
எதிலும் ஒட்டாமல் மௌனமாக வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த சரண்யாவிற்கு, நெற்றியில் குங்குமமிட்டு தன் அன்பை வெளிப்படுத்தினாள் சிவகாமி. சரண்யா மனம் ஒட்டாமல் பழகுவதைப் பற்றி வருத்தம் இருந்தாலும் 'நாளடைவில் எல்லாம் சரியாகும்’ என்ற நம்பிக்கையில், சரண்யாவின் அலட்சியப் போக்கைப் பொருட்படுத்தாமல் இருந்தாள் சிவகாமி. மோகன், பாண்டிச்சேரிக்குக் குடி போய் ஒரு மாதம் ஆகியது.
கவுன் போட்டுக் கோட்டிருந்த பானு, பெரிய மனுஷியானாள். சாஸ்திரமாக சடங்கு வைக்க ஏற்பாடாகியது. மோகனை அழைக்க போன் பண்ணினான் பரத்.
"ஹலோ"
"ஹலோ" மறுமுனையில் சரண்யாவின் குரல் கேட்டது.
"ஹலோ... சரண்யாதானே... நம்ப பானு வயசுக்கு வந்துட்டாம்மா."
"அதுக்கென்ன?"
"அதுக்கென்னவா? இந்த விஷயத்தை மோகன்கிட்ட சொல்லணும்மா. மோகனை பேசச் சொல்லும்மா. வர்ற ஞாயித்துக்கிழமை நம்ப வீட்டு ஆட்கள் வரைக்கும் சின்னதா சடங்கு சீர் செஞ்சு சிம்பிளா விருந்து வச்சிருக்கோம். நீயும், மோகனும் அவசியம் வரணும்மா. போனை மோகன்கிட்ட குடேன்..."
"அ... அ... அவர் இல்லையே... வர லேட்டாகும்னு சொன்னார். அவர் வந்ததும் நானே சொல்லிடறேன்." அவசர அவசரமாய் பேசிவிட்டு ரிஸீவரை வைத்தாள்.
அதே சமயம் மாடிப்படிகளில் இருந்து வந்துக் கொண்டிருந்தான் மோகன்.
"போன்ல யாரு சரண்யா?"
"அது... அது... ஏதோ ராங் நம்பர்ங்க."
"சரி… சரி… நான் ஒரு முக்கியமான மீட்டிங்குக்கு போறேன். மீட்டிங் மாஸ் ஹோட்டல்ல. டின்னர் மீட்டிங். எனக்காக சாப்பிடாம காத்திருக்காதே. நான் வர லேட் ஆகும். வரட்டுமா?"
"சரிங்க."
மோகனின் அலுவலகக் கார் கிளம்பியது.
சம்பளப் பணத்தில் ஒரு தொகையை அப்பாவிற்கு அனுப்பி வைக்கும்படி மாதா மாதம் மோகன் கொடுக்கும் பணத்தில் பாதி தொகையை மட்டுமே அனுப்புவாள். சில நேரம் அனுப்பாமல் தானே வைத்துக் கொள்வாள். அதில் ஆடம்பரமான வீட்டு அலங்காரப்பொருட்கள், மேக்கப் சாதனங்கள் என்று அனாவசியமாக செலவு செய்தாள். அவளது அப்பா சிதம்பரத்திடம் பணம் எதுவும் பெறக் கூடாது என்பதில் கண்டிப்பாக இருந்தான் மோகன். இதன் காரணமாகவும், தன் புருஷனின் பணம் தனக்கு மட்டுமே சொந்தம் என்ற தவறான உணர்வினாலும் மோகனின் சம்பளப் பணத்தை மனம் போனபடி செலவிட்டாள். சென்னையிலுள்ள அவளது குடும்பத்தினரின் கஷ்டங்கள் தெரிந்தும் தன் இஷ்டப்படி இருந்தாள். இது எதுவுமே தெரிய வாய்ப்புகள் இன்றி வேலையில் மூழ்கியிருந்தான் மோகன்.
சுபமங்கள நாள். பதிமூன்று வயது நிறைந்த பானு பாவாடை, தாவணி அணிந்து மனைப்பலகையில் அமர்ந்திருக்க சாஸ்திரங்களும், சம்பிரதாயங்களும் நடந்தன. மோகனையும், சரண்யாவையும் எதிர்பார்த்து ஏமாற்றம் கொண்டனர். சிவகாமியின் கைப்பக்குவத்தில் மணத்தது அறுசுவை விருந்து. மோகனுக்குப் பிடித்த சேமியா கேசரியை சுவையாகத் தயாரித்து வைத்திருந்தாள் சிவகாமி. அவர்கள் வராததால் அவளது மனம் துன்பப்பட்டது. வழக்கம் போல் எதையும் வெளிக்காட்டிக் கொள்ளாமல் மௌனம் காத்தாள்.
பரத்தின் உலகமே இருண்டது. திடீரென கண்பார்வை பறிபோனவனைப் போல உணர்ந்தான். எதிர்காலம் இருட்டாகத் தோன்றியது.
காலையில் ஆபிஸ் போனதும் மேனேஜர் கொடுத்த கவரைப் பிரித்துப் பார்த்த நிமிடத்திலிருந்து பித்துப் பிடித்தவனைப் போல ஆனான். அவன் வேலை செய்து வந்த நிறுவனம் அவனை வேலை நீக்கம் செய்து விட்டது. அதற்குரிய கடிதத்தையும், கூடவே அவன் வேலைக்கு சேர்ந்த புதிதில் அவன் கையெழுத்துப் போட்டுக் கொடுத்த ஒப்பந்தத்தின் நகலையும் இணைத்து அனுப்பியிருந்தது தலைமை நிர்வாகம்.
அதாவது, 'எப்பொழுது வேண்டுமானாலும், என்று வேண்டுமானாலும், எந்தவிதக் காரணமும் சொல்லாமல், முன் அறிவிப்பு இல்லாமல் வேலை நீக்கம் செய்யலாம்’ என்று எழுதியிருந்த பத்திரத்தில் பரத் கையெழுத்திட்டிருந்தான். அன்றைய கஷ்ட நிலைமையில்’
'எப்படியாவது வேலை கிடைத்தால் போதும் என்கிற ரீதியில் எதைப் பற்றியும் சிந்திக்காமல் கையெழுத்துப் போட்டது தன் தலையெழுத்து என்று நொந்துக் கொண்டான்.
சரண்யா அனுப்பும் சிறு தொகை, சில மாதங்கள் அனுப்பாததால் ஏற்படும் பணமுடை... இத்தோடு இன்று வேலை நீக்கம் வேறு. இதயத்தில் விழுந்த அடி தந்த வலி! சோர்ந்து போன முகத்துடன், தளர்ந்த நடையுடன் வீட்டிற்குள் நுழைந்தான்.
சமையலறையில் நெற்றியில் துளிர்த்த வியர்வையைத் துடைத்துக் கொண்டே வந்த சிவகாமி, பரத்தின் முகத்தைப் பார்த்துக் கலவரமானாள்.
"என்னங்க.. என்ன ஆச்சு? உடம்பு சரியில்லையா? களைப்பா இருக்கா? இதோ போய் காபி கொண்டு வரேன்" நகர்ந்தவளின் கைகளைப் பிடித்துத் தடுத்தான். அவளது தோள் மீது சாய்ந்து அழுதான்.
"ஐய்யோ என்னங்க இது. அழறீங்க. என்னங்க ஆச்சு?" மேலும் பதறி, துடித்துப் போனாள் சிவகாமி.
தோளில் சாய்ந்து அழும் கணவனை மடியில் போட்டு ஆதரவாய் முதுகைத் தடவினாள். சிறிது நேரம் அழ விட்டாள். குமுறிய துக்கம் சற்று அடங்கியது. அதற்குக் காரணம் சிவகாமியின் நிதானமும், அவளது ஆறுதலான அரவணைப்பும். தோள் குலுங்க அழுது முடித்தவன், சிவகாமியின் முகத்தை ஏறிட்டான்.
"நாம மோசம் போயிட்டோம் சிவகாமி. என் வேலை போயிடுச்சு..." எதிர்பாராத இந்தத் தகவலினால் அதிர்ந்து போன சிவகாமி, தன் உணர்வை வெளிப்படுத்திக் கொள்ளாமல் பேசினாள்.
"என்ன காரணம்?" கிணற்றுக்குள்ளிருந்து பேசுவது போல் சிவகாமியின் குரல் மிக மெதுவாகக் கேட்டது.
"எந்தக் காரணமும் இல்லை. காரணம் சொல்ல வேண்டிய அவசியமும் இல்லைங்கறது எழுதப்பட்ட ஒப்பந்தம்."
"சரிங்க... என்ன பண்றது? வேற வேலை தேடுங்க..."
"நடுத்தர வயசாச்சு. பெரிய படிப்பும் இல்லை. ஒண்ணுமில்லாததுக்கு ஏதோ ஒரு வேலைன்னு இருந்துச்சு. அந்த ஆபீஸ் அஸிஸ்டெண்ட் வேலையைத் தவிர வேற ஒரு வேலையும் தெரியாது. எங்கே போய், யார்கிட்டப் போய் எந்தத் தகுதியில வேலை கேட்பேன் சிவகாமி?"
"வேற யார்கிட்டயோ எதுக்காகங்க நீங்க போகணும்? உங்க தம்பி மோகன் இருக்கானே அவன் கிட்ட சொல்லி வேலை கேளுங்க..."
"சரண்யாவைப் பத்தி தெரிஞ்சுமா பேசற? போன்ல பேச விட மாட்டேங்கறா. நேர்ல போலாம்னா அவனைப் பார்க்கறதே அபூர்வமா இருக்கு. அப்படியே சந்திக்க முடிஞ்சாலும் என்னைக்கோ ஒரு நாள் பார்க்கறதுனால நம்ப கஷ்டத்தை சொல்லவும் மனசு வர மாட்டேங்குது. சரண்யா ஒழுங்கா பணம் அனுப்பறதில்லைன்னு அவன்கிட்ட சொன்னா அவங்க ரெண்டு பேருக்குள்ளயும் தகராறு வரும்..."
"ஐய்யோ வேணாங்க... மோகன் நல்லா இருக்கணும். அதையெல்லாம் அவன் கிட்ட சொல்லாம, வேலைக்கு மட்டும் சொல்லி வையுங்க. கிடைக்கும்னு நம்புவோம். நம்பிக்கைதானே வாழ்க்கை..."
"சரிம்மா."
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook