
“என்னை கட்டிப் பிடி, ராதா.'' அவள் சொன்னாள்.
நான் என்னவோ கூற முயற்சித்தேன். ஆனால், என்னுடைய குரல் வெளியே வரவில்லை.
“என்னை கட்டிப் பிடி...'' அவள் சொன்னாள்.
நான் கட்டிலின்மீது சாய்ந்து அவளைக் கட்டிப் பிடித்தேன். தொடர்ந்து எழ ஆரம்பித்தேன். அவள் கூறினாள்: “வேண்டாம்...''
சிறிது நேரம் சென்றதும் மாதுரி சொன்னாள்: “என் மார்பில் கையை வை.''
நான் அவளுடைய மார்பில் கையை வைத்தேன்.
“என் அடிவயிற்றில் தடவு...''
நான் அவளுடைய அடிவயிற்றில் தடவினேன்.
“இங்கே...'' என்னுடைய கையைப் பிடித்து வைத்துக் கொண்டு அவள் சொன்னாள். “என் குழந்தை இப்போது எங்கே இருக்கிறது?'' அவள் கேட்டாள். தொடர்ந்து என்னை அழுத்திப் பிடித்தாள்.
அவளுடைய தலைமுடி என்னுடைய வாயிலும், முடியில் தேய்க்கப்பட்டிருந்த நறுமணம் என்னுடைய நாசியையும் நிறைத்தன.
“என் தொடைகளில் ரத்தம் இருக்கிறதா என்று பார்.''
நான் தடவிப் பார்த்துவிட்டு சொன்னேன்: “இல்லை...''
“என் குழந்தையின் முகச்சாயல் எப்படி இருந்திருக்கும்?''
நான் எதுவும் கூறவில்லை.
“என் கண்களைத் துடைத்து விடுங்க, ராதா.'' அவள் சொன்னாள்.
நான் அவளுடைய கண்களைத் துடைத்து விட்டேன். கொஞ்சம் குளிர்ச்சியான ஈரம் மட்டும்...
“என் உதடுகளில் முத்தமிடுங்க...''
நான் என்னுடைய உதடுகளை அவளுடைய உதடுகளில் வைத்தேன்.
அவள் சொன்னாள்: “தேங்க்ஸ், ராதா.''
“தேங்க்ஸ்...'' நான் எழுந்து நின்றவாறு சொன்னேன். அவள் தூங்கிவிட்டாள்.
நான் ஸோஃபாவிற்குத் திரும்பிவந்து உட்கார்ந்த நேரம் -சந்தீபன் மெதுவாக கதவைத் திறந்து உள்ளே வந்தான். அவனிடமிருந்து நன்றாகவே மதுவின் வாசனை வந்துகொண்டிருந்தது.
“சந்தீபா...'' நான் சொன்னேன்: “நீ இனிமேல் மாதுரியை எழுப்ப வேண்டாம். இந்த ஸோஃபாவில் படுத்துத் தூங்கு.''
“சரி...'' -அவன் ஷுக்களைக் கழற்றிக்கொண்டே சொன்னான்: “உன்னை நான் நாளை அழைக்கிறேன்.''
கால்க்காஜிக்குச் செல்லும் இறுதிப் பேருந்து எனக்குக் கிடைத்தது. பேருந்தில் அமர்ந்து தூக்கம் வந்து கண்களைக் கசக்கியபோது, கைகளிலிருந்து வந்த ஒரு புதிய வாசனை என்னை ஆச்சரியப்படச் செய்தது. அதிர்ச்சியடைந்து நான் என் கைகளை பேண்ட் பாக்கெட்டிற்குள் நுழைத்தேன்.
You can use your Facebook account to sign into our site.
fb iconLog in with Facebook