
தகர்ந்து தூள் தூளாவதைத் தவிர வேறு வழியே இல்லை. இப்படிப்பட்ட ஒரு சிந்தனை ஒரே நாளில் ராகவராவின் மனதில் தோன்றிவிடவில்லை. மிகவும் மெதுவாகத் தெளிவற்ற ஒரு புகையைப்போல காற்றில் கலந்து வந்து அவனுடைய மூளைக்குள் அது நுழைந்தது. எனினும், கோபத்தை மிகவும் பலம் பொருந்தியதாக ஆக்கியதும் கம்பீரமாகத் தோற்றம் தருவது மாதிரி ஆக்கியதும் ஜமீன்தார் மீது கொண்ட வெறுப்பு அல்ல. தன் மீதும் வாழ்க்கை மீதும் மிகப்பெரிய அளவிலும் அசாதாரணமான விதத்திலும் அவன் கொண்ட ஈடுபாடே அதற்குக் காரணம்.
ராகவராவ் மெதுவாக வாழ்க்கை என்னும் முஷ்டியை விரித்தான். விரித்த முஷ்டிக்குள் கோபத்தால் வெந்து போன கணக்கற்ற நிமிடங்களுக்கு மத்தியில் அன்பு ஒளிவீசும் ஒரு மலர் அவனுடைய பார்வையில் பட்டது. அடுத்த நிமிடம் அவனுடைய முகம் ஆனந்தத்தால் பிரகாசமானது.
சுந்தரி!
மூன்று வருடங்களுக்கு முன்பு நடந்த சம்பவம் அது. பருத்தித் தோட்டத்தில் நடைபெற்ற அந்தச் சம்பவம் ராகவராவின் மனதில் வலம் வந்தது. தோட்டத்தில் பனிப்போர்வையைப்போல வெள்ளை நிறத்தில் பருத்திப்பூக்கள் காணப்பட்டன. அவன் காலை முதல் பருத்தி சேகரிக்கும் வேலையில் ஈடுபட்டிருந்தான். வெள்ளை மலர்களுக்கு மத்தியில் சாம்பல் நிறத்தில் ஒன்றோ இரண்டோ பூக்களைக் கண்டால் அதைப் பறித்து வேறொரு பையில் அவன் போடுவான். அவன் படுவேகமாகத் தன் கைகளை இயக்கி பருத்தியைச் சேகரித்துக் கொண்டிருந்தான். அவனுடைய தந்தையால் அன்று வேலைக்கு வர முடியவில்லை. அதனால் இரண்டு ஆட்கள் செய்ய வேண்டிய வேலையை ராகவராவ் மட்டும் செய்து முடிக்க வேண்டும்.
ராகவராவ் வாய்க்குள் பாட்டொன்றை முணுமுணுத்தபடி பருத்தி பறித்துக் கொண்டிருந்தான்.அப்போது ஒரு பெண் பருத்தி சேகரித்துக் கொண்டு தோட்டத்தின் எதிர் பகுதியிலிருந்து தான் இருக்குமிடத்திற்கு வந்து கொண்டிருப்பதை அவன் பார்த்தான். ராகவராவ் அவளைப் பார்த்து பாட்டு பாடவில்லை. வெறுமனே வேலைக்கு மத்தியில் களைப்பு தெரியாமல் இருக்கவேண்டும் என்பதற்காகத்தான் அவன் பாடினான். பாட்டின் ஒவ்வொரு வரியிலும் உழைப்பின் இசை ததும்பியிருந்தது. ராகவராவ் திடீரென்று பாட்டை நிறுத்தினான். அந்தப் பெண் பருத்திச் செடிகளுக்கு நடுவில் அவனுக்கு முன்னால் வந்து நின்றபோது அவன் அவளுடைய முகத்தைப் பார்த்துச் சிரித்தான்.
ராகவராவ் சிறையின் இருட்டறைக்குள் படுத்துக்கொண்டு அந்தக் காட்சியை நினைக்க முயற்சித்தான். முதல்நாள் சுந்தரியை அவன் எப்படிப் பார்த்தானோ அதே மாதிரி இப்போதும் பார்க்க முயன்றான்.
சுந்தரியின் வெண்மையான பற்கள் அவனுடைய கண்களுக்கு முன்னால் தோன்றின. அந்தப் பற்கள் முத்துமாலையைப்போல அவளுடைய உதடுகளுக்கு நடுவில் பிரகாசித்துக் கொண்டிருந்தன. சுந்தரியின் ப்ளவ்ஸ் அப்போது அவனுடைய ஞாபகத்தில் வந்தது. சிவப்பு நிற ப்ளவ்ஸுக்கு மேலே சிறிய கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. அவள் திரும்பி நின்றபோது ப்ளவ்ஸின் பின்பகுதி திறந்து கிடப்பதை ராகவராவ் பார்த்தான். அதன் நூல்கள் அவளுடைய வெண்மையான உடலில் பன்னீர் மலர்களின் இதழ்களைப் போல தெரிந்தன. முடியில் சிறு சலங்கைகளைக் கோர்த்துத் தொங்கவிட்டிருந்தாள். சிவப்பு நிற நாடாவால் தலைமுடியைக் கட்டிவிட்டிருந்தாள். சுந்தரியிடம் ஒருவித பதைபதைப்பு இருப்பது தெரிந்தது. அவள் வேகமாகத் தாவணியின் முனையை மார்பு நோக்கி இழுத்துவிட்டாள். அவளுடைய தாவணியும் சிவப்பு நிறத்தில்தான் இருந்தது. அதன்மீதும் கண்ணாடித் துண்டுகள் பதிக்கப்பட்டிருந்தன. வெயில் பலமாக அடிக்கும்போது அந்தக் கண்ணாடித் துண்டுகள் பிரகாசிக்கும் அந்தப் பிரகாசம் பருத்தியின் வெள்ளை நிறத்தின் மீது படும்போது கண்கள் பயங்கரமாகக் கூசும்.
சுந்தரி பருத்தியைப் பறிப்பதற்காக கையை உயர்த்தினாள். அவள் முழங்கை வரை கண்ணாடி வளையல்கள் அணிந்திருந்தாள்.
நெற்றியில் பச்சை நிறத்தில் பொட்டு வைத்திருந்தாள். ராகவராவின் பார்வை சிறிது நேரம் சுந்தரியின் முகத்தின் மீது நிலைபெற்று விட்டது. பிறகு மெதுவாகப் பார்வையைக் கீழ்நோக்கிச் செலுத்தினான். அவளுடைய நீல நிறக் கண்களில் ராகவராவ் தன்னையே இழந்து விட்டான். எவ்வளவு வெள்ளையாக இருக்கிறாள்! அழகான உதடுகள்! எல்லாம் ஒரு நிமிடத்தில் முடிந்துவிட்டது. சுந்தரி மீண்டும் சிரித்தாள். அந்தச் சிரிப்பில் முதன்முதலில் சிரித்தபோது இருந்த வசீகரமோ அசாதரணமோ இல்லை. முதல் சிரிப்பின் வசீகரத்தை மீண்டும் நினைத்துப் பார்க்க அவன் முயன்றான். காடுகளில் ஒளிந்து நடந்து கொண்டிருந்தபோதும்- போலீஸ், இராணுவம் ஆகியவற்றின் கூர்மையான பார்வையில் சிக்காமல் தப்பித்து ஓடிக்கொண்டிருந்த நேரத்திலும்- பேப்பர் தொழிற்சாலையில் வேலை செய்தபோதும் மலைகளில் மறைந்து திரிந்தபோதும்- ஜமீன்தாரின் சாட்டையடியை வாங்கியபோதும்- சிறையில் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போதும் அவன் சுந்தரியின் முதல் சிரிப்பை ஞாபகத்திற்குக் கொண்டு வந்து ரசிக்க முயன்றான். அந்தச் சிரிப்பிலிருந்து ராகவராவ் பலத்தைச் சேகரித்திருந்தான். சில நேரங்களில் அந்தச் சிரிப்பு பற்றிய நினைப்பு அவனை மென்மையான இதயத்தைக் கொண்டவனாகவும் சாதுவாகவும் மாற்றியது. அதனால் அவன் அந்தக் காட்சியை சிறிதும் தயங்காமல் ஒரு ஓரத்தில் விலக்கி வைத்தான். எனினும், அந்தக் காட்சி அவனையும் மீறி அவனுக்கு முன்னால் தோன்றுவது உண்டு. அது அவனிடம் கவலையையும் வேதனையையும் உண்டாக்கும். பாலைவனத்தில் தாகம் உண்டாகித் தவிக்கும் மனிதன் ஒரு துளி நீருக்காக ஏங்கும் போது நீர் கற்பனை வடிவத்தில் அவன் முன்னால் வந்து நிற்கும். அதைப்போல ராகவராவும் தாகத்தின் கடுமையை அவ்வப்போது அனுபவிக்கிறான். முதல் சிரிப்பில் இருந்த அந்த அசாதாரண அழகும் அந்த அழகின் இதயத்தைக் கொள்ளை கொள்ளக் கூடிய தன்மையும் அவனுக்கு நன்கு பழகிப் போன ஒன்றே.
இப்போது அந்தக் காட்சியை மீண்டும் காண ராகவராவ் விரும்பினான். அதற்காக ஆசைப்பட்டபோது தேனைப்போல இனிய ஒரு அசாதாரண அமைதியையும் பயங்கரமான வேதனையையும் ஒரே நேரத்தில் அவன் அனுபவித்தான்.
சுந்தரி லம்பாடி சமுதாயத்தைச் சேர்ந்தவள். அவளுடைய தந்தையின் பெயர் பாக்யா. பாக்யா நன்றாகப் பாடக்கூடிய ஒரு நாடோடி. அவன் தன்னுடைய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களுடன் சில நாட்களுக்குப் போகாவதி நதிக்கரையில் முகாமிட்டான். பருத்தி பறிக்கும் சமயங்களில் ஜமீன்தார் அந்த நாடோடிகளைப் பணிக்காக அமர்த்துவார். அதனால் சுந்தரியும் பருத்தி பறிக்கும் வேலைக்காக வந்திருந்தாள். பருத்தி பறிக்கும் வேலை முடிந்துவிட்டால் அவர்கள் காட்டிலிருந்து விறகு, காட்டுப் பொருட்கள் போன்றவற்றைச் சேகரிப்பதில் ஈடுபடுவார்கள். சில நேரங்களில் கிக்கர் மரங்களிலிருந்து பசை சேகரித்து, அதைத் தெருக்களில் உரத்த குரலில் கூவி விற்பார்கள்.
முதல் சந்திப்பிற்குப் பிறகு பல வேளைகளில் ராகவராவும் சுந்தரியும் ஒருவரையொருவர் சந்திப்பார்கள்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook