Lekha Books

A+ A A-

மூடு பனி - Page 5

Moodupani

இனியொருமுறை வீட்டிற்குத் திரும்பிப் போகும் சூழ்நிலை உண்டாகவேயில்லை.

சமையலறை இடிந்து கிடக்கும் அந்தக் கோவில் இப்போதும் இருக்கிறதா?

பாக்குத் தோட்டத்திற்கு மேலே நின்று கொண்டிருக்கும் வைக்கோல் வேய்ந்த அந்த வீட்டிற்குத் திரும்பச் செல்லும் சூழ்நிலை உண்டாகப் போவதில்லை.

அவளுடைய தந்தை கிராமத்தை எப்போதும் வெறுப்புடன் மட்டுமே பார்த்திருக்கிறார்.

‘‘எனக்கு அங்கே யார் இருக்குறது?’’

அல்மோராவில் ஆப்பிள் தோட்டமும் சொந்தத்தில் வீடும் உருளைக்கிழங்கு ஆராய்ச்சியாளர் என்ற பெயரும் வாங்கித் தந்த பதவியைத் தெரிந்தவர்கள் ஊரில் யார் இருக்கிறார்கள்?

அது சரியாக இருக்கலாம்.

அவளுடைய தாயால் ஊரை எண்ணிப் பார்க்கக்கூட முடியாது. அந்தத் தட்பவெப்ப நிலையை அவளால் எப்படி சகித்துக் கொள்ள முடியும்?

அது தட்பவெப்ப நிலையின் குற்றமா என்ன?

அவளுடைய தந்தை கம்பளிக்குள் படுத்துக் கொண்டு முனகிக் கொண்டிருக்கும் போது அவளின் தாய் கண்ணாடிக்கு முன்னால் நின்று தலை வாரிக் கொண்டிருப்பாள். ஊரின் தட்பவெப்ப நிலையின் பயங்கரத்தை அவள் அப்போது யாரிடம் என்றில்லாமல் கூறுவாள்.

ஒருவேளை, அவளுடைய தாய் பயந்திருக்கலாம்; அவளுடைய தந்தை இறுதியின் முடிவை மாற்றிக் கொண்டு விட்டால்...?

தட்பவெப்ப நிலை!

திருமதி சக்ரவர்த்தியின் வீட்டை விட்டு நிரந்தரமாக வெளியே இருப்பதற்கு காரணம்... அங்கு இருக்கும் அதிக வெப்பமாக இருக்கலாம். திருமதி சக்ரவர்த்தியின் வீட்டை அடைய வேண்டுமானால் ஆல்ஃப்ரட் கோமஸ்ஸின் வீட்டைக் கடக்க வேண்டியதிருக்கும்!

போட் க்ளப்பிற்கு அருகில், அல்க்கா ஹோட்டலுக்கு எதிர் திசையில் ஏரியையொட்டி கட்டப்பட்டிருக்கும் இதுபோன்ற அந்த மண்டபத்தில் உட்கார்ந்து கொண்டு ஒருமுறை அவள் தன்னுடைய கிராமத்தைப் பற்றி நினைக்க முயன்றாள்.

- எனக்கு ஞாபகத்தில் இல்லை.

- முழுவதுமாக?

- பதினாறு வருடங்களுக்கு முன்பு, சுதீர்.... பதினாறு வருடங்கள்....

மே மாதத்தில் பிரகாசமான இரவு. தூரத்தில் மரங்கள் நீலப் புகையைப் போல நின்று கொண்டிருக்கின்றன.

ஐந்து வயதில் நடந்ததெல்லாம் எனக்கு ஞாபகத்தில் இருக்கு. நினைச்சுப் பாரு.

இழைகள் ஒவ்வொன்றையும் பிரித்துப் பார்ப்பது மாதிரி இருந்தது ஞாபகப்படுத்திப் பார்க்கும் போது ஓசைகளும் வண்ணங்களும் திரும்ப வந்தன. முந்திரி எண்ணெயின் வாசனை கொண்ட படகு... பச்சைக் கிளிகள் பறந்து கொண்டிருக்கும் வயல் வரப்பில் சாய்ந்து கிடக்கும் கதிர்கள்... காளை வண்டிகளின் சக்கரங்கள் உண்டாக்கும் சத்தம்... வேடர்களின் குடிசைகளில் இரவு நேரங்களில் கேட்கும் துடியோசை....

‘சொல்லு... கேக்குறேன்...

மனம் பரபரத்தது. ‘வேண்டாம். வற்புறுத்த வேண்டாம், சுதீர். நினைத்துப் பார்க்க எனக்கு அது மட்டுமே இருக்கு. இந்த நிமிடங்கள்... இப்போ சிகரெட்டின் வாசனை கலந்த வார்த்தைகள், கன்னங்களை முத்தமிட்டுக் கொண்டிருக்கும் இந்த நிமிடத்தில் நான் வாழ்கிறேன்....’- அவள் தனக்குள் கூறிக்கொண்டாள்.

‘‘சிக்ஸ்டீன் இயர்ஸ்... மை காட்! நாம ஒரு தடவை, அங்கே போகணும். ப்ரிப்பேர்ட் ஃபார் அன் அட்வென்சர்.’’

கேரளத்திற்குக் குறிப்பாக அவளுடைய கிராமத்திற்கு வட இந்தியாவைச் சேர்ந்த இரண்டு சுற்றுலாப் பயணிகள் வந்து சேர்கிறார்கள்... திருமதி அன்ட் திரு சுதீர்குமார் மிஸ்ரா.

‘‘நான் உன் ஊரைப் பார்க்க விரும்புறேன். ஐரோப்பாவையும், தென்கிழக்கு ஆசியாவையும், இலங்கையையும் நான் பார்த்துட்டேன். கேரளத்தைப் பார்க்கணும். என் கிராமத்தில் பச்சை நிறத்துக்கு குளிர்ச்சி இல்ல. பெண்கள் குடிப்பதற்கு மூணு மைல் தூரத்துல இருந்து நீர் கொண்டு வர்றாங்க. உலகளாவிய உறவுகளைப் பற்றி ஆராய்ச்சிக் கட்டுரை எழுதிய நான் இந்தியா முழுவதையும் பார்க்காம இருக்கேன்றது உண்மையிலேயே அவமானமான ஒரு விஷயம்!’’

‘‘என்ன சொல்ற விமலா?’’

‘‘சொல்றதுக்கு என்ன இருக்கு? எனக்கு இந்த நிமிடங்கள் போதும். நாம அங்கே போவோம்.’’

‘‘போவோம்ணு இல்ல. கட்டாயம் நாம போய் ஆகணும்.’’

‘‘கட்டாயமா?’’

இதற்கு முன்பு தெரிந்தே இராத மாதிரி இளம் வயதில் ஒடித் திரிந்த பாதைகள் வழியாகவும், வயல் வரப்புகளிலும் நடக்க வேண்டும்!

திரு. சுதீர்குமார் மிஸ்ரா.

திருமதி விமலா மிஸ்ரா.

மலை உச்சிகளிலிருந்த வெள்ளித் தலைப்புகள் மறைந்து விட்டிருந்தன. மலை அடுக்குகளிலிருந்து இன்னொரு மேகக் கீற்றைப் போல இளம் நீல வண்ணம் கலந்தப் பனிப்படலம் கீழ்நோக்கி இறங்கிக் கொண்டிருந்தது. கீழே செடி, கொடிகளுக்கு மத்தியில் சிக்கிக் கிடந்த வண்ணமயமான மரக்கிளை விடுதலை பெற்றது.

அவள் எழுந்தாள். கோவிலைச் சுற்றி ஏரிக்கு அருகிலிருந்த பாதை வழியே நடந்தாள்.

வட்டவடிவில் அமைக்கப்பட்ட மண்டபத்திற்கு அப்பால் மணல் பரவியிருக்கும் வெட்டவெளி ஆள் அரவமற்று கிடந்தது. அதன் எல்லையிலிருந்த திரை அரங்கிற்கு முன்னால் ஆட்கள் சிலர் கூட்டமாக நின்றிருந்தார்கள். படகுத்துறைக்கு அருகில் வந்தபோது, தூங்கிக் கொண்டிருந்த படகுகளை ஓட்டுபவர்களுக்கு உயிர் வந்தது.

‘‘வர்றீங்களா, மேம் ஸாஹிப்? நாலணா போதும், மேம்ஸாஹிப்.’’

எல்லோரும் அழைத்தார்கள். படகுக் கூட்டத்திலிருந்து விலகித் தனியாக கிடக்கிறது அவளுக்கு நன்கு அறிமுகமான ‘மேஃப்ளவர்.’

மேஃப்ளவர்! என்ன அழகான பெயர்!

வருடங்களின் தழும்புகள் மேஃப்ளவரிலும் இருக்கின்றன.

பழைய படகோட்டி ப்ரதாப் அல்ல. சிவப்பு நிற குஷன்களிலொன்றில் உட்கார்ந்து கொண்டு பீடி புகைக்கும் மஞ்சள் நிறப் பற்களைக் கொண்ட ஒரு இளைஞன். அவன் கண்களைச் சுருக்கிக் கொண்டு சிரிப்பை நிறைத்தவாறு அவளைப் பார்த்து நின்றிருக்கிறானே தவிர, அவளைப் பிடிக்க வேண்டும் என்று முயற்சித்ததே இல்லை. அவன் மணல் வெளியில் இறங்கியபோது, சுருங்கிய கண்கள் விரிந்தன. வெள்ளை நிறக் கண்களில் எதிர்பார்ப்பு இருந்தன.

அவர்கள் சுற்றி வளைத்தபோது, படகு ஓட்டுபவர்களில் யாராவது தன் கையைப் பிடித்து இழுத்துப் படகில் ஏறச் செய்து விடுவார்களோ என்று அவள் பயப்பட ஆரம்பித்தாள்.

‘மே ஃப்ளவரை’ நோக்கி இரண்டடிகள் வைத்தபோது அந்த இளைஞன் இழுத்துக் கொண்டிருந்த பீடியை நீரில் எறிந்துவிட்டு, உட்கார்ந்திருந்த இடத்தைவிட்டு வேகமாக எழுந்தான்.

அவன் படகைப் பிடித்து நிறுத்தினான். இரண்டு பேர் உட்காரக் கூடிய இருக்கையில் அவள் தலையைக் குனிந்து கொண்டு உட்கார்ந்திருந்தாள்.

அந்த இளைஞன் படகைச் செலுத்த ஆரம்பித்தான். படகு கரையை விட்டு நீங்கியவுடன் அவள் ‘மே ஃப்ளவ’ரின் புதிய படகோட்டியை ஆர்வத்துடன் பார்த்தாள். செம்பு நிற முடி, வெள்ளை நிறக் கண்கள், வீங்கிய முகத்தில் தவிட்டு நிறத்திலிருக்கும் ஏராளமான தழும்புகள்....

‘‘ப்ரதாப் எங்கே?’’

‘‘இறந்தாச்சு, மேம்ஸாஹிப்...’’

‘‘எப்போ?’’

‘‘நான்கு வருடங்கள் ஆச்சு. போன மாதம் எனக்கு வாடகைக்குத் தந்தாங்க. ப்ரதாப்பின் தம்பி பட்ஜியை பண விஷயத்துல ஏமாத்தினதுனால, வேலையை விட்டு போகச் சொல்லிட்டாங்க.’’

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel