Lekha Books

A+ A A-

நாம் வசிப்பதற்கு முந்திரித் தோப்புகள் - Page 3

Naam vasippadharkku munthiri thoppugal

நான் சீக்கிரம் அறைக்குப் போய் இன்றைய மலையாளத் திரைப்படத்தைப் பார்க்க வேண்டும். டேய்... "நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்' படத்தைப் பார்ப்பதற்கு நான் எவ்வளவு காலமாகக் காத்திருக்கிறேன் என்ற விஷயம் உனக்குத் தெரியுமா?''

சந்தீபனின் முகம் வாடிவிட்டது. அவன் சொன்னான்:

“ராதாகிருஷ்ணா, நான் உன்னுடைய காலைப் பிடிக்கிறேன். நீ என்னைவிட்டுப் போய்விடாதே.''

“சரி... அப்படின்னா... செய்...'' நான் சொன்னேன்.

அவன் வேகமாக ஃபோன் பண்ணி ஹோட்டலில் ஒரு டபுள் ரூமை புக் செய்தான். ஹோட்டலின் பெயரைக் கேட்டதும் நான் நினைத்தேன்- தொலைந்தது மூவாயிரம் ரூபாய். கருக்கலைப்பு செய்ததற்கு ஒரு இருபத்தய்யாயிரம் ரூபாய் செலவாகியிருக்கும்- டில்லி கணக்குப்படி. இனி மாதுரிக்கு ஏதாவது பொருட்கள் வாங்கிக் கொடுக்கும்போது, பையனுக்கு ஒரு நாற்பது... ஐம்பது ரூபாய் அன்புப் பரிசாக கிடைக்கும். வெறும் காதல் மட்டும் காரணம்!

சந்தீபன் சொன்னான்: “நாங்கள் அறை எடுக்கும்போது நீ வரவேற்பறையில் இருந்தால் போதும். நாங்கள் லிஃப்ட்டில் நுழையும்போது, நீயும் அதற்குள் நுழைய வேண்டும். ரூம் பாய் போன பிறகு, நீ அறைக்குள் வரவேண்டும். டேய். ஏமாற்றி விடாதே.''

“டேய்... நான் இதுவரை ஆணையோ பெண்ணையோ ஏமாற்றியதே இல்லை.''

அவன் எதுவும் சொல்லவில்லை.

மாதுரி வெளியே வந்தாள். ஒப்பனை செய்திருந்தாலும், கருத்துப் போன முகத்துடனும், கலங்கிய கண்களுடனும் இருந்தாள். ஒரு நர்ஸ் அவளுடைய சூட்கேஸை உருட்டிக் கொண்டு வந்தாள். நல்ல வேளை- நான் நினைத்தேன்- இனி ஹோட்டலில் சூட்கேஸ் பிரச்சினை இல்லை. மாதுரி சிரமத்துடன் சுவரை ஒரு கையால் பற்றிக்கொண்டே நடந்தாள்.

“நீ போய் கையைப் பிடிடா.'' நான் சந்தீபனிடம் கூறினேன்.

அவன் எங்கோ பார்த்துக்கொண்டே நடந்து சென்று மாதுரியின் கையைப் பற்றி, அவளை முன்னோக்கி நடத்திக்கொண்டு வந்தான். என்னைப் பார்த்ததும் மாதுரி மிகவும் பலவீனமான குரலில் சொன்னாள்: “ஹலோ... ராதா...''

சந்தீபன் பின்வாசலுக்கு அருகில் காரைக் கொண்டு வந்தான். மாதுரி பின்னிருக்கையில் அமர்ந்தாள். பிறகு... படுத்துக் கொண்டாள். நான் முன்னால் உட்கார்ந்தேன். யாரும் எதுவும் பேசிக்கொள்ளவில்லை.

எந்தவொரு பிரச்சினையும் இல்லாமலே நாங்கள் அடுத்தடுத்து ஹோட்டலின் அறைக்கே வந்தோம். ஸோஃபாக்கள் போடப்பட்டிருந்த உட்காரும் அறைக்குப் பின்னால் படுக்கையறை இருந்தது. மாதுரி கட்டிலில் போய் கவிழ்ந்து படுத்துக்கொண்டாள். நான் அறைக் குள் நுழைந்ததும், சந்தீபன் கதவில் "டூ நாட் டிஸ்டர்ப்' போர்டைத் தொங்கவிட்டு கதவை அடைத்தான். விளக்குகள் அனைத்தையும் அணைக்க ஆரம்பித்தான்.

“இது என்ன விளையாட்டுடா?'' நான் முணுமுணுத்தேன். “இந்த இருட்டில் எப்படி உட்கார்ந்திருப்பது? டெலிவிஷன்கூட அந்த அறையில்தான் இருக்கிறது. இல்லா விட்டால்... நான் "நமுக்கு பார்க்கான் முந்திரித்தோப்புகள்' திரைப்படத்தைப் பார்த்துக் கொண்டிருப்பேன்.''

சிறிது நேரம் அவன் எதுவும் பேசாமலே ஸோஃபா வில் உட்கார்ந்திருந்தான். பிறகு எழுந்து நின்றுகொண்டு சொன்னான்: “ராதாகிருஷ்ணா, நீ எங்கயும் போயிடாதே...''

அவன் படுக்கையறைக்குள் தட்டுத்தடுமாறிச் சென்றான்.

என்னுடைய காலை மிதித்து அவன் விழப் போனான்.

எனக்கு கடுமையான வேதனை உண்டானது. நான் மனதிற்குள் நினைத்தேன்- காதல் என்பது இந்த அளவிற்கு பயங்கரமான ஒரு விஷயமா? இது கொஞ்சம் கஷ்டமான விஷயமாச்சே! இதைவிட என்னுடைய விஷயம் எவ்வளவோ பரவாயில்லையே!

படுக்கையறைக்குள்ளிருந்து தேம்பியழும் சத்தமும், சிணுங்கல்களும், இதுதான் என்று கண்டுபிடிக்க முடியாத அளவிற்கு இருக்கக்கூடிய ஓசைகளும், ஒரு பூகம்பம் உண்டாவதைப்போல உண்டாக ஆரம்பித்தன. இருட்டைக் கிழித்துக்கொண்டு அவையனைத்தும் வடிவமெடுத்து என்னை நோக்கி வருவதைப்போலத் தோன்றியது.

சந்தீபன் என்னவோ கூறிக்கொண்டிருந்தான். ஆனால், மாதுரியின் அழுகைச் சத்தத்தின் அளவு கூடிக்கொண்டே இருந்தது. பஞ்சாபிப் பெண்களுக்கே இருக்கும் ஒரு பழக்கமாக அது இருக்கவேண்டும் என்று நான் நினைத்தேன். சந்தீபனின் ஒவ்வொரு முட்டாள்தனமான செயல்களையும் பார்த்தால்...! மாதுரியின் கண்ணீர் தரை வழியாகவும் ஓடிக்கொண்டிருப்பதைப்போல அங்கே அமர்ந்திருக்கும்போது எனக்கு தோன்றியது.

நான் கால்கள் இரண்டையும் தூக்கி நடுவிலிருந்த மேஜையின்மீது வைத்தேன். சிறிது நேரம் சென்றதும் இருட்டுக்குள்ளிருந்து வந்த அழுகைச் சத்தத்தின் வடிவங்கள் தெளிவாகத் தெரிந்தன. அவற்றில் மனித உருவங்களும் மிருக உருவங்களும் இருந்தன. சில வடிவங்களைச் சுற்றிலும் வெளிச்சம் இருந்தது. சில தூரத்தில் நின்றுகொண்டிருந்தன. ஒவ்வொன்றின் சத்தமும் வெவ்வேறாக இருந்தன.

பிறகு நான் எப்போதோ காதுகளைக் கூர்மைப் படுத்திக்கொண்டு கேட்டபோது, படுக்கையறையில் முழுமையான அமைதி நிலவிக் கொண்டிருந்தது. நான் நீண்ட பெருமூச்சு விட்டேன். இனி சந்தீபன் அங்கு படுத்து உறங்காமல் வெளியே வந்தால் நான் இங்கிருந்து கிளம்பலாம். அப்போது இருட்டுக் குள்ளிருந்து ஏதோவொன்று என்னைத் தொட்டது. நான் அதிர்ச்சியடைந்து பின்னோக்கி நகர்ந்து நின்றேன். சந்தீபனின் குரல் முணுமுணுப்பாக வந்தது: “ராதாகிருஷ்ணா, அவள் தூங்கிவிட்டாள். நீ இன்னும் அரைமணி நேரம் இருந்தால் போதும். நான் கொஞ்சம் வெளியே போய்விட்டு வருகிறேன்.''

“சந்தீபா...'' நான் மெதுவான குரலில் சொன்னேன்: “அதிகமாக மது அருந்தாதே. நான் இங்கே இருக்கிறேன் என்ற விஷயத்தை மறக்கவும் வேண்டாம். நீ வந்தாலும் வராவிட்டாலும் முப்பத்தைந்தாவது நிமிடத்தில் நான் இங்கிருந்து கிளம்பிவிடுவேன்.''

“சரி...'' அவன் சொன்னான். தொடர்ந்து சத்தம் உண்டாக்காமல் கதவைத் திறந்து வெளியேறினான்.
நான் ஸோஃபாவில் நன்றாக சாய்ந்து படுத்தேன். கால்களை மீண்டும் நடுவிலிருந்த மேஜையின்மீது வைத்தேன். கஷ்டம்! "நமுக்கு பார்க்கான் முந்திரித் தோப்புகள்' திரைப்படம் இப்போது முடிந்திருக்கும்!

அப்போது நான் அதிர்ச்சியடையும் அளவிற்கு உள்ளே இருந்து மாதுரி அழைத்தாள்: “ராதா...'' அவளுடைய குரல் சத்தமாகக் கேட்கவில்லை.

நான் சொன்னேன்: “ஹலோ...''

“இங்கே வாங்க ராதா...'' - அவள் சொன்னாள். அவள் கூறியதை மிகவும் சிரமப்பட்டே கேட்க முடிந்தது.

நான் எதுவும் பேசாமல், அசைவே இல்லாமல் அங்கு அமர்ந்திருந்தேன். தூக்கத்தில் கூறியிருக்க வேண்டும். தூங்கட்டும்.

அப்போது மாதுரி மீண்டும் அழைத்தாள்: “ராதா... இங்கே வாங்க.''

என்னவோ பிரச்சினையாகிவிட்டது. நான் நினைத்தேன். சந்தீபனும் இல்லை. டாக்டரின் எண்ணும் இல்லை. ஊர் சுற்றிப்பயல்... மது அருந்துவதற்கு அவன் தேர்ந்தெடுத்திருக்கும் நேரம்...

நான் அவளுடைய கட்டிலுக்கு அருகில் பதைபதைப்புடன் சென்றேன். ஒருவேளை... அவள் தற்கொலை செய்துகொண்டாளோ?

“இங்கே உட்காருங்க...'' கட்டிலின் ஓரத்தைச் சுட்டிக்காட்டியவாறு அவள் சொன்னாள்.

நான் அமர்ந்தேன். சாளரத்தின் திரைச் சீலையின் வழியாக உள்ளே வந்த சிறிய வெளிச்சத்தில் நான் அவளுடைய முகத்தை தெளிவாகப் பார்க்க முடிந்தது.

 

+Novels

Popular

Popular

Short Stories

May 28, 2018,

July 31, 2017,

May 10, 2018,

March 7, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel