
“நல்ல வேலைப்பாடு!”
தட்டான் போனபிறகு இடுப்புக்கொடியை இப்படியும் அப்படியுமாகப் புரட்டிப் பார்த்த சாவித்திரியின் தாய் சொன்னாள்.
“எப்பவும் கள்ளு குடிச்சிக்கிட்டு நடந்தாலும் அவனோட வேலை அருமைதான்...”
தன்னுடைய அறைக்குள் ஓடிச்சென்று கதவை அடைத்துக் கொண்ட அவள் கொடியை இடுப்பில் கட்டிக் கொண்டாள்.
அதற்குப் பிறகு அவள் அதை இடுப்பிலிருந்து கழற்றியதே இல்லை. திருமணம் முடிந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்றெடுத்தாள். நீலகண்டனுடன் கட்டிப்பிடித்துக்கொண்டு படுத்திருக்கும்பொழுது அவன் தன்னுடைய முழு பலத்தையும் பயன்படுத்தி கொடியை அவளுடைய இடுப்பிலிருந்து உருவிக்கொண்டு போய்விட்டான். இப்படித்தான் அது மீத்தலேடத்து ராமுண்ணியின் மடியில் போய்ச் சேர்ந்தது.
பெற்ற பிள்ளைகளைக்கூட பிரிந்திருக்கலாம். ஆனால், இடுப்பில் கொடி இல்லாமல் அவளால் இருக்கமுடியாது. அவளுக்கு இரவு முழுக்க தூக்கமே வராது. அப்படியே உறக்கம் வந்தாலும், பாதி இரவில் தூக்கத்தைவிட்டு எழுந்து அவள் தன் இடையைத் தடவுவாள். இடுப்பிலிருந்த கொடி கண், மூக்கைப் போல அவளுக்கு உடம்பில் ஒரு உறுப்பு என்றுகூட கூறலாம். தான் தூங்கிக் கொண்டிருக்கும் பொழுது நீலகண்டன் அதைக் கழற்றிக் கொண்டுபோய்விட்டான் என்பது தெரிந்தபோது அவள் எப்படியெல்லாம் அழுதாள்.
மார்பு வரை நீரில் மூழ்கி நின்றவாறு அவள் இப்படிப் பலவற்றையும் யோசித்துக் கொண்டிருந்தாள். கரையில் புல் காடும் வாய்க்காலும் வெயிலில் குளித்துக் கொண்டிருந்தன. அவள் நீருக்குள் மூழ்கி எழுந்தபோது, அவளின் கூந்தலிலிருந்து வழிந்தநீர் சிறுசிறு அருவிகளைப் போல தோளிலும் மார்புகள் மீதும் வழிந்தன.
இப்போதும் பட்டாம்பூச்சிகள் புற்களின் இலைகளில் உரசியபடி விளையாடிக் கொண்டிருந்தன. ஒரு சிறுமியைப் போல அவள் அமைதியாக நீரைக் கிழித்துக்கொண்டு நடந்துபோய் பட்டாம்பூச்சிகளை நோக்கி கையை நீட்டினாள். அந்தப் பட்டாம்பூச்சிகளை கையில் வைத்து விளையாட வேண்டும் என்ற ஆர்வம் அவளுக்கு உண்டானது. புற்களுக்குக் கீழே நிறைந்து நின்றிருந்த நீருக்குள் கீழே முழுவதும் சேறாக இருந்தது. அவளுடைய பாதங்கள் சேற்றில் சிக்கிக் கொண்டன. பட்டாம்பூச்சிகள் புற்களுக்கு நடுவில் மறைவதும் தெரிவதுமாக இருந்தன. ஒரு சிறுமியின் பிடிவாதத்துடன் புற்களைக் கைகளால் நீக்கியவாறு அவள் நீர் வழியே பட்டாம்பூச்சிகளைப் பின்தொடர்ந்து நடந்தாள்.
உயர்த்திப் பிடித்த இடுப்புக் கொடியுடன் சோர்ந்துபோன இரண்டு கைகள் புற்களுக்கு நடுவில் தனக்கு நேராக நீண்டு வருவதைப் பார்த்து அவள் சிறிதும் அசையாமல் செயலற்று நின்று விட்டாள்.
அதோ... நடுங்கிக்கொண்டிருக்கும் தன்னுடைய கைகளால் ராமுண்ணி தங்கத்தால் ஆன இடுப்புக் கொடியை சாவித்திரியின் இடுப்பில் கட்டுகிறார். முன்பு சரோஜினியின் கழுத்தில் தாலி கட்டியபோது, அவருடைய கைகள் இப்படித்தான் நடுங்கின.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook