Lekha Books

A+ A A-

மூடு பனி - Page 3

Moodupani

சூறாவளி வீசிக் கொண்டிருக்கும் ஒரு குடும்பமும், வெளிறிப் போய் நடுங்கிக் கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்ணும் - அந்தக் காட்சியை இப்போதே அவள் தன்னுடைய மனதில் பார்த்தாள். அது தேவையில்லை என்று ஒதுக்கி வைத்து விட்டாள் விமலா.

மலையிலிருந்து கீழே நோக்கிச் செல்லும் ஒற்றையடிப் பாதை வழியாகத் தவிட்டு நிறத்திலிருக்கும் ஷுக்களை அணிந்திருக்கும் இளைஞனுடன் சேர்ந்து வேகமாக நடந்து செல்லும் ரஷ்மியை அவள் பார்த்தவாறு நின்றிருந்தாள். பர்ச் மரங்களின் கூட்டத்திற்குப் பின்னால் அவள் அணிந்திருந்த கோட்டின் அடர்த்தியான பச்சை நிறம் மறைந்ததும் விமலா கோபத்துடன் தனக்குள் கூறிக் கொண்டாள்: ‘நீ என்னை ஏமாற்றிவிட்டதாக நினைத்துக் கொள்ளாதே, பெண்ணே!’

பதினாறாம் வயதில் அவள் பெண்ணாகி இருக்கிறாள்.

திரும்பவும் அவள் தன்னுடைய அறைக்கு வந்தாள். அறை அலங்கோலமாகிக் கிடந்தது. பெட்டி மீதும் ஸ்டாண்டிலும் கிடக்கும் புடவைகளை மடித்து வைக்க வேண்டும் என்று காலையிலேயே நினைத்தாள். பழமையான மேற் கூரையிலிருந்து இரவும் பகலும் ‘சொட் சொட்’ என்று விழுந்து கொண்டிருக்கும் நீர்த் துளிகள் மேஜை மீதும் தரையிலும் சிதறிக் கிடந்தன. மூலையில் ஸ்டாண்டில் வைக்கப்பட்டிருந்த தாள் பூக்கள் நிறம் மங்கலாகிப் போய்ப் பார்க்கவே சகிக்க முடியாமலிருந்தன. சூரியனின் படத்தைப் போட்டிருக்கும் பேட்டரி நிறுவனத்தாரின் காலண்டர் இப்போதும் ஜனவரி மாதத்தைக் காட்டிக் கொண்டிருக்கிறது. இன்று தேதி என்ன? ஏப்ரல் பதினொன்று.

புது வருடம் எந்தவித சலனமும் இல்லாமல் அமைதியாக நின்று கொண்டிருக்கிறது.

அடைக்கப்பட்டிருந்த ஜன்னலை அவள் திறந்து விட்டாள். குளிர்ந்த காற்று வேகமாக வந்து மோதியவுடன் அறையில் ஒருவித குற்ற உணர்வுடன் ஒரு ஓரத்தில் போய் அவள் நின்றாள்.

மலைச்சரிவில் போர்டிங் ஹவுஸின் எல்லையைத் தாண்டியிருக்கும் காட்டேஜ் பகுதியில் ஒரு நேப்பாளி இளைஞன் வேலை செய்கிறான். சீசனுக்கு வரும் சுற்றுலா பயணிகளுக்காக அல்மோராவைச் சேர்ந்த ஒரு காண்ட்ராக்டர் செய்த வீடுகளில் ஒன்று அது. உரிமையாளர் இறக்கும் வரை அதன் பெயர் ‘சந்திரகாந்த்’ என்றிருந்தது. இளைஞனான மகன் அதிகாரத்தை எடுத்துக்கொண்ட போது எல்லா காட்டேஜ்களின் பெயர்களையும் அவன் மாற்றினான். அவள் இந்த போர்டிங் ஹவுஸுக்கு வந்த வருடம் சந்திராகாந்த் ‘கோல்டன் நூக்’ என்று பெயர் மாறியது.

வானம் சாம்பல் நிறத்தில் வெளிறிப் போய் காணப்பட்டது. மென்மையான பனிப்படலம் தூரத்தில் பைன் மரக் காடுகளுக்கு மத்தியில் நகர்ந்து விளையாடிக் கொண்டிருந்தது. மரக் கூட்டங்களையும் ஆப்பிள் தோட்டங்களையும் தாண்டினால் கண்ணில் தெரியும் மலைகள் நன்கு வெட்கப்பட்டு நிர்வாணமாக இருக்கின்றன. டிசம்பர் மாதத்தில் மதிய நேரத்தில் தினமும் இந்த ஜன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு நீண்ட நேரம் அவள் அதையே பார்த்தவாறு நின்றிருப்பாள். பார்க்கும் இடங்களிலெல்லாம் கூட்டம் கூட்டமாகப் பனிப்படலம் மூடிக் கிடக்கும்.

நாட்கள் பச்சையின், வெள்ளையின்... உலகத்தில் ஒவ்வொரு நாளும் மாற்றங்களை உண்டாக்கிக் கொண்டே இருக்கின்றன. கடைசியில் ஆங்காங்கே வெள்ளை நிறத்தில் தெரியும் மேகக் கூட்டங்கள், உருகி முடியாமலிருக்கும் குளிர்காலத்தின் ஞாபகச் சின்னங்கள் மீதி இருக்கும்.

மலைகள் பல மாதங்களுக்குப் பிறகு இளம் வெப்பத்தை ஏற்றுக் கொண்டிருக்கும் பகல் நேரங்கள்... வெயில் அதிகமாகும்போது மலைச்சரிவுகளில் பனி உருகி வெள்ளி அருவிகளென மேலிருந்து கீழாக வழிந்து கொண்டிருக்கிறது. நேற்றின் கண்ணீர்ச் சோலைகள் அவை.

அவள் பார்த்துக் கொண்டு நின்றிருக்கும் போது, மங்கலாக இருந்த வானம் மேலும் தெளிவானது. சிறிது சிறிதாக மலையோரத்தில் இளம் வெயில் பரவியது. அடிவாரத்தில் நடைபாதையின் திருப்பத்தில் உயரமான பர்ச் மரத்தின் ஈரமான இலைகள் பிரகாசமாகத் தெரிந்தன.

பனிப்படலமும் மேகமும் கலந்து நின்றிருந்த தூர வெளியில் மலை உச்சிகளின் நரைத்த தலைகள் தெரிந்தன.

போர்டிங் ஹவுஸின் இருபத்து மூன்று அறைகளில் இந்த ஒரு அறைக்குத்தான் அந்த அதிர்ஷ்டம் இருக்கிறது. மதிய நேரத்தில் வெயில் இருக்கும்போது ஜன்னல் வழியாக மலைகள் பளிச்சிடுவதை இங்கிருந்தே பார்க்கலாம்.

குமாரி புஷ்பா சர்க்காரின் பிரபலமான அறை. மூன்று வருடங்கள் அவள் தங்கியிருந்த அறை. ராஜினாமா கடிதம் எழுதி அலுவலகத்தில் கொடுத்துவிட்டு வெளியே போகும் நிமிடத்தில்தான் அவளை விமலா பார்த்தாள். வராந்தாவில் வைத்து யாரோ அறிமுகப்படுத்தி வைத்தார்கள்.

போர்டிங் ஹவுஸின் இரவுகளின் தனிமையில் தன்னுடைய அறையில் ஒரு இளைஞனை வரவேற்க தயாராக இருந்த புஷ்பா சர்க்கார் என்ற தைரியம் கொண்ட பெண்ணைப் பற்றித்தான் பள்ளிக்கூடத்தில் வேலைக்குச் சேர்ந்த நாளிலிருந்து ஒவ்வொருவரும் கூறி அவள் கேட்டுக் கொண்டேயிருந்தாள்.

கன்ன எலும்புகள் துருத்திக் கொண்டிருக்கும், இந்த மெலிந்து போய் காணப்படும் இளம்பெண்ணைப் பற்றியா இவர்கள் கூறிக் கொண்டிருந்தார்கள்? பார்த்தபோது அதுதான் முதலில் தோன்றியது.

தன்னைக் கட்டாயப்படுத்தி ராஜினாமா செய்ய வைத்து வெளியே போகச் சொன்ன சமயத்தில் வந்த விடுமுறையின்போது தன்னுடைய இடத்தைப் பிடிப்பதற்காக வந்திருப்பவளிடம் ஆபத்தில் இருக்கும் அந்தப் பெண் எப்படி நடந்து கொள்வாள்? நினைக்கும்போது விமலாவிற்கே பயமாக இருந்தது.

‘‘என் அறையை எடுத்துக்கங்க. அதுதான் இருப்பதிலேயே மிகச்சிறந்த அறை.’’

எந்தவித தயக்கமும் இல்லாமல் அவள் சொன்னாள்.

எனினும், இரண்டடி தூரம் நடந்த பிறகு திரும்பி நின்றாள்.

‘‘இந்த விஷயத்துல நான் சொன்னதை நீங்க கேட்கலாம். தப்பு வராது.’’

ஒன்பது வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. கடவுளே, ஒன்பது வருடங்கள்!

புஷ்பா சர்க்கார் இப்போது எங்கு இருப்பாள்? இஸத் நகரத்தைச் சேர்ந்த ஹோம் சயின்ஸ் டீச்சர் அவ்வப்போது புஷ்பார் சர்க்காரைப் பற்றி ஞாபகப்படுத்துவதுண்டு. மூன்று திருமணங்கள், நீதிமன்ற வழக்குகள், வீட்டை விட்டு ஓடியது. இறுதியில் கிடைத்த தகவல் ஒரு மதம் மாற்றம் சம்பந்தப்பட்டது.

புஷ்பா சர்க்காருக்கு முன்னால் - விமலா பார்த்திராத ஐம்பது வயதைக் கொண்ட செல்வி பட்.

அதற்கு முன்பு.

மலையோரங்கள் பனி விழுந்து மங்கலாகிப் பின்னர் தெளிந்து கொண்டிருப்பதற்கு இடையில் ஜன்னல் வழியே பார்க்கும்போது சில நேரங்களில் முகங்கள் மாறும்.

வெளியே பிரகாசமான ஒரு மாலை நேரம் வடிவமெடுத்துக் கொண்டிருந்தது. பல மாதங்களுக்குப் பிறகு.

சிறிது வெளியே போய் விட்டு வரலாம்.

ஜன்னலை அடைத்துக் கொக்கியை மாட்டினாள். ஸ்டாண்டில் குவித்துப் போடப்பட்டிருந்த புடவைக் கூட்டத்திலிருந்து இளம் மஞ்சள் நிறத்தில் இருந்த சிவப்பு நிற இலைகள் போட்ட ஒரு புடவையை அவள் தேர்ந்தெடுத்தாள். சிவப்பு நிற ஜாக்கெட்டின் கைப்பகுதியிலிருந்த ஜரிகை சற்று மங்கிப் போயிருந்தது. அவள் அதைப் பொருட்படுத்தவில்லை.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel