Lekha Books

A+ A A-

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள்

Naam vasippadharkku munthiri thoppugal

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள்

சக்கரியா

தமிழில் : சுரா

"டேய், ராதாகிருஷ்ணா...'' சந்தீபன் என்னிடம் தொலைபேசியில் கூறினான்: “நீ கொஞ்சம் இங்கே வா. ஒரு முக்கியமான விஷயம்...''

அவன் புகழ்பெற்றவன்; பலம் வாய்ந்தவன். டில்லியில் அவனைத் தெரியாதவர்கள் யார் இருக்கிறார்கள்? ஆனால், அவனுக்கு நான் வேண்டும். அது எனக்கும் பிடித்த விஷயம்.

நான் கேட்டேன்: “என்னடா விஷயம்?''

“தொலைபேசியில் அதைச் சொன்னால் சரியாக இருக்காது!. நீ வா...''

சற்று முன்பே நான் அலுவலகத்திலிருந்து வெளியேறி, மாலை நேரத்தில் கனாட் ப்ளேஸில் இருக்கும் அவனுடைய அலுவலகத்தை அடைந்தேன்.

அவனுடைய ரிஷப்ஷனிஸ்டுக்கும், செக்ரட்டரிக்கும், ப்யூனுக்கும் என்னைத் தெரியும். அதனால் வரிசையில் காத்திருக்கத் தேவையில்லை. அவனைச் சந்திப்பதற்கான நேரத்தை எதிர்பார்த்துக் காத்திருக்கும் பெரிய மனிதர்களுக்கு மத்தியில் நான் மிடுக்காக நடந்துசென்றேன். மல்லப்பள்ளி புனித மரியா பள்ளிக்கூடத்தில், முதல் வகுப்பிலிருந்து ஒரே பெஞ்சில் அமர்ந்து மேலே வந்தவர்கள் நாங்கள் என்ற விஷயம் அவர்களுக்குத் தெரியுமா? அவன் மிகப்பெரிய ஆளாகிவிட்டான். நான் குமாஸ்தாவாகி விட்டேன்.

சந்தீபனின் அறை ஒரு கால்பந்து மைதானத்தின் அளவு கொண்டதாக இருக்கும். அதன் மெதுமெதுப்பான தரை விரிப்பின் வழியாக அவனுடைய மேஜையை அடைவதற்கு பல நிமிடங்கள் ஆகுமென்று தோன்றும். "இவையெல்லாம்தானேடா நம்முடைய வித்தைகள்!' அவன், கூறுவான்: "ஷோ இல்லாமல் இங்கு எதுவுமே நடக்காது.'

சந்தீபன் தன்னுடைய செக்ரட்டரியிடம் இன்டர்காமில் சொன்னான்: “இன்னும் பத்து நிமிடங்களுக்கு தொலைபேசி அழைப்புகள் எதுவும் வேண்டாம். அடுத்த விசிட்டரிடம் சிறிது தாமதமாகும் என்ற விஷயத்தைச் சொல்லிவிடு.''

தொடர்ந்து அவன் என்னிடம் சொன்னான்: “ராதாகிருஷ்ணா, மொத்தத்தில் பிரச்சினையாகிவிட்டது. மாதுரிக்கு முறை தவறிவிட்டது.''

“என்ன முறை?'' நான் கேட்டேன். மாதுரி -அவனுடைய காதலிகளில் ஒருத்தி. என்ன முறை என்று உண்மையிலேயே எனக்குத் தெரியவில்லை. அவனைப்போல பெண்களுடன் நான் குதித்து விளையாடுவதில்லை.

“டேய், தரித்திரம் பிடிச்சவனே!'' - அவன் சொன்னான்:

“மாத முறை... அவள் கர்ப்பமாக இருக்கிறாள்.''

“ஓ...'' என்றேன்.

“அவ்வளவுதான் உன்னால சொல்ல முடியுதா?'' அவன் என்னிடம் கேட்டான்.
“கர்ப்பம் என்றால் கர்ப்பம்தான். வேறு என்ன பிரச்சினை?'' நான் கேட்டேன். வேறு எதுவும் எனக்குத் தெரியவில்லை.

சந்தீபனுக்கு கோபம் வந்துவிட்டது. அவன் சொன்னான்: “உன்னைப் போன்ற ஒரு பிறவியை, பிறந்தவுடனே கொன்றிருக்க வேண்டும். டேய், எனக்கும் மாதுரிக்குமிடையே வெறும் காதல் மட்டும்தானே இருக்கிறது. அவள் எப்படி பிள்ளை பெறுவாள்? உனக்கு இந்த மனித உருவத்தில் இருக்கிறோம் என்பதைத் தவிர, வாழ்க்கையுடன் வேறு ஏதாவது தொடர்பு இருக்கிறதா? இதுவரை நீ ஒரு பெண்ணைத் தொட்டிருக்கிறாயா?''

“தொட்டிருக்கிறேன்...'' நான் சொன்னேன்: “என்னுடைய தாயைத் தொட்டிருக்கிறேன்.''

“ஃபா...'' என்றான் சந்தீபன்.

அவன் ஒரு சிகரெட்டைப் பற்ற வைத்தான். தொடர்ந்து சொன்னான்: “டேய், மாதுரிக்கு அபார்ஷன் செய்யவேண்டும். அதற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் நான் செய்திருக்கிறேன். "கரோல் பாக்'கில் இருக்கும் ஒரு லேடி டாக்டரின் வீட்டில்தான் அது நடக்கப் போகிறது.

நீ என்னுடன் வரவேண்டும். தனியாக என்னால் இருக்கமுடியாது. இந்த ஏற்பாடுகளெல்லாம் செய்து முடித்தும், மாதிரி அழுதுகொண்டும் புலம்பிக்கொண்டும் இருக்கிறாள்.''

“என்ன காரணம்?''

“அவளுக்கு குழந்தையின்மீது பாசம் தோணுதாம். இதற்கு என்னடா பதில் சொல்றது?''

“ம்... நீ காதலிச்சப்போ இதைப் பற்றி நினைச்சிருக்கணும். அவளுக்கு குழந்தைமீது பாசம் தோன்றாமல் இருக்குமா?''

அவன் சிகரெட்டை ஒரு புழுவைப்போல ஆஷ்ட்ரேயில் நசுக்கிப் போட்டான். என்னை ஒரு பார்வை பார்த்தான். தொடர்ந்து சொன்னான்: “டேய், நான் இன்னும் மூன்று, நான்கு "க்ளயன்ட்'களைப் பார்க்க வேண்டியதிருக்கு. நீ கொஞ்சம் சுற்றிவிட்டுவா. சரியாக ஏழு மணிக்கு இங்கேயிருந்து புறப்படுவோம். நீ ஏமாற்றி விடாதே.''

“சரி'' என்றேன்.

நான் சென்ட்ரல் பார்க்கிற்குச் சென்று மரத்தின்மீது சாய்ந்து உட்கார்ந்தேன். மனிதர்கள் வருவதையும் போவதையும் பார்த்துக்கொண்டு, அணில்கள் ஓடித்திரிவதைப் பார்த்துக்கொண்டு, காகங்கள் தங்களின் கூடுகளுக்குள் சென்று அடைவதைப் பார்த்துக் கொண்டு, வானத்தில் என்னென்னவோ பறவைகள் எங்கெங்கெல்லாமோ பறந்து போவதைப் பார்த்துக்கொண்டு... சிறிது நேரம் கழித்து நான் புல்லின்மீது மல்லாந்து படுத்துக்கொண்டு வானத்தைப் பார்த்தேன். சந்திரனைப் பார்த்தேன். சந்திரனின் புழுதி படிந்த மண்ணில், உதித்து மேலே உயர்ந்துவரும் பூமியைப் பார்த்துக்கொண்டே நடக்கவேண்டும் என்ற ஆசை எனக்கு உண்டானது. நான் சிந்திப்பதை நிறுத்தி விட்டு, கைக் கடிகாரத்தைப் பார்த்தபோது மணி எட்டு.

சந்தீபன் என்னைக் காணாததால் உண்டான பதைபதைப்புடன், தன் காருக்கு அருகில் சுற்றிலும் பார்த்துக்கொண்டு நின்றிருந்தான்.

“என்னடா... பயந்துட்டயா?'' நான் கேட்டேன்.

அவனுடைய அரண்மனையைப் போன்ற கார்கள் அவ்வப்போது மாறிக்கொண்டே இருக்கும். “இது என்ன கார்?'' நான் கேட்டேன்: “புதிதாக இருக்கிறதே?''

அவன் சொன்னான்: “டேய், காரைப் பற்றி பேசிக்கொண்டிருப்பதற்கான நேரமில்லை இது... மாதுரி டாக்டரின் வீட்டில் எதிர்பார்த்துக்கொண்டு உட்கார்ந்திருக்கிறாள். பின்பக்க கதவின் வழியாக நாம் யாருக்கும் தெரியாமல் உள்ளே நுழைய வேண்டும். நீ என்னுடன் இருந்தால் போதும். என்னுடைய மனநிலையை உன்னால் புரிந்துகொள்ள முடிகிறது அல்லவா?''

“அபார்ஷன் உனக்கில்லையே! பிறகு, நீ ஏன் இப்படி கவலைப்பட்டுக் கொண்டிருக்கிறாய்? காசு செலவாகிறதே என்பதை நினைத்தா?''

“காசு போய்த் தொலையட்டும்...'' சந்தீபன் சொன்னான்:

“இப்படிப்பட்ட காரியங்களில் உண்டாகக்கூடிய மன அழுத்தங்கள் எந்த அளவுக்கு இருக்குமென்பது என்றைக்காவது உனக்கு தெரியுமா? பயங்கரம்டா... பயங்கரம்!''

நான் எதுவும் பேசவில்லை.

நாங்கள் டாக்டரின் வீட்டிலிருந்து சற்று தூரத்தில் காரை "பார்க்' செய்துவிட்டு, இருளோடு இருளாகக் கலந்து நடந்தோம். மூன்று நான்கு பேராவது சந்தீபனைத் திரும்பிப் பார்த்திருப்பார்கள்.

“நாசமாப் போச்சு...'' அவன் சொன்னான்: “இவனுங்க ஏன் பார்க்கிறானுங்க?''

“டேய்...'' நான் சொன்னேன்: “நீ பெரிய மனிதனாக வேண்டுமென்று தீர்மானித்தபோது நினைத்திருக்க வேண்டும்.''

பின்பக்கத்திலிருந்த வாசலின் வழியாக உள்ளே நுழைந்தோம். எங்களை ஒரு மனிதன் உள்ளே அழைத்துச் சென்றான். அந்த அறைக்குள் நுழைந்ததும் சந்தீபனும் நானும் சற்று அதிர்ச்சியடைந்து விட்டோம். அங்கு லேடி டாக்டரும், அவளுடைய கணவரும், நான்கு குழந்தைகளும், அவர்கள் போதாதென்று பக்கத்து வீடுகளைச் சேர்ந்த எட்டு, பத்து பேர்களும் குழந்தைகளுடன் சந்தீபனை வரவேற்பதற்காகக் காத்திருந்தார்கள். எங்களைக் கண்டவுடன் அவர்கள் வேகமாக எழுந்து மரியாதையுடன் கைகளைக் குவித்து வணங்கினார்கள். ஒரு சிறுமி முன்னால் வந்து சந்தீபனுக்கு ஒரு ரோஜா மலரைத் தந்தாள்.

 

+Novels

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel