
சிறிது கூட உணவு உட்கொள்ளாத இரண்டாவது நாள்தான் இப்போது நடந்து கொண்டிருந்தது.
நான் அந்த மனிதனின் கதையைக் கேட்டுக் கொண்டிருந்தேன். இடையில் அவன் தன் பொருட்களைத் திருடிய நண்பனை வாய்க்கு வந்தபடி திட்டினான். நான் அவனுடைய கதையைக் கவனமாகக் கேட்டேன். அவன் சொன்னதை நான் நம்பினேன். அவன் மீது எனக்குப் பரிதாபம் தோன்றியது. அவனுக்கு இருபது வயது நடந்து கொண்டிருந்தது. அவனுடைய கள்ளங்கபடமற்ற தன்மையைப் பார்த்தால் வயது அதைவிடக் குறைவு என்பது மாதிரியே தோன்றும். தன்னுடைய பணத்தையும், பொருட்களையும் திருடிய அந்த மனிதனுடன் நட்பு கொள்ளும் சூழ்நிலை தனக்கு ஏற்பட்டதை விளக்கியபோது அவன் மிகவும் வருத்தப்பட்டான். அந்தத் திருடப்பட்ட பொருட்களை மீண்டும் பெறவில்லையென்றால் அவனுடைய தந்தை அவனுடைய தலையை வெட்டி வீழ்த்திவிட்டுத் தான் மறுவேலை பார்ப்பார் என்றான் அவன்.
யாராவது உதவி செய்யவில்லையென்றால் ஆரவாரம்மிக்க இந்த நகரம் அவனை விழுங்கப்போவது நிச்சயம் என்று என் மனதில் தோன்றியது. கையில் காசு இல்லாத மனிதர்களுக்கு இந்த நகரத்தில் என்ன நடக்கும். அவர்கள் யாருடைய கூட்டத்தில் போய் சேர்வார்கள் என்பதெல்லாம் எனக்கு நன்கு தெரியும். மனிதர்கள் சிறிதும் மதிக்காத, சமூகத்தில் அனுமதிக்க முடியாத மனிதர்களிடம் போய் அவன் சிக்கிக் கொள்வான் என்று எனக்குத் தோன்றியது. அவனுக்கு உதவ வேண்டும் என்று நான் தீர்மானித்தேன்.
போலீஸ் அதிகாரியிடம் போய் ஒரு டிக்கெட் வாங்கிக்கொண்டு வரலாம் என்று நான் சொன்னதைக் கேட்டு அவன் பதைபதைப்பு அடைந்துவிட்டான். அவன் போகப்போவதில்லை என்று சொன்னான். எதற்காகப் போகவில்லை? அவன் தங்கியிருந்த வீட்டிற்கு வாடகை பாக்கி இருக்கிறதாம். வீட்டு வாடகையைக் கேட்டதற்கு வீட்டின் உரிமையாளரை அடித்திருக்கிறான். அதற்குப்பிறகு அவன் அந்த வீட்டிற்குப் போகாமல் வெளியிலேயே தங்கியிருந்திருக்கிறான். வாடகை கொடுக்காததற்கும், வீட்டுச் சொந்தக்காரரை அடித்ததற்கும் போலீஸ் எந்தக் காரணத்தைக் கொண்டும் தனக்கு நன்றி சொல்லாது என்பதை அவன் புரிந்து கொண்டிருந்தான். வீட்டுச் சொந்தக்காரருக்கு அவன் கொடுத்தது ஒரு அடியா, இரண்டு அடிகளா; இல்லாவிட்டால் மூன்று அடிகளா என்று அவனுக்கே சரியாக ஞாபகத்தில் இல்லை.
நிலைமை மிகவும் மோசமானது. அவனைப் பற்றூமிக்கு அனுப்புவதற்குத் தேவையான பணம் கிடைப்பது வரை நான் இப்போது பார்த்துக் கொண்டிருக்கும் வேலையைத் தொடர்வது என்று முடிவெடுத்தேன். ஆனால் வேறொரு பிரச்சினை பெரிதாகத் தலையை நீட்டியது. பசி, உணவு ஆகியவற்றை நன்கு அனுபவித்திருக்கும் ஷாக்ரோ நாளொன்றுக்கு மூன்று தடவைகளுக்கு மேலாக உணவு சாப்பிட்டான்.
வறட்சி பாதிக்கப்பட்ட இடங்களிலிருந்து மனிதர்கள் ஏராளமான பேர் அந்த நகரத்தில் வந்து குடியேறியதால் துறைமுகத்தில் கிடைக்கக்கூடிய நாள்கூலி மிகவும் குறைந்துவிட்டது. எண்பது கோபெக் கூலியாகக் கிடைத்துக் கொண்டிருந்த எனக்கு இப்போது அறுபது கோபெக் உணவுக்காக மட்டும் செலவழிக்கவேண்டிய சூழ்நிலை உண்டானது. இது ஒருபுறமிருக்க, ஷாக்ரோவைப் பார்ப்பதற்கு முன்பு, க்ரிமியாவிற்குப் போகவேண்டும் என்று நான் தீர்மானித்திருந்தேன். ஒடேஸ்ஸாவில் அதிக நாட்கள் தங்கியிருக்க எனக்கு விருப்பமில்லாமல் இருந்தது. அதனால் இப்போது சொல்லப்போகிற நிபந்தனைகளுடன் இங்கிருந்து கால்நடையாகவே கிளம்பலாம் என்று ஷாக்ரோவிடம் நான் சொன்னேன். டிஃப்லிஸுக்குப் போவதற்கு அவனுக்குத் துணையாக யாரும் இல்லையென்றால் நான் அவனுடன் போக வேண்டும். அதே நேரத்தில் வேறு துணை கிடைத்து விட்டால், நான் அவனிடமிருந்து பிரிந்து போவதாக முடிவெடுத்தேன். தன்னுடைய தொப்பியையும், ஆடைகளையும், காலணிகளையும் மாறி மாறிப் பார்த்துவிட்டு, சிறிது நேரம் ஏதோ தீவிர சிந்தனையில் ஆழ்ந்திருந்த பிறகு அவன் அதற்குச் சம்மதித்தான். கடைசியில் ஒடேஸ்ஸாவிலிருந்து டிஃப்லிஸ் வரை நாங்கள் கால்நடையாகவே நடந்து செல்வது என்று தீர்மானித்தோம்.
கெர்ஸனை அடைவதற்கு முன்பு எனக்கு ஒரு விஷயம் நன்கு புரிந்தது. என் பயண நண்பன் ஒரு அப்பிராணி என்பதையும் இளமைத்தனம் அவனிடம் துடித்துக் கொண்டிருக்கிறது என்பதையும் நான் தெரிந்து கொண்டேன். வயிறு நிறைந்து விட்டால் சந்தோஷத்தால் துள்ளிக் குதிக்கும் அவன் வயிறு நிறையாவிட்டால் ஒரு கொடூரமான மிருகத்தைப் போல் மாறிவிடுவதையும் நான் பார்த்தேன்.
நடக்கும்போது காக்கஸஸ் பகுதியைப் பற்றியும் ஜார்ஜியாவின் நிலச்சுவான்தார்களின் வாழ்க்கை முறைகளைப் பற்றியும் அவர்களின் ஆடம்பரங்களைப் பற்றியும் விவசாயத் தொழிலாளர்களிடம் அவர்கள் எப்படி நடந்து கொள்வார்கள் என்பதைப் பற்றியும் அவன் என்னிடம் சொல்லிக்கொண்டே வந்தான். அவன் சொன்ன கதைகள் ஒவ்வொன்றும் மிகவும் சுவாரசியமாக இருந்தது. அந்தக் கதைகளுக்கு அசாதாரணமான ஒரு அழகு இருந்தது. அதே நேரத்தில் கதை சொல்லிக் கொண்டிருந்த மனிதனைப் பற்றிய மிகைப்படுத்தல் இல்லாத ஒரு தெளிவான வரைபடத்தை எனக்கு அவை தந்தன. அவன் சொன்ன கதைகளில் ஒன்று இப்படி இருந்தது.
ஒரு பணக்காரரின் மகன் வீட்டில், பெரிய ஒரு விருந்து நடைபெற்றுக் கொண்டிருந்தது. ஏராளமான ஆட்கள் அந்த விருந்தில் பங்கு கொள்வதற்காக வந்திருந்தார்கள். அவர்கள் நிறைய மது அருந்தினார்கள். சுரேக், ஷஷ்லிக், லவாஷ் போன்ற சுவைமிக்க உணவுப் பொருட்களைச் சாப்பிட்டார்கள். அதற்குப் பிறகு பணக்காரரின் மகன் அவர்களைத் தன்னுடைய குதிரைகள் இருக்குமிடத்திற்கு அழைத்துச் சென்றான். குதிரைகள் மிகவும் பலசாலிகளாகக் காணப்பட்டன. பணக்காரனின் மகன் அங்கு இருந்ததிலேயே மிகவும் நல்ல ஒரு குதிரையின் மீது ஏறி அதை மைதானத்தில் வேகமாக ஓடும்படி செய்தான். அந்தக் குதிரை பார்ப்பதற்கு மிகவும் கம்பீரமாக இருந்தது. விருந்தாளிகள் அந்தக் குதிரையின் உடல் பலத்தையும் தோற்றத்தையும் புகழ்ந்து பேசினார்கள். அதைக் கேட்ட பணக்காரரின் மகன் அந்தக் குதிரையை மேலும் ஒருமுறை வேகமாக ஓடவிட்டான். அப்போது எங்கிருந்தோ வந்த ஒரு விவசாயத் தொழிலாளி ஒரு வெள்ளைநிறக் குதிரை மீது ஏறி இடி முழங்குவதைப் போல வேகமாகப் பாய்ந்து வந்தான். அந்தக் குதிரை பணக்காரரின் மகனின் குதிரையைத் தாண்டி வேகமாகப் பாய்ந்து ஓடியது. அந்த விவசாயி ஆணவத்துடன் விழுந்து விழுந்து சிரித்தான்.
விருந்தாளிகளாக வந்தவர்களுக்கு முன்னால் அந்தப் பணக்காரரின் மகனுக்கு மிகவும் வெட்கக்கேடாகி விட்டது. அவனுடைய புருவங்கள் உயர்ந்தன. அடுத்த நிமிடம் அவன் தொழிலாளியை அருகில் வருமாறு அழைத்தான். அவன் அருகில் வந்தவுடன் பணக்காரரின் மகன் தன்னுடைய வாளை உருவி ஒரே வெட்டில் விவசாயத் தொழிலாளியின் தலையைக் கீழே விழும்படி செய்தான். குதிரையின் கன்னத்தின் வழியாக குண்டு வேகமாகப் பாய்ந்து சென்றது. அடுத்த நிமிடம் அந்தக் குதிரை செத்துக் கீழே விழுந்தது.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook