
அகந்து நான்கு பக்கங்களிலும் பார்த்தவாறு மெதுவான குரலில் சொன்னான்: "இந்தப் பல்லக்குல ஜமீன்தாரோட அம்மாவின்... வருவான்"
"யார் வருவாங்க?"- ராகவராவ் மீண்டும் கேட்டான்.
"அவனோட அம்மாவின்... அவனோட மகனின்... இவங்கதான் வரப்போறது" அவன் சொன்னதன் இறுதிப்பகுதி மிகவும் அசிங்கமாக இருந்தது.
ராகவராவிற்கு எதுவும் புரியவில்லை. அவன் ஆச்சரியத்துடன் அகந்துவையே பார்த்தான்.
அகந்து காறித்துப்பி விட்டு சொன்னான்: "ஒரு வருடத்துக்குப் பிறகு பெரிய ஜமீன்தாரோட மகன் திருமணம் செய்யப்போற மணப்பெண்ணை இந்தப் பல்லக்குல சூரியப்பேட்டையில இருந்து ஸ்ரீபுரத்துக்குக் கொண்டு வருவாங்க. அப்போ நானும் நீயும்தான் அனேகமா இந்தப் பல்லக்கைச் சுமப்போம்..."
இதற்கிடையில் ஜமீன்தாரின் ஒரு பணியாள் ஓடிவந்து அகந்துவின் முதுகில் ஒரு அடி கொடுத்துவிட்டு கோபக்குரலில் சொன்னான்: "என்னடா மெதுவா நடக்குற! மற்ற பல்லக்கெல்லாம் எவ்வளவு தூரம் முன்னாடி போயிருக்குன்னு தெரியுதுல்ல! வேகமா நட... இல்லாட்டி...!"
அகந்துவும் மற்ற பல்லக்குச் சுமப்பவர்களும் கழுதைகளைப் போல ஓடத் தொடங்கினார்கள். ராகவராவ் கண்ணாடியைச் சுமந்து கொண்டு அவர்களுடன் ஓடினான்.
ஸ்ரீபுரத்திலிருந்து சூரியப்பேட்டைக்குச் செல்லும் பாதை மிகவும் மோசமாக இருந்தது. அப்படியே இருந்தாலும், இரண்டு விஷயங்களை ராகவராவால் இப்போதும் மறக்க முடியவில்லை. முதல் விஷயம், இப்போதும் அவனுடைய இதயத்தில் பிரகாசமாகக் காட்சியளித்துக் கொண்டிருக்கிறது. கிராமத்திலிருந்து நீண்டதூரம் போனபிறகு ஒரு மலை மீது அவர்கள் ஏற வேண்டும். வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் ஏறி மலை உச்சியை அடைந்த ராகவராவ் அங்கு நின்றவாறு பல கிராமங்களையும் பார்த்தான். அந்தக் கிராமங்கள் கண்ணாடியைப் போல இப்போதும் அவனுடைய மனதில் தோற்றம் தருகின்றன. பரந்துகிடக்கும் பருத்தித் தோட்டங்கள் பிரகாசமாகத் தெரிகின்றன. அந்தப் பருத்தி ஆந்திராவின் தெளிந்த பனி என்று கூறுவதே பொருத்தமானது. தென்னையோலைகளால் வேயப்பட்டும் மறைக்கப்பட்டும் உண்டாக்கப்பட்ட குடிசைகள் ஒவ்வொன்றும் கல் மண்டபங்களைப் போல் காட்சியளிக்கின்றன. அந்த மண்டபத்தில் கட்டப்பட்டிருக்கும் ஊஞ்சலில் மனிதர்கள் ஆடிக்கொண்டிருக்கிறார்கள். சற்று தூரத்தில் இருட்டிற்கு அடர்த்தி அதிகரித்துக் கொண்டிருக்கிறது. பறவைகள் தங்குவதற்காக அந்தப் பகுதியை நோக்கி வந்து கொண்டிருந்தன.
கஷ்டங்கள் நிறைந்த அந்த வழிப்பயணத்தை ராகவராவ் நினைத்துப் பார்த்தான். அவனுடைய வீடும் கிராமமும் குளங்களும் அசாதாரணமான ஒரு ஓவியத்தைப் போல அவனுடைய கண்ணுக்கு முன்னால் தோன்றியது. அவன் இதற்கு முன்பு ஒருமுறை கூட தன்னுடைய வீட்டையும் கிராமத்தையும் இவ்வளவு தூரத்திலிருந்து பார்த்ததில்லை. அதனால் வாழ்க்கையில் அவன் கண்ட அந்த அழகு, குறிப்பாக தனித்துவம் தெரியும் அந்தப் பேரழகு இப்போது அவனுடைய இதயத்தின் அடித்தளத்தில் தோன்றி அவனுக்கு ஒரு புத்துணர்ச்சியை உண்டாக்கிக் கொண்டிருந்தது. வீடும் கிராமமும் கிராமத்தின் அழகும் இப்போது அவனுடைய மனமென்னும் மணிமாளிகையில் இனம் புரியாத பல நினைவுகளை உண்டாக்கின. சிறையின் அந்த இருண்ட அறைக்குள் இருந்துகொண்டுகூட ராகவராவால் கண்களை மூடிக் கொண்டு அமர்ந்தவாறு அந்த அழகை தொட்டுணரவும் அனுபவிக்கவும் அதை எரித்து சாம்பலாக்கி அழிப்பதற்கான உரிமையும் அவனுக்கு இருக்கிறது காரணம் அந்த அழகுக்காகத்தானே அவன் தன்னுடைய வாழ்க்கை முழுவதும் போராடியிருக்கிறான்!
அந்தப் பயணத்தில் வேறொரு சம்பவம். இப்போதுகூட அது சிறிதும் மறையாமல் பசுமையாக அவனுடைய மனதில் இருக்கிறது. சூரியப்பேட்டையில் இரவு நேரத்தில் ஒரு குதிரை லாயத்தில் அந்தச் சம்பவம் நடந்தது. கிராமத்தின் தலைவர் ஸ்ரீராமபுண்டுலு, புரோகிதர் சீதாராம் சாஸ்திரி, காவல்துறை லட்சுமி காந்தராவ் போன்ற முக்கிய மனிதர்களின் குதிரைகளை அந்த லாயத்தில்தான் கட்டிப் போட்டிருந்தார்கள். அங்குதான் அடிமைப்பணி செய்பவர்களுக்கு இரவு நேரத்தில் தங்குவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன. ராகவராவின் மனதில் காயத்தை ஏற்படுத்தியது குதிரைகளின் சாணமோ, சிறுநீரோ குதிரை லாயத்தின் கெட்ட நாற்றமோ, தரையின் குளிர்ச்சியோ அல்ல. அன்று இரவு அதே குதிரை லாயத்தில் சதரேபத்திபாடியைச் சேர்ந்த ஹரிகதா காலட்சேபம் நடத்துபவர்கள் பாடிய நாடோடிப் பாட்டுகள் இப்போதுகூட ராகவராவின் காதுகளில் கேட்டுக் கொண்டே இருக்கின்றன.
அந்தப் பாடகர்கள் ஜகன்னாத ரெட்டியால் வரவழைக்கப்பட்டவர்களே. திருமணம் நிச்சயம் செய்யப்போகும் அந்த நல்ல வேளையில் அவர்களை அவர்தான் வரவழைத்திருந்தார். மூன்று பேர்களைக் கொண்ட அந்தப் பாடகர்கள் குழுவில் ஒரு மனிதருக்கு வெள்ளை நிறத்தில் தாடி இருந்தது. அவர் ஹரி கதையைக் கூறக் கூடியவர். தீபத்தின் மங்கலான வெளிச்சத்தில் அவருடைய முகம் ஆந்திராவின் சிவந்த மண்ணைப்போல மிகவும் பிரகாசமாக இருந்தது. அவருடைய முகத்தில் இருந்த கோடுகள் ஆந்திராவின் கீறல் அடையாளங்களாகத் தோற்றம் தந்தன. அவரிடம் ஒரு ஒற்றைக்கம்பி வீணை இருந்தது. இரண்டாவது ஆள் ஒரு கோமாளி. வயது குறைவான இளைஞன் அவன். அவன் தலையில் பெரிய தலைப்பாகை கட்டப்பட்டிருந்தது. அவனுடைய முகம் மதுவிலிருந்து வழியும் நுரையைப் போல வாழ்க்கையின் சந்தோஷத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தது. அந்த இளைஞன் ஹரிகதா காலட்சேபத்துக்கு மத்தியில் நகைச்சுவை வார்த்தைகள் மூலமும் கோமாளித்தனங்கள் காட்டியும் எல்லோரையும் மகிழ்ச்சியில் மூழ்க வைத்துக்கொண்டிருந்தான். இதற்கிடையில் அவன் நிகழ்ச்சியைப் பார்த்துக் கொண்டிருந்தவர்களைப் பார்த்து சில கேள்விகள் கேட்பான். அதைக் கேட்டு எல்லோரும் விழுந்து விழுந்து சிரிப்பார்கள். மூன்றாவது மனிதர் மிருதங்கம் வாசிப்பவர்.
இரவு நீண்டு கொண்டிருந்தது. நான்கு பக்கங்களிலும் படுஅமைதி நிலவிக் கொண்டிருந்தது. குதிரைகள் தானியம் சாப்பிட்டும்- அடிமை வேலைக்காரர்கள் கோதுமை உண்டும் தங்களின் வயிற்றை நிரப்பினார்கள்.
கதாகாலட்சேபம் நடத்துபவர்கள் குதிரை லாயத்திற்கு முன்னாலிருந்த கிணற்றின் சுவர் மீது ஒரு விளக்கை எரிய வைத்திருந்தார்கள். அந்த விளக்கின் மங்கலான வெளிச்சத்தில் அவர்கள் தங்களின் நிகழ்ச்சியை ஆரம்பித்தார்கள். கதாகாலட்சேபம் செய்பவர் தாளத்தைப் பிடித்துக்கொண்டு தொடர்ந்தார்: "பல வருடங்களுக்கு முன்னால்..."
கோமாளி அடுத்த வரியைப் பாடினான்.
"அன்னைக்கு ஜகன்னாத ரெட்டியோட ஒரு சின்ன தூசு கூட இல்ல..."
மிருதங்க வாசிப்பிற்குப் பிறகு கதாகாலட்சேபக்காரன் தொடர்ந்தான்:
"அன்னைக்கு வெள்ளை அரிசியால் ஆன சோற்றை எல்லோரும் சாப்பிட்டுக்கிட்டு இருந்தாங்க. வெண்மை நிறத்துல சட்டை அணிஞ்சிருந்தாங்க. இப்போயிருந்து நூறு வருடங்களுக்கு முன்னாடி, வாரங்கல்ல காகித ராஜ்யம் உண்டானப்போ, அந்த ராஜ்யத்தை ஆட்சி செய்தது உர்மாதேவி. அன்று... அன்று... வேலம் தேவாலயத்துக்கு மிகவும் பக்கத்துல ஒரு யோகி இருந்தான்...
கதாகாலட்சேபம் ஆரம்பமானது. மிருதங்கமும் ஒற்றைக் கம்பி வீணையும் அதற்கென்று இருந்த இசையை வெளிப்படுத்தி காற்றை உணர்ச்சி வெள்ளத்தில் மிதக்கச் செய்துகொண்டிருந்தன. ராகவராவ் பரந்து கிடக்கும் ஆந்திராவின் செழிப்பு நிறைந்த புராதன மண்ணில் வாழ ஆரம்பித்தான்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook