Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 10

oru naal

எல்லா செல்வங்களும் கிடைக்க வேண்டும் என்று நான் தினமும் வேண்டிக் கொள்வேன் என்ற விஷயத்தை மோகனனிடம் சொல்லுங்க. என் மனவேதனை நிறைந்த வேண்டுதல்... பலன் கிடைக்காமல் இருக்காது... அது மட்டும் உண்மை.''

விளக்கிக் கூறியபோது, அந்த இறுதி வாக்கியத்தில் இருந்த அர்த்தத்தை நினைத்திருக்க வேண்டும். ஆசிரியை கிண்டலுடன் சிரித்தார்.

நான் முழுமையாகத் தளர்ந்து போய்விட்டேன். வழியில் இப்படியொரு திடீர் திருப்பத்தை மனதில் நினைத்திருக்கவே இல்லை. அந்த இரவு மிகவும் பயங்கரமானதாக இருந்தது. வாடகை அறையில் தனியாக உட்கார்ந்து அழுது, நேரத்தை வெளுக்கச் செய்தேன். முற்றிலும் தன்னந்தனி மனிதனாக இருக்கும்படி செய்துவிட்டுப் போய்விட்டாளே! தன்னுடைய சூழ்நிலையின் போக்கின்படி, அலைந்து திரிந்து கொண்டிருந்த சாதாரண அரசியல்வாதியாக இருந்த ஒரு இளைஞனை, அவள் தன்னுடைய செயல்கள் நிறைந்த உண்மையான உலகத்தைக் காட்டி வழிநடத்திச் சென்றாள். அவனுக்கு வாழ்க்கையில் இலக்கு இருக்கும்படி செய்தாள். மிக உயர்ந்த அர்ப்பணிப்புணர்வு கொண்ட உண்மைத் தன்மையுடன் வாழ்க்கையை நடத்தி, உலகத்தையும் உயிரினங்களையும் பிரபஞ்சத்தையும் நேசிப்பதற்கு கற்று தந்தாள். ஒரு எழுத்தாளனாக ஆக வேண்டும் என்ற பெரிய லட்சியத்தை முன்னால் வெளிப்படையாக திறந்து வைத்தாள். என்னை நானே கண்டுபிடித்து உணர்ந்து கொள்ளும்படி செய்தாள். வேறு யாரும் எந்தச் சமயத்திலும் உடன் இருக்காத, மிகப் பெரிய துன்பங்களும் பிரச்சினைகளும் நிறைந்த அந்தத் தனிமைச் சூழலில், தான் நிச்சயம் உடன் இருப்பதாக உறுதி அளித்து சந்தோஷத்தையும் உற்சாகத்தையும் தந்தாள். ஆனால் இப்போது... தனியாக இருக்கும்படி விட்டுவிட்டு... முற்றிலும் தனியனாக இருக்கச் செய்துவிட்டு...

புதிதாகக் கிடைத்த லட்சியத்தை மனதில் வைத்துக் கொண்டு, எல்லாவற்றையும் மெதுவாக... மெதுவாக... அடித்தளத்தை பலமாக அமைத்து கட்டடத்தை உயர கட்டிக்கொண்டே வந்து கொண்டிருந்தேன்... ஒரு வேலையை ஏற்றுக் கொண்டதுகூட அதற்குத்தான். ஆனால், இப்போது... தனியாக விட்டுவிட்டு... தனியே விட்டெறிந்து விட்டு...

வேதனை நிறைந்த உணர்ச்சிகளின் வெளியே தெரியாத பலவீனங்களும், பயங்கரத்தனங்களும் உள்ள ஒரு விடை பெற்றுக் கொள்ளலின் பரிதாப நிலை இல்லாமல் இருந்தது என்ற தற்காலிக ஆறுதல் மட்டுமே மிச்சம்.

பழைய கடிதங்களையும் பரிசுப் பொருட்களையும் திருப்பித் தந்து, என்னை மறந்துவிட வேண்டும் என்ற வேண்டுகோளுடன் தளர்ந்து போய் நின்று கொண்டிருப்பது... இல்லாவிட்டால் எதுவுமே பேசாமல், பேச இயலாமல், இடையில் அவ்வப்போது ஒருமுறை முகத்தைச் சற்று உயர்த்தி வைத்துக்கொண்டு, கண்களைக் கொண்டு அல்ல- கண்ணீரைக் கொண்டு என்பதைப்போல அமைதியாகப் பார்த்துக்கொண்டு, பெருமூச்சுகளுடன், செயலற்ற நிலையில், முழுமையான மவுன மொழியில் விடை பெறுவது...

அப்படியென்றால், அப்போது அறியாமல் அவளுடைய கையை அழுத்திப் பிடித்து, உடம்போடு சேர்த்து வைத்துக்கொள்ள மாட்டேனா? அறியாமல் அறைக்குள் நுழைந்து வரும் அவளை இறுக அணைத்துக் கொண்டு, "இல்லை... எந்தச் சமயத்திலும் விட்டுத் தரமாட்டேன்’’ என்று இந்த உலகத்தைப் பார்த்து ஆபத்து நிறைந்த சாகசத்துடன் சவால் விட மாட்டேனா?

இல்லையே... அப்படி நடக்கவில்லையே! எதுவுமே தேவைப்படவில்லயே! அப்படி நடக்கக்கூடிய சாத்தியங்களைப் பற்றியும் சவால்களைப் பற்றியும் நினைத்துப் பார்க்க வேண்டிய சூழ்நிலையே வரவில்லையே!

மனதின் உட்பகுதியை திரும்பிப் பார்க்க முடியவில்லை. ரத்தமும் நீரும் தொடர்ந்து வழிந்து கொண்டிருந்த பரிதாபமான காட்சியாக அது இருந்தது.

எப்படிப்பட்ட பாதிப்பை உண்டாக்கக் கூடியவளாகவும் எப்போதும் தோன்றிக் கொண்டிருப்பவளாகவும் அவள் இருந்தாள் என்பதை வேதனையுடன் நினைத்துப் பார்த்துக்கொண்டு நின்றிருந்தேன். இறுதியில் முடிவெடுத்தேன்- ஒரு கடிதம் எழுதுவோம். இறுதியான கடிதம். சிறிது கனமும் மனக் கவலையும் ஒருவேளை இல்லாமற்போகலாம்...

அடித்தும் திருத்தியும் எழுதியும் சேர்த்தும் இறுதியாக அதை எழுதி முடித்தேன்- இறுதியான அந்த கடிதம்.

"இதுவரை அழைத்துக் கொண்டிருந்ததைப்போலவே தொடங்குகிறேன்: சக்கி!

நான் மிகவும் தளர்ந்து போய்விட்டேன். என்னை நானே ஆறுதல் படுத்திக்கொள்ள முயல்கிறேன். உன்னுடைய மனபயங்களின் போது நீ எப்போதும் திரும்பத் திரும்ப கூறுவதைப்போல அழிக்க முடியாத தலை எழுத்து, விதி, கடவுளின் தீர்மானம்... அப்படித்தானே? எனினும், நான் கேட்கிறேன். மற்றவர்களின் விருப்பத்திற்கேற்றபடி தான் நாம் வாழ வேண்டுமா? வேறு சிலருக்கு கவலையும் வேதனையும் தோன்றினாலும், நம் வாழ்க்கையை நம்முடைய விருப்பத்திற்கு ஏற்றபடி நாமல்லவா தேர்ந்தெடுத்துக்கொள்ள வேண்டும்? நீ இதை எதற்காக மறக்கிறாய்? நீ எப்போதும் பயப்படக் கூடியவளாகவே இருந்துவிட்டாய். அந்த பய உணர்வுதான் உன்னை இப்படிச் செய்ய வைத்ததா? அந்த பய உணர்வை வெல்லக்கூடிய தைரியத்தையும் பலத்தையும் என்னுடைய காதலால் அளிக்க முடியவில்லை என்கிறாயா?

கவலையாக இருக்கிறது.

எனினும், பதைபதைப்போ விரோதமோ இல்லாமல் ஒரு விஷயத்தை மனம் திறந்து கூறுகிறேன். எந்த அளவிற்கு புண்ணியம் வாய்ந்ததாகவும் பூஜைக்கு உரியதாகவும் உள்ள ஒரு புனிதத் தன்மையும் அமைதியும் இனிமையும் நிறைந்ததாக நம்முடைய காதல் இருந்தது! எந்தச் சமயத்திலும் சந்திக்க வாய்ப்பில்லாதவர்களாக நாம் இருந்தோம்! இரண்டு தூரத்து கிராமிய சூழ்நிலைகள்... இரண்டு ஜாதிகளைச் சேர்ந்த மனிதர்கள்... எனினும், நாம் ஒருவரையொருவர் பார்த்தோம். காதலிக்க முடியும் என்று நமக்கு நாமே படித்தோம். அதன் மூலம் சொர்க்க சந்தோஷத்தின் உச்சத்தை அடையலாம் என்பதையும் தெரிந்து கொண்டோம். மதிப்பு, நற்செயல்கள், உதவும் குணம், சுயநலமற்ற தன்மை என்று எத்தனையோ தெரியாத பக்கங்களை அந்தக் காதல் எனக்கு தெரியச் செய்தது. என்னுடைய குணத்திற்கும், பழக்க வழக்கங்களுக்கும், அணுகுமுறைகளுக்கும், நடந்துகொள்ளும் முறைகளுக்கும் அது அளித்த மதிக்கக்கூடிய பாதிப்பையும் கொடையையும் எந்தச் சமயத்திலும் மறக்கவே முடியாது. மண்ணில் அன்னியப்பட்டு நின்று கொண்டிருக்கும் ஒரு ஆணின் வாழும் காலத்தில் இது ஒரு அபூர்வ சொத்து என்பதை புரிந்துகொள்கிறேன். நன்றி.

என்றாவதொரு நாள் மீண்டும் சந்திக்க நேர்ந்தால், அன்றும் இதே நன்றி நிறைந்த அன்புடன் பார்க்க வேண்டும் என்பதுதான் என்னுடைய கடுமையான முயற்சியாக இருக்கும். சிறிது கண்ணீர் கலந்த பார்வையாக இருந்தாலும், நீ மன்னிக்க வேண்டும். என் மனம் நிறைய அப்போது ஒரு வசந்த காலத்தின் நினைவுகளாக இருக்கும். எங்கோ ஏதோ ஒரு பூங்காவின் தனிமைச் சூழலில், சிவப்பு நிற மலர்களால் அகலமான பந்தல் அமைத்த கருணை மனம் கொண்ட வாகை மரத்திற்குக் கீழே இருக்கும் நிழலில், அப்பிராணி யக்ஷி அம்மனின் அசைவற்ற அமைதியான முன்னிலையில் நாம் ஒன்றாகச் செலவழித்த ஒரு மயக்கமான வசந்த காலத்தின் இதயத்தைத் தொடும் நினைவுகள்...

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel