Lekha Books

A+ A A-

ஒரு நாள் - Page 6

oru naal

அது அவ்வளவு பெரிய ஒரு சம்பவம் இல்லையென்றாலும், அவர்களின் வீட்டில் அது ஒரு பெரிய பிரச்சினையாக ஆகிவிட்டது என்பதைப் பின்னர் தெரிந்து கொண்டோம். பிற்காலத்தில் அந்த குழந்தைகளின் அக்கா கூறித்தான் விஷயமே புரிந்தது. பிள்ளைகளை, குழந்தைகளை கடத்திக் கொண்டு செல்பவர்கள் செயல்பட்டுக் கொண்டிருந்த காலமாக அது இருந்தது. அந்தச் சம்பவத்திற்குப் பின்னால் அப்படிப்பட்ட யாரோ இருக்கிறார்கள் என்று அந்த வீட்டில் உள்ளவர்கள் உறுதியாக நினைத்திருக்கிறார்கள். பிள்ளைகள்மீது பாசத்தை வெளிப்படுத்தி நெருக்கமாகப் பழகி அவர்களைக் கவர்ந்து, மெதுவாக கடத்திக் கொண்டு செல்வது... அதற்குப் பிறகு உடல் உறுப்புகளுக்குச் சேதங்கள் உண்டாக்கி, அவர்களை பிச்சைக்காரர்களாக ஆக்கி, பணம் சம்பாதிப்பதற்காகப் பயன்படுத்துவது... அந்த குழந்தைகளின் அக்கா அதுதான் உண்மை என்று திடமாக நினைத்தாள். அப்படி இல்லாமல், திருவனந்தபுரத்தைச் சேர்ந்தவர்களுக்கு குழந்தைகளின் மீதுகூட நல்ல எண்ணமோ அணுகுமுறையோ இரக்கமோ உண்டாவதற்கு எந்தவொரு வழியும் இருப்பதாக அந்த கொச்சியைச் சேர்ந்த பெண்ணால் நினைக்க முடியவில்லை. அதனால்தான் அந்தக் குழந்தைகளைக் கடத்தும் நபர்களைக் கண்டுபிடித்தே ஆக வேண்டும் என்று அவள் முடிவெடுத்தாள். அதைத் தொடர்ந்துதான் இனிமேல் தினமும் குழந்தைகளுடன் சேர்ந்து பாதுகாக்கும் பெண்ணாக பூங்காவிற்குச் செல்லப் போகும் பொறுப்பை வலியச் சென்று அவள் ஏற்றுக் கொண்டாள். அயோக்கியர்கள் குழந்தைகளை வசீகரிப்பதற்கு இப்போதுதானே ஆரம்பித்திருக்கிறார்கள்! மீதி வேலையைத் தொடர்வதற்கு இனிமேலும் அவர்கள் வருவார்கள் அல்லவா? அப்போது அவர்களைப் பிடித்துவிட வேண்டும்- அதுதான் அவளுடைய திட்டமாக இருந்தது. தினமும் குழந்தைகளுடன் சேர்ந்து பூங்காவிற்கு வந்து, அவர்கள் விளையாடிக் கொண்டிருந்த இடத்திலிருந்து விலகி இருந்து கொண்டு, புத்தகம் வாசிப்பதை போல காட்டிக்கொண்டு அமர்ந்தவாறு, சுற்றிலும் ஆராய்ந்து கொண்டிருப்பதை அவள் வழக்கமாக்கிக் கொண்டிருந்தாள். பல நாட்கள் தீவிரமாக முயற்சி செய்து பார்த்தும், எந்தவொரு பலனும் உண்டாகவில்லை. அதனால் ஏமாற்றம் அடைந்துவிட்டிருந்த ஒரு நாளன்றுதான் நானும் ராமச்சந்திரனும் ஒன்றாகச் சேர்ந்து, மலர்ந்து படர்ந்த சிவப்பு பந்தல் அமைந்திருந்த ஒரு வாகை மரத்திற்கு அடியில் இருந்த சிமெண்ட் நாற்காலிகளில் போய் உட்கார்ந்தோம். குழந்தைகள் தங்களின் அக்காவின் அருகில் ஓடிச்சென்று, பழைய குழந்தை கடத்தல்காரர்களில் ஒருவனான என்னை விரலை நீட்டி சுட்டிக் காட்டியிருக்க வேண்டும். அவள் எழுந்து என்னை கூர்ந்து பார்த்துக் கொண்டிருப்பதற்கு மத்தியில், ராமச்சந்திரனின் பார்வையில் அவள் சிக்கிக் கொண்டாள் என்று நினைக்கிறேன். அவள் எழுந்து அவர்களின் அருகில் சென்றாள். நான் கையில் வைத்திருந்த கவிதை புத்தகத்தின் பக்கங்களுக்குள் நுழைந்தேன். ஜி. சங்கரக்குறுப்பின் புதிய கவிதைகளைக் கொண்ட தொகுப்பு அது. கவர்ந்து இழுக்கக்கூடிய எழுத்துகள். நான் அதில் முழுமையாக மூழ்கி விட்டிருந்தேன். திடீரென்று அந்த கவிதை வரிகளுக்குள்ளிருந்து எழுந்து மேலே வந்த இனம் புரியாத வெளிச்சம் என்னை முழுமையாக ஆட்கொண்டது. என்னையே அறியாமல் குரலை உயர்த்திக் கொண்டு நான் வாசித்தேன்.

"உயரத்தையும் விஞ்சி உயரத்தில் இருக்கும்

பரந்து விரிந்த முடிவில்லா வானமே!

பரம்பொருளாய் புனிதமாய் ஒளிர்ந்திடும்

பேரழகு தத்துவமே வணக்கம்!

தூரத்தையும் தாண்டி தூரமாகிறாய் நீ!

அருகையும்விட அருகில்... ஆச்சரியம்!’’

அந்த மாய உலகத்தில் மூழ்கிப் போய்தான் அப்படியே உட்கார்ந்திருந்தேன். மனதிற்குள் ஒரு இனிய இசை முழங்கிக் கொண்டிருப்பதைப்போல நான் உணர்ந்தேன். கண்களிலிருந்து கண்ணீர் வழிந்து கொண்டிருப்பதைப்போல தோன்றியது. ராமச்சந்திரன் வரட்டும். அவனை உரத்த குரலில் வாசிக்கச் சொல்லி அதைக் கேட்க வேண்டும். வாசித்து அனுபவித்த ஒரு கவிதையை உணர்ச்சிகள் ததும்ப திரும்பவும் வாசிக்கச் சொல்லி கேட்கும்போது, அதில் நிறைந்திருக்கும் விலை மதிப்பற்ற நிமிடங்களைப்போல உலகத்தில் வேறு என்ன இருக்கிறது?

அப்போது ஒரு இளம்பெண்ணை தன்னுடன் அழைத்துக் கொண்டு ராமச்சந்திரன் வருகிறான். அவன் அறிமுகப்படுத்தினான்:

“உனக்கு தெரியவில்லையா? நம்ம கல்லூரியில்தான்... என் வகுப்பில்... நியூடில்லியில் நடைபெற்ற இளைஞர்கள் திருவிழாவில் என்னுடன் இருந்தாங்க...''

நான் பார்த்தேன். எங்கேயோ பார்த்து மறந்த முகம். சொன்னேன்:

“மகிழ்ச்சி. நான் இவனுக்கு மேல்வகுப்பில் படிக்கிறேன். மோகனன்...''

அழகான சிரிப்புடன் சொன்னாள்:

"எனக்குத் தெரியும். கதாசிரியரும் கல்லூரி யூனியன் தலைவருமாக இருப்பவர் அல்லவா? போதாதற்கு, இதற்கு முன்பு இதே ராமச்சந்திரன் கல்லூரியில் வைத்து அறிமுகப்படுத்தியும் வைத்திருக்கிறார்.''

நான் ஒரு மாதிரி ஆகிவிட்டேன்.

அவள் என்னைத் தேற்றினாள்.

“மன்னரை எல்லாருக்கும் தெரியும். மன்னர் எல்லாரையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும் என்று இல்லையே!''

அந்த சமாதான வார்த்தைகளிலும் கிண்டல் கலந்திருப்பதை உணர முடிந்தது. வெளிறிப் போன சிரிப்புடன் நான் அமைதியாக நின்றிருந்தேன். அப்போது அவளுடைய கையில் இருந்த புத்தகம் என் பார்வையில் பட்டது. மிகப் பெரிய கவிஞரான ஜி. சங்கரக் குறுப்பின் இனிமையான கவிதை நூல். உமர்கய்யாம் எழுதிய நூலின் மலையாள மொழிபெயர்ப்பு. எனக்கு வியப்பாக இருந்தது. கவிதை வாசிக்கக்கூடிய இளம் பெண்ணா? கவிதைகள் எழுதக் கூடிய பி. சுகந்தகுமாரியையும் பந்தளம் ராதாமணியையும் நான் அப்போது கல்லூரியில் பார்த்திருக்கிறேன். ஆனால், கவிதைகளை வாசிக்கக்கூடிய ஒரு இளம் பெண்... என் அறிமுக வட்டத்திற்குள் எந்த இடத்திலும் அப்படிப்பட்ட ஒருத்தியை நான் பார்த்ததில்லை. சிந்தித்துப் பார்த்தேன். ஸி.ஜெ. சுசீலா, எம்.ஜி. பவானி, கெ. சாரதாமணி, சாந்தகுமாரி, சாவித்திரி, ஆயிஷா பாயி, சாரா வர்க்கி... இல்லை... யாரும் கவிதை வாசித்து பார்த்ததில்லை. கவிதையைப் பற்றி உரையாடிக்கூட கேட்டதில்லை. கையில் கவிதை புத்தகத்துடன் நின்று கொண்டிருக்கும் இந்த இளம் பெண்ணைப் பார்த்ததும், உண்மையிலேயே ஆச்சரியத்தில் உறைந்து போய்விட்டேன். பிறகு நினைத்தேன்.

ஓ! வாசிப்பதற்காக அது இருக்காது. அது மட்டும் உண்மை. யாரிடமாவது திருப்பிக் கொடுக்க வேண்டும் என்பதற்காக தந்தையோ அண்ணனோ, வேறு யாரோ அந்த புத்தகத்தைக் கொடுத்திருப்பார்கள். அப்படித்தான் ஏதாவது இருக்க வேண்டும். எது எப்படி இருந்தாலும் மனதில் இருந்த இக்கட்டான நிலையை மாற்றக்கூடிய ஒரு சந்தர்ப்பமாக அது இருந்ததே! அதனால் கையிலிருந்த அந்த புத்தகத்தைச் சுட்டிக் காட்டியவாறு கேட்டேன்:

“விலாச லஹரிதானே?''

அவளிடமிருந்து உடனடியாக பதில் வந்தது:

“ஆமாம்... ஜியின் மொழிபெயர்ப்பு நூல். மிகவும் அருமையாக இருக்கிறது. சங்ஙம்புழ, கெ.எம். பணிக்கர் ஆகியோரின் மொழிபெயர்ப்பைவிட மிகவும் சிறப்பாக இருக்கிறது. எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது.''

கடவுளே! ஆச்சரியம்தான். நான் என்ன கேள்விப்படுகிறேன்? பதினெட்டு வயதைத் தாண்டியிராத- முதல் வருட ஹானர்ஸ் வகுப்பில் படித்துக்கொண்டிருக்கும் ஒரு இளம்பெண்!

 

+Novels

Popular

Popular

Short Stories

July 31, 2017,

May 28, 2018,

June 3, 2016,

February 13, 2016,

Latest Books

பேய்

- சுரா

மாது

- சுரா

வனவாசம்

- சுரா

Short-Stories

Copyright @ Lekha Productions Private Limited. All Rights Reserved.

Login or Register

Facebook user?

You can use your Facebook account to sign into our site.

fb iconLog in with Facebook

LOG IN

Register

User Registration
or Cancel