
மாலை நேரத்தில் அமர்சிங் சிறிது நேரம் ஓய்வு வேண்டும் என்று கேட்டான். மூன்று மைல்கள் தூரத்திலிருக்கும் அவனுடைய சொந்தக்காரர்களில் ஒருவர் இறக்கும் நிலையில் இருப்பதாகவும், பொழுது இருட்டுவதற்கு முன்பே திரும்பி வந்து விடுவதாகவும் அவன் சொன்னான்.
அவள் போர்ட்டிகோவிற்குக் கீழே முற்றத்தில் நின்றிருந்தாள்.
கோல்டன் நூக்கிற்கு முன்னாலிருந்து படிகளில் சர்தார்ஜி நடந்து வருவது தெரிந்தது. அவர் கீழ்நோக்கி இறங்கிப் போவார் என்று அவள் நினைத்தாள். ஆனால், அவர் நேராக வேலிக்கு அருகில் வந்தார்.
‘‘குட் ஈவ்னிங்!’’
‘‘ஈவ்னிங்.’’
‘‘இன்றைய படகு சவாரி எப்படி இருந்தது?’’
‘‘நான் படகுப் பயணம் போனேன்னு யாரு சொன்னாங்க?’’
முள் வேலி இணைக்கப்பட்டிருந்த கான்க்ரீட் தூணைப் பிடித்துக் கொண்டு அவருடைய நீளமான விரல்களைப் பார்த்தவாறு அவள் கேட்டாள்.
‘‘நான் யூகிக்கக் கூடாதா? உங்க முழு மனதையும் வேணும்னா ஒரு புத்தகம் போல நான் படிக்கலாம். ஆரவாரங்கள்ல இருந்து எல்லாவற்றையும் பார்க்கணும்ன்றதுதான் உங்க விருப்பம். ஏரியில கூட்டம் அதிகமாக இருக்குறப்போ படகுப் பயணம் செய்றதுல விருப்பம் இல்லைன்னாலும் நான் அழைச்சுப்போ போகலாம்னு முடிவு எடுத்தீங்க. நான் வரல. அப்போ படகுல பத்து தடவைகளாவது சுற்றியே ஆவது என்ற பிடிவாதத்துடன் நீங்க வெளியிலயே இறங்கியிருப்பீங்க.’’
‘என்ன, நான் சொல்வது சரிதானா?’ என்பது மாதிரி அவர் தன் கண்களை உயர்த்தினார்.
‘‘ஒரு சிகரெட் புகைக்கட்டுமா? யாருக்கும் தெரிய வேண்டாம்...’’
‘‘தெரிஞ்சா என்ன?’’
‘‘என்னைக் காப்பாற்றும் கடவுளுக்குத் தெரியக் கூடாதுன்னு நான் சொன்னேன்...’’
சிகரெட்டை இழுத்து சுவாரசியமாகப் புகை விட்டவாறு அவர் சொன்னார்:
‘‘எனக்கும் நண்பருக்குமிடையில் எப்பவும் ஒரு கயிறு இழுக்குற போட்டிதான்.’’
‘‘உங்களோட பாதுகாவலரை நான் பார்த்ததும் இல்லை.’’
‘‘பார்க்க முடியாது. அதுதான் அவரோட சிறப்பே...’’
அவர் வேலிக்கப்பால் சுதந்திரமாகச் சுற்றி நடந்தார் - பேசக்கூடிய தூரத்தில்.
‘‘டீச்சர்ஜி!’’
அவள் பார்த்தாள்.
‘‘நான் ஒரு தமாஷ் சொல்லட்டுமா?’’
‘கேட்கிறேன்’ என்பது மாதிரி அவள் நின்றாள்.
‘‘எனக்கு உங்களைப் பிடிச்சிருக்கு. எந்தக் காரணமும் இல்லாமல்...’’
அந்த மனிதரின் வறண்டுபோன அவலட்சணமான முகத்தில் இரத்தம் ஓடி மறைவதைப் பார்த்து, அவள் திகைத்துப் போய் நின்றாள்.
ஏதாவது சொல்ல வேண்டுமே என்று நினைத்து அவள் முயற்சி செய்தாள். இயல்பாக இருக்க முயற்சித்துக்கொண்டு அவள் சொன்னாள்:
‘‘நான்... நான் யார்னுகூட உங்களுக்கு தெரியாதே?’’
‘‘அதுதான் வேண்டியது. உங்களுடைய சூழல் முழுவதையும் பற்றி நான் மற்றவர்கள்கிட்ட கேட்டுத் தெரிஞ்சிக்கலாம். எத்தனையோ விஷயங்களை... எல்லாம் சேர்த்து வர்றப்போ உங்களைப் பற்றிய படத்துல ஆயிரம் வேர்களும் கிளைகளும் இலைகளும் வந்து சேரும். நீங்க ஒரு துளி... அவ்வளவுதான்.’’
சிகரெட்டின் கடைசி புகையை உள்ளே இழுத்த திருப்தியுடன் அவர் அதைத் தூரத்தில் எறிந்தார்.
‘நீங்கள் யார்? எங்கேயிருந்து வர்றீங்க?’ - வறண்ட முகத்தையும் நெற்றியில் அவலட்சணமான கறுப்பு நிறத்தையும் கண்களில் ஒளியையும் கொண்டிருந்த அந்த மனிதரைப் பற்றி கேட்பதற்குப் பல விஷயங்கள் இருந்தன.
‘‘ம்... பிறகு... டீச்சர்ஜி, ஒருவேளை...’’
அவள் அமைதியாகக் கேட்கத் தயாரானாள்.
‘‘இடையில் அவ்வப்போது கொஞ்சம் சிரிக்கணும். இல்லாட்டி நான் சொல்ல வந்த விஷயத்தை மறந்திடுவேன்.’’
‘‘நான்... நான் அழலையே!’’
‘‘அழறதைப் பார்த்தா எனக்கு வெறுப்புத்தான் வரும். நீங்க சிரிக்கிறதைப் பார்க்குறதுன்றது மிகவும் அபூர்வமான ஒரு விஷயமா இருக்கு...’’
அவர் கைக் கடிகாரத்தைப் பார்த்தார்.
‘‘ம்... மருந்து சாப்பிடும் நேரம். என்னைக் காப்பவருக்குப் பயப்படணும்!’’
அவர் வேகமாகத் தொளதொளவென்றிருந்த ட்ரவுசரைப் பிடித்து இழுத்துக் கொண்டு நடந்து போவதை அவள் பார்த்துக் கொண்டு நின்றிருந்தாள். பைத்தியமோ?
மாலை நேரத்தில் இருள் படர ஆரம்பித்தது. நடுமுற்றத்திலிருந்த முட்டை வடிவ விளக்கை அவள் போட்டாள். வெளிறிய இருட்டில் மூழ்கிக் கிடந்த அந்தக் கட்டிடத்திற்குள் தனியாக இருக்க அவளுக்குப் பயமாக இருந்தது. அமர்சிங் வருவதற்கு இனியும் எவ்வளவு தாமதமாகுமோ என்னவோ? வராந்தாவைச் சுற்றி நடந்து ஒரு கல்தூணுக்கும் இன்னொரு கல்தூணுக்கும் நடுவில் இருந்த கல்தூண்களிலிருந்த ஸ்விட்சை அழுத்தினாள்.
அறைக்குள் போய் உட்கார்ந்து புத்தகங்களைப் புரட்டிப் பார்த்தாள். பார்த்துப் பழகிப் மேலட்டைகள்... வெறுப்பு...
பகலில் மழை பலமுறை பெய்தது. காற்றுக்கு நல்ல குளிர்ச்சி இருந்தது. மலைச்சரிவில் வழி திரும்பும் இடத்தில் கருங்கற்களால் கட்டப்பட்ட அரை வட்டத்திலிருந்து தெரிந்த காட்சியில் தூரத்தில் மலை உச்சிகள் புகைச் சுருள்களாக மாறின. மலைப் பாதையிலிருந்து அவ்வப்போது ஒரு குளம்புச் சத்தம் கேட்டுக் கொண்டிருந்தது.
வழக்கத்திற்கு மாறாக மதிய நேரத்திலேயே மூடுபனி இறங்கியது. அது ஏரிக்க மேலே முழுமையான ஒரு அலங்காரம் போல பரவித் தெரிந்தது.
மாலை நேரத்தில் மலையிடுக்குகள் வழியாகச் சீறி அடிக்கத் தொடங்கிய காற்றில் மெல்லிய நீர்த்துளிகள் தங்கியிருந்தன.
பல நாட்களுக்குப் பிறகு இக்தாராவின் இசை காற்றில் தவழ்ந்து வந்தது. அதற்குப் பின்னால் சர்தார்ஜியின் மெல்லிய குரலும்.
ஜன்னலின் பாதியைத் திறந்தபோது உள்ளே நுழைந்த குளிர்ச்சியான காற்றில் உடல் நடுங்கியது. பனிப்படலத்தின் வழியாக ‘கோல்டன் நூக்’கின் பிரகாசமான கண்ணாடி ஜன்னல்கள் இளம் மஞ்சள் நிறத்தில் தெளிவாகத் தெரிந்தன.
‘உம் கலிய கட்ட கானீ...
அஹ்ஹாம் தா கஜ்ஜலாமைம்...’
காற்றின் இரைச்சலையும் மீறி வெற்றி பெற்றுக் கொண்டு இக்தாராவின் ஓசை உயர்ந்து கேட்டது. பஞ்சாபி இளம் பெண்ணின் பெருமூச்சுகள் குளிர்ந்து நடுங்கிக் காற்றில் ஏக்கங்களைப் பரவவிட்டுக் கொண்டிருந்தன.
சர்தார்ஜியின் பாதுகாவலன் இன்று தூங்குகிறானோ? இன்று அவரைப் பாட அனுமதித்து விட்டதே!
ஜன்னலை அடைத்து தாழ்போட்டு விட்டு அவள் படுத்தாள்.
பகலில் கண்களைத் திறப்பதற்கு முன்பே கதவைத் தொடர்ந்து தட்டும் ஓசை கேட்டது. தூக்கத்திலிருந்து திடுக்கிட்டு விழித்த அவள் நெஞ்சு அடிக்கக் கேட்டாள்:
‘‘கோன் ஹை?’’
‘‘நான்தான், பீபிஜி...’’
அவள் கதவைத் திறந்தாள். அமர்சிங் கண்களைக் கசக்கிக் கொண்டு வாசலில் நின்றிருந்தான்.
‘‘என்ன?’’
‘‘சர்தார்ஜி அழைக்கிறார்.’’
‘‘இவ்வளவு சீக்கிரமாவா?’’
‘‘உங்கக்கிட்ட சொல்லிவிட்டு போறதுக்காக...’’
கலைந்த ஆடைகளைச் சரி பண்ணாமல், சால்வையால் மூடியவாறு அவள் வராந்தா வழியாக போர்ட்டிகோவிற்கு நடந்தாள். காற்றின் குளிர்ந்தக் கைவிரல்கள் முகத்தைத் தடவிக் கொண்டிருந்தன.
பாதி மலர்ந்திருந்த பகல் வெளிச்சத்தில் அவர் முற்றத்தில் நின்றிருந்தார்.
‘‘தூக்கத்திற்குத் தொந்தரவு உண்டாக்கியதற்கு மன்னிக்கணும் டீச்சர்ஜி?’’
‘‘ம்... பரவாயில்லை...’’
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook