
திடீரென்று ஷாக்ரோ உரத்த குரலில் சிரித்தான்: “ஹா... ஹா... ஹா... உங்க முகம் என்ன மாதிரியான முகம்! சரியா சொன்னா ஒரு பெண் செம்மறி ஆட்டோட முகம் உங்களுக்கு. ஹா... ஹா... ஹா...”
என் தலையின் மீது இடி விழுந்ததைப்போல நான் அதிர்ச்சியடைந்து விட்டேன். உண்மையாகச் சொல்லப்போனால், அதைவிட நான் உஷ்ணமாகிவிட்டேன். அவன் அதை ஏதோ விளையாட்டாகச் சொல்வதைப்போல்தான் சொன்னான். ஆனால், என்னுடைய உணர்ச்சிகளை அது மிகவும் வேதனைப்பட வைத்துவிட்டது. சிரிப்பு முற்றி முற்றி கடைசியில் ஷாக்ரோ அழ ஆரம்பித்து விட்டான். வேறொரு காரணத்தால் நானும் அழும் நிலையில்தான் இருந்தேன். என் தொண்டையில் என்னவோ சிக்கிக் கொண்டிருப்பதைப் போல் நான் உணர்ந்தேன். என்னால் எதுவும் பேச முடியவில்லை. வெறித்த கண்களால் அவனைப் பார்க்க மட்டுமே என்னால் முடிந்தது. அதைப் பார்த்ததும் அவன் விழுந்து விழுந்து சிரிக்க ஆரம்பித்தான். சிரிப்பை அடக்க முடியாமல் வயிறைக் கையால் இறுகப் பிடித்துக்கொண்டு அவன் தரையில் படுத்து உருண்டான். அவன் உண்டாக்கிய அவமானத்திலிருந்து தப்பிக்க என்னால் முடியவில்லை. எனக்குத் தாங்க முடியாத ஒரு அவமதிப்பை அவன் ஏற்படுத்தி விட்டான் என்பதென்னவோ உண்மை. எப்படிப்பட்ட கஷ்டத்தையும் அவமானத்தையும் நான் பொறுத்துக் கொண்டிருக்கிறேன் என்பது சிலருக்கு மட்டுமாவது புரியும் என்று நான் நினைத்தேன். இப்படிப்பட்ட கஷ்டங்களை அனுபவித்தவர்களுக்கு இதை மிகவும் எளிதாகப் புரிந்து கொள்ள முடியும்.
“நிறுத்துடா!” -நான் கோபத்துடன் உரத்த குரலில் கத்தினேன். பயந்து போய் வேகமாக எழுந்தாலும், அவனால் சிரிப்பை அடக்க முடியவில்லை. விடாமல் அவன் சிரித்துக் கொண்டே இருந்தான். அவனுடைய கன்னங்கள் வீங்கின. கண்கள் வெறித்துப் பார்த்தன. சிரிப்பால் உண்டான உற்சாகத்தில் அவன் மீண்டும் தரையில் விழுந்தான். நான் அங்கிருந்து எழுந்து நடந்தேன். மனதில் எந்தவித சிந்தனையும் இல்லாமல் நான் முன்னோக்கி நடந்தேன். என் மனதில் அவமானப் பட்டதன் விஷம் கலந்திருந்தது.
இயற்கையின் அழகை முழுமையாக அனுபவிக்க வேண்டும் என்பதற்காக நான் என் இதயத்தைத் திறந்து வைத்தேன். மனதில் ஒரு கவிஞனை பத்திரமாகப் பாதுகாத்து வைத்திருக்கின்ற நான் அவளை (இயற்கையை) எந்த அளவுக்கு ஆழமாகக் காதலிக்க விரும்புகிறேன் என்பதைச் சொல்லிக் கொண்டிருந்தேன். ஆனால், இயற்கை ஷாக்ரோ வடிவத்தில் என்னைப் பார்த்து கேலி செய்து சிரித்தது. பின்னால் பாதத்தின் ஓசை கேட்காமலிருந்தால், இயற்கையையும், ஷாக்ரோவையும் குறை சொல்வதை இனியும் நான் தொடர்ந்து கொண்டிருப்பேன்.
“கோபப்படாதீங்க” -மெதுவாக என் தோளைத் தொட்டவாறு சிறிது வெட்கம் கலந்த குரலில் ஷாக்ரோ சொன்னான்: “நீங்க பிரார்த்தனை செஞ்சுக்கிட்டு இருந்தீங்கள்ல? எனக்கு அது தெரியாமப் போச்சு.”
“தவறு செய்த, சற்று பயந்த நிலையில் இருக்கும் ஒரு குழந்தையைப் போல அவன் பேசினான். என் மனம் மிகவும் கவலையடைந்திருந்தாலும் அவனுடைய முகத்தைப் பார்க்காமல் என்னால் இருக்க முடியவில்லை. அவன் முகத்தில் வருத்தமும் பயமும் கலந்து முகமே என்னவோ போல் இருந்தது.
“நான் இனிமேல் ஒருநாள் கூட உங்களை வேதனைப்பட விடமாட்டேன். சத்தியமா நீங்க வேதனைப்படுற மாதிரி நடக்க மாட்டேன்” என்று சொல்லியவாறு அவன் தலையை இப்படியும் அப்படியுமாக ஆட்டினான். தொடர்ந்து அவன் சொன்னான்.
“எனக்குத் தெரியும். நீங்க ஒரு அப்பிராணி மனிதர். நீங்க வேலை பார்ப்பீங்க. என்னை வேலை செய்யச் சொல்ல மாட்டீங்க. காரணம்- நீங்க ஒரு முட்டாள். பெண் செம்மறி ஆட்டைப்போல ஒரு முட்டாள்...”
இப்படி அவன் என்னைத் தேற்றிக் கொண்டிருந்தான். அவன் என்னிடம் மன்னிப்புக் கேட்டான். அவனுடைய ஆறுதல் வார்த்தைகளுக்கும், மன்னிப்பு கேட்டதற்கும் நான் ஏதாவது செய்தாக வேண்டும் என்ற அளவில் அவன் இதுவரை செய்த தவறுகளுக்கும் இனிமேல் செய்யப்போகிற செயல்களுக்கும் மன்னிப்பு அளிப்பதைத் தவிர எனக்கு வேறு வழியே இல்லை என்றாகிவிட்டது.
அரைமணி நேரம் சென்றதும் அவனுக்கு உறக்கம் வந்துவிட்டது. அவனைப் பார்த்துக் கொண்டே அவனுக்குப் பக்கத்தில் நான் இருந்தேன். தூக்கத்தில்தான் ஒரு முரட்டுத்தனமான மனிதன் பலவீனமானவனாகவும், எதிர்ப்பு சக்தி இல்லாதவனாகவும் மாறுகிறான். ஷாக்ரோவைப் பார்ப்பதற்கே மிகவும் கஷ்டமாக இருந்தது. திறந்த உதடுகளும் வளைந்த புருவங்களும் அவனுக்கு ஒரு குழந்தையின் ஆச்சரியம் படர்ந்த முக அமைப்பைத் தந்தன. அவன் சீராக மூச்சு விட்டுக் கொண்டிருந்தான். சில நேரங்களில் அவன் தலையை ஆட்டியவாறு ஜார்ஜியின் மொழியில் என்னவோ முனகினான்.
ஷாக்ரோவைப் பார்த்துக் கொண்டிருந்த நான் நினைத்தேன். “இவன் என்னுடைய பயண நண்பன். நான் அவனை அந்த இடத்திலேயே விட்டுவிட்டு தாராளமாகப் போகலாம். ஆனால், அவனை விட்டு நான் ஓட நினைக்கவில்லை. மனதில் நினைக்க முடியாத தனி இடத்தைப் பிடித்துக்கொண்ட மனிதன் அவன். வாழ்நாள் முழுவதும் என்னுடன் வரப்போகும் பயண நண்பன் அவன். நான் மண்ணில் மூடப்படும் வரை அவன் என்னுடன் இருப்பான்.
தியோடிஸியா நாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு இல்லை. எங்களைப் போல வேலை தேடி சுமார் நானூறு ஆட்கள் அங்கு வந்திருந்தாலும், பாலம் கட்டும் வேலையை வெறுமனே பார்த்துக்கொண்டு நிற்க மட்டுமே அவர்களால் முடிந்தது. துர்க்கிகளும், க்ரீக் நாட்டைச் சேர்ந்தவர்களும், ஜார்ஜியாக்காரர்களும், ஸ்மோளன்கியிலிருக்கும் ரஷ்யாக்காரர்களும், போல்ட்டாவாயிலிருக்கும் ரஷ்யர்களும் பாலம் கட்டும் வேலையில் தொழிலாளர்களாக ஈடுபட்டிருந்தார்கள். வறட்சியால் பாதிக்கப்பட்டு, வாழ்க்கை மீது அவநம்பிக்கை குடிகொள்ள ஏராளமான மனிதர்கள் அந்த நகரத்தில் இங்குமங்குமாய் அலைந்து திரிந்தனர். க்ரிமியாவிலிருந்தும் அஸோவ் கடற்கரைப் பகுதியிலிருந்தும் வந்த நாடோடிகளும் அங்கு நடந்து திரிந்தனர்.
‘நாங்கள் கெர்ஷிலை நோக்கி நடந்தோம்’ என்று என்னுடைய பயண நண்பன் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றினான். அவன் என்னைப் பார்த்து கிண்டல் செய்வதை நிறுத்தியிருந்தான். ஆனால், அவனுக்கு நல்ல பசி இருந்தது. அவன் ஒரு ஓநாயைப் போல பற்களைக் கடித்துக் கொண்டிருந்தான். தான் உள்ளே தள்ள நினைக்கும் பலவிதப்பட்ட உணவுப் பொருட்களின் அளவுகளைப் பற்றிக் கூறி அவன் என்னை பயமுறுத்திக் கொண்டிருந்தான். சமீப நாட்களாக அவன் பெண்களைப் பற்றி நினைக்க ஆரம்பித்திருந்தான். ‘கிழக்கு திசையில் உள்ளவர்களின்’ குணங்களை அவன் காட்ட ஆரம்பித்திருந்தான். எங்களுக்கு அருகில் கடந்து போய்க் கொண்டிருந்த பெண்களை அவர்கள் எந்த வயதைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் சரி, காதல் வயப்பட்ட வார்த்தைகளைக் கூறாமல் அவன் அவர்களைப் போகவிடுவதேயில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook