுவந்து கொடுப்பார். அன்று அந்த வீட்டிலுள்ளவர்களுக்குப் பட்டினி என்றால் என்னவென்றே தெரியாது. அந்த நாட்கள் அப்படியே போய்க் கொண்டிருந்தன.
அவளுடைய தாய் உண்மையிலேயே அதிர்ஷ்டம் செய்தவள் என்றுதான் சொல்ல வேண்டும். தந்தை, தாயையும், தாய் தந்தையும் ஒருவரோடொருவர் முழுமையாக அன்பு செலுத்தி, நம்பிக்கையுடன் வாழ்ந்த ஒரு வீட்டில்தான் அவள் பிறந்தாள், வளர்ந்தாள். வக்கீல் குமாஸ்தா பரமு பிள்ளை ஒரு கள்ளங்கபடமில்லாத நல்ல மனிதனாக இருந்தார். அவளின் தாயும் எந்தத் தவறும் செய்யாத தந்தைக்கும், தாய்க்கும் பிறந்த பிள்ளைகளுக்கு இப்படிப்பட்ட ஒரு அனுபவம் எப்படி உண்டானது என்பதை அவள் நினைத்துப் பார்த்தாள்.
பாரதி இப்போது உயிருடன் இருப்பாளா? இருக்கலாம். அவளும் ஏதாவது பேருந்து நிலையத்திலோ கடையின் திண்ணையிலோ வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கலாம். பவானி உயிருடன் இருப்பாள் என்ற நம்பிக்கை ஜானகிக்கு இல்லை. அவர்களில் கொடுத்து வைத்தவள் என்று கவுரியைத்தான் சொல்ல வேண்டும். இந்தக் கஷ்டங்கள் எதுவுமே தெரியாமல் அவள் இறந்து விட்டாள். பத்மினி ஒரு மோசமான மனிதனிடம் அடியும் உதையும் வாங்கி அனேகமாக இப்போது இறந்திருப்பாள்.
ஈவு, இரக்கமற்ற கடவுள்! இந்த விளையாட்டுகளையெல்லாம் நிறுத்தியிருக்கக் கூடாதா? எதற்காக, அவள் செய்த தவறுக்காக, இப்படியெல்லாம் அவளைக் கஷ்டத்திற்குள்ளாக்க வேண்டுமா? ஓச்சிற கோவில் வரை அவளை அது தள்ளிக்கொண்டு போனது. அங்கு தான் காப்பாற்றப்பட்டு விட்டதாக அவள் நினைத்தாள். அதற்குப் பிறகும் துன்பம் என்ற அதலபாதாளத்திற்கு கடவுள் அவளை வீசி எறிகிறது என்றால்...!
இந்த வாழ்க்கையை அப்படியே முடித்துக் கொண்டு விட்டால் என்ன என்று பல நேரங்களில் அவள் நினைத்திருக்கிறாள். ஆனால், அவளுடைய தெய்வம் சில பொறுப்புகளை அவளிடம் ஒப்படைத்திருக்கிறதே! அந்தக் குழந்தையை வளர்ப்பதற்கு அவள் முயற்சிக்க வேண்டும். தூக்குமரத்திலிருந்து தப்பித்துவிடும்பட்சம், சிறையிலிருந்து வெளியே வரும்போது அந்தக் குழந்தையுடன் ஓச்சிற கோவிலுக்குச் சென்று அங்கு அவனுக்காக அவள் காத்திருக்க வேண்டும். அது ஒரு கடமை. அந்தக் கடமையை அவள் நிறைவேற்ற வேண்டும். அப்படியென்றால் அவன் தூக்குமரத்தில் தொங்குவானா இல்லையா என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும். என்றைக்கு, தான் ஓச்சிற கோவிலில் போய் நிற்கவேண்டும் என்பதை அவள் தெரிந்து கொள்ள வேண்டும்.
பகல் முழுவதும் அலைந்து திரிந்து மிகவும் களைத்துப் போய் பேருந்து நிலையத்தை அடைந்தாலும் அவளுக்கு உறக்கமே வராது. சில நேரங்களில் இரவில் பல்வேறு சமயங்களில் அவளைப் போன்ற சில பிச்சைக்காரப் பெண்கள் அங்கு வந்து படுப்பார்கள். அவர்கள் யாருக்கும் எதைப் பற்றியும் சிந்திக்க வேண்டிய அவசியமில்லை. உடல் தரையில் படுவதற்கு முன்பே அவர்கள் உறங்க ஆரம்பித்து விடுவார்கள். ஒருவகையில் பார்க்கப்போனால் அவர்கள் அவளைவிட கொடுத்து வைத்தவர்கள் என்று கூட கூறலாம்.
ஒருநாள் களைப்பு அதிகமாக இருந்ததன் காரணமாகவோ என்னவோ, அவள் தன்னை மறந்து உறங்கிவிட்டாள். அந்த அறையில் யார் எப்போது வந்தார்கள் என்ற விஷயம் எதுவும் அவளுக்குத் தெரியாது. கண்களைத் திறந்தபோது, பதின்மூன்று வயது மதிக்கக்கூடிய அளவில் ஒரு கிறிஸ்தவப் பெண் தன்னையே உற்றுப் பார்த்தவாறு தனக்கு அருகில் நின்று கொண்டிருப்பதை அவள் பார்த்தாள். அந்தச் சிறுமி வைத்த கண் எடுக்காமல் ஜானகியையே பார்த்துக் கொண்டிருந்தாள். ஜானகி எழுந்து உட்கார்ந்தாள். அப்போதும் அந்தப் பெண் தன் பார்வையை அகற்றவில்லை. ஜானகி கேட்டாள்:
“என்னடா கண்ணு, என்னையே இப்படி பார்க்குற?”
அந்தச் சிறுமி பதில் கூறுவதற்கு வாயைத் திறப்பதற்கு முன்பே அவளை வேறு எங்கோ பார்த்திருக்கிறோம் என்பது போன்ற ஒரு உணர்வு ஜானகிக்கு உண்டானது.
அந்தச் சிறுமி சொன்னாள்:
“நான் உங்களையே பார்த்துக்கிட்டு இருந்தேன், அம்மா!”
“அதுதான் ஏன்னு நான் கேக்குறேன்.”
தன்னுடைய முண்டின் நுனியில் கட்டப்பட்டிருந்த முடிச்சை அந்தச் சிறுமி ஒருவேளை பார்த்திருப்பாளோ என்று ஜானகி நினைத்தாள். அந்தப் பொட்டலம் அங்கு பத்திரமாக இருக்கிறதா என்று ஆராய்ந்தாள். அது அங்கேயேதான் இருந்தது.
ஜானகி கேட்டாள்:
“திருடுறதுக்கு ஏதாவது இருக்குமோன்னு நீ பார்த்தியா?”
அதைக்கேட்டு அந்தச் சிறுமி ஒரு மாதிரி ஆகிவிட்டாள். அவள் தான் நினைத்ததை மனம் திறந்து கூறினாள்:
“அம்மா, நீங்க படுத்திருந்ததைப் பார்த்தப்போ, செத்துப்போன என் தாயைப் பார்த்தது மாதிரி இருந்துச்சு. அதுனாலதான் அப்படிப் பார்த்தேன்!”
ஜானகிக்கு அந்தச் சிறுமி மீது இரக்கம் உண்டானது. பாவம் அந்தச்சிறுமி! அவளுடைய தாய் இறந்துவிட்டாள். அவளுக்கு ஆதரவு என்று யாரும் இல்லை போலிருக்கிறது. அவளும் பிச்சை எடுத்து பிழைத்துக் கொண்டிருப்பவள்தான். அந்தச் சிறுமியின் குரலிலும் அவள் அதைச் சொன்ன விதத்திலும் ஒரு பரிதாபம் கலந்திருந்தது.
ஜானகி கேட்டாள்:
“உன் தாய் இறந்துட்டாளா?”
“இறந்துட்டாங்க!”
அவளுடைய கண்களில் நீர் நிறைவதை ஜானகி பார்த்தாள்.
“உனக்கு அப்பா இல்லையா?”
“இல்ல. அப்பா முன்னாடியே இறந்துட்டாரு!”
அப்படியென்றால் அவள் யாருமே இல்லாத ஒரு அனாதை. தனக்கு முன்னால் நீண்டு கிடக்கும் வருடங்களில் அந்தச் சிறுமி இன்னும் என்னவெல்லாம் அனுபவிக்க வேண்டியதிருக்கும் என்பதை ஜானகி ஒரு நிமிடம் நினைத்துப் பார்த்தாள். எதற்காக இப்படிப்பட்ட அப்பாவிகளெல்லாம் உலகத்திற்குள் தள்ளிவிடப்படுகிறார்கள்?
பேருந்து நிலையத்தின் பயணிகள் அறையில் தினமும் வந்து படுத்துறங்கும் பல பெண்களில் அவளும் ஒருத்தியாக இருக்க வேண்டும். இல்லை... அப்படி இருக்க வழியில்லை. அவளின் நடத்தையையும் பேச்சையும் பார்க்கிறபோது அப்படி நினைக்க முடியவில்லை. அவள் ஏழை!
அந்தச் சிறுமி தன்னையே மறந்து சொன்னாள்:
“அய்யோ! என்னைப் பெற்ற தாயே என் முன்னாடி வந்து இருக்குறது மாதிரி இருக்கு!”
அவளுடைய முகம் பிரகாசித்தது.
அவள் கேட்டாள்:
“அம்மா, நீங்க எங்கே இருக்கீங்க?”
ஜானகிக்குப் பதில் வரவில்லை. எனினும், அவள் உண்மையைச் சொன்னாள்:
“என் கண்ணு, எனக்கு ஊர், வீடு எதுவும் இல்ல!”
அந்தப் பெண்ணும் தன்னைப் பற்றிய உண்மையைச் சொன்னாள்:
“எங்களுக்கும் ஊர், வீடு எதுவும் இல்ல. என் அம்மா இந்தக் கோட்டயத்துல ஒரு கடைத் திண்ணையில படுத்திருக்குறப்போ இறந்துட்டாங்க!”
அவள் தன்னுடைய தாயைப் புதைத்த கதையை விளக்கிச் சொன்னாள்:
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook