
அவர் படுக்கையறைக்குள் நுழைந்து கதவுகளை அடைத்து ஜன்னலுக்கருகில் முதுகைக் காட்டியவாறு நின்றிருந்தார். சரோஜினி கதவுகளின் இடைவெளி வழியாக உள்ளே பார்த்தாள். தன் கணவன் சம்பந்தப்பட்ட எந்தவொரு விஷயத்திலும் அவள் இதுவரை தலையிட்டதேயில்லை. அவரின் எந்த விஷயத்தையும் அவள் சந்தேகப்பட்டு பார்த்ததுமில்லை. அவருடைய காரியங்களைத் தெரிந்துகொள்ள அவள் எந்தச் சமயத்திலும் ஆசைப்பட்டதுமில்லை. தன் கணவனின் சமீபகால நடவடிக்கைகள் கொஞ்சமும் சம்பந்தமில்லாமல் இருப்பது தெரிந்துதான் அவள் இப்படி ஒளிந்து கவனிக்கும் நிலைக்கே வந்தாள். சிறிய ஜன்னலுக்கருகில் லேசான வெளிச்சம் தெரிந்தது. ராமுண்ணி ஏதோவொன்றை மடியிலிருந்து எடுத்து வெளிச்சத்தில் மிகவும் கவனமாக பார்ப்பதையும் அதை நெற்றியிலும் மார்பிலும் இறுகச் சேர்த்து அணைத்துக் கொள்வதையும் அவள் பார்த்தாள். அவர் முதுகைக் காட்டிக்கொண்டு நின்றிருந்ததால் அவர் கையில் என்ன இருக்கிறது என்பதை அவளால் தெரிந்துகொள்ள முடியவில்லை. அப்போது அவர்களின் இளைய மகன் தாயைத் தேடி அழுதவாறு படியில் ஏறி அங்கு வந்தான். பையன் வரும் சத்தத்தைக் கேட்டு சுயஉணர்விற்கு வந்த ராமுண்ணி இடுப்புக் கொடியை வேகமாக மடிக்குள் மறைத்து வைத்துக்கொண்டார்.
“இங்கே தாய்க்கும் மகனுக்கும் என்ன வேலை?” - ராமுண்ணிக்குக் கோபம் கோபமாக வந்தது. “ஒரு இடத்துல நிம்மதியா இருக்கலாம்னு நினைச்சா அதுக்கு விட்டால்தானே?”
“அப்படின்னா என்னையும் பிள்ளைகளையும் கொன்னு போட்டுடுங்க. அதுக்குப் பிறகு நிம்மதியா இருக்கலாம்ல...”
அவள் தன் மகனை எடுத்து இடுப்பில் வைத்துக்கொண்டு அவனுடைய மூக்கைத் துடைத்துவிட்டாள். அவனுடைய மூக்கு எப்போது பார்த்தாலும் ஒழுகிக்கொண்டே இருக்கும் அவன் பெயர் சகாதேவன். அவள் மகனைத் தூக்கியவாறு கீழே இறங்கிப் போனாள். ராமுண்ணி என்னவோ தீவிரமாகச் சிந்தித்தவாறு அமர்ந்திருந்தார். அன்று அவர் தாடியை மழிக்கவோ, குளிக்கவோ எதுவும் செய்யவில்லை.
அன்று சாயங்காலம் அவர் நடப்பதற்கும் போகவில்லை. பெட்டிப் பாலத்தில் கீழே தண்டவாளத்தைப் பார்த்தவாறு தன்னந்தனியாக அச்சு வாத்தியார் நின்றிருந்தார். அதோ, தண்டவாளத்தின் வழியாக புகையை விட்டவாறு ஒரு வண்டி வந்து கொண்டிருக்கிறது!
மழை மேகம் கூடியிருந்ததால் அன்று சற்று சீக்கிரமே இருள் வந்து கவிந்துவிட்டது. வழக்கத்தைவிட சற்று முன்பே அச்சு வாத்தியார் தன் வீட்டிற்குத் திரும்பிவிட்டார். அப்போது நீலகண்டனின் வீட்டிற்குச் செல்லும் வழியில் ராமுண்ணி நடந்து செல்வதை அவர் பார்த்தார். ‘அடிக்கடி நீலகண்டனின் வீட்டைத் தேடிச் செல்வது, நீலகண்டனைத் தன்னுடைய உதவியாளராக வைத்துக் கொள்வது... ராமுண்ணியின் இந்தச் செயல்களுக்கு என்ன அர்த்தம்? என் கடவுளே...’ -தனக்குள் கூறிக்கொண்டார் அச்சு வாத்தியார்.
“ராமுண்ணியை கவனிச்சுப் பார்க்கணும் உனக்கு இருக்குறது உலகம்னா என்னன்னே தெரியாத சின்னப் பசங்க. ஞாபகத்துல வச்சுக்கோ...” -சரோஜினியைப் பார்த்து சொன்னார் அச்சு வாத்தியார்.
“எனக்கு ஒண்ணுமே புரியல அச்சு வாத்தியாரே...”
“எல்லாம் உனக்குப் புரியும். இப்போ இந்த அளவுக்குத் தெரிஞ்சிருக்குறதே போதும்”
“நான் என்ன செய்யறது? அடக் கடவுளே...”
சரோஜினியின் கண்கள் கலங்கின.
“நீ கவலைப்படாதே, சரோஜினி. நான் என் மனசுல இருந்ததைச் சொல்லிட்டேன். ஆரம்பத்துலயே கவனமா இருந்தா பின்னாடி வருத்தப்பட வேண்டியது இருக்காதுல்ல...”
அச்சு வாத்தியார் அந்த இடத்தைவிட்டுப் புறப்பட்டார். சகாதேவனை இடுப்பில் வைத்தவாறு நின்றிருந்த சரோஜினி தன் கண்களைத் துடைத்துக்கொண்டாள். மீத்தலேடத்து ராமுண்ணி இதுவரை தன் மனைவியை ஒரு நாளும் அழவிட்டதில்லை. அவளுக்குத் தேவையான சந்தோஷம் அனைத்தையும் அவர் தந்திருந்தார். இப்போது என்னவென்றால் கழுத்தில் தாலியைக் கட்டி கால் நூற்றாண்டு காலம் ஆனபிறகு அவர் தன்னுடைய மனைவியைக் கண்ணீர்விட வைக்கிறார். அச்சு வாத்தியாரின் வார்த்தைகளிலிருந்து தன்னுடைய கணவனின் மனதிற்குள் வேறு யாரோ ஒரு பெண் நுழைந்திருக்கிறாள் என்பதை அவளால் புரிந்துகொள்ள முடிந்தது. ஐம்பதாவது வயதில் அவரை வசீகரித்த அந்த சாமர்த்தியசாலிப் பெண் யாராக இருக்கும்? அவள் யார் என்பதை இப்போதே தெரிந்து கொள்ள வேண்டுமென்று அவள் நினைத்தாள். அதற்காக அவள் ராமுண்ணியை எதிர்பார்த்துக் காத்திருந்தாள்.
ஆனால், ராமுண்ணி வந்தபோது அவருடைய சவரம் செய்யப்படாத முகத்தையும் குழி விழுந்துபோன கண்களையும் பார்த்த அவள் ஒரு வார்த்தைகூடப் பேசாமல் வெறுமனே நின்றுவிட்டாள். அப்போது சிறிதும் எதிர்பார்க்காமல் அவளுடைய பார்வை அவரின் மடியை நோக்கிச் சென்றது. மடியில் ஏதோ பிரகாசமாக இருப்பது தெரிந்தது. பல தடவை அருகில் சென்றபோது தன் கணவர் மடியில் ஏதோவொன்றை மறைத்து வைப்பதை அவள் கண்டிருக்கிறாள். மடியில் தெரிந்த அந்தப் பிரகாசத்தைப் பார்த்ததும் அவளின் முகத்தில் ஒரு மலர்ச்சி உண்டானது. மீத்தலேடத்து ராமுண்ணி தன்னுடைய இதயத்தில் எதை மறைத்து வைத்திருக்கிறாரோ, அதைத்தான் தன்னுடைய மடியிலும் மறைத்து வைத்திருக்கிறார் என்பதை சரோஜினியால் புரிந்துகொள்ள முடிந்தது. அது என்னவென்பதை அறிந்துகொள்ள ஆசைப்பட்டாள் சரோஜினி. அவள் தன் கணவனின் அருகில் போய் நின்றாள்.
“மடியில் என்ன வச்சிருக்கீங்க?”
“ஒண்ணுமில்ல...”
“இவ்வளவு நாட்களாக மறைச்சு வச்சு நடந்தீங்கள்ல? இப்போ எனக்கு அது என்னன்னு தெரியணும்...”
“என் மடியில ஒண்ணுமில்ல, சரோஜினி...”
“இருபத்தஞ்சு வருடங்கள் கூடப்படுத்த என்கிட்டயா பொய் சொல்றீங்க?”
அவர் பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்த்தார்.
“அது நீலகண்டன் அடமானம் வச்ச நகை...”
“நீலகண்டனோட நகையை நான் பார்க்கக் கூடாதா?”
“நீ அதைப் பார்க்க வேண்டாம் சரோஜினி.”
அவர் மாடிக்கு ஏறினார். அவள் அவரைப் பின் தொடர்ந்தாள்.
“இப்போ எனக்கு ரெண்டுல ஒண்ணு தெரிஞ்சாகணும்...”
“உனக்கு என்ன தெரியணும்?”
“இருக்க வேண்டியது ஒண்ணு நான். இல்லாட்டி அவ...”
அதைக் கேட்டு அதிர்ந்துபோய்விட்டார் ராமுண்ணி.
“என்ன சரோஜினி, நீ பாட்டுக்கு வாய்க்கு வந்தபடி பேசுற...!”
“எதையும் மறைச்சு வைக்கவேண்டாம். எல்லா விஷயமும் எனக்குத் தெரியும். உங்களுக்கே வெட்கமா இல்லியா? இருபது வயது தாண்டின பிள்ளைங்க இருக்காங்க. இந்த வயசுல இது தேவையா?”
ராமுண்ணி மீண்டும் பரிதாபமாகத் தன் மனைவியைப் பார்த்தார். அவர்கள் இருவரின் கண்களும் ஒன்றையொன்று சந்தித்தபோது, அவர் தன் முகத்தை வேறுபக்கம் திருப்பிக் கொண்டார்.
“நீங்க இனிமேல் உங்களுக்குப் பிறந்த பிள்ளைங்களை எப்படி முகத்தோடு முகம் முழிப்பீங்க?”
அவளுக்குக் கவலை உண்டானதைவிட கோபம்தான் அதிகம் உண்டானது. அடிபட்ட ஒரு மிருகத்தைப்போல அவள் தன் கணவரைப் பார்த்தாள். அடுத்த நிமிடம் அவள் அவரின் மடியிலிருந்த நகையை வெடுக்கென்று எடுத்தாள். இப்படி ஆக்ரோஷத்துடன் தன் மனைவி நடப்பாள் என்று சிறிதுகூட அவர் மனதில் நினைக்கவில்லை.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook