
தூக்கக் கலக்கத்தால் தொண்டை ‘கரகர’வென்றிருந்தது.
‘‘நான் போறேன் டீச்சர்ஜி.’’
என்ன சொல்வது என்று சிந்தித்த அவள் தடுமாறினாள். இறுதியில் சொன்னாள்:
‘‘இனிமேலும் பார்ப்போம்.’’
அவர் சிரித்தார்: ‘‘அப்படிச் சொல்ல எனக்குத் தைரியம் போதாது டீச்சர்ஜி. அதிகபட்சம் நான்கு மாதங்கள்தான்னு நம்மளைக் காப்பாத்துறவரு சொல்லிட்டாரு...’’
தூக்கக் கலக்கம் அவளுடைய கண்களிலிருந்து மறைந்து கொண்டிருந்தது.
‘ம்... அதுதான் எனக்கும் லாபம். அதற்குத் தெய்வத்திற்கு நன்றி சொல்லணும். நுரையீரல் புற்றுநோய்க்கு ஒரு வருடம்தான் விடுமுறை. ஒரு நான்கு மாதங்கள் நமக்கு போனஸ்ஸாக அவர் தந்திருக்காரு.’’
தான் கூறிய வார்த்தைகளை ரசித்ததைப்போல அவர் சிரித்தார்.
அவள் எதுவும் பேசவில்லை.
‘‘நமஸ்தே டீச்சர்ஜி.... நல்லது வரட்டும்...’’
‘‘நம்ஸ்தே...’’
அவர் இரண்டு நான்கு அடிகள் நடந்த பிறகு திரும்பி நின்றார்.
அவள் அதே இடத்தில் நின்றிருந்தாள்.
‘‘கடன் கேட்ட ஒரு மாலை நேரம் மீதமிருக்கு. மறந்துடாதீங்க...’’
அவர் உரத்த குரலில் சிரித்துக்கொண்டே கால்களை இழுத்து இழுத்து நடந்து சென்றார்.
சாமான்களைச் சுமக்கும் இரண்டு கூலியாட்கள் அவருக்குப் பின்னால் சென்றார்கள். அவருடைய பாதுகாவலர் எங்கே?
வராந்தா வழியாக அறைக்குத் திரும்பிச் சென்றபோது அமர்சிங்கை அவள் பார்த்தாள். அவனுடைய முகம் நிறைய சிரிப்பு இருந்தது.
‘‘சர்தார்ஜி நல்ல வசதி படைச்ச மனிதர் டீச்சர்ஜி. எனக்கு எவ்வளவு பக்ஷீஸ் தந்தார் தெரியுமா? பத்து ரூபாய்...’’
‘‘அமர்சிங், எங்கே அவரோட பாதுகாவலர்?’’
‘‘பாதுகாவலரா? அவர் தனியாகத்தான் இருந்தார் பீபிஜி.’’
அவள் கதவை மூடினாள்.
நிறம் மங்கிப் போய் காணப்பட்ட கம்பிக் காலைத் தாண்டியிருந்த கல்லால் ஆன தளத்தில் நன்கு மூடியிருந்த வானம் விழுந்து உறங்கிக் கொண்டிருந்த குளிர்ச்சியான ஏரியைப் பார்த்தவாறு அவள் நின்றிருந்தாள்.
கோவில் பகுதியும் மணல் விரிக்கப்பட்ட முற்றமும் மண்டபமும் ஆள் அரவமற்றுக் கிடந்தன.
மூன்று பஹாடி பையன்களை ஏற்றிக் கொண்டு வந்து கொண்டிருக்கும் படகின் அன்னப்பறவை தலை தன் கால்களுக்குக் கீழே நெருங்கியதும், அவள் பார்த்தாள். புத்து தன்னுடைய மஞ்சள் நிறப் பற்களைக் காட்டிச் சிரித்தான்.
அவன் கீழே படகை நிறுத்தினான்.
‘‘சீஸன் எவ்வளவு சீக்கிரமா முடிஞ்சிருச்சு... மேம் ஸாப்!’’
‘‘உண்மைதான்.’’
‘‘யாரும் வரல.’’
அவளும் உயிரற்ற குரலில் சொன்னாள்:
‘‘யாரும் வரல....’’
‘‘அடுத்த வருடம் பார்ப்போம். அப்படித்தானே மேம் ஸாப்?’’
அவன் என்ன கூறுகிறான் என்பதைக் கவனிக்காமலே அவள் மெதுவான குரலில் திரும்பிச் சொன்னாள்:
‘‘ம்... அடுத்த வருடம்...’’
மேம் ஸாப் வேண்டிய அளவிற்கு ஆர்வம் காட்டவில்லை என்ற சந்தேகத்துடன், தோல் நிறத்திலிருந்த கனமான சட்டையின் மார்புப் பகுதியைத் தட்டியவாறு சற்று உரத்த குரலில் புத்து கேட்டான்:
‘‘வராம இருக்கமாட்டார்... அப்படித்தானே மேம் ஸாப்?’’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook