Lekha Books

A+ A A-

மூடு பனி - Page 6

Moodupani

‘‘ம்...’’

சிறிது நேரம் சென்ற பிறகு, அவள் கேட்டாள்:

 ‘‘உன் பேர் என்ன?’’

‘‘புத்து... ஆட்கள் அப்படித்தான் அழைப்பாங்க.’’

அவன் ஒரு முட்டாள்தனமான சிரிப்பு சிரித்தான்.

விமலாவின் உதடுகளில் மெல்லிய ஒரு புன்னகை மலர்ந்தது. மஞ்சள் நிற பற்களைக் காட்டி அவன் முட்டாள்தனமாகச் சிரித்ததைப் பார்த்து அவனுக்கு அந்தப் பெயர் வந்திருக்க வேண்டும்.

‘‘சிலர் ‘கோரா ஸாப்னு’ ( வெள்ளைத் துரை ) அழைச்சு கிண்டல் பண்ணுவாங்க.’’

‘‘கோரா ஸாப்பா?’’

‘‘ஆமா, மேம் ஸாஹிப். என் அப்பா ஒரு வெள்ளைக்காரர்.’’

‘‘உண்மையாகவா?’’

‘‘உண்மைதான், மேம் ஸாஹிப். நான் அவரைப் பார்த்தது இல்ல. என் அம்மா சொல்லித்தான் எனக்குத் தெரியும்.’’

‘‘அம்மா என்ன செய்றாங்க?’’

‘‘அவங்க இறந்துட்டாங்க’’ என்று சொன்ன அவன் தூரத்தில் சுட்டிக் காட்டினான். ‘‘அந்தக் கட்டிடம் கட்டிய வருடத்தில்... ஆறேழு வருடங்கள் ஆகியிருக்கும்.’’

துடுப்பு சீராக விழுந்து கொண்டிருந்தபோது ஆழத்தை ஞாபகப்படுத்தி நீர்ப்பரப்பில் ஓசை உண்டானது.

‘‘மேம் ஸாஹிப், நீங்க பெண்கள் படிக்கிற பள்ளிக்கூடத்தில் ஆசிரியரா வேலை பார்க்குறீங்கள்ல?’’

அவன் தன்னை எப்படித் தெரிந்து வைத்திருக்கிறான் என்பதைப் பற்றி ஆச்சரியப்பட்டவாறு, ‘‘ஆமாம்...’’ என்ற அர்த்தத்தில் அவள் தலையைத் தாழ்த்தினாள்.

‘‘நான் பார்த்திருக்கேன்.’’

‘‘ம்...’’

அவன் மீண்டும் சாதாரணமாக எந்தவித சத்தமும் இல்லாமல் துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்தான்.

‘‘உன் அப்பா எங்கே இருக்காரு?’’

‘‘தெரியாது. ஆனால், நான் கண்டுபிடிப்பேன்.’’

‘‘பேரு?’’

‘‘தெரியாது, மேம் ஸாஹிப். என் அம்மா ஒரு வாரம்தான் என்கூட இருந்தாங்க. இருந்தாலும் கண்டுபிடிக்க வழி இருக்கு!’’

சிந்தித்துப் பார்த்தபோது மனதில் ஒரு காட்சி தெளிவாகத் தெரிந்தது.

பதினேழோ, பதினெட்டோ வருடங்களுக்கு முன்பு இவனுக்கு என்ன வயதிருக்கும்? பதினெட்டுக்கு மேல் இருக்காது.

பதினேழோ, பதினெட்டா வருடங்களுக்கு முன்பு ஒரு மே மாதத்தில் ஏரிக்கரைக்கு வந்த ஒரு வெள்ளைக்காரன் தங்கியிருந்த இடத்திற்கு தரகர்களில் யாரோ ஒருவன் ஒரு இளம்பெண்ணைக் கொண்டு வருகிறான்.

அவர்கள் ஒருவரோடொருவர் பேசுவதற்கு எதுவும் இல்லை. வெள்ளைக்காரனுக்கும் ஒரு இரை கிடைத்திருக்கிறது.

வெள்ளைக்கார துரையின் சந்தோஷ வாழ்க்கையின் நினைவுச் சின்னங்களில் ஒன்று - இதோ படகில் வெள்ளைநிறக் கண்களுடனும், செம்பு நிற முடியுடனும், தழும்புகள் விழுந்த முகத்துடனும் இருக்கும் ஒரு இளைஞனாக உட்கார்ந்திருக்கிறது.

ஏரியின் கிழக்கு மூளையில் பிரகாசத்தின் ஒரு கீற்று தெரிந்து கொண்டிருந்தது. மேற்கு திசையிலிருக்கும் சியீலமடைந்த கோவிலுக்குக் கீழே, ஏரிக்கு அருகில் கொத்திக் கொண்டிருக்கும் வாத்துக் கூட்டத்தை நீலநிற நீர்ப்பரப்பின் மீது தெரியும் நுரைகளைப் போல நாம் பார்க்கலாம்.

‘‘சீசன் தொடங்க இந்த முறை தாமதமாகும், இல்லையா மேம் ஸாஹிப்?’’

‘‘ஆமா...’’

‘‘போன வருடம் வெள்ளைக்காரர்கள் குறைவாக இருந்தாங்க. இந்த வருடம் எப்படியோ?’’

அவன் யாரிடம் என்றில்லாமல் சொன்னான்:

‘‘இந்த முறை பார்ப்பேன்னு நினைக்கிறேன். என்... என்...’’

அவன் சொல்ல வந்ததை முடிக்க சிரமப்படுவதைப் பார்த்தபோது, அவளுக்கே தமாஷாக இருந்தது. அவள் அதை முடித்தாள்.

‘‘பிதாஜி...’’

அவனுடைய முகத்தில் ஒரு மலர்ச்சி தோன்றி மறைந்தது.

‘‘ம்... பேருந்து நிலையத்தில் தின்னுவின் பெரியம்மா என் கையைப் பார்த்துச் சொன்னாங்க.’’

தலையைச் சாய்த்து வைத்துக் கொண்டு ஏரியின் மையப் பகுதியைப் பார்த்தவாறு துடுப்பைப் போட்டுக் கொண்டிருந்த புத்துவின் கண்களில் எதிர்பார்ப்பின் ஒளி தெரிந்தது.

‘‘பார்க்குறப்போ நீ என்ன கேட்பே?’’

‘‘என்ன கேக்குறது? நான் எதுவும் கேட்க மாட்டேன். வெறுமனே பார்க்கணும்... அவ்வளவுதான்.’’

விமலாவால் சிரிக்க முடியவில்லை. மனதின் அடித்தளத்தில் எங்கோ ஒரு பனிக்கட்டி உருகும் அனுபவத்தை அவள் உணர்ந்தாள்.

எனக்கு எதுவும் வேண்டாம். சும்மா பார்த்தா போதும்...

முட்டாளைப் போல சிளீக்கவும், பேசவும் செய்யும் அந்த இளைஞனிடம் சொன்னால், அவனால் புரிந்துக் கொள்ள முடியுமா? நானும் வெறுமனே பார்த்தால் போதும் புத்து. அதுக்கு மேல எதுவும் வேண்டாம்...

கடையிலும் மலைச்சரிவிலிருந்த வீடுகளிலும் விளக்குகள் எரிந்தன. மண்டபத்திற்கு மேலே பெரிய விளக்கு பால் நிறத்தில் வெளிச்சத்தைப் பரவவிட்டுக் கொண்டு கண்ணைத் திறந்தது. பைன் மரக்காடுகள் நிழல்களாக மாற ஆரம்பித்தன.

படகுத் துறை நெருங்கிக் கொண்டிருந்தது.

‘‘நிறுத்தவா, மேம் ஸாஹிப்? இல்லாட்டி, இன்னொரு சுற்று...?’’

‘‘வேண்டாம்...’’

கல் மேடையிலிருந்து நீருக்குள் இறக்கிக் கட்டப்பட்டிருந்த மரப்பலகைகளாலான ப்ளாட் ஃபாரத்திற்கு அருகில் அந்த இளைஞன் படகை நிறுத்தினான்.

அவள் வெளியே வந்தாள்.

ஹேண்ட் பேக்கிலிருந்து ஒரு எட்டணா நாணயத்தைத் தேடி எடுத்து நீட்டினாள். அவன் சட்டையின் உள் பாக்கெட்டிற்குள் கையை விட்டு தேடுவது மீதி காசுகளைத் தருவதற்காகத்தான் என்று அவள் நினைத்தாள்.

‘‘ம்... வச்சுக்கோ... மீதி ஒரு தேநீர் குடிக்க...’’

அவன் தன் மஞ்சள் நிறப் பற்களைக் காட்டிச் சிரித்தான். பாக்கெட்டிற்குள்ளிருந்து அவன் வெளியே எடுத்தது தோலாலான ஒரு பை.

அதற்குள்ளிருந்து மிகவும் கவனமாக வெளியே எடுத்தத் தாளை நீட்டிக் கொண்டு அவன் சொன்னான்:

‘‘பாருங்க, மேம் ஸாஹிப்.’’

தாள் அல்ல. பழைய ஒரு புகைப்படம் கால ஒட்டத்தால் அவனுடைய முகத்தில் இருப்பதைப் போல புள்ளிகள் விழுந்து தவிட்டு நிறத்தில் மாறி விட்டிருந்த ஒரு புகைப்படம் படகுத்துறைக்கு முன்னால் எரிந்து கொண்டிருந்த விளக்கு வெளிச்சத்தில், குதிரை மீது அமர்ந்திருக்கும் அரைக்கால் சட்டையும் கோட்டும் அணிந்திருக்கும் ஒரு இளம் வெள்ளைக்காரனின் உருவம் அதில் இருந்தது. அவள் ஒரு நிமிடம் அதையே பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள்.

திரும்பத் தந்தபோது அவன் குரலைத் தாழ்த்திக் கொண்டு சொன்னான்:

‘‘நான் கண்டு பிடிப்பேன்னு சொன்னதற்கான ரகசியம் இதுதான், மேம் ஸாஹிப். யார்கிட்டயும் நான் இதைச் சொன்னது இல்ல.’’

பேருந்து நிலையம் காலியாகக் கிடந்தது. கருப்புச் சட்டைகளும், முதுகில் கயிறுகளுமாக இருந்த சுமை தூக்கும் தொழிலாளிகள் கால தூதர்களைப் போல குனிந்து உட்கார்ந்து கொண்டு காவல் இருந்தார்கள்.

தபால் அலுவலகத்தின் வாசலுக்கு அடுத்து நின்றுகொண்டிருக்கும் பட்டாளக்காரர்களின் கண்களை முகத்தைத் திருப்பாமலே பார்க்க முடிந்தது. அவள் நடையில் சற்று வேகத்தைக் காட்டினாள்.

மேற்குப் பக்கமிருந்த பாதையிலிருந்து மேல் நோக்கிச் செல்லும் வழி திரும்பும் இடத்தில் நின்று கொண்டு பார்க்கும் போது, போர்டிங் ஹவுஸின் வாசலில் இருக்கும் உயரமான கம்பித் தூணில் இலைகளுக்கு நடுவில் அழுது கொண்டிருக்கும் ஒரு நட்சத்திரத்தைப் போல விளக்கு தெரிந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel