Lekha Books

A+ A A-

மூடு பனி - Page 2

Moodupani

டிப்பதற்கு எதுவுமில்லை. கட்டிலில் படுத்துக்கொண்டே கையை நீட்டினால் தொடக்கூடிய தூரத்தில் வைக்கப்பட்டிருக்கும் புத்தக அலமாரியில் ஒழுங்காக அடுக்கப்படாமல் குவிந்து கிடக்கின்றன புத்தகங்கள். எல்லா புத்தகங்களும் அவள் பல நேரங்களில் படித்து முடித்தவைதாம். கடைசியில் கையில் கிடைத்த புத்தகத்தை எந்தவித உணர்ச்சியும் இல்லாமல் புரட்டிப் பார்த்தாள். அழகான உடம்மை விற்று கிரீடம் வரை விலைக்கு வாங்கிய ஒரு அழகியின் கதை அது. நான்கைந்து பக்கங்கள் வாசித்தாள். அதற்குமேல் அவளால் முடியவில்லை. புத்தகத்தை மெத்தையில் போட்டுவிட்டு கண்களை மூடிப் படுத்தாள்.

மூடப்பட்டிருந்த கண்ணாடிச் சாளரத்தின் சிறு இடைவெளி வழியாகக் குளிர் உள்ளே நுழைந்து கொண்டிருந்தது.

எண்ணற்ற சிறு சிறு சத்தங்கள் ஒன்று சேர்ந்து தாளமாக அது மாறும்போதுதான் அமைதியே மனதில் தோன்றுகிறது. சத்தமில்லாமல் எதுவுமில்லை என்ற உண்மையை அவள் நினைத்துப் பார்த்தாள். இல்லாவிட்டால்... பாருங்கள் இப்போது சுற்றிலும் படு அமைதி நிலவிக் கொண்டிருக்கிறது என்று கூறலாம். நிசப்தமே ஒரு சங்கீதம்தான். மேலே இருக்கும் ஒரு பழைய பலகை கிறீச்சிட்டு அதிலிருந்து தூள்தூளாக என்னவோ விழுந்து கொண்டிருக்கின்றன. அந்தப் பலகை கிறீச்சிடும் சத்தம் கேட்கிறது. தூரத்தில் எங்கோ காய்ந்த சுள்ளிகள் ஒடியும் சத்தம் கேட்கிறது. மின்மினிப் பூச்சிகள் தூரத்தில் உண்டாக்கும் சத்தம்!

வடகிழக்குப் பருவமழை காலத்தின் இரவு நேரத்தில் நடுங்கி ஆடிக் கொண்டிருக்கும் தோப்பிலிருந்துதானே அந்த மின்மினிப் பூச்சிகளின் சத்தம் கேட்கிறது? குமயூண் மலைகளில் பகல் நேர வெளிச்சத்தில் அவை அழுது கொண்டிருக்கின்றன... ஒன்பது வருடங்கள் உயிரியல் கற்றுத் தந்த அவளுக்கு மின்மினிப் பூச்சிகளின் பழக்க வழக்கங்கள் தெரியாது.

குமயூண் மலைகளில் பகல் வெளிச்சத்தில், நிசப்தமாக இருக்கும்போது மின்மினிப் பூச்சிகள் அழுகின்றன...

ஃபைலம் ஆர்த்ரோபோடா.... க்ளாஸ்...?

கடவுளே! என்னவெல்லாம் முட்டாள்தனமாகத் தோன்றுகிறது! நிசப்தத்தின் சங்கீதம். வெளியிலிருந்த மூடுபனி அறைக்குள் நுழைந்து முழுமையாக மூடுகிறது.

கதவை யாரோ தட்டும் சத்தத்தைக் கேட்டு அவள் கண்களைத் திறந்தாள்.

எவ்வளவு நேரமாக அவள் படுத்திருக்கிறாள்? அறைக்குள் மூடுபனி நுழையவில்லை. உறக்கத்தின் மெல்லிய படலம் உறைந்திருக்கும் கண்களைத்தான் குறை சொல்ல வேண்டியிருக்கிறது.

மீண்டும் கதவு தட்டும் சத்தம் கேட்டது.

மினுமினுப்பான மரப்பலகைகள் போடப்பட்டிருக்கும் தரையில் நல்ல குளிர்ச்சி இருக்கிறது.

அமர்சிங்காக இருக்கும் என்று எண்ணித்தான் அவள் கதவை திறந்தாள். ரஷ்மி வாஜ்பாய் அங்கு நின்றிருந்தாள்.

நேற்றும் இன்று காலையும் மற்ற மாணவிகள் அந்த இடத்தை விட்டு கிளம்பி விட்டார்கள். ரஷ்மி மட்டும்தான் பாக்கி என்ற விஷயத்தை அப்போதுதான் அவள் நினைத்துப் பார்க்கிறாள்.

‘‘டீச்சர்ஜி, நான் புறப்படுகிறேன்.’’

‘‘நல்லது.’’

ரஷ்மியின் அடர்த்தியான பச்சை நிறத்திலுள்ள கம்பளி கோட் திறந்திருக்கிறது. நெற்றில் பெரிய கருப்புப் பொட்டும் கன்னத்தில் குழிகளும் உள்ள ரஷ்மியின் கண்கள் நடனமாடிக் கொண்டிருந்தன. உள்ளங்கை அளவிற்குப் பெரிதான மலர்கள் நிறைந்த கம்மீஸை அவள் அணிந்திருக்கிறாள். வயதிற்கு மேலான வளர்ச்சி அவளுக்கு இருக்கிறது. அந்த உணர்வுடன்தான் அவள் பனி பொழிந்து கொண்டிருக்கும்போது கூட கோட்டைத் திறந்து விட்டிருந்தாள்.

‘‘இப்போ பேருந்து இருக்கிறதா?’’

நாற்பத்து மூன்று மாணவிகள் மீது இருக்கும் பொறுப்பு அவளிடம் ஒப்படைக்கப்பட்டிருக்கிறதே!

‘‘இருக்கு... ஹல்தானிவரை...’’

‘‘அங்கேயிருந்து?’’

ரஷ்மியின் கண்களில் என்னவோ திருட்டுத்தனம் இருக்கிறது என்பது வெறுமனே தோன்றியதா என்ன? எப்போதும் இல்லாமல் கறுத்த இமைகள் துடித்தன.

‘‘அங்கேயிருந்து... அங்கேயிருந்து வேற பேருந்து இருக்கு டீச்சர்ஜி. கனெக்ஷன் பேருந்து இருக்கு. என் அப்பா ஆளை அனுப்பியிருக்காரு.’’

சாக்லெட் நிறத்திலிருந்த அவளுடைய கன்னங்களில் இரத்தத் துடிப்பு தோன்றி மறைந்தது.

‘‘ம்... சரி...’’

வெளியே வராந்தாவில் போய் நின்றபோது போர்டிக்கோவிற்குள் போகும் கூரைக்குக் கீழே பின்பக்கமாகத் திரும்பி நின்று கொண்டிருந்த அந்த இளைஞனை அவள் பார்த்தாள். சுவரில் கம்பிவலை போட்ட அறிவிப்புப் பலகையில் ஒட்டப்பட்டிருந்த தாள்களில் அவன் எதையோ படித்துக் கொண்டிருந்தான்.

‘‘யார் வந்திருக்கிறது ரஷ்மி?’’

சாதாரணமான குரலில் அவள் கேட்டாள்.

ஒரு நிமிடம் கழித்து ரஷ்மியின் பதில்:

‘‘ம்... அண்ணன்!’’

அதே இளைஞன் திரும்பி நின்றபோது விமலா அவனுடைய முகத்தைப் பார்த்தாள். வெள்ளை நிறக் கண்கள். ‘உன் அண்ணனுக்கு இந்த வெள்ளை நிறக் கண்கள் எங்கேயிருந்து வந்தன?’ என்று கேட்க வேண்டும் போல் அவளுக்கு இருந்தது. முகத்தில் நிழலும் வெளிச்சமும் தெரிய நின்றிருந்த ரஷ்மி வாஜ்பாயின் கண்களைப் பார்த்தபோது, மென்மையான ஒரு கெஞ்சல் இருப்பது தெரிந்தது.

‘‘ம்... போ...’’

‘‘நமஸ்தே, டீச்சர்ஜி’’

‘‘நமஸ்தே!’’

அவள் வராந்தாவின் வழியே நான்கடி தூரம் நடந்து மேலும் சிறிது அக்கறை தோன்ற திரும்பி நின்று புன்னகைத்தாள்.

‘‘டீச்சர்ஜி, நீங்க எப்போ போறீங்க?’’

‘‘நாளை!’’

எதையம் யோசிக்காமல் அவள் பதில் கூறலாம். விடுமுறை நாட்கள் ஆரம்பிக்கும் போது அவர்கள் எல்லோரும் கட்டாயம் அந்தக் கேள்வியைக் கேட்பார்கள். திரும்பி வந்த பிறகும் கேட்பார்கள்:

‘‘டீச்சர்ஜி, நீங்க எப்போ வந்தீங்க?’’

சில நேரங்களில் அவள் எதுவும் பதில் சொல்ல மாட்டாள். திரும்பவும் கேட்டாள் கூறுவாள்:

‘‘நேற்று!’’

சௌக்கிதார் அமர்சிங் அதைக் கேட்டிருக்கிறான். வயதால் உண்டான கோடுகளும் சுருக்கங்களும் இருக்கும். அந்த முகத்தில் ஒரு சிறு சலனமும் இருக்காது.

நாளைக்கும் நேற்றுக்கும் நடுவில் விடுமுறைக்காலம் கடந்து போகிறது. வருடங்களின் வசந்தங்கள்....

விமலாஜி விடுமுறைக் காலத்தின் போது தன்னுடைய வீட்டிற்குப் போவதில்லை என்ற விஷயம் மாணவிகளில் யாருக்காவது தெரிந்துதான் இருக்கும். ஆனால், யாரும் அதைக் கேட்டதில்லை இதுவரையிலும். அந்த வகையில் அதைப்பற்றி அவளுக்கு நிம்மதிதான்.

கறுப்பு நிற ட்ரவுசரும் சட்டையும் அணிந்த பையன் முதுகில் தோல்பெட்டியைச் சுமந்து கொண்டு வெளியே போகிறான். அவனுக்குப் பின்னால் இளம் மஞ்சள் கலந்த நிறமும் வெள்ளை நிறக் கண்களையும் கொண்ட அந்த இளைஞன். அவனுக்குப் பின்னால் தலையைக் குனிந்துகொண்டு ரஷ்மி வாஜ்பாய்.

ரஷ்மி இன்று இரவு வீட்டிற்குப் போய் சேர்ந்து விடுவாளா? நேரடியாகச் செல்லும் பேருந்து காலை ஏழரை மணிக்குத்தான் இருக்கிறது. ஹல்தானியிலிருக்கும் சுற்றுலாப் பயணிகள் இல்லத்தைப் பற்றிய நினைவு அவளுக்கு வந்தது. அவளுடைய கன்னங்களில் இருந்த மினுமினுப்பும் கண்களில் தெரிந்த பிரகாசமும் வரப்போகிற நிமிடங்களைக் கொண்டாடிக் கொண்டிருந்தன.

பிரசிடெண்ட் ட்யூட்டர் என்ற அதிகாரத்தைக் கையில் எடுத்துக் கொண்டு வேண்டுமானால் கிரிஜா சங்கர் வாஜ்பாய்க்கு தந்தி கொடுக்கலாம். ‘‘ரஷ்மி மூன்று முப்பதுக்கு உள்ள பேருந்தில் ஹல்தானிக்குப் புறப்படுகிறாள்.’’

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel